பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வேங்கடம் முதல் குமரி வரை

இனி இக்கோயில் உருவான வரலாற்றையும், அங்கு திருமலை முருகன் கோயில் கொண்ட திறத்தையும், அக்கோயிலுக்கு சிவகாமி ஆத்தாள் செய்த சேவையையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம் தானே.

திருமலை ஒரு சிறிய மலை தான். அந்த மலையிலே. ஒரு சுனை இருக்கிறது. அதனைப் பூஞ்சுனை என்கின்றனர். அச்சுனையின் கரையிலே ஒரு புளிய மரம் இருக்கிறது. அதனை அடுத்து சப்த கன்னிமார் கோயில், ஒன்றும் இருக்கிறது. அக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூசையை முடித்து விட்டுப் புளிய மரத்தடியில் வந்து இளைப்பாறுகிறார். அங்கு தலையைச் சாய்த்தவர் தூங்கிவிடுகிறார். அவரது கனவில் முருகன் தோன்றி, இந்த மலைக்கு வடபக்கம் ஓடும் அனுமன் நதிக்கரையில் கோட்டை மேடு என்ற இடத்தில் நாம் மண்ணுள் புதையுண்டு கிடக்கிறோம். நம்மை எடுத்து வந்து மலை மீது பிரதிஷ்டை பண்ணினால், உங்கள் அரசனது பிணீ தீரும் என்கிறார். இச்செய்தியை அர்ச்சகர் அரசனிடம் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட இடத்தில் இருந்த மூர்த்தியை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்கிறான் அரசன். ஆதியில் வேலும் மயிலும் கொண்ட கற்சிலையாகத்தான் முருகன் இருந்திருக்கிறான், அதனையே அர்ச்சகர் கனவு கண்ட புளிய மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார்கள். அதனையே உத்தண்ட வேலாயுதம் - ஆதிமூல நிலையம் என்று இன்றும் அழைக்கிறார்கள்.

பல வருஷங்கள் கழிகின்றன. நெடுவேலி என்ற கிராமத்தில் மறவர் குலத்தில் ஒரு பெண் பிறக்கிறாள். அவளுக்குச் சிவகாமி என்று பெயர் சூட்டப்படுகிறது. நாளும் வளர்ந்து மங்கைப் பருவம் அடைகிறாள்.