பாரதியாரின் சிறுகதைகள்/தாஸியும் செட்டியும்

விக்கிமூலம் இலிருந்து

தாஸியும் செட்டியும் (ஒரு சிறு கதை) முதல் அத்தியாயம் கலிங்க ராஜ்யத்திலே

முன்னொரு காலத்தில், கலிங்க தேசத்து ராஜதானியாகிய கடக நகரத்தில் வல்லப் ராஜன் என்ற வேந்த னொருவன் அரசு செலுத்தி வந்தான். அவன் தனக்கு வரும் அரசிறையில் ஒரு பகுதியைத் "தாஸி நிதி" என்றொரு தனி நிதியாகப் பகுத்து வைத்தான், கோயில் நிதி, கல்வி நிதி, ராணுவ நிதி, விவசாய நிதி, தொழில் நிதி முதலிய மற்றெல்லா நிதிகளைக் காட்டிலும் அவ்வரசன் அந்த தாஸி நிதிக்கு அதிகத் தொகை ஏற்படுத்தினான். அந்த நிதிக்குத்தான் செலவும் அதிகம்.

வருஷத்துக்கு சுமார் நூறு, நூற்றிருபது தாஸிகளுக்குக் குறையாமல் அந்த ராஜா விலைக்கு வாங்குவது வழக்கம். அவர்களுக்குத் தன் அந்தப்புரத்தில் தனித் தனி வஸதிகள் செய்து கொடுத்தான். அவன் பட்டத்துக்கு வந்து பதினாறு வருஷங்களாயின. இது வரை சுமார் ஆயிரத்தெண்ணூறு தாஸிகள் அவன் அந்தப்புரத்தில் சேர்த்து விட்டான். தசரதன் அறுபதினாயிரம் ஸ்திரீகளை மணம் புரிந்து கொண்டதாகவும், துருக்கி ஸுல்தான்களில் பலரும். இந்தியாவில் பல நவாபுகள், ராஜாக்கள், நிஜாம்கள், திவான்கள் முதலியோர்களும் ஆயிரக்கணக்கான பெண்களை அந்தப்புரங்களில் சேர்த்து வைத்திருந்த தாகவும், புராணங்களிலும், சரித்திரங்களிலும், நவீன நடைகளிலும் அறிகிறோம்.

இதென்னடா சுத்த மோசமான வேடிக்கை! ஆயிரம் பெண்டாட்டிகளை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் எப்படிக் குடித்தனம் பண்ணுவான் என்பதை நினைக்கும்போது, எனக்குப் பெரிய வியப்புண்டாகிறது.

ஒரு பெண்டாட்டியை வைத்துக்கொண்டு காலம் தள்ளுவது பெரும்பான்மையான ஜனங்களுக்குப் பெரிய கஷ்டமாக இருக்கிறது. அப்படி யிருக்க, நூற்றுக்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் மனைவியரை ஒருவன் கட்டியாளத் துணிவு கொண்டதை எண்ணுமிடத்தே, எனக்கு நகைப்பும் துயரமும் கலந்து விளைகின்றன. இது நிற்க..

ஒருநாள், மேற்கூறிய வல்லபராஜன் கொலுவில் ஒரு கிழப் பிராமணன் இரண்டு அழகிய, இளமை யுடைய தாஸிப் பெண்களை அழைத்துக் கொண்டு வந்தான். இது வரை அந்த ராஜா விலைக்கு வாங்கிய பெண்களை யெல்லாம் ஸாதாரண வயிரங்களுக்கும், மற்ற மணிகளுக்கும் ஒப்பிடலாமெனில், இவ்விரண்டு பெண்களையும் கீர்த்தி பெற்ற 'கோஹினூர்' (ஒளிக்குன்று) என்ற ராஜ வயிரத்துக் கொப்பிடலாம். இவர்களை நோக்கி அவ்வரசன் அளவில்லாத மகிழ்ச்சி படைத்தவனாய், "இவர்களுக்கு விலை யென்ன சொல்லுகிறீர்?" என்று மேற்படி பிராமணனிடம் கேட்டான்,

"மூத்த பெண் மோஹனாங்கிக்கு விலை ஒன்பதினாயிரம் பொன், இளையவளாகிய லலிதாங்கிக்கு விலை பத்தாயிரம் பொன்" என்று பார்ப்பான் சொன்னான்.

