பாரதியாரின் தனிப்பாடல்கள்/9. அழகுத் தெய்வம்

விக்கிமூலம் இலிருந்து
9 அழகுத் தெய்வம்

மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை;
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்.
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்ததேன்.

யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?’என்றேன்;
‘யோகமே தவம்,தவமே யோக’மென உரைத்தாள்.
‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?’என்றேன்;
‘இரண்டுமாம்,ஒன்று மாம்,யாவுமாம்’என்றாள்.
‘தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?’என்றேன்.
‘வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ?”என்றாள்.

‘காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?’என்றேன்.
‘காலமே மதியினுக்கோர் கருவியாம்’என்றாள்.
‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?’என்றேன்;
‘நானிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்’என்றாள்
‘ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?’என்றேன்;
‘எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்’என்றாள்.
‘மூலத்தைச் சொல்லவோ?வேண்டாமோ?’என்றேன்;
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.