பாரதியாரின் சிறுகதைகள்/பேய்க் கூட்டம்

விக்கிமூலம் இலிருந்து

ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு, நான் எந்தக் காரணத்தாலோ தூக்கம் வராமல் பாயிலே படுத்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வராது போனால் அருவியை நினைத்துக் கொண்டு அது சலசலவென்று விழும் ஓசையிலே மானஸிகமாகச் செவியைச் செலுத்திக் கொண்டிருந்தால் சிறிது நேரத்திற்குள் தூக்கம் வந்துவிடுமென்று நான் குழந்தையாயிருந்தபோது ஒரு புஸ்தகத்தில் படித்திருந்தேன். அந்தப்படி அருவியை நினைத்தால் பாதி இரவில் அந்த ஞாபகத்திலிருந்து குளிர் அதிகப்படுகிறதே யொழியத் தூக்கம் வருகிற பாட்டைக் காணோம்.

என்ன காரணம்? குளிர்தான் காரணமென்றெண்ணி நான்கு சாளரங்களையும் சாத்தினேன். பிறகு காற்றோட்டமில்லாத அறையில் படுத்திருக்கக் கூடாதென்று வெள்ளைக்கார சுகாதார சாஸ்திரமும் சற்றேறக் குறைய-அனுபவமும் சொல்லுவதால், ஒரு ஜன்னலைத் திறந்தேன்.

வாசற்பக்கத்தில், என் அறைக்கு நேரே, "காந்த விளக்கு" (எலெக்ட்ரிக் விளக்கு). அதை மின்னல் விளக்கென்று சொல்வது நியாயம். ஆனால் ஜனங்கள் அதைக் காந்த விளக்கென்று சொல்லுகிறார்கள். ஊரோடொக்க ஓடு என்று தர்ம புத்திரர் சொல்லியது போலே நானும் ஜன வழக்கத்தைப் பெரிதாகக் கொண்டு அதைக் காந்த விளக்கு என்றே சொல்லுகிறேன். மேலும் காந்தம் என்ற சொல் அழகாக இருக்கிறது. காந்தி, கந்தன், காந்தை என்ற பிரயோகங்கள் அதிலே நினைவுக்கு வருகின்றன. வாசலில் காந்த விளக்குப் போட்டிருக்கிறது. அதைச் சுற்றி விளையாடும் பூச்சிக் கூட்டங்கள் என் அறைக்குள்ளே பிரவேசித்து விடுகின்றன. அறைக்குள் விளக்கை அவித்துப் போடுவோமா என்று யோசித்தாலோ, தூக்கமும் வராமல் இருளில் கிடப்பது மிகவும் சிரமம். என் மனம் பல பல விஷயங்களை யோசித்துக் கொணடிருந்தது. கண்ணை மூடினால் எனக்கு ருஷியாவின் நிலைமை ஞாபகம் வந்துகொண்டிருந்தது. அதற்குக் காரணமென்ன தெரியுமா?

ஒரு மனுஷ்யன் காலையில் கண்ணை விழிக்கும்போது விழித்தவுடனே, அவன் வேறெந்த வஸ்துவையும் பார்க்குமுன்னே அவன் முன் ஒரு குரங்கைக் கொண்டு நிறுத்தினால் அன்று முழுவதும் அவன் அந்தக் குரங்கை மறப்பது மிகவும் சிரமம். அதுபோலவே மூன்றாம் நாள் காலையில் நான் கண்ணை விழிக்கு முன்பாகவே என் பத்தினி 'சுதேசமித்திரன்' பத்திரிகையைத் தலையணைக்கருகே கொண்டு போட்டிருந்தாள். திறந்து பார்த்தேன். முதலாவது என் கண்ணில் "ருஷியாவில் உள்நாட்டுக் கலகம்; சச்சரவு அதிகரிக்கிறது-" என்ற பகுதி தென்பட்டது. இதென்னடா விசேஷம்? என்று வாசித்துப் பார்த்தேன். இரவில் தூக்கமில்லாது படுத்துக்கொண்டிருக்கும்போது காலையில் படித்த விஷயங்களெல்லாம் மற்றொரு முறை மன வீதியிலே உலாவி வரலாயின. மாஸ்கோ நகரத்தில் கலகம்-ஸ்தீரிகளும் குழந்தைகளும் உட்பட இருநூறு பேர் கொலையுண்டனர்... துப்பாக்கிப் பிரயோகங்கள் அமிதவாதிகளும், மிதவாதிகளும் பரஸ்பரம் செய்துகொண்டனர்.