இக்காலத்தில் சிலர் பல தேசத்துத் தபால் முத்திரைகள் சேகரித்து வைப்பதுபோல், அந்த ராஜா தாஸிகளைச் சேர்த்து வைத்துப் பழகி, அந்தத் தொழிலில் கை தேறியவனாய் விட்டபடியால் தாஸிகளுக்கு விலை நிர்ணயம் பண்ணுவதில் அவன் மஹா நிபுணனாயினன். ஆதலால், இப் பெண்களுடைய உண்மையான அருமை யுணராமல், அந்த நாட்டுப்புறத்துப் பார்ப்பான் இத்தனை ஸுந்தரமான மாதருக்கு இத்தனை குறைந்த விலை சொல்வதைக் கேட்டுக் களிப் பெய்தியவனாய்த் தன் கார்யஸ்த னொருவன் மூலமாகப் பொக்கிஷத்தினின்றும் அந்த க்ஷணமே இருபதினாயிரம் பொன் கொண்டு வரும்படி செய்து பிராமணன் கேட்டபடி விலை பத்தொன்பதினாயிரம் பொன்னும், அவனுக்கு இனாமாக ஆயிரம் பொன்னும் கொடுத்து, மேலே ஜோடி சால்வை, வயிரக் கடுக்கன், வயிர மோதிரம் முதலிய வரிசைகளும் கொடுத்து, அந்தப் பிராமணனை மரியாதை பண்ணி அனுப்பி விட்டு, தாஸிப்பெண்க ளிருவரையும், அந்தப்புரத்திலே சேர்ப்பித்து விட்டான்.

பிறகு, அந்தப் பார்ப்பான் அரசனிடமிருந்து வாங்கிய இருபதினாயிரம் பொன்னையுங் கொண்டு, தன் பிறப்பிடமாகிய நாகபுரத்துக்கு ஸமீபத்திலுள்ள கிராம் மொன்றுக்குத் திரும்பிப்போய் அங்கு, மேற்கூறிய வேசைப் பெண்களை விலைப்படுத்தி வரும்படி தன்னிடம் ஒப்புவித்த தாய்க் கிழவியிடம், "உன் பெண்களைத் தலைக்கு மூவாயிரம் பொன் வீதம் விற்றேன். ஆறாயிரம் பொன் கிடைத்தது. அதில் ஆயிரம் பொன் எனக்குத் தர கெடுத்துக்கொண்டேன். மிச்சம் ஐயாயிரம் பொன்னை உனக்குக் கொடுக்கிறேன்" என்று பொய் சொல்லி அவளிடம் ஐயாயிரம் பொன்னைக் கொடுத்து, மிஞ்சிய பதினையாயிரம் பொன்னையும் தன் கையில் அழுத்திக் கொண்டான்.

கலிங்க நாட்டு நிலை யறியாதவளாகிய அந்தத் தாய்க் கிழவியும், தன் பெண்களுக்கு இத்தனை உயர்ந்த விலை கொண்டு வந்த பிராமணனிடம் மிக நன்றியுணர் வுடையவளாய், அவனுக்கு ஒரு பசு மாடும், இரண்டு பட்டுக்கரை வேஷ்டிகளும், ஒரு பொற் கிண்ணமும் தானம் பண்ணினாள். இது நிற்க.

கலிங்க தேசத்தில் வல்லப ராஜன் தன் அந்தப் புரத்திலுள்ள ஆயிரத் தெண்ணூறே சில்லரை மாதர்களைக் காட்டிலும் லலிதாங்கியிடம் அதிக மோஹப் பைத்தியங் கொண்டு விட்டான். அரசன் இங்ஙனம் லலிதாங்கிக்கு அடிமையாய் விட்டதினின்றும், ராஜ்யத்தில் லலிதாங்கி இட்டதே சட்டமாய் விட்டது.

