பிள்ளையார் கதை
தோற்றம்
சிறப்புப் பாயிரம்
[தொகு]- செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
- கந்த புராணக் கதையிலுள் ளதுவும்
- இலிங்க புராணத் திருந்தநற் கதையும்
- உபதேச காண்டத் துரைத்தநற் கதையுந்
- தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்டியைங் கரற்கு
- வாய்ந்த நல்விரத மான்மிய முரைத்தான்
- கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
- துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
- அரங்க நாத னளித்தருள் புதல்வன்
- திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
- வரம்பெற வணங்கும் வரதபண்டிதனே.
காப்பு
[தொகு]- கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
- விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
- குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்
- கணபதியே யிக்கதைக்குக் காப்பு.
- திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
- வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு
- முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
- என்கதைக்கு நீயென்றுங் காப்பு.
விநாயகர் துதி
[தொகு]- திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
- பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
- ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
- காதலாற் கூப்புவர்தங் கை.
- ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்
- வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
- தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங்
- கொண்டக்கால் வராது கூற்று.
சப்பாணி
[தொகு]- எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
- வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
- வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
- கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.
- சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
- அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
- எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
- குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.
சரஸ்வதி துதி
[தொகு]- புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
- வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
- முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
- செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
- தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
- எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல் இசை நாடகம் என்னும்
- முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
- சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.
அதிகாரம்
[தொகு]- பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
- தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
- கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
- செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்
- அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
- தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
நூல்
[தொகு]- மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
- இந்துவளர் சோலை இராசமா நகரியில்
- அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ்
- சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
- கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
- தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
- புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற
- மதர்விழி பாகனை வழிபடு நாளின்
- மற்றவர் புரியும் மாதவங் கண்டு
- சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப்
- பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே
- அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென
- அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்
- மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப
- எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன்
- தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென
- எமையா ளுடைய உமையாள் மொழிய
- இமையா முக்கண் இறைவன் வெகுண்டு
- பெண்சொற் கேட்டல் பேதைமை யென்று
- பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப்
- பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
- மாதுஉமை யவளும் மனந்தளர்வு உற்றுப்
- பொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
- நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்
- கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
- பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்
- சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால்
- மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று
- விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும்
- பெடைம யிற்சாயற் பெண்மக வாகித்
- தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
- சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்
- பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
- யாவையும் பயின்ற இயல்பின ளாகி
- ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும்
- மையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை
- மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
- கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
- பிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி
- அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என
- மற்றவன் தன்னைஉன் மணமக னாகப்
- பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச
- அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்
- கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து
- மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
- தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்
- பணியணி பற்பல பாங்கியர் சூழ
- அணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில
- அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென
- இருவரு மறியா விமையவர் பெருமான்
- மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து
- மானிட யோக மறையவன் ஆகிக்
- குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
- மடமயில் தவம்புரி வாவிக் கரையில்
- கண்ணுதல் வந்து கருணை காட்டித்
- தண்நறும் கூந்தல் தையலை நோக்கி
- மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
- என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்
- கொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும்
- நன்று எனச் சிரித்து நான்மறை யோனும்
- மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக்
- காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்
- பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்
- சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்
- பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை
- நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்
- பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
- ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்
- சேடியர் வந்து செழுமலர் குழலியை
- வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச்
- சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்
- தந்தைதா யிருவர் தாளினை வணங்கி
- வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
- பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்
- தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
- ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன
- மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
- நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என
- மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில்
- அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும்
- பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற
- நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்
- சிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன்
- அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று
- சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி
- மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி
- நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்
- பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்
- மானிட வேட மறையவன் தனக்கு
- யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப
- மலையிடை வந்த மாமுனி தன்னை இணையடி
- தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்
- தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
- சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து
- தாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி
- ஆயிழை தானும் அவனெதிர் சென்று
- சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
- மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து
- ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
- வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி
- ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப் பாத
- பூசனைகள் பண்ணிய பின்னர்ப்
- போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
- ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை
- தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
- அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்
- சந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத்
- தக்கோ லத்தொடு சாதிக் காயும்
- கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு
- வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின்
- ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்
- சிவனெனப் பாவனை செய்து நினைந்து
- தவமறை முனிவனைத் தாளிணை வணங்கத்
- தேனமர் குழலி திருமுக நோக்கி
- மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
- கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்
- நெற்றியில் நயனமும் நீல கண்டமும்
- மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்
- கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்
- வரந்தரு முதல்வன் மடமயில் காணக்
- கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப
- மரகத மேனி மலைமகள் தானும்
- விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே
- அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்
- கருடர் கின்னரர் காய வாசியர்
- ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்
- பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
- சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்
- கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்
- மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின்
- மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
- தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்
- பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
- மாணிக் கத்தால் வளைபல பரப்பி
- ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து
- நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்
- பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
- தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்
- பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
- திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப்
- பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்
- கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்
- பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
- நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்
- குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
- வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்
- திருமணக் கோலஞ் செய்தன ராங்கே
- எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்
- உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்
- கடலென விளங்கும் காவணந் தன்னில்
- சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்
- மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்
- பறையொ லியோடு பனிவளை ஆர்ப்ப
- வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே
- சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்
- தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்
- சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
- அரிவலஞ் சூழ எரிவலம் வந்து
- பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
- போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே
- ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக
- ஏரார் வழியில் எண்திசை தன்னைப்
- பாரா தேவா பனிமொழி நீயென
- வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்
- திருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
- களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு
- ஒளிர்மணிப்பூணாள் உரவோ னுடனே
- இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென
- அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு
- மதகரி யுரித்தோன் மதகரி யாக
- மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்
- கூடிய கலவியில் குவலயம் விளங்க
- நீடிய வானோர் நெறியுடன் வாழ
- அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்
- செந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க
- அறம்பல பெருக மறம்பல சுருங்கத்
- திறம்பல அரசர் செகதலம் விளங்க
- வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு
- ஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும்
- பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந்
- தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்
- கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்
- பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
- நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்
- கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்
- தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்
- ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும்
- பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்
- மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி
- விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும்
- மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க
- ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்
- தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
- பாரண மாகப் பலகனி யருந்தி
- ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று
- பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்
- காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
- மைவளர் சோலை மாநகர் புகுந்து
- தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின்
- வான வராலும் மானு டராலும்
- கானமர் கொடிய கடுவி லங்காலுங்
- கருவி களாலுங் கால னாலும்
- ஒருவகை யாலும் உயிர ழியாமல்
- திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்
- வரம் பெறுகின்ற வலிமை யினாலே
- ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்
- கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்
- பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி
- இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
- கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி
- அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
- கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
- முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
- அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே
- அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
- ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்
- சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
- குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி
- வென்றுவா வென்று விடைகொ டுத்தருள
- ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப்
- பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்
- தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்
- கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
- ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்
- குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
- சோர்ந்த வன்வீழ்ந்து துண்ணென எழுந்து
- வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
- வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி
- எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
- எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில்
- செறிந்தது மற்றுஅவன் திருக்கரத் தினிலே
- வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்
- வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே
- ஓகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ
- வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
- கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்
- திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
- கணபதீச் சுரம் எனுங் காரண நாமம்
- கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச்
- சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ
- இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
- கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி
- இணங்கிய பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே
- தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்
- யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள்
- அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்
- மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
- விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி
- மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
- இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள்
- ஒப்பரும் விரதத்துஉறும்ஒரு சதுர்த்தியில்
- நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்
- போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
- மருமலர் தூவும் வானவர் முன்னே
- நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
- அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற
- வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
- பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்
- தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
- கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங்
- கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி
- என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
- உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
- பழியொடு பாவமும் பலபல விதனமும்
- அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்
- விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்
- கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்
- கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்
- மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
- சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்
- இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
- இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்
- வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம்
- குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த
- தருமனும் இளைய தம்பி மார்களுந்
- தேவகி மைந்தன் திருமுக நோக்கி
- எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
- பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்
- செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று
- மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும்
- எந்தத் தெய்வம் எவ்விர தத்தை வந்தனை
- செய்யில் வருநமக்கு உரையெனப்
- பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
- கேட்டருள் வீர் எனக் கிளர்த்துத லுற்றான்
- அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்
- விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி
- ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
- கோடி சூரியர்போற் குலவிய மேனியன்
- கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
- தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன்
- சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
- உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
- ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
- ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்
- உத்தம மாலையோன் உறுநினை வின்படி
- சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்
- என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
- நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்
- புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
- செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும்
- வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
- உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்
- ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்
- தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண் டாகும்
- கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய
- விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்
- சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
- புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்
- மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
- தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு
- நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
- புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்
- விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப
- வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
- தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
- பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
- முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
- சந்தி வந்தனந் தவறாது இயற்றி
- அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
- பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும்
- வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன்
- ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
- பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
- ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
- பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
- வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
- கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து
- நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
- விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
- சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி
- ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்
- வாகார் ஆச மனம்வரை கொடுத்து
- ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக்
- கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்
- ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
- மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்
- பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால்
- திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
- பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்
- பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே
- உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
- குமார குரவன் பாசாங் குசகரன்
- ஏக தந்தன் ஈசுர புத்திரன்
- ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்
- சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
- ஏரம்ப மூர்த்தி யென்னும் நாமங்களால்
- ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி
- மோதகம் அப்பம் முதற்பணி காரந்
- தீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம்
- வருக்கை கபித்த மாதுளங் கனியொடு
- தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
- பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
- விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
- உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்
- நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
- நற்றவர் புகன்ற நா னான்கு உப சாரமும்
- மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
- எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு
- உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
- சந்தன முத்துத் தானந் தக்கிணை
- அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
- திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்
- தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து
- நைமித் திகம் என நவில்தரு மரபால்
- இம்முறை பூசனை யாவர் செய்தலும்
- எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்
- திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
- அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்
- புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
- உருத்திரன் இவனை உபாசனை பண்ணி
- விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
- அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்
- பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
- தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
- அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
- நண்ணார் பரவு நளனை அடைந்தாள்
- ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
- வெங்கத நிருதரை வேரறக் களைந்து
- தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
- பகிரத னென்னும் பார்த்திவன் இவனை
- மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
- வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
- அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
- அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்
- உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
- செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான்
- கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
- வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
- தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
- யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம்
- புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
- மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
- இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்
- அப்படி நீவிரும் அவனை யர்ச்சித்தால்
- எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
- என்றுகன் றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப
- அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
- பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை
- நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்சிந்தையில்
- நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு
- அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்.
- ஈங்கு இது நிற்க இவ்விர தத்துஇயல்
- ஓங்கிய காதைமற் றொன்று உரை செய்வாம்
- கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த
- வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற்
- சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி
- ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே
- சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும்
- புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
- நிரந்தரந் தீய நெறிநடத் துதலால்
- ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும்
- நீஇரங்கு எமக்கென நெடுங்கரங் கூப்பி
- இரசத கிரிஉறை இறைவனை வணங்கி
- வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச்
- சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக்
- கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும்
- புதல்வனைத் தருவோம் போமின் நீர்
- என அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச்
- சமரவேல் விழித் தையலுந் தானுங்
- கூடிய கலவியிற் கூடாது ஊடலும்
- ஓடிய வானோர் ஒருங்குடன் கூடிப்
- பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச்
- சூரன் செய்யுந் துயர மெல்லாம்
- ஊர் அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக்
- காமனை யெரித்த கடவுளென் றஞ்சிப்
- பாவகன் பயமுறப் பயமுனக்கு ஏதென
- உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான்
- நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற்
- குற்றம் அடாது கூறுநீ சென்றென
- வானவர் மொழிய மற்றவன் தானுந்
- தானும் அச் சபையில் தரியாது ஏகி
- எமைஆளுடைய உமையா ளுடனே
- அமையா இன்பத்து அமர்ந்துஇனிது இருந்த
- பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும்
- ஒள்ளிய மடந்தை ஒதுங்கி நாணுதலுந்
- தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே
- ஆறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும்
- வறியவன் பெற்ற வான்பொருள் போலச்
- சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து
- வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப
- நீதி யோடு நின்று கையேந்திப்
- போதநீள் வாயுவும் பொறுக்க ஒண்ணாமல்
- தரும்புனற் கங்கை தன்கையில் கொடுப்பத்
- தரும்புனற் கங்கையுந் தாங்கவொண் ணாமற்
- பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
- தண்ஆர் வதனத் தாமரை ஆறுங்
- கண்ஆறு இரண்டுங் கரம் ஈராறுந்
- தூண் எனத் திரண்ட தோள் ஈராறும்
- மாண் அயில் ஆதி வான்படை யுங்கொண்டு
- அறுமுகக் கடவுள் அங்கு அவதரித் திடலும்
- மறுகிய உம்பர் மகிழ்ந்துஉடன்கூடி
- அறுமீன் களைப்பால் அளித்தீர் என்றுஅனுப்ப
- ஆங்கவர் முலையுண்டு அறுமுகன் தானும்
- ஓங்கிய வளர்ச்சி யுற்றிடு நாளில்
- விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு
- தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து
- முருகுஅலர் குழல் உமை முலைப்பால் ஊட்ட
- இருவரும் இன்பால் எடுத்துஎடுத்து அணைத்துத்
- தேவர் தம்படைக்குச் சேனா பதியெனக்
- காவல்கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி
- அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத்
- திசையெலாஞ் செல்லுந் தேருமொன்றுஉதவிப்
- பூதப் படைகள் புடைவரப் போய்நீ
- ஓதுறும் அவுணரை ஒறுத்திடு என்றனுப்ப
- இருளைப் பருகும் இரவியைப் போலத்
- தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக்
- குருகுபேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
- மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே
- யாவரும் வியப்புற இந்திரன் மகளாந்
- தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு
- அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக்
- குமர வேளுங் குவலயம் விளங்க
- அமரா வதியில் அமர்ந்து இனிது இருந்தான்
- சமரவே லுடைச் சண்முகன் வடிவுகண்டு
- அமரர் மாதர் அனைவரும் மயங்கி
- எண்டருங் கற்பினை யிழந்தது கண்டே
- அண்ட ரெல்லாம் அடைவுடன் கூடி
- மாதொரு பாகனை வந்துஅடி வணங்கி
- மருமலர்க் கடம்பன் எம் மாநகர் புகாமல்
- அருள்செய வேண்டும்நீ அம்பிகா பதியென
- இமையவர் உரைப்ப இறையவன் தானுங்
- குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்
