பாரதியாரின் சிறுகதைகள்/வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை

விக்கிமூலம் இலிருந்து

வேதபுரத்தில் வீதியிலே ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான்.

அவன் நெற்றியிலே ஒரு நாமம், அதன்மேலே விபூதிக் குறுக்கு, நடுவில் ஒரு குங்குமப் பொட்டு.

உனக்கு எந்த ஊர்? என்று கேட்டேன்.

நடுப்பட்டி என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.

நீ எந்த மதம்? என்று கேட்டேன்.

வைச்சாக்தம் என்றான்.

சிரிப்புடன் அதற்கர்த்தமென்ன? என்று கேட்டேன்.

வைஷ்ணவ-சைவ-சாக்தம் என்று விளக்கினான்.

இந்த மதத்தின் கொள்கையென்ன? என்று கேட்டேன்.

அப்போது பண்டாரம் சொல்லுகிறான்-

விஷ்ணு தங்கை பார்வதி. பார்வதி புருஷன் சிவன். எல்லா தெய்வங்களும் ஒன்று. ஆதலால் தெய்வத்தை நம்ப வேண்டும். செல்வத்தைச் சேர்க்க வேண்டும். இவ்வளவுதான் எங்கள் மதத்தினுடைய கொள்கை என்றான்.

இந்த மதம் யார் உண்டாக்கினது? என்று கேட்டேன்.

முன்னோர்கள் உண்டாக்கினது. தனித் தனியாகவே நல்ல மதங்கள் மூன்றையும் ஒன்று சேர்த்தால் மிகவும் நன்மை யுண்டாகுமென்று எனக்குத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளும், தில்லை நடராஜரும் கனவிலே சொன்னார்கள். ஆதலால் ஒன்றாகச் சேர்த்தேன் என்று அந்தப் பண்டாரம் சொன்னான்