பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17. அன்பாற்றல்



அன்பு — இஃது ஒர் உயிர்ப் பண்பு; மனிதகுல வரலாற்றை உயிர்ப்புள்ளதாக்கும். பண்பு; தீமையைத் துடைத்தெறியும் ஆற்றல் மிக்க பண்பு; படைப்பாற்றல் மிக்க பண்பு. இந்த அன்பு தற்சார்பில்லாதது; முற்றாக அயலாரை நோக்கியே செல்லும் பண்பு. இத்தகு அன்பினை உயர் பண்பாகப் பெற்ற மனிதன் வளர்வான்; வாழ்வான். இத்தகு அன்பினை அறிவியற் பார்வையில் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது.

உயிர்க்குலத்தில் எலும்பு உடைய உயிர்களும் உண்டு; எலும்பு இல்லாத உயிர்களும் உண்டு. எலும்பு இல்லாதன புழு வகையின. கதிரொளியின் ஆற்றலைத் தாங்கும் ஆற்றல் எலும்புள்ள உயிரினங்களுக்கு மிகுதியும் உண்டு. ஒரோ வழி தாங்கிக்கொள்ள இயலாது போனாலும் ஒடிப் போய்ப் பிழைத்தல் இயலும். எலும்புகள் அமைந்த உடல்கள் விரைந்த இயக்கத்திற்குத் துணை செய்வன. எலும்பு இல்லாத புழுக்களுக்குக் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் இல்லை; தப்பித்துச் செல்லவும் உடலமைப்பு இடம் தராது: ஊர்ந்தே செல்ல இயலும். அதனால் எலும்பு இல்லாதவை கதிரவன் வெப்பத்தினால் அழியும் என்பது அறிவியற் சார்ந்த கருத்து.

அதுபோல மானுட வாழ்விற்கு அன்புடையராதல், எலும்புபோல் வலிமையைத் தரும். அன்புடையோர் சமுதாயத்தில் நிகழும் முறைப் பிறழ்வுகளால் அழிந்துவிடமாட்டார்கள். தாங்கி வாழ்விப்பார்கள். தாமும் வாழ்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/47&oldid=1145355" இலிருந்து மீள்விக்கப்பட்டது