- காவல்கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ்
- சேவலங் கொடியோன் தேசம் போகத்
- திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி
- வருந்திமுன் னிற்க மங்கையைப் பார்த்து
- மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி
- அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென
- வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
- குன்றமென் முலையாள் கூறிய சமயம்
- புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காணஅங்கு
- உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற்
- சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
- மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச்
- சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
- நாயகி வெல்ல நாயகன் தோற்ப
- இன்பவாய் இதழ் உமை யான்வென்றேன் என
- எம்பெரு மானும் யான்வென்றேன் என
- ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி
- இருவருஞ் சாட்சியம் இவனைக் கேட்ப
- மாமனை வதைத்த மால்முகம் நோக்கிக்
- காமனை யெரித்தோன் கண்கடை காட்ட
- வென்ற நாயகி தோற்றா ளென்றுந்
- தோற்ற நாயகன் வென்றா னென்றும்
- ஒன்றிய பொய்க்கரி உடன் அங்கு உரைப்பக்
- கன்றிய மனத்தொடு கவுரி அங்குஉருத்து
- நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை யுண்மை
- வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய்
- மைக்கரி யுரித்தோன் வதனம் நோக்கிப்
- பொய்க்கரி யுரைத்த புன்மையி னாலே
- கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற
- நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க்
- கடகரி முகத்துக் கடவுள் வீற்றிருக்கும்
- வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்
- முளரிகள் பூத்த முகி்ல் நிறத்து உருப்போய்த்
- துளவு அணி மருமனுந் துணைவிழி யிழந்தே
- ஆண்டு அரைக் கணத்தில் ஆயிரம் யோசனை
- நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து
- வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல் வீற்றிருக்குங்
- கிளர்சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால்
- திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும்
- வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே
- எழில்பெறு வடமரத் தின்கீழ் இருந்தான்
- கம்ப மாமுகத்துக் கடவுள்தன் பெருமையை
- அம்புவி யோருக்கு அறிவிப் போம் என
- உம்பர் உலகத்து ஓர் எழு கன்னியர்
- தம்பநூல் ஏணியில் தாரணி வந்து
- கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக்
- கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்தபின் னாளில்
- ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி
- இருபத் தோர் இழை இன்புறக் கட்டி
- ஒருபோது உண்டி உண்டு ஒரு மனமாய்
- வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும்
- ஆதி விநாயகற்கு ஆன எழுத்தும்
- மூன்றெழுத்து அதனால் மொழிந்த மந்திரமும்
- தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே
- உரைதரு பதினாறு உபசா ரத்தால்
- வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி
- இருபது நாளும் இப்படி நோற்று
- மற்றைநாள் ஐங்கர மாமுகன் பிறந்த
- அற்றைநாள் சதயமும் ஆறாம் பக்கமுஞ்
- சேரும் அத் தினத்தில் தெளிபுனல் ஆடி
- வாரண முகத்தோன் வதிபெருங் கோயில்
- சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக்
- குலவுபொற் கலைகள் கொடு விதானித்து
- உலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக்
- கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை
- மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப்
- பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச்
- சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிக்
- செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
- குருத்து மல்லிகை கோங்கொடு பிச்சி
- கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி
- மருவிரி ஞாழல் மகிழ் இரு வாட்சி
- தாமரை முல்லை தழையவிழ் கொன்றை
- பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை
- காந்தள் ஆத்தி கடம்பு செவ்வந்தி
- வாய்ந்த நல்எருக்கு மலர்க்கர வீரம்
- பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு
- முத்தளக் கூவிளம் முதலிய சாத்தித்
- தூப தீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே
- அப்பம் மோதகம் அவல் எள் ளுண்டை
- முப்பழந் தேங்காய் முதிர்முழுக் கரும்பு
- தேனுடன் சர்க்கரை செவ்விள நீருடன்
- பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
- கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்
- பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
- நோற்பது கண்டு நோலாது இருந்த
- பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
- யாப்புறு கொங்கையீர் யானும் நோற்பேன் என
- ஆங்கு அவன் தனக்கும் வேண்டுவது அளித்துப்
- பாங்கொடு இவ்விரதம் பரிந்து நோற்பித்தார்
- அண்டர் நாயகனாம் ஐங்கரன் அருளால்
- விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே
- உஞ்சைமா நகர்புகுந்து உமையொடு
- விமலன் கஞ்சநாள் மலர்ப்பதங் கைதொழு திடலும்
- பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின்
- வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி
- யானிடுஞ் சாபம் நீங்கியது ஏதென
- மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப
- இறையவன் இதற்குக் காரணம் ஏதென
- மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்
- பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளைஅன்று
- எனக்குத் தந்தருள் புரிந்த தவப்பயன் ஈதெனச்
- சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
- பூங்கொடி அடைத்த பொன்தாழ் நீங்கச்
- சாங்குமுன் உரைத்த சக்கர பாணி
- இக்கதை சொல்ல அக்கணி சடையனும்
- மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின்
- மாதுஉமை அடைந்த வன்தாழ் நீக்கி
- நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான்
- தானோ வந்தது நகையா னதுவெனத்
- தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென
- நன்மதி நுதலாய் நானிலந் தன்னில்
- உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து
- சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென
- அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப்
- பொருஞ் சூர் அறவேல் போக்கிய குமரன்
- வரும்படி யானும் வருத்தி நோற்பேனென
- இறையவன் கதைசொல ஏந்திழை நோற்றபின்
- குறமட மகளைக் குலமணம் புரிந்தோன்.
- சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து
- தாதுமை வண்டுஉழுந் தாமத் தாமனை
- மாதுமை யாளை வந்து கண்டனனே
- கண்ணநீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக்
- தண்நறுங் குழலுமை சாபமிட் டதுவும்
- அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த
- விக்கின விநாயகன் விரதம் நோற்றுஅதன்பின்
- சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன்
- விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும்,
- பவுரிகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக்
- கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும்,
- வாசமென் குழலுடை மாதுமை நோற்பத்
- தேசம் போகிய செவ்வேள் வந்ததும்,
- வானவர் நோற்று வரங்கள் பெற்றதும்,
- நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே
- இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை
- மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக்
- காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து
- மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து
- தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து
- மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
- கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான்
- பரிவொடு இவ்விரதம் பாரகந் தன்னில்
- விரைகமழ் நறுந்தார் விக்ர மாதித்தன்
- மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள்
- மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி
- இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி
- மெத்த அன்புடன் இவ் விரதம் நோற்பேனென
- அத்தந் தன்னில் அணியிழை செறித்துச்
- சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின்
- உற்ற நோன்பின் உறுதி மறந்து
- கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து
- வற்றிய கொவ்வையின் மாடே போட
- ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய்ப்
- பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு
- வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த
- பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி
- அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற்
- கொவ்வை அடகு கொய்வாள் குறுகி
- இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக்
- குழைதவிழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி
- அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச்
- செப்ப முடனே திருந்திழை நோற்றிடக்
- கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து
- பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள
- கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான்
- விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள
- உக்கிர மான உடைமணி கட்டித்
- தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக்
- கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன்
- மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங்
- கனவினில் வந்து காரண மாக
- இலக்கண சுந்தரி இம்மனை யிருக்கிற்
- கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத்
- துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக்
- கண்ணுறக் கண்ட கனவின் காரணம்
- அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில்
- ஆனை குதிரை அவைபல மடிவுற
- மாநகர் கேடுறும் வகையது கண்டு
- இமைப் பொழுதுஇவள் இங்கு இருக்க லாகாதுஎன
- அயற் கடைஅவனும் அகற்றிய பின்னர்
- வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப
- மணியும் முத்தும் வலிய கல்லாய்விட
- அணியிழை தன்னை அவனும் அகற்ற
- உழவர் தம்மனையில் உற்றுஅவள் இருப்ப
- வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற
- அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க்
- குயவன் மனையிற் கோற்றொடி செல்லக்
- குயக்கலம் உடைந்து கொள்ளை போக
- அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த்
- தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத்
- தூசுக ளெல்லாந் துணிந்து வேறாகத்
- தூசரும் அவளைத் தூரஞ் செய்ய
- மாலைக் காரன் வளமனை புகலும்
- மாலை பாம்பாம் வகையது கண்டு
- ஞாலம் எல்லாம் நடுங்கவந்துஉதித்தாய்
- சாலவும் 'பாவிநீ தான்யார்?' என்ன
- வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா
- அம்மனை அவனும் அகற்றிய பின்னர்
- அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப
- அவ்வை செல்லும் அகங்கள் தோறும்
- வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர்
- கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்
- அவ்வை மீண்டுதன் அகம் அதிற் சென்று
- இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக்
- காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட
- மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி
- எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி
- சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச்
- சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி
- நீரது கொண்டு நிலம்மெழு கிடுகஎனச்
- சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள்
- சாணியும் புழுத்துத் தண்ணீர் வற்றிப்
- பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற
- மானேர் விழியாள் வருந்துதல் கண்டு
- தானே சென்று சாணி யெடுத்துத்
- தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு
- மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப்
- புத்தகம் எடுத்து வாவெனப் புகலப்
- புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட
- மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக்
- கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி
- அவ்வை தானே அகமதிற் சென்று
- புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து
- வித்தக நம்பி விநாயக மூர்த்தி
- கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென
- உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து
- தவநெறி பிழைத்த தையலை நோக்கி
- துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுகஎனக்
- கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி
- அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ்
- செப்ப மதாகத் திருமுன் வைத்தே
- அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு
- மத்தகக் களிற்றின் மகா விரதத்தை
- வித்தக மாக வியங்குஇழை நோற்றுக்
- கற்பக நம்பி கருணை பெற்றதன்பின்,
- சக்கர வாள சைனி யத்தோடு
- விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று
- தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி
- எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே
- அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக
- எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு
- செவ்வே அவற்றைத் தீர்க்க வெண்ணி
- இலக்கண சுந்தரி என்பவள் தன்னை
- அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச்
- செப்பிய அன்னை திருமொழிப் படியே
- உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும்
- பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ
- ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும்
- அப்பசி தீர அருந்திய பின்னர்
- ஆனை குதிரை அவைகளும் உண்டுந்
- தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே
- இவ்வகை சமைத்தநீ யாரென வினவ
- மவ்வல்அம் குழலாள் மௌனமாய் நிற்ப
- அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்
- கணபதி நோன்பின் காரணங் காண்இது
- குணமுடை இவள்உன் குலமனை யாட்டி
- இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற
- மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து
- திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக்
- கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
- ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன்
- சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச்
- சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.
காப்பு
[தொகு]- கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
- விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
- குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்
- கணபதியே யிக்கதைக்குக் காப்பு.
- திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
- வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு
- முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
- என்கதைக்கு நீயென்றுங் காப்பு.
நூற்பயன்
[தொகு]- பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும்
- மன்னும் நவமணியும் வந்துஅணுகும் - உன்னி
- ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
- திருக்கதையைக் கேட்கச் சிறந்து.
- பொற்பனைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக்
- கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
- கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
- பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.
- வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த
- பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
- நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து
- கேட்டோர்க்கும் வாராது கேடு.
- சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார்
- காலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப்
- பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
- சிறப்பிலே வாழ்வார் சிறந்து.