136
வீரர் உலகம்
பழங்காலத்தில் தமிழ் நாட்டில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழ்களிலும் வல்லவர்கள் பலர் அங்கங்கே இருந்தார்கள். அவர்கள், தம்முடைய கலைத் திறத்தை உணர்ந்து பாராட்டுபவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிச் சென்றுகொண்டே இருப்பார்கள். யாரேனும் அவர்களுக்கு அகப்பட்டால் அவரிடத்தில் தம்முடைய திறமையைக் காட்டிப் பரிசு பெறுவார்கள். பொதுவாகக் கலைத்திறமை படைத்தவர்களுடைய உள்ளம் மென்மையானது; உணர்ச்சி வசப்படுவது; இன்ப துன்பங்களின் சிறு கூறுபாட்டையும் உணர்ந்து கிளர்ச்சியும் தளர்ச்சியும் பெறுவது; ஏழைகளைக் கண்டால் இரங்குவது. புலவர் முதலியோர் ஏழையராக இருந்தாலும் பிற ஏழையரைக் கண்டால் வாடுவார்கள். தமக்குக் கிடைத்தவற்றைப் பகிர்ந்து கொடுப்பார்கள். அதனால் அவர்கள் எத்தனை பரிசைப் பெற்றாலும் விரைவில் செலவழித்துவிட்டுப் பழைய வறிய நிலையிலே இருப்பார்கள்.
தமக்கு வேண்டிய பொருளை ஈட்டும் முயற்சியை விடத் தம்முடைய கலையால் பலரை இன்புறச் செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணம். அதனால் கலைச்சுவை தேரும் உபகாரிகளை நாடி எப்போதும் திரிந்துகொண்டே இருப்பார்கள்.
இயல்தமிழ் வல்ல புலவரும், இசையில் வல்ல பர்னரும், தடாரிப் பறை கொட்டும் பொருநரும், பாடலும் ஆடலும் வல்ல விறலியரும், கூத்தில் வல்ல கூத்தரும் இவ்வாறு எங்கே விழா நடக்கிறது, எங்கே கலைச்சுவை நுகரும் வள்ளல் இருக்கிறார் என்று தேடிச் செல்வார்கள். புலவர்கள் இன்ன சாதி, இன்ன சமயம், இன்ன பால் என்ற வரையறையில்லாமல் எல்லா வகுப்பையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். முடியுடை மன்னர்களும் குறுநில மன்னர்களும் தமிழ்ப்புலமையுடையவர்களாக