பயனர் பேச்சு:Librarystc

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பாரத ரத்னா  : விருது பெற்றவர்கள்[தொகு]

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா 1954-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைப்பார். ஓராண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும். இந்த விருது ஏற்படுத்தப்பட்டபோது, அமரர்களுக்கு வழங்கப்படாது என்ற விதி பின்பற்றப்பட்டது. அதனால்தான் 1948-ல் மறைந்த மகாத்மா காந்திக்கு விருது வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை மாற்றும் வகையில் 1966-ல் அந்த விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உள்பட இதுவரை 12 பேருக்கு அவர்களின் மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டவர்களைத் தவிர்த்து அன்னை தெரசா, அப்துல் கபார் கான், நெல்சன் மண்டேலா ஆகிய வெளிநாட்டினர் மூவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரத ரத்னா விருதில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட சான்றிதழ், பதக்கம் ஆகியவை அடங்கும். ரொக்கப் பரிசு கிடையாது. விருது பெறுவோருக்கு அணிவிக்கப்படும் பதக்கம் 32 மி.மீட்டர் விட்டத்தில் அரச இலை வடிவில் இருக்கும். அதில் சூரியனின் உருவமும் “பாரத ரத்னா” என்ற சொல் தேவநாகரி எழுத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். விதி 18 (1)-ன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது. அவசியம் என்று கருதினால் மட்டும் விசிட்டிங் கார்டு, லெட்டர் பேட் ஆகியவற்றில் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதல்முறையாக விருது வாபஸ்[தொகு]

சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போஸுக்கு 1992-ல் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது மரணத்தில் மர்மம் நீடிப்பதை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக சுபாஷ் சந்திர போஸுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருது முதல்முறையாக வாபஸ் பெறப்பட்டது.

நடைமுறை விதியில் மாற்றம்[தொகு]

கலை, இலக்கியம், அறிவியல், பொதுச் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மட்டுமே இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதைப் பெறும் வகையில் விதியில் மாற்றம் செய்து அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்தே முதல்முறையாக விளையாட்டுத் துறையைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரையும் சேர்த்து இதுவரை 43 பேர் பாரத ரத்னா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 2013 – சி. என். ஆர். ராவ் (1934 ஜூன் 30) கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல வேதியியல் விஞ்ஞானி. செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் பின்புலமாகச் செயல்பட்டவர். தற்போது பிரதமரின் அறிவியல் ஆலோசகராக உள்ளார். 2013- சச்சின் டெண்டுல்கர் (1973 ஏப்ரல் 24) உலகின் தலைச் சிறந்த கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் உலகில் முறியடிக்கப்பட முடியாத பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர்.

1954- ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாரத ரத்னா விருது பெற்றவர்களின் முழு விவரம்:[தொகு]

1950-களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் =[தொகு]

1954 - சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி

(1878 டிசம்பர் 10- 1972 டிசம்பர் 25)
தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர். முதல் பாரத ரத்னா விருதை பெற்ற பெருமைக்குரிய அவர், சென்னை மாகாண பிரதம மந்திரி, நாட்டின் முதல் கவர்னர்-ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், சென்னை மாகாண முதல்வர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.

