பாஞ்சாலி சபதம்/6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது

விக்கிமூலம் இலிருந்து
6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது

வேறு
‘உலகு தொடங்கிய நாள்முத லாகநம் சாதியில்-புகழ்
ஓங்கி நின்றாரித் தருமனைப்போலெவர்?மாமனே!
இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும்,மாம னே!-பொருள்
ஏற்றமும் மாட்சியும் இப்படி யுண்டுகொல்?மாமனே?
கலைக ளுணர்ந்தநல் வேதியப் பாவலர் செய்தவாம்-பழங்
கற்பனைக் காவியம் பற்பல கற்றனைமாம னே!
பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும்-சொல்லப்

பார்த்ததுண்டோ?கதை கேட்டதுண்டோ?புகல் மாமனே!

‘எதனை யுலகில் மறப்பினும்,யானினி,மாம னே!-இவர்
யாகத்தை என்றும் மறந்திட லென்பதொன் றேது காண்?
விதமுறச் சொன்ன கொருட்குவை யும்பெரி திலைகாண்;அந்த
வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண் டே;
இதனை யெலாமவ் விழியற்ற தந்தையின் பாற்சென்றே சொல்லி,
இங்கிவர் மீதவ னும்பகை எய்திடச் செய்குவாய்
மிதமிகு மன்பவர் மீதுகொண்டானவன் கேட்கவே-அந்த
வேள்விகண் டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்பு வாய்.

‘கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர்-பல
காமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மை யே
மண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில்-கொண்டு
வாழ்த்தி யளித்தனர் பாண்டவர்க் கே,எங்கள் மாமனே!
எண்ணைப் பழிக்குந் தொகையுடை யாரிள மஞ்சரைப் பலர்
ஈந்தன் மன்ன ரிவர்தமக் குத்தொண் டியற்ற வே!
விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார்;-தெய்வ

வேதியர் மந்திரத் தோடுபல் வாழ்த்துக்கள் ஓதினர்.
‘நாரதன் தானும் அவ்வேத வியாசனும் ஆங்ஙனே-பலர்
நானிங் குரைத்தற் கரிய பெருமை முனிவரும்,
மாரத வீரர்,அப் பாண்டவ வேள்விக்கு வந்ததும்,-வந்து
மாமறை யாசிகள் கூறிப் பெரும்புகழ் தந்த தும்,
வீரர்தம் போரின் அரியநற் சாத்திர வாதங்கள்-பல
விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே,
சார மறிந்த யுதிட்டிரன் கேட்டு யிந்ததும்,-நல்ல
தங்க மழைபொழிந் தாங்கவ்க் கேமகிழ் தந்த தும்.

‘விப்பர ராதிய நால்வரு ணத்தவர் துய்ப்பவே-நல்
விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்டதும்
இப்பிற விக்குள் இவையொத்த வேள்வி விருந்துகள்-புவி
எங்கணும் நான்கண்ட தில்லை’எனத்தொனி பட்டதும்,
தப்பின்றி யநேல் விருந்தினர் யாருக்குந் தகுதிகள்-கண்டு
தக்கசன் மானம் அளித்து வரிசைகள் இட்டதும்,
செப்புக நீயவ் விழியற்ற தந்தைக்கு;“நின்மகன்-இந்தச்
செல்வம் பெறாவிடில் செத்திடு வான்”என்றும் செப்புவாய்.

“அண்ணனை மைந்தன் அவனிக் குரியவன் யானன்றோ? அவர்
அடியவ ராகி யெமைப்பற்றி நிற்றல் விதியன் றோ?
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர்தந்தார்? அந்தப்
பாண்ட வர்நமைப் புல்லென எண்ணுதல் பார்த்தை யோ?
கண்ண னுக்கு முதல்உப சாரங்கள் காட்டினார்;-சென்று
கண்ணி லாத்தந்தைக் கிச்செய லின்பொருள் காட்டுவாய்;
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான்? என்றன்
மாமனே! அவன் நம்மில் உயர்ந்த வகைசொல் வாய்!