இதினின்றும் அந்த வேசைமகள் பொருள் சேர்ப்பதையே பெரிய வெறியாகக் கொண்டு ராஜ்யத்தைச் சூறாவளிக் கொள்ளை யிடத் தொடங்கி விட்டாள். மந்திரி உத்யோக முதல் வீதி பெருக்கும் சக்கிலி உத்யோகம் வரை, ராஜ்யம் முழுதிலும், யாருக்கு எந்த வேலை வேண்டுமானாலும், லலிதாங்கிக்கு லஞ்சம் கொடுக்காத வரை, அந்த வேலை கிடைக்காது.

கொண்டே போனான்.

மூன்றாம் மாடியிலே பட்டுக்களிலும், ஜரிகைகளிலும், ரத்னங்களிழைத்தனவும், பூக்கள் சித்திரித்தனவுமான வேஷ்டிகள், உத்தரீயங்கள், பாகைகள், நிஜார்கள், சட்டைகள், துண்டுகள், பதினாயிர விதமென்றால் பதினாயிரம் விதம். ஒன்றைக் காட்டிலும் ஒன்று கண்ணைப் பறிக்கும்படியான அழகுடையனவாய், வரிசை வரிசைாக வெள்ளிக் கம்பிகளால் செய்த கொடிகளின் மீது தொங்க விட்டிருந்தன.

திரும்பிப் பார்த்த பக்க மெல்லாம் நிலைக் கண்ணாடி! அந்த நிலைக் கண்ணாடிகளை நிறுத்தி யிருந்த மாதிரியில் இந்த வஸ்த்ரங்களின் பிரதி பிம்பங்கள் ஒன்று, பத்து, நூறாகத் தெரிந்தன.

செட்டி போய்ப் பார்த்தான். அவனுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. மயங்கிப் போய் விட்டான், மயங்கி! தேடித் தேடிப் பார்த்து, ஒரு பாகை மிகவும் அழகிய தென்று கருதித் தலையில் அணிவான். பிறகு அதோ, அந்த மூலையில் மற்றொன்று இதைக் காட்டிலும் அழகாகத் தோன்றும். தூரத்துப் பார்வை கண்ணுக் கழகு. அங்கே போய் அதை எடுத்து வைப்பான். பிறகு மற்றொன்று அதைக் காட்டிலும் அழகாகத் தென்படும். நிஜார், சட்டை , கைத்துண்டு, எல்லாம் இப்படியே.

நெடுநேரம், நெடுநேரம் போட்டுப் போட்டு மாற்றிய பின் கடைசியாகச் செட்டி ஒரு பால் வெளுத்த சரிகை வேஷ்டி, வஜ்ர மணிகளிழைத்த அங்கி, பொன் மலர்கள் உத்தரீயம், மாணிக்கச் சரங்கள் தொங்கவிட்ட மஸ்லின் தலைப்பாகை இத்தனையையும் தரித்துக் கொண்டான்.

"உடைகள் உடுத்தாய் விட்டதா?" என்று வஜ்ரரேகை கேட்டாள். "ஆயிற்று" என்றான் செட்டி.

அப்பால், அங்கிருந்து, அவனை அடுத்த தாம்பூலாதிகள் வழங்கும் மாடிக்குக் கொண்டு செல்லும் பொருட்டாக ஸுவர்ணாம்பாள், ஸுவர்ணமாலை என்ற புதிய சேடிகள் இருவர் வந்தனர். செட்டி, இவர்களுடைய பெயரையுங் கேட்டுத் தெரிந்துகொண்டு, உருப்போட்டு உருப்போட்டு நன்றாக மனத்தில் பதித்துக் கொண்டான்.

இதற்குள்ளே பொழுது விடிந்து விட்டது. அவ்விரண்டு பெண்களும் செட்டியை நான்காம் உப்பரிகைக்குக் கொண்டு போகாமல் கீழே அழைத்துக் கொண்டு போய் விதுரப் பிள்ளை யிருந்த இடத்தில் கொண்டு விட்டார்கள்.

போகும் வழியில் செட்டி, "ஏன் என்னை நான்காம் மாடிக்குக் கொண்டு போகாமல் கீழே அழைத்துச் செல்கிறீர்களே, விஷயமென்ன?" என்று கேட்டான்.