1954 - சர் சந்திரசேகர வெங்கடராமன்

(1888 நவம்பர் 7 - 1970 நவம்பர் 21)
தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இயற்பியல் துறை விஞ்ஞானி. “ராமன் விளைவு” என்ற அவரது ஒளிச் சிதறல் ஆய்வுக்காக 1930-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  1. 1954- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
(1888 செப்டம்பர் 5 - 1975 ஏப்ரல் 17)
நாட்டின் 2-வது குடியரசுத் தலைவர். தமிழகத்தைச் சேர்ந்த அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  1. 1955- பகவான் தாஸ்
(1869 ஜனவரி 12 - 1958 செப்டம்பர் 18)
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். சம்ஸ்கிருதம், ஹிந்தியில் 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
  1. 1955- ஜவஹர்லால் நேரு
(1889 நவம்பர் 14 - 1964 மே 27)
நாட்டின் முதல் பிரதமர். சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர். மிகச் சிறந்த ஆங்கில நூலாசிரியரும்கூட. அவரது பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  1. 1955- சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா
(1860 செப்டம்பர் 15 – 1962 ஏப்ரல் 14)
கர்நாடகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பொறியாளர். கிருஷ்ணராஜ சாகர் அணை, மைசூர் சிவசமுத்திரத்தில் உள்ள ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் ஆகியவை இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை. அவரது பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தேசிய பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  1. 1957- கோவிந்த் வல்லப் பந்த்
(1887 செப்டம்பர் 10 – 1961 மார்ச் 7).
உத்தர பிரதேசத்தின் முதல் முதல்வர். சுதந்திரப் போராட்டத் தலைவர். இந்தியை ஆட்சி மொழியாக்குவதில் அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
  1. 1958- தோண்டோ கேசவ் கார்வே
( 1958 ஏப்ரல் 18 – 1962 நவம்பர் 9)
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி. மகளிர் நலனுக்காக தீவிரமாகப் போராடியவர். விதவையை மணம் முடித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தார்.

1960-களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள்[தொகு]

1961- விதான் சந்திர ராய் (1882 ஜூலை 1 – 1962 ஜூலை 1). மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர். மேற்கு வங்கத்தின் 2-வது முதல்வர். மருத்துவரான இவரது பிறந்த நாள் (ஜூலை 1) தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1961- புருஷோத்தம் தாஸ் தாண்டன் (1882 ஆகஸ்ட் 1 – 1962 ஜூலை 1) உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர். இந்தி ஆட்சி மொழி அந்தஸ்து பெறுவதற்கு பின்புலமாகச் செயல்பட்ட அவரை வடஇந்திய மக்கள் “ராஜரிஷி” என்று அழைக்கின்றனர். 1962- ராஜேந்திர பிரசாத் (1884 டிசம்பர் 3 – 1963 பிப்ரவரி 28) நாட்டின் முதல் குடியரசுத் தலைவர். வழக்கறிஞர், பத்திரிகையாளர், அரசியல் தலைவர் என பன்முகத்தன்மை கொண்டவர். 1963- பாண்டுரங்க வாமன் காணே (1880- 1972) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர். சாகித்ய அகாதெமி உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். 1963- ஜாகீர் உசேன் (1897 பிப்ரவரி 8 – 1969 மே 3) நாட்டின் 3-வது குடியரசுத் தலைவர், முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த நிறுவன தலைவர்களில் ஒருவர். 1966- லால் பகதூர் சாஸ்திரி ( 1904 அக்டோபர் 2 – 1966 ஜனவரி 11) நாட்டின் 2-வது பிரதமர். அவரது மறைவுக்குப் பின்னர் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது ஆட்சியில் 1965 பாகிஸ்தான் போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரர்.

1970-களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள்[தொகு]

1971- இந்திரா காந்தி (1917 நவம்பர் 19 – 1984 அக்டோபர் 31) நாட்டின் 3-வது பிரதமர். மொத்தம் 4 முறை பிரதமராகப் பதவி வகித்தவர். அவரது ஆட்சிக் காலத்தில், 1971 பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்று வங்கதேசம் உருவானது. 1975- வராககிரி வேங்கட கிரி (1894 ஆகஸ்ட் 10 – 1980 ஜூன் 23) நாட்டின் 4-வது குடியரசுத் தலைவர். ஆந்திரத்தைச் சேர்ந்த அவர் அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 1976- காமராஜர் ( 1903 ஜூலை 15 – 1975 அக்டோபர் 2) 9 ஆண்டுகள் தமிழக முதல்வராகப் பதவி வகித்தவர். அவரது மறைவுக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது. எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற அவர், தென்னாட்டு காந்தி என்றும் புகழப்படுகிறார்.

