(ஐந்தாம் பாகம்)
பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கணக்கிடப்படுவது நாம் வசிக்கும் மண். இந்த மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் சக்திதான் எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. மண்ணை வெட்டி, அதற்குள் சில விதைகளைப் போட்டுத் தண்ணீர் ஊற்றினால், மண்ணிலிருந்து செடியும், கொடியும், மரமும், மட்டையும், வெளி வருகிறது, உண்ணும் உணவு அளிக்க நெல் விளைகிறது. இன்னும் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, என்று எண்ணற்ற உணவு தானியங்கள் எல்லாம் வந்து குவிகின்றன. உடுக்க உடை உதவும் பஞ்சும் பருத்தியும் செடிகளில் காய்க்கிறது.
இவை மட்டுமா? பலப்பல வர்ணங்களில் மலர்கள், பலப்பல சுவையுடைய கனிகள் எல்லாம் இந்தச் செடியிலும், கொடியிலும், மரத்திலும் பூத்துக் காய்த்து விடுகின்றன. அத்துணை சக்தியை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது இந்த மண். அதனாலேயே மண்ணையும் தெய்வமாக்கி, பூமாதேவி என்றனர். காத்தற் கடவுளான விஷ்ணுவின் பட்ட மகிஷி என்றும் வணங்கினர் மக்கள்.