ஒதெஸ்ஸா நகரத்தில் செல்வரிடமிருந்து பொருளையெல்லாம் பிடுங்கி ஏழை ஜனங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொடுக்க ஒரு கமிட்டி! முதலிய பல செய்திகள். ருஷியா விஷயம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று தூங்க முயற்சி செய்தால் மனம் இணங்கவில்லை. தூக்கம் வரப் போகிற-அல்லது வராமல் இருக்கிற-பாதி இரவு நேரத்தில் மனம் புத்தி சொன்னபடி கேட்கவே கேட்காது. எப்போதும் மனதைக் கட்டியாள்வது சிரமம். படுக்கையிலே படுத்துக்கொண்டு மனதைக் கட்ட விசுவாமித்திரராலேகூட முடியாது. பிறகு எனக்கு ருஷியக் குடியரசின் தலைவனாகிய லெனின் என்பவனுடைய ஞாபகம் வந்தது. உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி. லெனினுக்கு லக்ஷம் பக்கத்திலே!

தள்ளடா! லெனினுமாயிற்று: வெங்காயமுமாயிற்று தூங்குவோம் என்று நினைத்தால் கொசு வந்து காதில் "ஙொய்" என்று ரீங்காரம் பண்ணுகிறது.

சரி தூக்கம் வருமென்று நினைக்க ஹேதுவில்லை; எழுந்து உட்கார்ந்து ஏதேனும் புஸ்தகம் வாசிப்போமென்று மேஜைமீது வைத்திருந்த விளக்கைப் பெரிதாக்கி எதிரே நாற்காலியில் உட்கார்ந்து மேஜையின்மீது முதலாவது கண்ணுக்குப் புலப்பட்ட புஸ்தகத்தைக் கையிலே எடுத்தேன். அது ஸ்காந்த புராணம். அதிலே நல்ல கட்டம் கண்ணுக்குப் புலப்பட்டது. தினைப்புனத்தில் வள்ளியம்மையைச் சுப்பிரமணிய ஸ்வாமி பல விதங்களில் கெஞ்சியும் பயமுறுத்தியும் பெண்டாகச் செய்து கொண்டார். பிறகு புராணம் சொல்லுகிறது: கேளீர் முனிவர்களே, அந்த வள்ளியம்மையானவள் திரும்பித் தனது பரணுக்கு; வந்து சேர்ந்தாள். தினைப்புனத்தை அங்கே காத்துக் கொண்டிருந்த ஸகியானவள் வள்ளியை நோக்கி, "ஏனம்மா, வள்ளி, இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டாள்.

"குளத்துக்குப் போய் நீராடி வந்தேன்" என்று வள்ளியம்மை சொன்னாள்.

"நெடுநேரம் குளத்திலே இருந்தாயா? ஸ்நானத்துக்குச் சென்றால் இத்தனை காலம் ஆகிய முகாந்தரமென்ன?" என்று தோழி தொளைத்துத் தொளைத்துக் கேட்கலானாள். அப்போது வள்ளியம்மை சினங்கொண்டு, "ஏதடி பாங்கி, நீ என்மேல் பழி சுமத்தப் பார்க்கிறாயா?" என்றாள்.

அப்போது பாங்கி கண்ணைப் பரக்க விழித்து, "நான் ஒன்றும் சொல்லவில்லையே. தெய்வமே, நீ தானே பழியென்ற சொல்லை எடுத்தாய்?" என்று கூறிக் கலகலவென்று நகைத்தாள்.

வள்ளியம்மை கண்ணிலே நீர்த்துளிகள் பிறந்தன. முருகக் கடவுள் அந்தச் சமயத்தில் வில்லையும், அம்புகளையும் சுமந்து கொண்டு மறுபடி வேட வேஷந் தரித்துக் கொண்டு அவ்விரு பெண்களின் முன்னே வந்து நின்று: "ஏ பெண்களா! என்னம்புகளால் உடம்பெல்லாம் அடிபட்டோடிய மிக உன்னதமான பெரிய யானை யொன்று இந்தப் பக்கத்தில் வரக் கண்டீர்களா?" என்று கேட்டார்.

