பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

153

சென்று சேரலாம். கோயில் கிராமத்தின் கீழ்ப் பகுதியில் இருக்கிறது. சிறிய கோயில்தான். ஆனால் அது நல்ல மாடக் கோயில். 'எண்தோள் ஈசற்று எழில் மாடம் எழுபது செய்து' உலகாண்டவன் கோச்செங்கட் சோழன். ஏதோ முந்திய பிறவியில் யானையினால் இடர் உற்றவன் ஆனதால், யானை ஏறாத, ஏற முடியாத கோயில்கள் எழுபது கட்டியிருக்கிறான் என்பது வரலாறு. இந்தக் கோயிலுக்குத் தான் தோன்றி மாடம் என்றும் இங்குள்ள இறைவனுக்குத் தான்தோன்றி அப்பர் என்றும் திருநாமம். மிகப் பழைய கோயில் இது என்பதைச் சம்பந்தர்,

நீரார வார் சடையான்,
நீறுடையான், ஏறுடையான்
காரார் பூங் கொன்றையினுள்
காதலித்த தொல்கோயில்

என்றுதானே பாடி அறிவிக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள மூர்த்தியும் சுயம்பு மூர்த்திதான். அதுதான் தெரிகிறதே, தான்தோன்றி ஈசுவரர் என்று சொல்வதிலேயே. கோயிலுள் சென்று தான்தோன்றி நாதரை வணங்கி விட்டு, அவரது துணைவியாம் வாள் நெடுங் கண்ணியையும் கண்டு தொழலாம். ஆனால் அன்று சிற்பி அமைத்த வாள்நெடுங் கண்ணி உருவில் ஏதோ சிறிது ஊனம் உற்று விட்டதால் அவளை வெளியே மண்டபத்தில் கொண்டு வந்து நிறுத்தி யிருக்கிறார்கள். பின்னால் இன்னொரு அம்மையைச் சிலையாக வடித்து நிறுத்தி இருக்கிறார்கள் கர்ப்பக் கிருஹத்துக்குள்ளே. இந்த அம்பிகையின் திரு வுருவில் அந்தப் பழைய அம்பிகை முகத்திலுள்ள களை இல்லை. இவர்களோடு நடராஜருக்கு ஒரு தனிச் சந்நிதி. அங்கு நடராஜர் சிவகாமி அம்மையுடன் எழுந்தருளியிருக்கிறார். இவர்களைத்தான் எல்லாக் கோயில்களிலுமே பார்க்கிறோமே. அந்த ஆயிரத்தொருவரை இங்கே வடித்து வைத்திருக்கிறார்களா என்று அறியத் துடிக்கும் உங்கள்