7. மதில் முற்றுகை
63
உறுதிமொழியைக் காப்பாற்றுகிறான். இதனைக் கண்டு புலவர்கள் பாராட்டுகிறார்கள்.
தகடூர் யாத்திரை என்ற பழங் காவியத்தில் ஒரு புலவர் இந்த நிலையைப் பாராட்டும் பாடல் ஒன்று வருகிறது. 'அரசனுக்குச் சீற்றத் தீப் பொங்கியது. அது விட்டு எரிந்தது. அதன் பயனை இப்போது பார்க்கிறோம். கோடரிகளை எடுத்துச் சென்று அகழிக்குப் புறம்பே உள்ள குறுங்காடாகிய மிளையை அழித்தார்கள் வீரர்கள். பிறகு அகழியைத் தாண்டிச் சென்று மதிலை இடித்தார்கள். மதிலின் இடிபாடுகளால் அகழியைத் துார்த்தார்கள். வாளை ஏந்திய அரசன் தன் படை வீரர்களோடு மதிலுக்குள் இருந்த அரசனே எதிர்த்து வென்றான். அவனிடம் இருந்த பொருள்களையெல்லாம் பற்றிக் கொண்டு பலருக்கும் வீசினான். அவற்றைப் பலரும் பெற்று இன்புற்றார்கள். இவ்வாறு ஏற்று உண்டதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அரசனுடைய சீற்றத் தீ விட்டு எரியவிட்ட சிறப்புத்தான்."–இக்கருத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது அந்தப் பாட்டு.
"மழுவால் மிளைபோய் மதிலால் அகழ்தூர்த்து
எழுவாளோடு ஏற்றுண்டது எல்லாம்—இழுமென
மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ
விட்டெரிய விட்ட மிகை,”
(மழு-கோடரி. மிளை-காட்டரண். ஏற்று-எதிர்த்து. உண்டது-நுகர்ந்தது. மட்டு அவிழ் கண்ணி மறவேந்தன்-தேன் சொரியும் மாலையையுடைய வீரத்தைப் பெற்ற அரசன். மிகை-சிறப்பு.)
மதிலுக்குள் இருக்கும் வேந்தனைப் பொருது அழிக்க வேண்டும் என்ற மனவேகம் மீதூர்வதனால் புறத்தே முற்றுகையிட்ட அரசன் சில சமயங்களில் சபதம்