புகழேந்தி நளன் கதை/1. சுயம்வர காண்டம்

விக்கிமூலம் இலிருந்து


மறைமுதல்வழியிங்கே வந்தருளப் பெற்றேல்
பிறவிப் பெருந்துயரம் எல்லாம்-அறவே
பிழைத்தேன்யான் என்றானப் பேராழி யானை
அழைத்தேவல் கொண்ட அரசு 11


மெய்த்திருவந் துற்றாலும் வெந்துயர்வந் துற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே-சித்தம்
வருந்தியவா என்னென்றான் மாமறையால் உள்ளம்
திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து 12


அம்பொற் கயிலைக்கே ஆகத் தரவணிவார்
தம்பொற் படைக்குத் தமியனா-எம்பியைமுன்
போக்கினேன் என்றுரைத்தான் பூதலத்தும் மீதலத்தும்
வாக்கினேர் இல்லாத மன் 13


காண்டா வனந்தீக் கடவுளுணக் கைக்கணையால்
நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு-மீண்டமரர்
தாளிரண்டும் நோவத் தனித்தனியே ஓடியநாள்
தோளிரண்டும் அன்றோ துணை 14


பேரரசும் எங்கள் பெருந்திருவும் கைவிட்டுச்
சேர்வரிய வெங்கானம் சேர்தற்குக்-காரணம்தான்
யாதோவப் பாவென்றான் என்றுந்தன் வெண்குடைக்கீழ்த்
தீதோவப் பார்காத்த சேய். 15


கேடில் விழுச்செல்வம் கேடெய்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர்க்கு இயல்பேகாண்-வாடிக்
கலங்கலைநீ என்றுரைத்தான் காமருவு நாடற்கு
இலங்கலைநூல் மார்பன் எடுத்து 16


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி-விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்? 17


சேமவேல் மன்னனுக்குச் செப்புவான் செந்தனிக்கோன்
நாமவேல் காளை நளனென்பான்-யாமத்
தொலியாழி வையம் ஒருங்கிழப்பப் பண்டு
கலியான் விளைந்த கதை 18

2. நளன் கதை
நாட்டு வளம்

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப்-பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு 19

நகர் வளம்

கோதை மடவார்தம் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீதக் களபச் செழுஞ்சேற்றால்-வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்தம் என்பதோர்
ஞானக் கலைவாழ் நகர் 20


நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால்-தென்றல்
அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து 21


வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன-கஞ்சம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு 22


தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே-ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு 23


மாமனுநூல் வாழ வருசந்திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகும் தடந்தோளான்-காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி 24


ஓடாத தானை நளனென்றுளன்ஒருவன்
பீடாரும் செல்வப் பெடைவண்டோ-டூடா
முருகுடைய மாதர் முலைநனைக்கும் தண்தார்
அருகுடையான் வெண்குடையான் ஆங்கு 25


சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்-மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு 26

நளன் சோலை புகுதல்

வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான் - தேங்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூனாடிச் சோலை புக 27


வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர-நின்ற
தளவேனல் மீதலரும் தாழ்வரைசூழ் நாடற்கு
இளவேனில் வந்தது எதிர் 28


தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரின் புனல்நனைப்ப வேயடைந்தான்-கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலும் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்
புக்கிருந்தால் அன்ன பொழில் 29


நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலம்சிவப்ப மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு 30


பேதை மடவன்னந் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலமேறி மென்கரும்பைக்-கோதிக்
கடித்துத்தான் முத்துமிழும் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா என்றான் பெயர்ந்து 31


நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே-நீடியநற்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து 32


அன்னந்தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே-அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்
கலங்கிற்றே மன்னவனைக் கண்டு 33

உரையாடல்கள்

அஞ்சல் மடவனமே உன்றன் அணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன் 34


செய்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம்-வெய்ய
அடுமாற்றம் இல்லா அரசன்சொல் கேட்டுத்
தடுமாற்றம் தீர்ந்ததே தான் 35


திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்தே! உன்றன்
இசைமுகந்த தோளுக்கு இசைவாள்-வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள் மென்றோள்
அமையந்தி என்றோர் அணங்கு 36


அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச்-சொன்னமயில்
ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்பப்
பார்மடந்தை கோமான் பதைத்து 37


