பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிறுகதை மன்னன் பெற்ற செல்வம்

மொட்டை மாடியிலே காலை நீட்டிப் போட்டு உட்கார்ந்து, "ஓர் ஊரிலே ஓர் ராஜாவாம்..." என்று ஆரம்பிப்பாள் பாட்டி. அவள் நீட்டி காலில் படுத்தபடி, வானத்திலிலுள்ள நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே "ம்" என்பான் பேரன்.

"அந்த ராஜா ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடப் போனானாம்..."

"ம்"

"அந்தக் காட்டிலே ஒரு பறக்கும் குதிரை மேய்ந்து கொண்டிருந்ததாம்..."

"பறக்கும் குதிரையா அது எப்படி இருக்கும் பாட்டி?"

"அது சாதாரணக் குதிரையைப்போலத்தான் இருக்கும். ஆனால், அதன் முதுகிலே பறவைகளுக்கு இருப்பதைப் போல இரண்டு இறக்கைகள் முளைத்திருக்கும்!"

"அதிசயமான குதிரையாயிருக்கிறதே!...அப்புறம்?"

"அந்தக் குதிரையின் மேல் ஆசைப்பட்ட ராஜா, அதை அம்பெய்து கொல்லாமல் அப்படியே வலை வீசிப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டானாம்....."

"வந்து.....?"

"அதை ஒர் அழகான கூண்டிலே அடைத்து வைத்து, அதைப் பராமரிப்பதற்கென்றே ஒர் ஆளையும் போட்டு வைத்தானாம்...."

"பாவம் ஏண்டா அகப்பட்டுக் கொண்டோம்? என்று இருந்திருக்கும் அதற்கு!"

"அகப்பட்டுக் கொண்ட பிறகு அதைப் பற்றி யோசித்து என்ன பிரயோசனம்? - நீ கதையைக் கேளு! - ஒருநாள் அந்த அதிசயக் குதிரையைப் பார்த்துவிட்டுப் போவதற்காக ராஜகுமாரி வந்தாளாம். அப்போது அந்தப் பொல்லாத குதிரை என்ன செய்ததாம், தெரியுமா? அவள் முந்தானையைத் தன் வாயால் கவ்விப் பிடித்து இழு, இழு’ என்று இழுத்ததாம்....."