சகி சொல்லுகிறாள்: "ஐயா, உமது பராக்கிரமத்தை உம்மை யொத்த சூரரிடம் போய்ச் சொல்லும். தனிக் காட்டிலே சிறு கன்னிகைகளிடம் சொல்ல வேண்டாம்" என்றாள்.

ஸ்காந்த புராணம் சொல்லுகிறது: பிறகு கேளீர், முனிவர்களே, அந்தப் பாங்கி தன் மனதுக்குள்ளே ஆலோசனை செய்து கொண்டதாவது: "இவ்விருவர்களின் விழிகளைப் பார்த்தாயா! இவன் யோக்கியமாக, ஆனை தேட வந்ததையும், இவள் தடாக ஸ்நானம் பண்ணி வந்த செம்மையையும் இதோ இந்தக் கண்கள் நன்கு விளக்குகின்றன! இவள் அவனை விழுங்குவதுபோல் பார்க்கிறாள். அவன் இவளைக் கவிராயன் சந்திரனைப் பார்ப்பதுபோலே பார்க்கிறான். இவ்விருவர் காதலிலே உடம்பட்டனர்!" என்று தோழி நிச்சயித்துக் கொண்டாள்...

இங்ஙனம் நான் மிகவும் ரஸமாகக் கதை வாசித்துக் கொண்டிருக்கையிலே நூற்று முப்பத்தேழு பேய்கள் சேர்ந்து ஏக காலத்திலே கதவை யிடிப்பதுபோல், வாயிற் கதவு படபடா! படபடா! என்று சத்தங் கேட்டது. திடுக்கிட்டெழுந்து சாளர வழியே "யார் கதவைத் தட்டுவது?" என்று உச்ச ஸ்தாயியிலே கேட்டேன், எதிர் சத்தம்:

"நான்தான் வேணு முதலியார். என்னுடன் கடோற்கசனும் இன்னும் மூன்று சிநேகிதர்களும்" என்றது. "வேணு முதலியா! இந்த நேரத்தில்-பேய்களெல்லாம் ஸந்தியாவந்தனம் பண்ணப் புறப்படுகிற சமயத்தில்-வந்த கதவைத் தட்டுகிறாயே! உனக்குப் பயித்தியமா?" என்று கேட்டேன். அப்போது வேணு முதலியார் சொல்லுகிறார், "நான் மாத்திரமில்லை, ஐயரே, நானும் என்னுடன் நான்குபேரும் இருக்கிறோம். எங்கள் அத்தகை பேருக்கும் பயித்திரம்-நீர் மாத்திரம் புத்திசாலியா? கதவைக் கீழே வந்து திறவும். ஏதோ முக்கியமான காரியம் இருக்கக் கண்டுதான் வந்து கதவைத் தட்டுகிறோம். இல்லாவிட்டால் வருவோமா?" என்றார்.

"காரியத்தைச் சொல்" என்றேன். அப்போது வேணு முதலியார், "இங்கிருந்து சொல்ல முடியாது. நீர் தயவு செய்து இறங்கி வாரும்" என்றார். "சரி காலைச் சுற்றின பாம்பு கடித்தாலொழியத் தீராது. விதியைத் தள்ளினாலும் தள்ளலாம். வேணு முதலியாரை விலக்க நம்மால் முடியாது. தவிரவும் நமக்கும் தூக்கம் வரவில்லை. இவர் ஏதோ செய்தி கொணர்ந்திருப்பார். அதைக் கேட்கும்போது, போதுபோக்க இடமுண்டாகும்" என்று யோசனை பண்ணிக் கீழே இறங்கிப் போய்க் கதவைத் திறந்தேன். பளிச்சென்று என் கண்களில் யாரோ துணியை வரிந்து கட்டினான். ஒருவன் என் வாய்க்குள்ளே துணியைச் செலுத்தினான். ஒருவன் கையைக் கட்டினான். மற்றொருவன் காலைக் கட்டினான். கண்மூடித் திறக்கு முன்னே என்னைக் குண்டுக்கட்டாகக் கட்டி ஒரு குதிரை வண்டிக்குள் தன் வசமின்றிப் போட்டார்கள். குதிரை வண்டி வாயு வேகமாகப் பறக்கிறது. வண்டி ஓடும்போதே என்மனதில் யோசிக்கலானேன்.