தமயந்தி பற்றிக் கூறுதல்

எழுவடுதோள் மன்னா இலங்கிழையோர் தூண்டக்
கொழுநுதியிற் சாய்ந்த குவளை-உழுநர்
மடைமிதிப்பத் தேன்பாயும் மாடொலிநீர் நாடன்
கொடைவிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு 38


நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா-வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு39


மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு-நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு 40


என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே-ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து 41


செந்தேன் மொழியாள் செறியளக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார்-வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம் 42


அன்னமே நீயுரைத்த அன்னத்தை என்னாவி
உன்னவே சோரும் உனக்கவளோ-டென்ன
அடைவென்றான் மற்றந்த அன்னமதை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து 43


அன்னம் தந்த விளக்கம்

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமவள் தன்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள்-காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள் பாத
நடைகற்பான் வந்தடைந்தோம் யாம் 44

நளன் மனநிலை

இற்றது நெஞ்சம் எழுந்த திருங்காதல்
அற்றது மானம் அழிந்ததுநாண்-மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து 45


வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன்-சேம
நெடுங்குடையாய் என்றுரைத்து நீங்கியதே அன்னம்
ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து 46


இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல்
இவ்வளவிற் காதல் இயம்புங்கொல்-இவ்வளவில்
மீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம்நின்
றாளுங்கொல் யானை அரசு 47


சேவற் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல் கேட்டு
ஆவி உருகி அழிந்திட்டான்-பூவின்
இடையன்னச் செங்கால் இளவன்னம் சொன்ன
நடையன்னம் தன்பால் நயந்து 48


அன்னம் உரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயில்தான் தோகை விரித்தாட-முன்னதனைக்
கண்டாற்றா துள்ளம் கலங்கினான் காமநோய்
கொண்டார்க்கிஃ தன்றோ குணம் 49


வாரணியும் கொங்கை மடவார் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர்-வாரீர்
கொடியார் எனச்செங்கை கூப்பினான் நெஞ்சம்
துடியா நெடிதுயிராச் சோர்ந்து 50


கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளஞ் சொற்கரும்பால்
பொங்குசுழி என்னும் பூந்தடத்தில்-மங்கைநறும்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ
வெய்தாமக் காம விடாய் 51

தமயந்தியைக் காணல்

மன்னன் விடுத்த வடிவில் திகழ்கின்ற
அன்னம்போய்க் கன்னி அருகணைய-நன்னுதலும்
தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை
என்னாடல் சொல்லென்றாள் ஈங்கு 52


செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்-மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்தன் உனக்கு 53


அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்தோள் வலியும்-நிலங்கிடந்த
செங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோ
அங்கண்மா ஞாலத் தவற்கு 54

தமயந்தியின் நிலை

புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய
உள்ளம் கவர ஒளியிழந்த-வெள்ளை
மதியிருந்த தாமென்ன வாய்த்திருந்தாள் வண்டின்
பொதியிருந்த மெல்லோதிப் பொன் 55


மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க அகமுருகி-முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினாள் என்செய்வாள் மற்று? 56


வாவி யுறையும் மடவனமே என்னுடைய
ஆவி உவந்தளித்தாய் ஆதியால்-காவினிடைத்
தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி என்றுரைத்தாள்
பார்வேந்தன் பாவை பதைத்து 57


மன்னன் புயம்நின் வனமுலைக்குக் கச்சாகும்
என்ன முயங்குவிப்பேன் என்றன்னம்-பின்னும்
பொருந்தவன்பால் ஓதிமலர்ப் பூங்கணைகள் பாய
இருந்தவன்பால் போன தெழுந்து 58


கொற்றவன்தன் தேவிக்குக் கோமகன் தன் தோழியர்கள்
உற்ற தறியா உளநடுங்கிப்-பொற்றொடிக்கு
வேறுபா டுண்டென்றார் வேந்தனுக்கு மற்றதனைக்
கூறினாள் பெற்ற கொடி 59


கருங்குழலார் செங்கையினால் வெண்கவரிப் பைங்கால்
மருங்குலவ வார்முரசம் ஆர்ப்ப-நெருங்கு
பரிவளை நின்றேங்கப் போய்ப்புக்கான் பெற்ற
வரிவளைக்கை நல்லாள் மனை 60


