பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வேங்கடம் முதல் குமரி வரை

நேர்ந்தனன் நிரம்பு நன்னூல்
மந்திர நெறியில் வல்லான்.

என்பது கம்பன் பாட்டு.

இந்த நிகழ்ச்சி எங்கு நடந்தது? என்று ஒரு கேள்வி, சோழநாட்டிலே சீகாழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலுக்குள்ளே சடாயு குண்டம் என்று ஒரு இடம் இருக்கிறது. அதில் கொஞ்சம் சாம்பலும் இருக்கிறது. அதுவே சடாயுவைத் தகனம் செய்த இடம் என்று கூறும் அத்தல வரலாறு. ஆனால் ராமன் ஈமக் கிரியை களைச் செய்தான் என்ற வரலாறு இல்லை.

திருநெல்வேலி ஜில்லாவிலே நாரணம்மாள் புரம், மணி மூர்த்தீஸ்வரம் என்னும் இரண்டு சிற்றூர்களுக்கு இடையே ஒரு சிறு கிராமம் அருக்கன் குளம் என்ற பெயரோடு தாமிரபரணி நதிக்கரையில் இருக்கிறது. அங்கும் ஒரு சடாயு குண்டம் இருக்கிறது சடாயு குண்டம் என்பது ஒரு நல்ல கிணறு போல் இருக்கிறது. எக்காலத்தும் அதில் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது: இக்குண்டத்தின் கரையிலே ஒரு சிறு கோயில். அதில் கோயில் கொண்டிருப்பார் அனந்த நாராயணன். வைகுந்த வாசனான அந்த நாராயணன், லட்சுமி சமேதனாக அங்கே சிலை உருவில் இருக்கிறான். பக்கத்திலே சடாயுவும் நின்று கொண் டிருக்கிறான்.

இந்த சடாயு குண்டத்திற்குத் தெற்கே ஒரு பர்லாங்கு தொலைவில் ஒரு பெரிய கற் கோவில் இருக்கிறது. அதனைக் காட்டு ராமர் கோயில் என்கின்றனர், உடை மரங்கள் நிறைந்த ஒரு காட்டிடையே, இரண்டரை ஏக்கர் விஸ்தீரணமுள்ள இடத்தில், இக்கோயில் கட்டப் பட்டிருக்கிறது. செப்பறைலிருந்து பாலாமடை செல்லும் ராணி மங்கம்மாள் சாலையை அடுத்து. இக்கோயில் இருக்கிறது.