பாரதிதாசன் - முன்னுரைகள்

விக்கிமூலம் இலிருந்து

பாரதிதாசன் தாம்வெளியிட்ட நூல்களுக்கு முன்னுரை எழுதியுள்ளார். அந்த நூல் முன்னுரைகளின் தொகுப்பு இது.

பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி[தொகு]

பாரதிதாசன் கவிதைகள் - இரண்டாம் தொகுதி முதற்பதிப்பாக 1949ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 1952ஆம் ஆண்டு திசம்பர் திங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் பதிப்பு புதுச்சேரி பாரதிதாசன் பதிப்பகத்தால் இரண்டே முக்கால் ரூபாய் விலைக்கு வெளியிட்டப்பட்டுள்ளது. இதில் முதற்பதிப்பில் உள்ள பாடல்களுடன் புதிய பாடல்கள் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாம் பதிப்பிற்கு பாரதிதாசன் பின்வரும் முன்னுரையை எழுதியிருக்கிறார்.

ஏறத்தாழ இருபது ஆண்டுகளின் முன் தொடங்கி நான் எழுதிய தனிப்பாட்டுக்களின் தொகுப்பே இதுவும்! ஆதலின் இதன் பெயர் "பாரதிதாசன் கவிதைகள் தொகுதி இரண்டு" எனலாயிற்று. "பாரதிதாசன் கவிதைகள் தொகுதி ஒன்று" வெளிவந்துள்ளதல்லவா? இது இரண்டாம் தொகுதியின் இரண்டாம் பதிப்பு. இன்னும் தனிப்பாட்டுக்கள் இருக்கின்றன. அவைகளையும் தொகுத்துத் "தொகுதி மூன்று" என வெளியிட எண்ணியிருக்கிறேன், எதிர்பார்ப்பவர் மிகப்பலராதலின்!
பாரதிதாசன்
புதுச்சேரி
23.11.52

இருண்ட வீடு[தொகு]

பதிப்புப்பற்றிய குறிப்புக்கள்:

பாரி வெளியீடு
வெளியான ஆண்டு: 1965.
விலை: 75 காசு
வெளியீடு: பாரி நிலையம்
59, பிராட்வே, சென்னை-1.
அந்நூலில் உள்ள

என்னுரை[தொகு]

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது.
கல்வி யில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிருக்கின்றேன்.
ஆடவர் பெண்டிர் அனைவரும் கல்வியின் இன்றியமையாமையை உணர்வதுதான் இதை ஊன்றிப் படிப்பதால் ஏற்படும் பயனாகும்.

:புதுச்சேரி, 9-12-48. :பாரதிதாசன்