அன்பின் பெருக்கு
35
வீட்டு நாராயணனிடம் சொல்லி, அழைத்துச் செல்லலாமென்று புறப்பட்டேன். ஆனால் நாராயணனோ, எனக்கு நேர் விரோதம். ராமாயண விஷயத்தில்தான். புராணங்கள் என்றால் அவனுக்குக் கட்டோடு பிடிக்காது.
“என்னடா பாட்டிகளோடு போட்டி போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டாயே, ராமாயணம் கேட்கிறதற்கு?” என்று கேலி செய்தான்.
“அப்படியல்லடா, சுந்தர சாஸ்திரிகள் ராமாயணம் சொல்லி நீ கேட்டதே யில்லை, வந்து பாரேன், எவ்வளவு நன்றாயிருக்கிறதென்று. ஒரு தடவை அவர் கதைப் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டால் அப்புறம் நீ அவரை விடவே மாட்டாய்” என்றேன்.
“சரியப்பா, நல்லதாய்ப் போய்விட்டது. அவர் கதைப் பிரசங்கத்தைக் கேட்டால், அப்புறம் அவரை நான் விடமாட்டேன் என்கிறாயே! அப்படியே அவரை நான் விடாது பின்தொடர ஆரம்பித்துவிட்டால் அப்புறம் உனக்குத் திரும்பிவரத் துணை இருக்காதே! வேண்டாமப்பா வேண்டாம், இந்தத் தொந்தரவு” என்றான் நாராயணன.
ஒரு வழியாக, நான் அவனைச் சமாதானப்படுத்தி எனக்காகவாவது வரும்படி அழைத்துச் சென்றேன். கோயிலை அடைந்ததும் இருவரும் ஓர் ஒரமாக உட்கார்ந்தோம்.
சாஸ்திரிகள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நாராயணன் விபரீத வியாக்யானம் செய்துகொண்டே வந்தான். பக்கத்தில் சுவாரஸ்யமாக ராமாயணம் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் `உஸ், உஸ்' என்று, எங்கள் பேச்சை நிறுத்தப் பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தார். நாராயணன் விட்டபாடில்லை. குற்றாலம் நீர்வீழ்ச்சி