பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274 வல்லிக்கண்ணன் கதைகள்

கண்கள், வறண்ட கற்பாறைகளின் அடர் வளர்த்தியை, விதம் விதமான அடுக்குகளை, அவற்றின் நீள அகல உயரங்களைப் பிடித்துத் தந்தன. செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாம் அவனை வளைத்துப் பிடித்துச் சிக்கலில் மாட்டி வைக்கத் தயாராக நிற்பனபோல் அவனுக்குத் தோன்றின.

பெருமாள் நடந்து கொண்டிருந்தான். மலையடிவாரச் சிற்றுாரிலிருந்து புறப்பட்டு, நடந்து, நடந்து ஏறி ஏறி, மலைப் பகுதிகளூடே வெகுதூரம் வந்திருந்தான். இன்னும் ஏறிப் போயாக வேண்டும் அவன். தனித்து விடப்பட்ட உணர்வு அவனைத் தொல்லைப்படுத்தியது.

பெரும் சுவர்கள் மாதிரி ஓங்கி நிமிர்ந்து நின்ற மலைப் பகுதிகள், எங்கெங்கும் காட்சி தந்த மலை முகடுகள், மலையின் மிக உயர் தூரத்து முடிகள் - மொத்தத்தில் கற்பாறைகளின் பூதாகாரத் தோற்றங்கள் - அவனை மிகப் பாதித்தன. தான் தனியனாய் இங்கு வந்து அகப்பட்டிருக்க வேண்டாம், அவன் ஏற்றுக்கொண்ட பணியை வேறு ஒருவனிடம் கொடுத்திருக்கலாம் என்று அவனுள் எண்ணம் ஒடியது.

ஊர்க்காரர்கள் - முக்கியமாக பெண்கள் - அவனிடம் அந்த வேலையை ஒப்படைத்தபோது அவன் துணிச்சலோடுதான் கிளம்பினான். நீண்டு, நெடிது உயர்ந்து, பசுமையாய் வளர்ந்து காணப்பட்ட மலைத்தொடர்மீது, மலையின் மீது மலையென ஓங்கி நின்ற மலைப் பகுதிகள் இரண்டு மூன்றைக் கடந்து மேலே போக வேண்டும். அங்கே கோயில் கொண்டிருந்த ‘மலை நம்பி’க்கு பூசனை செய்ய அநேகர் போயிருக்கிறார்கள். அவர்கள் முக்கியமான - இல்லாமல் தீராது என்ற தன்மை உடைய - இரண்டு பூசைப் பொருள்களை எடுத்துச் செல்ல மறந்து விட்டார்கள்.

விடுபட்டுப் போன பொருள்களை மலைமீதுள்ள ஊர்வாசிகளிடம் கொண்டு கொடுக்கும்படி கீழே இருந்தவர்கள் பெருமாளைக் கேட்டுக் கொண்டார்கள். வேண்டுவது போலவும், கெஞ்சுவது போலவும் கோரினார்கள். 'உனக்குப் புண்ணியம்ப்பா. பூசைக்குரியது. இது இல்லாமல், சாமி குத்தம் ஏற்பட்டு விடப்படாது' என்று பெண்கள் பேசினார்கள். நம்பிக்கையான ஆளுவேறு யாருமில்லை. நீதான் போய் இதுகளைக் கொண்டு அவங்ககிட்டே கொடு. நீ இந்தப் பாதையிலேதான் முன்னாலே கூடப்போய் வந்திருக்கியே. நீ ஆம்பிளைதானே! ஒத்தையிலே போக முடியாதா என்ன உன்னாலே?" என்று அவனுக்கு உந்துதல் அளித்தார்கள்.