பாஞ்சாலி சபதம்/முகவுரை

விக்கிமூலம் இலிருந்து
முகவுரை

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஒரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும் படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்.

காரியம் மிகப் பெரியது. எனது திறமை சிறிது. ஆசையால் இதை எழுதி வெளியிடுகிறேன். பிறருக்கு ஆதர்சமாக அல்ல, வழிகாட்டியாக.

இந்நூலிடையே திருதராஷ்டிரனை உயர்ந்த குணங்களுடையவனாகவும் சூதில் விருப்பமில்லாத வனாகவும் துரியோதனனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கிறேன். அவனும் மகனைப் போலவே துர்க்குணங்களுடையவன் என்று கருதுவோருமுளர். எனது சித்திரம் வியாச பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக இந்நூலை வியாச பாரதத்தின் மொழி பெயர்ப்பென்றே கருதி விடலாம். அதாவது கற்பனைதிருஷ்டாந்தங்களில் எனது சொந்த சரக்கு அதிகமில்லை. தமிழ் நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி.

தமிழ் ஜாதிக்கு புதிய வாழ்வு தர வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலிலே தூண்டினாளாதலின் இதன் நடை நம்மவர்க்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன்.

ஓம். வந்தே மாதரம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பாஞ்சாலி_சபதம்/முகவுரை&oldid=1392999" இலிருந்து மீள்விக்கப்பட்டது