"ஐயோ! என்ன செய்வோம்! வேணு முதலியாரின் குரலைப்போல் தானே யிருந்தது. அவர் நமக்குத் தீங்கு செய்ய மாட்டாரே! இப்போதொன்றும் தெரியவில்லையே! கண்களை அடைத்து விட்டார்களே! வாய் பேச வழியில்லையே! நான் அசையவொட்டாமல் நெஞ்சில் அழுத்திக் கொண்டிருக்கிற பாதகன் யாரென்பதும் தெரியவில்லையே! என்ன செய்வோம்! நம்மை எங்கே கொண்டு போகிறார்கள்!-தெய்வமே, நம்மை இவர்கள் கொன்று போடுவார்களோ? என்னவோ தெரியவில்லையே! போனால் போகிறது போ-செத்தால் செத்துப் போவோம்! நாம் செத்தால் காடெல்லாம் எலும்பாய் விடுமோ? போனால் போகிறது. மனமே, சும்மா இரு. அடடா!

நாம் செத்தால் இந்தக் குழந்தைகளும் பெண்டாட்டியும் எப்படி ஜீவிக்கும்? அடபோ. அதெல்லாம் வீண் கதை! எல்லா உயிர்களையும் தெய்வந்தானே காப்பாற்றுகிறது. நாம் செத்ததினாலே இந்தக் குழந்தைகளுக்கு யாதொரு பிரமாதமும் நேரிட்டு விடாது. ஒரு மாசம் அழும். அப்பால் அப்பா இருந்தார், மொத்தத்திலே நல்லவர் என்று கதை சொல்லிக்கொண்டு சௌக்கியமாகவே இருக்கும். நம்முடைய பிதா செத்துப் போனாரே, நாம் உடன்கட்டை ஏறினோமா? மேலும் இவர்கள் நம்மைக் கொல்வார்களென்பது தான் நிச்சயமா? எங்கேனும் கொண்டுபோய் அடைத்து வைத்திருப்பார்களோ என்னவோ? ஐயோ! அடைத்து வைத்தால் என்ன செய்வோம்? அடபோடா! செய்வதென்ன? சும்மாவிருப்போம். நல்லதுதானே! சோறு அவன் போடுவான். நமது பாடு மஜா. பாட்டுப் பாடிக்கொண்டு யாதொரு வேலையுஞ் செய்யாமல் ஷோக்காகவே இருக்கலாம். சித்திரவதை பண்ணுவார்களோ, என்னவோ! ஏனடா, நம்மை அப்படிச் செய்கிறான்? நம்மை யாரும் ஒன்றுமே செய்ய மாட்டார்கள். நாம் எவனுக்காவது தீங்கு நினைத்தாலன்றோ, நமக்கொருவன் தீங்கு நினைப்பான்? நாம் சும்மா இருக்கும்போது நமக்கேன் பிறர் தீங்கு செய்கின்றார்கள்? அது நடக்காது. நம்மை அனாவசியமாக ஹிம்சிக்க மாட்டார்கள்... பின் எதற்காகத்தான் கொண்டு போகிறார்கள்? அதிலும் இப்படி அப்ராக்கிருதமான அவஸ்தைக்குட்படுத்தி நம்மைக் கொண்டு போவார் ஹிம்சைக்கில்லாமல் ஸீமந்த கலியாணத்துக்கா இப்படி அழைத்துக் கொண்டு போவார்கள்?" என்று பலவிதமாக எண்ணினேன். அப்போது திடீரென்று வண்டி நின்றது.

(பூர்வ கதை: பாதியிரவில் என் வீட்டுக் கதவை யாரோ இடி இடியென்றிடிக்க நான் யாரென்று கேட்க, வேணு முதலியும் சில நண்பர்களும் என்று எதிர் உத்தரம் வர, நான் கீழே போய்க் கதவைத் திறக்க, அப்போது அங்கு வந்திருந்தோரை நான் பார்க்கு முன்னாகவே, அவர்கள் பளிச்சென்று என் கண்களைக் கட்டிக் குதிரை வண்டியில் போட்டுக்கொண்டு செல்ல, நெடுந்தூரம் போன பின்பு குதிரை வண்டி சடேலென்று நின்றது.)

