உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரர் வேண்டும்

61


வாலிபர்களின் உள்ளம் ஒடிந்திருக்கிறது, இந்த நிலைமையைக் கண்டு! அவர்களை இந்தப் பித்தலாட்ட பலிபீடத்திலே இன்னமும் எத்தனை காலத்துக்கு இருத்தவேண்டும்! விழலுக்கு நீர் இறைப்பானேன், விலாநோகுதே என்று விம்முவானேன்! அலி என்று தெரியாமல் அணைப்பானேன், ஐயோ சனியனே என்று ஆயாசப்படுவானேன்! கட்டையாலே கத்தியும் அட்டையாலே கேடயமும்செய்து பிடித்துக் கொண்டால், எதிரிக்குச் சிரிப்புவருமா, சிந்தனை குழம்புமா? ஆள்மாற்றமே அரசியல் காரியம் என்று எண்ணுபவரைக் கேட்கிறோம், அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு இனத்தை மீட்கும் காரியத்துக்கு யார் தேவை? எந்த ஆரியத்தால் இனம் அடிமைப்பட்டுக்கிடக்கிறதோ அந்த ஆரியத்தை அழித்தொழிக்கும் ஆண்மையாளரா, அன்றி அதே ஆரியத்துக்கு ஆல வட்டம் சுழற்றும் அடிமைகளா? பிரன்சு நாட்டிலே புரட்சியின் போது, ரஷ்ய நாட்டிலே புரட்சியின் போது, எது அரசியலாகக் கருதப்பட்டதோ, அத்தகைய நிலைமையிலே திராவிடம் இருக்கிறது. அரசியலும் மதமும் கலப்பதா என்பதல்ல கேள்வி; மதத்தால் நம்மை அரசியலிலே அடிமைப்படுத்தியிருக்கும் இழி நிலையைப் போக்கிக்கொள்ள, ஆரியர் புகுத்தியிருக்கும் மதத்தை ஒழித்தாக வேண்டாமா என்பதே கேள்வி. விழி சரியாக இருந்தாலன்றோ வழி தெரிந்து நடக்கமுடியும் ? எதிரியின் வஞ்சக வலையாகிய ஆரிய மார்க்கத்தை அறவே நீக்கா முன்னம், நமக்கு அரசியல் வாழ்வு எங்ஙனம் சிறப்பாக இருக்க முடியும் !