பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வேங்கடம் முதல் குமரி வரை

ஒருவரை ஒருவர் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கிறார்களோ தெரியவில்லை.

என்றாலும் இந்த நித்தீச்சுரர் சந்நிதி முன்பு ஒரு திருக் குளம் நித்ய புஷ்கரிணி என்ற பெயருடன் விளங்குகிறது.. ஹிரண்யாட்சனை சம்ஹரித்த காலத்தில் பூவராகன் மேனியில் இருந்து வடிந்த வேர்வைத்துளிகளே இப்படி புஷ்கரிணியாக மாறியது என்று புராணம் கூறுகிறது. இப்புஷ்கரிணியின் கரையிலே அக்கினிதிக்கிலே ஒரு அரசமரம் நிற்கிறது. நித்ய புஷ்கரிணியில் நீராடி இம்மரத்தை வலம் வருபவர்கள் எல்லா நலமும் பெறுவர் என்பது நம்பிக்கை. இந்த மரமும் பூஜைக்கு உரிய பொருளாகிறது.

இக் கோயில் யாரால், எப்போது கட்டப்பட்டது என்று தெரியவில்லை. கட்டிடக் கலையைப் பார்த்தால் இது விஜயநகர நாய்க்க மன்னர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கேற்ப அச்சுத நாய்க்கர், அனந்தப்ப நாய்க்கர், கொண்டப்ப நாய்க்கர், கோவிந்தப்ப நாய்க்கர் முதலியோர் சிலைகள் புருஷ சூக்த மண்டபம் என்னும் பதினாறுகால் மண்டபத்தில் நிற்கின்றன. இக்கோயில் பல வருஷங்களாக உடையார்பாளையம் ஜமீன்தார்கள் மேற்பார்வையில் இருந்து வந்திருக்கிறது. பல நிபந்தங்கள் அவர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இதையெல்லாம் ஆராய நமக்கு நேரம் ஏது? பூவராகன் பக்ஞ வராகன், அம்புஜவல்லித் தாயார் முதலியோரை வணங்கி அவர்தம் அருள் பெற்றுத் திரும்புவதோடு திருப்தி அடையலாம்.