1980-களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள்[தொகு]

1980- அன்னை தெரசா (1910 ஆகஸ்ட் 26 – 1997 செப்டம்பர் 5) அல்பேனியா நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரீ. கொல்கத்தாவில் சமயப் பணியாற்ற வந்த அவர் பின்னாளில் “மிஷினரிஸ் ஆப் சேரிட்டி” அமைப்பை உருவாக்கி சமூக சேவைகளில் மாபெரும் சாதனை படைத்தவர். 1983- வினோபா பாவே (1895 செப்டம்பர் 11 – 1982 நவம்பர் 15) சுதந்திரப் போராட்ட வீரர். ஆன்மிகத் தலைவர். பூமி தான இயக்கத்தை தொடங்கி ஏழை எளியோருக்கு நிலம் கிடைக்கச் செய்தவர். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அவர் மராத்தி, ஹிந்தியில் பல்வேறு ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். 1987 - கான் அப்துல் கபார் கான் (1890 – 1988 ஜனவரி 20) பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டுக்காரர். சுதந்திரப் போராட்டத்தின்போது இந்திய மக்களால் எல்லை காந்தி என்றழைக்கப்பட்டவர். பாகிஸ்தானின் பஸ்தூர் பழங்குடி இனத்தின் முக்கிய தலைவர். 1988 – எம்.ஜி.ராமச்சந்திரன் (1917 ஜனவரி 17 – 1987 டிசம்பர் 24) தமிழ் திரைப்பட நடிகர், அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், தொடர்ச்சியாக 3 முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்தவர். அவரது மறைவுக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது.

1990-களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள்[தொகு]

