பாஞ்சாலி சபதம்/14. திரிதராட்டிரன் சம்மதித்தல்

விக்கிமூலம் இலிருந்து

14. திரிதராட்டிரன் சம்மதித்தல்

வேறு
'விதிசெயும் விளைவி னுக்கே-இங்கு
வேறு செய்வார் புவிமீ துளரோ?
மதிசெறி விதுரன் அன்றே-இது
வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்.
அதிசயக் கொடுங் கோலம்-விளைந்
தரசர்தங் குலத்தினை அழிக்கும்என்றான்;
சதிசெயத் தொடங்கி விட்டாய்-நின்றன்
சதியினிற் றானது விளையும்-என்றான். 107

'விதி!விதி!விதி!மகனே!-இனி
வேறெது சொல்லுவன் அட மகனே!
கதியுறுங் கால னன்றோ-இந்தக்
கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?
கொதியுறு முளம் வேண்டா;-நின்றன்
கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;
வதியுறு மனை செல்வாய்,'-என்று
விழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான். 108