பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/65. விடுதலை வெண்பா

விக்கிமூலம் இலிருந்து

65. விடுதலை வெண்பா

சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியினாற் பாடிப் பலகாலும்-முக்தி நிலை
காண்போம் அதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.

பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம்-நெறிகொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் திர்ந்த தறிவு.

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்,
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்!-குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல்.

வேலைப் பணிந்தால் விடுதலையாம்;வேல் முருகன்
காலைப் பணிந்தால் கவலைபோம்-மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்தி சக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்.

சுகத்தினைநான் வேண்டித் தொழுவேன் எப்போதும்
அகத்தினிலே துன்பற் றழுதேன்-யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
அறுதலைத் தந்தாள் அவள்.