மேலே கதை சொல்லுகிறேன். ஆச்சரியமான கதை, ஜாக்கிரதையுடன் கேளுங்கள்.

என்னை ஒருவன் வந்து பந்தைத் தூக்குவது போலே கையில் தூக்கிக் கொணடான். தெய்வ கிருபையால் அவர்கள் என் செவியைக் கட்டவில்லை. சத்தங்கள் செவிப்பட்டன. குதிரையை வண்டியிலிருந்து அவிழ்த்து சமீபத்தில் கொண்டு கட்டினார்கள் என்று சில ஒலிக் குறிப்புகளாலே தெரிந்து கொண்டேன். என்னைத் தூக்கிக் கொண்டு போய்க் கண்ணை அவிழ்த்தபோது பார்க்கிறேன், சுமார் நூறு தீவட்டிகள் கைக்கொணடு சுமார் நூறு கன்னிப்பெண்கள் வரிசையாக நிற்கிறார்கள். எதிரே ஒரு பொன்னாசனம் போட்டிருந்தது. அதன் மேலே கந்தை யுடுத்துக் கருந்துணி போர்த்துத் தலைமொட்டையாய், முகம் நரைத்தும், புகையிலைச் சுருட்டுப் பிடித்துக் கொண்டு ஒரு பரதேசி உட்கார்ந்திருந்தார்.

அவரைச் சுற்றி அநேகம் சாமியார்கள் நின்றிருக்கிறார்கள். கையை உயரத் தூக்கி அப்படியே பல வருஷம் வைத்துக் கொண்டிருந்தபடியால், கை மரம்போல் அசைக்க முடியாமல் போன சந்நியாசிகளும் காவி யுடுத்தவர்களும் கந்தை தரித்தவரும், சடை நீட்டினவரும், மொட்டையடித்தவரும், நிர்வாண ரூபமாக நிற்போரும் இங்ஙனம் பல பல வகைகளில் சுமார் முப்பது சந்நியாசிகள் இருந்தார்கள். வேணு முதலியாரைக் காணவில்லை. என்னை இவர்களில் சிலர்தான் தூக்கிக்கொண்டு வந்திருக்க வேண்டுமென ஊகித்துக் கொண்டேன். அங்ஙனம் கொண்டு வந்ததோரில் ஒருவன் வேணு முதலியார் போலே பொய்க் குரல் காட்டி என்னை வஞ்சனை செய்து விட்டானென்பதையும் உணர்ந்து கொண்டேன்.

ஆதலால், மிகுந்த கோபத்துடன் நான் பொன்னாசனத்தில் வீற்றிருந்த பண்டாரத்தை நோக்கி, "யாரடா நீ! என்னை ஏன் இந்த நின் சேவகர் மூலமாக இங்கு கொணர்வித்தாய்?" என்று கேட்டேன். அப்போது அந்த சந்நியாஸி, "பாரடா!" என்று சொல்லித் திரும்பி வட திசையைக் காட்டினான். அவன் கிழக்கைப் பார்க்க உட்கார்ந்திருந்தான். அந்த ராத்திரியில் உனக்குத் திசை எப்படித் தெரிந்ததென்று கேட்பீர்களே? அந்தப் பண்டாரஞ் சொன்னான்: "வட திசையைப் பார், அங்கே எரிகின்ற சிதைகளைக் கண்டாயா?" என்றான். அங்கு பார்த்தேன். முப்பது நாற்பது பிணங்கள் வரிசையாக அடுக்கி எரிந்து கொண்டிருந்தன. பாதி ராத்திரியில் அந்தப் பண்டாரங்களின் கூட்டத்தைப் பா‘க்கும்போதே எனக்குப் பயமாக இருந்தது. அந்த இரவிலே இந்த முப்பது நாற்பது பிணங்கள் எரிவதையும் சேர்த்துக் காட்டினபோது நான் பயந்து நடுங்கிப் போனேன். அந்தப் பண்டாரம் கொல்லென்று சிரித்தான்.