கோதை சுமந்த கொடிபோல் இடைநுடங்கத்
தாதை திருவடிமேல் தான்வீழ்ந்தாள்-மீதெல்லாம்
காந்தாரம் பாடிக் களிவண்டு நின்றரற்றும்
பூந்தாரம் மெல்லோதிப் பொன் 61


பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன்மேல்
நீரரும்பத் தன்பேதை நின்றாளைப்-பாராக்
குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மை
மலர்வேய்ந்து கொள்ளும் மணம் 62


மங்கை சுயம்வரம்

மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம்
எங்கும் அறைகென் றியம்பினான்-பைங்கமுகின்
கூந்தல்மேற் கங்கைக் கொழுந்தொடும் நன்னாடன்
வேந்தர்மேல் தூதோட விட்டு 63


மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிசைக்கும்
தாமத் தரிச்சந் திரன்சுவர்க்கி-நாமத்தால்
பாவேய்ந்த செந்தமிழாம் என்னப் பரந்ததே
கோவேந்தர் செல்வக் குழாம் 64


செந்தடையும் வண்டுறைதார்ச் செய்யாள் வளர்மார்பன்
கந்தடையும் வேழக் கடைத் தலைவாய்-வந்தடைந்த
பூவேந்தர் தங்கள்கிளை பொன்னகளில் ஈண்டிற்றே
கோவேந்தன் மாதைக் குறித்து 65


புள்ளுறையும் சோலைகளும் பூங்கமல வாவிகளும்
உள்ளும் புறமும் இனிதுறைந்தார்-தெள்ளரிக்கண்
பூமகளைப் பொன்னைப் பொருவேல் விதர்ப்பன்றன்
கோமகளைத் தம்மனத்தே கொண்டு 66

வழிபார்த்து இருத்தல்

வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேல் செவிவைத்து மோகச்-சுழிமேல்தான்
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர 67


முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்
அகம்பார்க்கும் அற்றோரைப் போல - மிகுங்காதல்
கேளா விருந்திட்டான் அன்னத்தைக் கேளாரை
வாளால் விருந்திட்ட மன் 68


அன்னக் குலத்தின் அரசே! அழிகின்ற
என்னுயிரை மீள எனக்களித்தாய் - முன்னுரைத்த




தேமொழிக்குத் தீதிலவே என்றான் திருந்தாரை
ஏமொழிக்கும் வேலான் எடுத்து 69


கொற்றவன்றன் ஏவலினால் போயக் குலக்கொடிபால்
உற்றதும் ஆங்கவள்தான் உற்றதுவும்-முற்றும்
மொழிந்ததே அன்னம் மொழிகேட் டரசற்கு
அழிந்ததே உள்ள அறிவு 70


கேட்ட செவிவழியே கேளா துணர்வோட
ஒட்டை மனத்தோ டுயிர்தாங்கி-மீண்டும்
குழியில் படுகரிபோல் கோமான் கிடந்தான்
தழலில் படுதளிர்போல் சாய்ந்து 71


கோதை சுயம்வரநாள் கொற்றவனுக் குற்றுரைப்ப
ஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினார்-போதில்
பெடையோடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்
அடையாத வாயில் அகம் 72

தேர்பூட்டு என்றல்

காவலன்றன் தூதர் கடைக்கா வலர்க்கறிவித்
தேவலிற்போய் ஈதென் றியம்புதலும்-மாவில்
பொலிந்ததேர் பூட்டென்றான் பூவாளி பாய்
மெலிந்ததோள் வேந்தன் விரைந்து 73


கெட்ட சிறுமருங்குல் கீழ்மகளிர் நீள்வரம்பில்
இட்ட பசுங்குவளை ஏரடித்த கட்டி
கரையத்தேன் ஊறும் கடல்நாடன் ஊர்க்கு
விரையத்தேர் ஊரென்றான் வேந்து 74


சடைச்செந்நெல் பொன்விளைக்கும் தந்நாடு பின்னாகக்
கடல்தானை முன்னாகக் கண்டான் - அடற்கமைந்த
வல்லியரும் பொன்தாம வீமன் திருமகளாம்
நல்லுயிரும் வாழும் நகர் 75


இந்திரனோடு நாரதன்


நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும்
கொற்றத்தனியாழ்க் குலமுனிவன்-உற்றடைந்தான்
தேனாடும் தெய்வத் தருவும் திருமணியும்
வானாடும் காத்தான் மருங்கு 76


