பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

197

ஆகும். இவையனைத்தையும் உள்ளடக்கிய நாட்டு விடுதலையே இக்கால் நமக்கு வேண்டப் பெறுவது.

இம்முயற்சியில் ஈடுபடும் அல்லது கருத்து வளர்க்கும் இயக்கங்கள் மிகமிகக் குறைவே. 'தமிழ்நாடு தமிழர்க்கே' என்னும் கொள்கைக் குரலை ஓங்கி ஒலிக்கவே அஞ்சிக் கொண்டுள்ளவர்கள், தமிழினத்திற்கொன்றும் பெரிதாகச் செய்துவிட முடியவே முடியாது. வெறும் விளம்பர வளர்ச்சிக்கும், பொருள் வாய்ப்புகளுக்குமே அம் முயற்சிகள் பயன்படலாம். ஆனால் தமிழினத்தை முன்னேற்றுவதற்கு அவை ஒரு விரல் நுனியளவும் பயன்பட முடியாது.

இக் கால் நடைபெறவிருக்கும் மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளவர்கள் ஒன்றும் ஊரை ஏமாற்றி உலையில் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அல்லர். உண்மையான இன நாட்டு விடுதலைக்காகத் தங்களையே ஈகப்படுத்திக் கொண்டவர்கள். அவர்களின் கடந்தகால தொடர்ந்த வரலாறுகள் இவற்றைத் தெளிவாக உணர்த்தும் அவர்கள் மேல் பல குறைகளும் இழிவுகளும் பழிகளும் கூறிக் கொண்டிருப்பவர்கள் ஒன்றால், அவர்களின் நடவடிக்கைகளை நேரிடையாக உணராதவர்களாக இருக்க வேண்டும்; அன்றால், அவர்கள் நிலைப்பாடுகளிலும் வினைப் பாடுகளிலும் பொறாமை கொண்ட தந்நல உணர்வாளர்களாக இருக்க வேண்டும். இனி, இவர்கள் செய்கின்ற இடைத்தடுப்புச் செயல்களும், மூடி மறைப்புகளும், ஊடறுப்புகளும், வஞ்சகங்களும், உண்மையான நம் முயற்சிகளுக்குச் சிறு சிறு தொல்லைகளாக இருக்குமே தவிர, எல்லைகளாக இருக்க முடியாது.

எனவே, நடக்க விருக்கும் மாநாடுகள் உண்மையான இனநல, நாட்டுநல உரிமை மீட்புகளுக்கானவை, என்று கருதி, அனைவரும் இவற்றுக்கு ஒத்துழைப்புத்தரக் கேட்டுக் கொள்கிறோம்.

விடுதலைப் பாசறை கட்டமைக்கப் பெறுகிறது! திட்டங்கள் வகுக்கப்பெறுகின்றன. செயல் மறவர்கள் அனைவரும் தவறாது வந்துகூடி ஒன்றிணைந்து வினைப்பகிர்வு செய்து கொள்ள வேண்டுவது நம் கடமையாகும்! காலக் கட்டாயமுமாகும்!

- தமிழ்நிலம், இதழ் எண். 34 மார்ச்சு 1984