பாரதியாரின் தனிப்பாடல்கள்/11. சொல்

விக்கிமூலம் இலிருந்து
11. சொல்

சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.

தேவர் வருகவென்று சொல்வதோ?-ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்,
ஆவ லறிந்துவரு வீர்கொலோ?-உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே.

‘ஓம்’என் றுரைத்துவிடிற் போதுமோ?-அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந்தேகுமோ?-என்தன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ?

“உண்மை ஒளிர்க’என்று பாடவோ?-அதில்
உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால்-உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம்.

“தீயை அகத்தினிடை மூட்டுவோம்”-என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர்-எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர்.

வான மழைபொழிதல் போலவே-நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்;
கானை அழித்து மனை கட்டுவீர்-துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்.

விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.

மின்ன லனையதி றல் ஓங்குமே-உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே;
தின்னும் பொருளமுதம் ஆகுமே-இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே.

தெய்வக் கனல்விளைந்து காக்குமே-நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே;
கைவைத் ததுபசும்பொன் ஆகுமே-பின்பு
காலன் பயமொழிந்து போகுமே.

“வலிமை,வலிமை”என்று பாடுவோம்-என்றும்
வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்
கவலை யிருளனைத்தும் நீங்கினோம்.

“அமிழ்தம்,அமிழ்தம்" என்று கூறுவோம்-நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்.