"பொழுது விடிந்துவிட்டது. இனி இரவில்தான் வரலாம்" என்று ஸுவர்ணமாலை சொன்னாள்.

"இன்றிரவு நான் லலிதாங்கியைப் பார்க்க முடியாதோ?" என்று செட்டி கேட்டான்.

"இன்றிரவு பொழுதுதான் விடிந்து விட்டதே. நேற்றிரவு என்று சொல்லும். இப்போது வீட்டுக்குப் போய் மறுபடி இன்றைக்கிரவில் வரலாம்" என்றாள் ஸுவர்னமாலை.

"பணம்" என்று செட்டி கேட்டான்.

"அதெல்லாம் விதுரப் பிள்ளையிடங் கேட்டுக் கொள்ளும்" என்று ஸுவர்ணமாலை சொன்னாள்.

விதுரனிடம் வந்தவுடன் புதிய உடைமைகளைக் களைந்து விட்டுச் செட்டிக்கு அவன் அணிந்து கொண்டு வந்த அவனுடைய சொந்த உடைகளைத் கொடுத்தனர்.

"என் பணத்தைத் திரும்பக் கொடும்" என்று செட்டி விதுரனிடம் கேட்டான்.

விதுரன் ஸுவர்ணமாலையை நோக்கி, "என்ன - விஷயம்?" என்று விசாரித்தான்.

அவள் நடந்த வரலாற்றை யெல்லாம் சொல்லச் செட்டி மண்டபத்திலும் போஜனசாலையிலும் வஸ்த்ர சாலையிலும் வீணாக நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தா னென்றும், அதற்குள் பொழுது விடிந்து விட்டதென்றும், ஆதலால் அவன் லலிதாங்கியைப் பார்க்க இடமில்லாமல் போய்விட்டதென்றும் தெரிவித்தாள்.

இதைக் கேட்டு விதுரன், "நேற்றிரவு உம்முடைய பிழையால் லலிதாங்கியைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. இன்று மறுபடி ஆயிரம் பொன் கொண்டு வாரும்" என்றான்.

செட்டி பணம் வேண்டுமென்று கட்டாயப்படுத்திக் கூச்சல் போடத் தொடங்கினான், அப்போது விதுரன் வாட் சேவகரை அழைத்தான்.

ஆறு சேவகர் உருவிய கத்தியுடன் வந்து நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடன் செட்டி புத்தி தெளிந்து ஒரு வார்த்தையும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தான்.

மறுநாள் செட்டி, மறுபடியும் ஆயிரம் பொன்னெடுத்துக் கொண்டு லலிதாங்கியின் வீட்டுக்குப் போனான். 'இன்றைக்கு நாம் யாரிடத்திலும் அநாவசிய வார்த்தை பேசவே கூடாது. மெளனமாக மூன்று ஜாமங்களையும் கழித்து, நான்காம் ஜாமத்தில் அவசியம் லலிதாங்கியைப் பார்த்தே தீரவேண்டும்' என்று செட்டி நிச்சயம் பண்ணிக் கொண்டு போனாள்.

ஆனால், நேற்றைப்போலே, எண்ணெய் ஸ்நாந கட்டத்திற்குப் போனவுடன் கலகந் தொடங்கி விட்டது. "நேற்றுத்தான் எண்ணெய் ஸ்நாநம் பண்ணியாய் விட்டதே; இன்று வெறுமே குளித்தால் போதாதா? சேர்ந்தபடியாக இரவுதோறும் எண்ணெய்க் குளித்தால் உடம்புக் காகுமா?" என்று செட்டி வாதாடினான்.

அந்தப் பெண்கள் இணங்கவில்லை. செட்டிக்குக் கோபம் வந்தது. அவர்கள் சிரித்தார்கள். மற்றதெல்லாம் நேற்றைக் கதை மாதிரி தான், செட்டி போஜனாதிகளைக் கண்டவுடன், மயங்கிப் போய் பொழுது கழிவதுணராமல் தாமஸப் பட்டது முதல், விதுரனிடம் வந்து சண்டை போட்டது, விதுரன் வாட் சேவகரை யழைத்தது என்ற கட்டம் வரை முதல் நாள் மாதிரியாகவே ஆயிற்று. லலிதாங்கியின் தரிசனம் கிடைக்கவில்லை.