உடனே அந்த நூறு தீவட்டிகள் கொண்டிருந்த நூறு கன்னிப் பெண்களும் பாடத் தொடங்கினார்கள். தேவகானம் அமிர்த வருஷம். இன்னிசைக் கடல். இன்பக் காட்டுத் தீ-அந்த மாதிரிப் பாட்டு நான் கேட்டதே கிடையாது. அவர்கள் பாடிய பாட்டு திருவாசகம்.

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினை வேனைச் சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம் குயி யொன்று மில்லாத கூத்தன் தன் கூத்தை யெனக் கறியும் வண்ண மருளிய வா றார் பெறுவாரச்சோ வே! • • • ஆர் பெறுவார் அச்சோவே! அறியும் வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார்? அச்சோ! ஏ! அறியும் வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோ! ஏ!

இந்த வரியைப் பல்லவியாகப் பாடிக்கொண்டு அந்த நூறு பெண்களும் குதிக்கத் தொடங்கினார்கள். பாட்டைத் தேவகான மென்றேன். இந்தக் கூத்தை யெங்ஙனம் வர்ணிப்பேன்! சக்தி நாடகம். விஷ்ணுவின் சித்த லோகம். கண்ணன் கண்ட கனா.

சிறிது நேரத்துக்கெல்லாம் கூத்து முடிந்தது. பெண்கள் மறைந்துவிட்டனர்.

தீவட்டி யொளி குறைந்தது. நாலு தீவட்டிகள் மிஞ்சின. அவற்றை நான்கு வலக்கை தூக்கிப் பரதேசிகள் இடக்கையிலே தூக்கி நின்றனர்.

பண்டாரம் சொல்லுகிறான்! எந்தப் பண்டாரம் சொல்லுகிறான்? பொன்னாசனத்தின்மீது வீற்றிருந்த தலைப் பண்டாரம் சொல்லுகிறான்:

"வாப்பா! காளிதாசா, பயப்படாதே. தரையின் மேல் உட்கார்ந்து கொள். மனதைக் கட்டு. மூச்சை நேராக்கு. ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை. நீ செய்த நூல்கள் சில நாம் பார்த்திருக்கிறோம். 'கடலெதிர்த்து வந்தால் கலங்க மாட்டோம். தலைமேல் இடி விழுந்தால் தளர மாட்டோம்; எங்கும் அஞ்சோம்; யார்க்கு மஞ்சோம்; எதற்கு மஞ்சோம்; எப்போதும் அஞ்சோம்" என்று நீ பாடினதை நான் நேற்று ஒரு புஸ்தகத்தில் பார்த்தேன். நீ உண்மையான அனுபவத்தைச் சொன்னாயா, அல்லது வெறுங் கற்பனைதானா என்பதை அறியும் பொருட்டாக நான் உன்னை இங்கே கொணர்வித்தேன். நீ பயப்படுகிற அளவு ஆற்காட் நவாப் கூட பயந்தது கிடையாது. ஆற்காட் நவாப் சங்கதி தெரியுமா? கிளைவ் ஒரு வாயில் வழியே கோட்டைக்குள் புகுந்து பார்த்தபோது நவாப் மற்றொரு வாயில் வழியே வெளியேறி விட்டாராம். உள்ளே போனால் கிளைவ் யாருடன் சண்டை போடுவார்? அவர் பாட்டிலே போய் ஷோக்காகக் கோட்டைக்குள் பீரங்கி சகிதமாக இருந்து கொண்டு கோட்டை கொத்தளங்களைச் சீராக்கித்தான் அதை வைத்துக் கொண்டாரென்று கேள்வியுற்றதுண்டு. நீ அந்த ஆற்காடு நபாவினிடமிருந்த பிராமணச் சோதிடரின் வம்சத்தில் பிறந்தாயோ? ஆற்காட்டு பயம் பயப்படுகிறாயே! மூடா, ஆறுதலடை."

