பாபு இராஜேந்திர பிரசாத்/வழக்குரைஞர்களின் ஒழுக்கங்கள் ராஜன் பாபு ஓர் உதாரணம்!

விக்கிமூலம் இலிருந்து
6. வழக்குரைஞர்களின் ஒழுக்கங்கள்
ராஜன் பாபு ஓர் உதாரணம்!

வழக்குரைஞர் ராஜன் பாபுவுக்கு வழக்குகள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன. அவரது தோற்றம், அடக்க சுபாவம், இனிய பேசும் தன்மை, ஒழுக்கத்தோடு சட்டத்தை அணுகும் திறன், பொய் வழக்குகளைப் பணத்தாசையால் தொடுத்துக் கெட்ட பெயரைப் பெறாத உயர் நோக்கம், வழக்குகளின் நுட்பமறிந்து அதன் அடிப்படை யூகங்களை ஆய்ந்து வழக்குகளைத் தேர்வு செய்யும் வியூகம், இவ்வறால்ராஜன் பாபுவின் புகழும் வருமானமும் பெருகியது. பாபுவைப் போன்ற ஜூனியர் வக்கீல்கள் எவரும் அவரைப் போல அளவுகடந்த வருமானத்தைச் சம்பாதிக்கவில்லை என்றே கூறலாம்.

1915 ஆம் ஆண்டில் எம்.எல். பட்டத் தேர்வுக்குப் பரீட்சை எழுதினார். மாகாணத்திலேயே முதல் இடம்பெற்று வழக்கறிஞராக ஆனதால், ராஜன் பாபு கல்கத்தா வழக்கறிஞர் என்ற பெயரைப் பெற்றார். அதனால், கல்கத்தா வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பாபுவுக்கு விருது வழங்கி விருந்து வைத்தனர்.

பீகார் மாகாணத்தின் தலைநகரான பாட்னாவில் 1916 ஆம் ஆண்டில் உயர்நீதி மன்றம் உருவானது. கல்கத்தாவிலே பணியாற்றிய ராஜன்பாபு உடனே பாட்னா வந்து வக்கீல் தொழிலைத் தொடர்ந்தார். அங்கேயும் அவருக்கு தொழில் விரைவாகவும், வளமாகவும் நடந்து வந்தது. கல்கத்தா வழக்கறிஞர் என்ற பெயர் இங்கேயும் அவருக்கு தொடர்ந்து வந்து நிலைத்தது. இவ்வளவு பெரிய பெயரும் புகழும் செல்வாக்கும் மக்கள் இடையே வளர்ந்தோங்கியதற்குப் பிறகும் கூட, ராஜேந்திரர் எளிய ஒரு குடியானவனைப் போலவே வாழ்க்கையை நடத்தினார். பாபுவின் சட்டப் புலமையை மதித்து ஆங்கிலேயர் அரசு அவரை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமிக்க பரிசீலனை செய்து வந்தது.

வழக்குரைஞர் பணி ஒன்று மட்டுமே நமது பிறப்புரிமைக்குப் போதுமானது, உகந்தது என்று அவர் கருதாமல், ஓய்வு எப்போதெல்லாம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம், பொது நலப் பணிகள் ஏதாவது ஒன்றில் ஈடுபாடு கொண்டே இருந்தார். இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறலாம்.

பாட்னாவில் ஒரு பல்கலைக் கழகத்தை ஏற்படுத்திட தில்லி சட்டமன்றத்தில் ஆங்கிலேயர் ஆட்சியினர, ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்திலே பல குறைபாடுகளும் - குழப்பங்களும் இருந்தன. பீகார் மக்கள் இக்காரணத்தால் அந்தச் சட்டத்தை இழிவாய்க் கருதினார்கள்.

மக்கள் நினைத்த குறைபாடுகளை, ராஜன் பாபு பத்திரிக்கைகளுக்கு விளக்கிக் கட்டுரைகள் எழுதினார். பல பொதுக் கூட்டங்களை நடத்தி தானறிந்த அக்குறைபாடுகளை விளக்கி மக்கள் இடையே பேசினார். அந்தச் சட்டத்தை எதிர்த்து பீகார் மக்களும் கிளர்ச்சி செய்யலானார்கள்.

பொது மக்களது கிளர்ச்சியின் பயனாக, பிரிட்டிஷ் அரசு பல்கலைக் கழகத்தின் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தது. அதேநேரத்தில் ராஜன்பாபுவும் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் ஓர் உறுப்பினரானார் ஏழை மக்களால் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பை பெற முடியாத அளவுக்கு சம்பளம், மற்ற செலவினங்கள் அதிகமாகக் கூடின. கல்வி வாணிகம் போல இருந்ததைக் கண்ட ராஜன்பாபு கல்வித் துறை வகுப்புக்களுக்குரிய சம்பள விகிதங்களையும், பிற செலவுகளையும் குறைக்க ஏற்பாடுகள் செய்தார்.

பல்கலைக் கழகப் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் அதிகம் சேர ராஜேந்திரர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். கல்லூரி பயிற்சி நேரத்தைக் குறைக்க நடவடிக்கைகளை எடுத்தார். பல்கலைக் கழக வளர்ச்சிக்கு மேற்கண்ட ஆக்கப் பணிகளைச் செய்தார்.

இந்த நேரத்தில்தான், மகாத்மா காந்தியடிகள் வெள்ளையராட்சியை எதிர்த்து ஒத்துழையாமைப் போரைத் துவக்கினார். அந்தப் போராட்டத்திலே ராஜன் பாபுவும் கலந்து கொண்டார். இதன் எதிரொலியாக, அவர் பல்கலைக் கழக நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்தார். பல்கலைக்கழக அதிகாரிகள் அவரது பதவித் துறப்புக் கடிதத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் மிக வருத்தத்துடன் ஏற்றார்கள்.

இந்திய இளைஞர்களுக்குப் போதிக்கப்பட்டு வரும் ஆங்கிலக் கல்வி முறைகளை எதிர்த்து, இந்திய தேசீயக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்ற காந்தியடிகளாரது கருத்துக்கள் அப்போது, நாடெங்கும் பரவி வந்தது. பல மாகாணங்களில் காங்கிரஸ் மகா சபை தேசியக் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியது.

பாட்னா நகரில் பீகார் வித்யா பீடம் என்ற தேசியக் கல்வி நிறுவனத்தை 1920-ஆம் ஆண்டு காந்தியடிகளைக் கொண்டு ராஜன்பாபு தோற்றுவித்தார். ஆங்கிலம் கல்வி முறையில் பாடங்களைக் கற்பிக்காமல், பாரத நாட்டின் பெருமையை உணர்த்தும் கல்விப் பாடங்கள் அந்த வித்யா பீடத்தில் நடத்தப்பட்டதால், ஏராளமான மாணவர்கள் வித்யா சாலையில் சேர்ந்து படித்தார்கள். அவர்களில் பலர் தேச பக்தர்களாக பிற்காலத்தில் உருவானதைக் கண்ட ஆங்கில ஆட்சி அதை 1930 ஆம் ஆண்டில் பலாத்காரமாக மூடி சீல் வைத்து விட்டது.