12. ஞானமும் தவமும்
வெறும் சாம்பல் என்று எண்ணி அதை எடுத்தான். கையில் எடுக்கும்படி அது கட்டிச் சாம்பலாகவே இருந்தது. எடுத்த அடுத்த கணத்தில் 'சூ,சூ' என்று கையை உதறிக்கொண்டு அதைக் கீழே போட்டுவிட்டான். அது இன்னும் முழுமையும் ஆறாத நெருப்பு: நீறு பூத்த நெருப்பு. மேல்தோற்றத்தைக் கண்டு ஏமாந்துபோய் எடுத்தான். இப்போது அது சுட்டுவிட்டது.
நீறு பூத்த நெருப்புப் போலச் சிலர் இருப்பார்கள். 'நாம் இவர்களை வென்று விட்டோமே! இவர்களும் புறங் காட்டி ஓடித் தம் மானம் இழந்து மதி இழந்து வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கிறார்களே!' என்று பகைவர்களே எண்ணக்கூடாதாம். தமக்கு வெள்ளம் போன்ற சேனை இருக்கிறதென்று தம்மைத் தாமே வியந்து கொண்டு, பகைவரை எள்ளி இழிவாக நினைக்கக் கூடாது. எந்தச் சமயத்திலும் அவர்கள் துணைவலி பெற்றுப் போர் செய்ய வந்துவிடலாம்.
உண்மையான வீரர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எவ்வளவு பலம் இருந்தாலும், "இனி இந்தப் பயல் என்ன செய்வான்?" என்று எண்ணிப் பராக்காக இருக்கக்கூடாது. வீரத்தின் இலக்கணம் இது. இதைப் பொருந வாகை என்னும் துறையில் விளக்குகிறார் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர்.
"வெள்ளம்போல் தானே வியந்து விரவாகர
எள்ளி உணர்தல் இயல்பன்று;-தெள்ளியார்
ஆறுமேல் ஆறியபின் அன்றித்தம் கைக்கொள்ளார்
சிறுமேல் பூத்த நெருப்பு."