அந்தப் பரதேசி பின்னும் சொல்லுகிறான்: "மனுஷ்ய வாழ்க்கை சதமில்லை. பிறப்பை உடனே ஒழி. மண்ணில் பிறக்காதே. வானத்தில் ஏறு. சந்திர கலைகளில் உண்டாகும் அமிர்தத்தைப் பானஞ்செய்யும் யோகி ஒருவன் தான் உன் பாட்டில் கண்டபடி பயப்படாமலிருக்க முடியும். அதை விட்டு நமக்குத்தான் அகல வெழுதத் தெரியுமென்று நீ கிறுக்கித் தள்ளிவிட்டாய். குண்டலினி அக்கினியைத் தலைக்குக் கொண்டுபோ. அப்போது அமிர்த கலசமொழுகும். அந்த அக்கினியும் அமிர்தமும் ஒன்றாய் இன்ப வெள்ளத்திலே நீந்தலாம். இன்பமிருந்தால் பயமில்லை. இன்பமில்லாதபோது பயம் இயற்கையிலே வரும். இருவினைக் கட்டை அறு. நன்மை தீமையென்ற குப்பையைத் தொலையிலே தள்ளு. எல்லாம் சிவம் என்றறி. உன்னை வெட்டவரும் வாளும் சிவன். அதைக் கும்பிடு. உன்னை அது வெட்டாது. சரணாகதி தான் வழி. பொய் பேசாதே. தீங்கு கருதாதே. பேய்க்குத் தீங்கு செய்யாதே. பகைவனுக்குத் தீமை நினைக்காதே. பகைவனையும் சிவனென்று கும்பிடு. பாம்பின் வாய்க்குள்ளே போய் விரலைவிட்டு ஓம் சிவாய நம என்று சொல். உன்னைக் கடிக்காது."

தலைமைப் பண்டாரம் பொன்னாசனத்தினின்றும் எழுந்து நின்றான். அப்போது அங்கே ஒரு சங்கொலிப் பண்டாரம் 'பம்' 'பம்' 'பம்' என்று சங்கெடுத்து ஊதினான். மற்றொரு சடைப் பண்டாரம் கண, கண, கணவென்று மணியடித்தான். பிறகு பண்டாரங்கள் அத்தனை பேரும் சேர்ந்து பின்வரும் பாட்டைப் பாடினார்கள்.

வையகத்தே சடவஸ்து வில்லை, மண்ணுங் கல்லும் சடமில்லை, மெய்யுரைப்பேன் பேய் மனமே மேலுங் கீழும் பயமில்லை!- பையப் பையத் தேரடா! படையும் விஷமுங் கடவுளடா! பொய்யு மெய்யுஞ் சிவனடா! பூமண்டலத்தே பயமில்லை!

சாவு நோவுஞ் சிவனடா! சண்டையும் வாளுஞ் சிவனடா! பாவியு மேழையும் பாம்பும் பசுவும் பண்ணுந் தானமுந் தெய்வமடா!

எங்குஞ் சிவனைக் காணடா! ஈன பயத்தைத் துரத்தடா! கங்கைச் சடையா, காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ!-

பாழுந் தெய்வம் பதியுந் தெய்வம் பாலை வனமுங் கடலுந் தெய்வம் ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்குந் தெய்வம் எதுவுந் தெய்வம்.

வையகத்தே சடமில்லை, மண்ணுங் கல்லுந் தெய்வம் மெய்யுரைப்பேன் பாழ் மனமே மேலுங் கீழும் பயமில்லை!-

இந்தக் கண்ணிகள் அந்தப் பண்டாரங்கள் பாதியிரவில் பாடுவதை அந்த ஸ்மசானத்தில் பாடக் கேட்டபோது எனக்கு மயிர்ச் சிலப்புண்டாயிற்று. அப்போது தலைமைப் பரதேசி என்னை நோக்கிச் சொல்லுகிறான், "காளிதாசா, அடே! அந்தப் பெண்கள் தீவட்டி வைத்துக் கொண்டு பாட்டுப் பாடி ஆட்டமாடிப் போயினரே. அவர்கள் யார், நீ அறிவாயா?" என்றான்.

"அறியேன், அவர்கள் யார் சொல்லு" என்றேன். "அவர்கள் அத்தனை பேரும் பேய்கள். இங்கு மாறுவேஷம் பூண்டு உனக்கு வேடிக்கை காட்டும் பொருட்டுத் தருவித்தேன்" என்றான்.

"நீ யார்?" என்று கேட்டேன்.

"நான் இந்தச் சுடுகாட்டிலுள்ள பேய்களுக்கெல்லாம் தலைவன்" என்றான்.