மூன்றாம் நாட் காலையில் சொக்கநாதன் செட்டி கடையில் மாதாந்தரக் கணக்கு வரவு சிலவு பார்த்தார்கள்,

"பெட்டியில் இரண்டு ஆயிரம் பொன் குறைகிறதே அதை எந்தக் கணக்கில் எழுதுவது?" என்று செட்டியை நோக்கி குமாஸ்தா கேட்டான்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் செட்டியின் கண்ணிலிருந்து ஜலம் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கிற்று.

தன்னை மறந்து வாய் விட்டு, "ஐயோ, இரண்டாயிரம் பொன் தொலைந்து விட்டதே" என்று சொக்கநாத செட்டி விம்மி அழுதான்.

குமாஸ்தா இங்ஙனம் அபூர்வமாக செட்டி அழுவதைக் கண்டு வியப்பெய்தி, "என்ன செட்டியாரே, புத்தி ஸ்வாதீனமில்லையா? எவ்வளவோ போகிறது; எவ்வளவோ வருகிறது. இரண்டாயிரம் பொன்னுக்கு அழலாமோ! பெரிய பெரிய நஷ்டங்கள் வந்தாலும் நீங்கள் அழமாட்டீர்களே? இந்த இரண்டாயிரம் பொன் மலையா! இதற்கேன் அழுகிறீர்கள்?" என்று கேட்டான்.

செட்டி குமாஸ்தாவிடம் கைத் தொகையை ஒரு பையிலே கட்டித் தன் வீட்டு வாயில் திண்ணையில் பக்கத்திலே வைத்துக்கொண்டிருந்ததாகவும், வீட்டுக்குள் ஏதோ அவஸர நிமித்தமாகப் போக நேர்ந்ததில் மறதியினால் அதை வாயிலிலேயே வைத்துவிட்டுச் சென்றதாகவும் திரும்பிவந்து பார்க்கு முன்னே அந்தப் பணம் களவு போய்விட்டதாகவும் ஏதோ பொய்க் கதை சொல்லி விட்டு, அழுகையை நிறுத்திக் கொண்டான்.

அது முதல் லலிதாங்கியை மறந்து விட்டது மட்டுமே யன்றி, சொக்கநாதன் செட்டி எங்கேனும் தாஸி வீடென்று பெயர் கேட்ட அளவிலே உடம்பெல்லாம் நடுங்கலானான்.

வேசையர் யமனுடைய தூதரென்றும், அவர்களைக் கோயிற் பணி முதலியவற்றில் வைத்திருப்பதே குற்றமென்றும், கலியாண காலங்களில் தாஸிகளை அழைத்து நாட்டியம் பார்ப்பது பெருந்தீமைக் கிடமென்றும் தன்னுடைய நண்பர்களுக் கெல்லாம் உபதேசஞ் செய்யத் தொடங்கினான். தாஸிகளைப் பழித்து யாரேனும் புலவர்கள் பாட்டுப் பாடிக் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஏராளமான ஸம்மானங்கள் செய்யத் தொடங்கினான், லலிதாங்கி யிருந்த தெருவழியாகப் போவதையே நிறுத்தி விட்டான்.

அப்பால் அந்தச் செட்டி வியாபாரத்தில் ஏராளமான திரவியங்கள் சேர்த்து ஏழைகளுக்கும் கோயில்களுக்கும் கொடுத்துப் பெரிய புண்யவா னென்றும், தர்மிஷ்ட னென்றும் பெயர் பெற்று வாழ்ந்தான்.-


படிப்பவர்களுக்குச் சில செய்திகள்

பாரதி எழுதிய பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையில் நீதி போதனையும் சொல்லப்படுகின்றது.

இந்தக் கதை "சுதேச மித்திரன்" காரியாலயமே நடத்தி வந்த கதாரத்னாகரம் மாதப் பத்திரிகையில் 1920 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் பிரசுரமானது.