வீரர் விறல்வேந்தர் விண்ணாடு சேர்கின்றார்
ஆரும் இலரால் என்றையுற்று-நாரதனார்
நன்முகமே நோக்கினான் நாகம் சிறகரிந்த
மின்முகவேற் கையான் விரைந்து 77


வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த
தாமம் புனைவான் சுயம்வரத்து-மாமன்னர்
போயினார் என்றான் புரந்தரற்குப் பொய்யாத
வாயினான் மாதவத்தோர் மன் 78


அழகு சுமந்திளைத்த ஆகத்தாள் வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை-மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு 79


மால்வரையை வச்சிரத்தால் ஈர்ந்தானும் வானவரும்
கோல்வளைதன் மாலைக் குறித்தெழுந்தார் சால்புடைய
விண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு
மண்ணாடு நோக்கி மகிழ்ந்து 80

நளனை இந்திரன் சந்தித்தல்

பைந்தெரியல் வேல்வேந்தன் பாவைபாற் போயினதன்
சிந்தை கெடுத்த தனைத் தேடுவான்-முந்தி
வருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார்
பெருவானின் தேவர் பெரிது 81


காவற் குடைவேந்தைக் கண்ணுற்ற விண்ணவர்கோன்
ஏவல் தொழிலுக் கிசையென்றான்-ஏவற்கு




மன்னவனும் நேர்ந்தான் மனத்தினால் மற்றதனை
இன்னதென் றோரா திசைந்து 82


செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலை
எங்களிலே சூட்ட இயல்வீமன்-மங்கைபால்
தூதாக என்றானத் தோகையைத்தன் ஆகத்தால்
கோதாக வென்றானக் கோ 83


தேவர் பணிதலைமேற் செல்லும் திரிந்தொருகால்
மேவுமிளங் கன்னிபால் மீண்டேகும்-பாவிற்
குழல்போல நின்றுழலும் கொள்கைத்தே பூவின்
நிழல்போலும் தண்குடையான் நெஞ்சு 84


ஆவ துரைத்தாய் அதுவே தலைநின்றேன்
தேவர்கோ னேயத் திருநகரில்-காவல்
கடக்குமா றென்னென்றான் காமநீர் ஆழி
அடக்குமா றுள்ளத் தவன் 85


வார்வெஞ் சிலையொழி வச்சிரத்தால் மால்வரையைப்
போர்வெஞ் சிறகறிந்த பொற்றோளான்-யாருமுனைக்
காணார்போய் மற்றவளைக் காணென்றான் கார்வண்டின்
பாணாறும் தாரானைப் பார்த்து 86


இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்
திசைமுகந்தால் அன்ன தெருவும்-வசையிறந்த
பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்ப
நன்னாடற் கோமான்தன் நாடு 87

நளன் தமயந்தி சந்திப்பு

தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே-ஆங்கு
மதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில்
பொதுநோக்கு எதிர்நோக்கும் போது 88


நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்
அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்த்த கதவு 89


உய்ஞ்சு கரையேற ஒட்டுங்கொல் ஒண்டொடியாள்
நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் - விஞ்சவே
நீண்டதோ அங்ஙனே இங்ஙனே நீள்மலராள்
ஆண்டதோள் மன்னன் அழகு 90


மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவனென் - றுன்னா
எடுத்தபே ரன்பை இடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி 91


காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய்
யாவானோ விஞ்சைக் கிறைவனோ - தேவனோ
உள்ளவா சொல்லென்றாள் ஊசற்குழைமீது
வெள்ளாவாள் நீர்சோர விட்டு 92


தீராத காமத் தழலைத்தன் செம்மையெனும்
நீரால் அவித்துக் கொடுநின்று - வாராத
பொன்னாடர் ஏவலுடன் போந்தவா சொல்லித்தன்
நன்னாடுஞ் சொன்னான் நளன் 93


என்னுரையை யாதென்றிகழா திமையவர்வாழ்
பொன்னுலகம் காக்கும் புரவலனை - மென்மாலை
சூட்டுவா யென்றான் தொடையில்தேன் தும்பிக்கே
ஊட்டுவான் எல்லாம் உரைத்து 94