1990 - அம்பேத்கர் (1891 ஏப்ரல் 14 – 1956 டிசம்பர் 6) நாட்டின் முதல் சட்ட அமைச்சர். இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவர். பொருளாதார நிபுணர், வரலாற்று ஆய்வாளர், கல்வியாளர் என பன்முகம் கொண்ட அவர், தன் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடினார். 1990 – நெல்சன் மண்டேலா (1918 ஜூலை 18). தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தியாகசீலர். 1990-ல் அவரது விடுதலைக்குப் பின் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது. 1991 - மொரார்ஜி தேசாய் (1986 பிப்ரவரி 29 – 1995 ஏப்ரல் 10) நாட்டின் 4-வது பிரதமர். காங்கிரஸ் அல்லாத முதல் அரசை அமைத்தவர். அவரது ஆட்சியில் 1974-ல் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான் –இ- பாகிஸ்தான் விருதைப் பெற்ற ஒரே இந்தியர். 1991 - ராஜீவ் காந்தி (1944 ஆகஸ்ட் 20 – 1991 மே 21) நாட்டின் 6-வது பிரதமர். அவரது ஆட்சியில் அறிவியல், தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1991 - சர்தார் வல்லபாய் படேல் (1875 அக்டோபர் 31- 1950 டிசம்பர் 15) நாட்டின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சர். சுமார் 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தவர். அவரது மரணத்துக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது. 1992 – ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (1904 ஜூலை 29 – 1993 நவம்பர் 29) இந்திய விமானப் போக்குவரத்து துறையின் முன்னோடி. நாட்டின் முதல் விமானி. டாடா குழுமத் தலைவராக செயல்பட்ட அவர், டாடா அறக்கட்டளை மூலம் ஆசியாவின் முதல் புற்றுநோய் மருத்துவனையை 1941-ல் மும்பையில் நிறுவினார். 1992 மெளலானா அபுல் கலாம் ஆசாத் (1888 நவம்பர் 11 – 1958 பிப்ரவரி 22) சுதந்திரப் போராட்டத் தலைவர். நாட்டின் முதல் கல்வி அமைச்சர். அவரது பிறந்த நாளான நவம்பர் 11 தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. 1992- சத்யஜித் ரே (1921 மே 2 – 1992 ஏப்ரல் 23) மேற்கு வங்க திரைப்பட இயக்குநர். ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர். அவர் இயக்கிய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை. 1997 – அப்துல் கலாம் (1931 அக்டோபர் 15) நாட்டின் 11-வது குடியரசுத் தலைவர். தமிழகத்தைச் சேர்ந்த அவர், 1974-ல் பொக்ரானில் நடத்தப்பட்ட 2-வது அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியவர். 1997 - அருணா ஆஷப் அலி (1909 ஜூலை 16 – 1996 ஜூலை 29) சுதந்திரப் போராட்ட தலைவர். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது பாம்பே கோவாலியா டேங்க் மைதானத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கொடியை ஏற்றியவர். அவரது மரணத்துக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது. 1997 - குல்சாரி லால் நந்தா (1898 ஜூலை 4 – 1998 ஜனவரி 15) சுதந்திரப் போராட்டத் தலைவர். நேரு மறைவின் போதும், லால் பகதூர் சாஸ்திரி மறைவின்போதும் நாட்டின் இடைக்கால பிரதமராகப் பணியாற்றியவர். 1998 - சிதம்பரம் சுப்பிரமணியம் (1910 ஜனவரி 30 – 2000 நவம்பர் 7) தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். அவர் மத்திய வேளாண் அமைச்சராக இருந்தபோது பசுமைப் புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. 1998 - எம்.எஸ். சுப்புலட்சுமி (1916 செப்டம்பர் 16 – 2004 டிசம்பர் 11) தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி. இசைத் துறையில் பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர். ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் ரமோன் மகசேசே விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். 1999- அமர்த்தியா சென் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர். 1998-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதார தத்துவங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 1999 – கோபிநாத் போர்டோலாய் (1890- 1950) சுதந்திரப் போராட்டத் தலைவர். அசாமின் முதல் முதல்வர். அவரது தீவிரமான எதிர்ப்பு காரணமாகவே கிழக்கு பாகிஸ்தான் (இப்போதைய வங்கதேசம்) பகுதியுடன் அசாம் இணைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மரணத்துக்குப் பின் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. 1999 - ஜெயப் பிரகாஷ் நாராயண் (1902 அக்டோபர் 11 – 1979 அக்டோபர் 8) பிகாரைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர். ஜே.பி. என்றும் மக்களின் தலைவர் என்றும் அழைக்கப்பட்டவர். ஜனதா கட்சிக்கு வித்திட்டவர். அவர் தொடங்கிய முழு புரட்சி இயக்கம் நாடு முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றது. அவரது மரணத்துக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது. 1999 - பண்டிட் ரவி சங்கர் (1920 ஏப்ரல் 7 – 2012 டிசம்பர் 11) உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக் கலைஞர். மூன்று முறை கிராமி விருது வென்றவர். இந்திய இசையை மேற்கத்திய நாடுகளில் பிரபலப்படுத்தியவர்.

2000-களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள்[தொகு]

2001- லதா மங்கேஷ்வர் (1929 செப்டம்பர் 28) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி. கடந்த 60 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 2001 - உஸ்தாத் பிஸ்மில்லா கான் (1913 மார்ச் 21 – 2006 ஆகஸ்ட் 21) பிகாரில் பிறந்த உலகப் புகழ்பெற்ற இந்திய ஷெனாய் இசை மேதை. மதச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடித்த அவர் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் ஷெனாய் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். 2008 – பண்டிட் பீம்சென் ஜோஷி (1922 பிப்ரவரி 4 – 2011 ஜனவரி 24) கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல இந்துஸ்தானி இசைப் பாடகர். சங்கீத நாடக அகாதெமியின் உயரிய விருதான சங்கீத நாடக அகாதெமி பெல்லோஷிப் பெற்றவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Librarystc&oldid=21691" இலிருந்து மீள்விக்கப்பட்டது