பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கியத் திறனாய்வு

விக்கிமூலம் இலிருந்து

இலக்கியத் திறனாய்வு.

இலக்கியப் பார்வை, இலக்கிய நோக்கு என்பவை இலக்கியத் திறனாய்வின் பகுதிகள். எனவே பாரதியார் பால் இலக்கியத் திறனாய்வு செறிந்திருந்தது எனலாம். இலக்கியத்தின் போக்கும், உத்தியும் எவ்வெவ்வகைத் திறங்களில் அமைந்துள்ளன; அவற்றால் விளையும் செயற்பாடுகள், பயன்பாடுகள் யாவை என்று நுணுகி ஆய்வதே இலக்கியத் திறனாய்வு. இவ்வாய்வையும் பாரதியார் தம் இயல்பில் காட்டியுள்ளார்.

முன்னர்க் காட்டப்பட்ட,
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும்”
-என்ற அடிகள் பாரதியார்

திருக்குறளை நோக்கிய ஆழ்ந்த- நுண்ணிய நோக்கைக் காட்டுவன, இதனைத் திருக்குறள் திறனாய்வின் ஒரு பகுதி எனலாம்.

“சிலப்பதிகாரச் செய்யுள்”, “சிலம்பை இசைத்தது” , “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்னும் தொடர்கள் முன்னர் விளக்கப்பட்ட பாங்கில் நோக்கின் இவை சிலம்பு பற்றிய திறனாய்வுத் தொடர்கள் எனஅறியலாம்.

“எல்லையொன் றின்மை எனும்பொரு ளதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
முயற்சி”
—எனும் அடிகள் கம்பனது உட்கருத்தை
ஆய்ந்து வெளிப்படுத்துவன. இவ்வாறு கம்பனது,

“புவியினுக் கணியாய்” என்னும் செய்யுளை எடுத்து அதன் பின்னிரண்டு அடிகளை வைத்துத் திறனாய்வு செய்யும் பாங்கில் கவிதை இலக்கியத் திறனாய்வைக் காட்டியுள்ளார்:

“சவி என்பது ஒளி; இது வடசொல்; கம்பன் காலத்தில் இது அதிக வழக்கத்தில் இருந்தது போலும்.

“ஒளி பொருந்தும்படி தெளிவு கொண்டதாகி, தண்ணென்ற குளிர்ந்த நடையுடையதாகி, மேலோர் கவிதையைப் போலக் கிடந்தது கோதாவரி நதி” என்று கம்பன் வர்ணனை செய்கிறான். எனவே, கவிதைகளில் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும் என்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை”
-என்று

எழுதிச் செல்கின்றார்.

இது கவிதை இலக்கியத் திறனாய்வுப் பகுதி. இது புனர் சன்மம் என்னும் கட்டுரையில் உள்ளது.

மற்றோரிடத்தில் ஒளவையாரது இன்பம் பற்றிய பாடல் ஒன்றைக் குறியாகக் கொண்டு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் விளக்குகின்றார். அதில் திருக்குறள் பற்றி,

“ஆயிரத்து முன்னூற்று முப்பது சிறிய குறட்பாக்களில்நாயனார் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் அடக்கிப் பாடியது மிகவும் அபூர்வமான செய்கை என்று கருதப்பட்டது. இதுகண்ட ஒளவைப் பிராட்டி வீட்டுப்பாலையும் கூட்டி நான்கு புருசார்த்தங்களையும் ஒரே சிறிய வெண்பாவுக்குள் அடக்கிப் பாடினார்”

ஒப்பியல் திறனாய்வில் தொடங்கி, இன்பத்தை ஆய்பவர், திருக்குறட் கருத்தோடு ஒட்டிக்காட்டி,

“இங்ஙனம் இன்பமென்ற பொதுப்பெயரால் சிறப்பித்துக் கூறத்தக்க பெருஞ்சுவைத் தனியின்பம் மனிதனுக்குக் காதலின்பமே யாகுமென்பதையும் அவ்வின்பத்தைத் தவறுதலின்றி நுகர்தற்குரிய வழி பின்னதென்பதையும் ஒளவைப் பிராட்டியார் சால இனிய தமிழ்ச்சொற்களிலே காட்டி அருள்புரிந்திருக்கிறார்” -என முடிவு காட்டுகின்றார்.

இதுபோன்று அவரது கட்டுரைகளில் ஆங்காங்கே பல முனைத் திறனாய்வுகள் உள,