‘சந்தி ரன்குலத் தேபிறந் தோர்தந் தலைவன்யான்-என்று
சகமெ லாஞ்சொலும் வார்த்தைமெய் யோவெறுங் சாலமோ?
தந்திரத்தொழில் ஒன்றுண ரும்சிறு வேந்தனை-இவர்
தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ?
மூந்தி ரத்திலச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார்;-ஐய!
மாம கத்தில் அதிதியைக் கொல்ல மரபுண்டோ?
இந்திரத்துவம் பெற்றிவர் வாழும் நெறிநன்றே!-இதை
எண்ணி எண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே!
சதிசெய் தார்க்குச் சதிசெயல் வேண்டும்என் மாமனே!-இவர்
தாமென் அன்பன் சராசந் தனுக்குமுன் எவ்வ கை
விதிசெய் தார்?அதை என்றும் உள்ளம் மறக்குமோ?-இந்த
மேதினி யோர்கள் மறந்து விட்டார்.இஃதோர்விந்தை யே?
திதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர்,மாமனே!-எந்த
நெறியி னாலது செய்யினும்,நாயென நீள்பு வி
துதிசெய் தேயடி நக்குதல் கண்டனை மாமனே!-வெறுஞ்
சொல்லுக் கேயற நூல்கள் உரைக்கும் துணிவெலாம்.

வேறு


“பொற்றடந் தேரொன்று வாலிகன்
கொண்டு விடுத்ததும்-அதில்
பொற்கொடி தியர் கேமன்
வந்து தொடுத்ததும்,
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன்
மாப்ணி தந்ததும்;-ஒளி
யோங்கிய மாலையும் மாகதன்
தான்கொண்டு வந்ததும்,
பற்றல ரஞ்சும் பெரும்புக
ழேக லவியனே -செம்பொற்
பாதுகை கொண்டு யுதிட்டிரன்
தாளினில் ஆர்த்தும்,
முற்றிடு மஞ்சனத் திற்கப் பல
பலதீர்த்தங்கள்-மிகு
மொய்ம்புடை யான் அவ் அவந்தியர்
மன்னவன் சேர்த்ததும்.

“மஞ்சன நீர்தவ வேத
வியாசன் பொழிந்ததும்,-பல
வைதிகர் கூடிநன் மந்திர
வாழ்த்து மொழிந்ததும்,
குஞ்சரச் சாத்தகி வெண்குடை
தாங்கிட,வீமனும்-இளங்
கொற்றவ னும்பொற் சிவிறிகள்
வீச,இரட்டையர்

அஞ்சுவர் போலங்கு நின்று
கவரி இரட்டவே-கடல்
ஆளு மொருவன் கொடுத்ததொர்
தெய்விகச் சங்கினில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங்
கங்கை நீர்க்கொண்டு-திரு
மஞ்சன மாட்டும்அப் போதில்
எவரும் மகிழ்ந்ததும்

“மூச்சை யடைத்த தடா!சபை
தன்னில் விழுந்ததுநான்-அங்கு
மூர்ச்சை யடைந்தது கண்டனையே!
என்றன் மாமனே!
ஏச்சையும் அங்கவர் கொண்ட
நகைப்பையும் எண்ணுவாய்;-அந்த
ஏந்திழை யாளும் எனைச்சிரித்
தாளிதை எண்ணுவாய்;

பேச்சை வளர்த்துப் பயனொன்று
மில்லை,என் மாமனே!-அவர்
பேற்றை அழிக்க உபாயஞ்சொல்வாய்,
என்றன் மாமனே!
தீச்செயல் நற்செயல் ஏதெனினும்
ஒன்று செய்து,நாம்-அவர்
செல்வங் கவர்ந்த வரைவிட
வேண்டும் தெருவிலே.’