34
‘வாழையடி வாழை’
'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே:—அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே:—அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே:—இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனா!’
—வந்தேமாதரம்: 1
என்ற பாடலில், பாரதியாரின் நெஞ்சப் பெருமிதம் நன்கு விளங்கக் காணலாம்.
பாரத நாட்டினை ஞானத்திலும் பரமோனத்திலும் உயர் மானத்திலும் அன்ன தானத்திலும் அமுத கானத்திலும் கவிதையிலும் உயர்ந்த நாடாகக் காண்கின்றார், இமயமலையினை எண்ணியும் இன்னறு நீர்க் கங்கையாற்றினை எண்ணியும் கவிஞர் பெருமிதங் கொள்வதோடு,
'பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே;
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே'
—எங்கள் நாடு: 2
என்று உலகில் பாரதநாடே பழம்பெரும் பூமி என்றும், ஆன்மீக ஞானமும் அன்பும் கைவரப் பெற்றமைந்த நாடென்றும், ஞாலத்திற்கு முழக்கம் செய்கிறார் பாரதியார்.
பாரத நாட்டைப் பாடிய கவிஞர், தாம் பிறந்த தமிழ் மண்ணை மறந்தாரில்லை.
'செந்தமிழ் நாடெனும் போதினிலே—இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே!—எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே—ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!'
—செந்தமிழ் நாடு: 3