17. வீர வழிபாடு
147
சமுதாய வாழ்க்கையில் அரசனும் குடிமக்களும் மனமொன்றி வாழவேண்டும். பிறரால் வரும் ஏதங்களை மாற்றி நாட்டைப் பாதுகாப்பது அரசன் கடமை. அவனுக்கு இன்றியமையாத அங்கங்களுள் முக்கியமானது படை. திருவள்ளுவர் அரசனுக்குரிய உறுப்புக்கள் ஆறு என்று கூறுவார்.
“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையானாம் வேந்தர்க் கொளி”
என்பதில் எல்லாவற்றிற்கும் முதலில் படையை வைத்திருக்கிறார் குடியைப் பாதுகாக்க இன்றியமையாதது படை. படை அளவிலும் வகையிலும் பெரியதாக இருந்தால் போதாது. படையை ஆளும் மக்கள் வீரம் உடையவர்களாக இருக்கவேண்டும். வீரர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு உயிர்காடி போன்றவர்கள். காதல் இல்லத்தில் இன்பத்தை வளர்ப்பது. வீரம் நாட்டில் துன்பத்தைத் துடைப்பது. காதல் பயிரானால் வீரம் வேலியாக உதவுவது. காதற்பயிர் வளரவேண்டுமானால் அது சிதையாமல் பாதுகாக்க வீரவேலி கோலவேண்டும்.
காதலுலகத்தில் தலைமை தாங்குபவள் பெண். பெண்ணுக்குரிய மாதர் என்ற சொல்லுக்குக் காதல் என்ற பொருளை வகுக்கிறது தொல்காப்பியம். பெண்ணின் இயல்பாகிய பெட்பு என்பது விருப்பத்தைக் குறிப்பது. அக உலகம் இது.
புற உலகமாகிய சமுதாயத்தில் தலைமை தாங்குகிறவன் ஆண்மகன். ஆண்மை என்பது வீரத்தைக் குறிக்கும் சொல். காதலை வளர்த்து அமைதியையும் இன்பத்தையும் ஓங்கச் செய்கிறவள் பெண்ணானால், பகையை அறுத்து வீரத்தை வளர்த்துத் துன்பத்தைப் போக்குகிறவன் ஆண். காதலின் உருவம் பெண்; வீரத்தின் வடிவம் ஆண்,