பாரதியாரின் தேசிய கீதங்கள்/9. எங்கள் தாய்
9. எங்கள் தாய்
(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)
- தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
- சூழ்கலை வாணர்களும் - இவள்
- என்று பிறந்தவள் என்றுண ராத
- இயல்பின ளாம் எங்கள் தாய்.
- யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
- ளாயினு மேயங்கள் தாய் - இந்தப்
- பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
- பயின்றிடு வாள்எங்கள் தாய்.
- முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
- மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
- செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
- சிந்தனை ஒன்றுடையாள்.
- நாவினில் வேத முடையவள் கையில்
- நலந்திகழ் வாளுடை யாள் - தனை
- மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
- வீட்டிடு தோளுடையாள்.
- அறுபது கோடி தடக்கைக ளாலும்
- அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
- செறுவது நாடி வருபவ ரைத்துகள்
- செய்து கிடத்துவள் தாய்.
- பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும்
- புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
- தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
- துர்க்கை யனையவள் தாய்.
- கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
- கைதொழு வாள்எங்கள் தாய் - கையில்
- ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
- ஒருவனை யுந்தொழு வாள்.
- யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
- ஒன்றென நன்றறி வாள் - உயர்
- போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
- பொற்குவை தானுடையாள்.
- நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
- நயம்புரி வாள்எங்கள் தாய் - அவர்
- அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
- ஆனந்தக் கூத்தி டுவாள்.
- வெண்மை வளரிம யாசலன் தந்த
- விறன்மக ளாம்எங்கள் தாய் - அவன்
- திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
- சீருறு வாள்எங்கள் தாய்.