இயமரம்நின் றார்ப்ப இனவளைநின் றேங்க
வயமருதோள் மன்னா வகுத்த - சுயம்வரந்தான்
நின்பொருட்டால் என்று நினைகென்றாள் நீள்குடையான்
தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து 95


போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோ டவையகத்தே - சோதிச்
செழுந்தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும்
எழுந்தருள்க என்றாள் எடுத்து 96

வன்மொழியும் மென்மொழியும்

வானவர்கோன் ஏவல் வழிச்சென்று வாணுதலைத்
தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும்
வண்டார் நளன்போந்து வச்சிரா யுதற்றொழுதான்
கண்டார் உவப்பக் கலந்து 97


விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால்
நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த - பெண்ணணங்கின்
வன்மொழியும் தேவர் மனமகிழத் தான்மொழிந்த
மென்மொழியும் சென்றுரைத்தான் மீண்டு 98


அங்கி அமுதம்நீர் அம்பூ அணியாடை
எங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே - சங்கையறப்
பெற்றாய் எனவருணன் ஆகண்டலன் தருமன்
மற்றோனும் ஈந்தார் வரம் 99


அங்கவர்கள் வேண்டும் வரங்கொடுக்கப் பெற்றவர்கள்
தங்களொடும் தார்வேந்தன் சார்ந்தனன் மேல் - மங்கை
வயமருவு கின்ற மனக்கா வலர்க்குச்
சயமரந்தான் கண்டதோர் சார்பு 100

தமயந்தி துயரநிலை

தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்த பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணிவதனம் எல்லாம்
வியர்த்தாள் உரைமறந்தாள் வீழ்ந்து 101


உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்தளிர்போல் - பிள்ளைமீன்
புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர் 102


பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்.
ஆவியார் போனாலும் அவ்வழியே - பாவியேன்
ஆசைபோ காதென் றழிந்தாள் அணியாழின்
ஓசைபோல் சொல்லாள் உயிர்த்து 103


வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்ப - பையவே
செவ்வாய் அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு 104


மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கில்
பாயிருள் என்னும் படாம்வாங்கிச் சேய்நின்று
அறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்
மறைந்தான் குடபால் வரை 105

அந்திப் பொழுது

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையென்னும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது 106


புற்கென்றார் அந்தி புனைமலர்க்கண் நீரரும்ப
நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் - முற்கொண்டு
அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டஞ்சி னோர்க்கும்
இடைநின்ற காலம்போல் இன்று 107

பிறை நிலவு

பைந்தொடியாள் ஆவி பருகுவான் நிற்கின்ற
அந்தி முறுவலித்த தாமென்ன - வந்ததால்




மையார்மேற் கண்ணாள் வனமுலைமேல் ஆரழலைப்
பெய்வான் அமைந்த பிறை 108


கூட்டுமைபோய் சிறந்த கூரிருளைக் கூன்கோட்டால்
கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் - ஈட்டுமணிப்
பூணிலா மென்முலைமேல் போதச் சொரிந்ததே
நீணிலா வென்னும் நெருப்பு 109


அன்னங்காள் நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்
மன்னும் படியகலா வல்லிரவில் - மின்னும்
மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால்வந் தேனென்னும் பேர் 110


கொப்புளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலொ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து 111


கானுந் தடங்காவும் காமன் படைவீடு
வானுந்தேர் வீதி மறிகடலும் - மீனக்
கொடியாடை வையமெல்லாம் கோதண்ட சாலை
பொடியாடி கொன்றதெல்லாம் பொய் 112


கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின்
முள்ளெயிறோ மூரி நிலாவென்னும் - உள்ளம்
கொடிதிரா என்னும் குழையும் தழல்போல்
நெடிதிரா வாய்புலர நின்று 113


வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலிற் கொழுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா? 114


ஊழி பலவோர் இரவாயிற் றோவென்னும்
கோழி குரலடைத்த தோவென்னும் - ஆழி


துயிலாதோ என்னும் சுடர்மதியம் கான்ற
வெயிலால் உடலுருகா வீழ்ந்து 115


ஆடி வரிவண் டருகே பறக்கவே
வாடி மெலிவாள் வனமுலைமேல் - ஓடிப்
பொறையாகச் சோர்வாள் பொறுக்குமோ மோகத்
துறைவாய் அடங்காத் துயர்? 116


ஈரமதியே இளநிலவே இங்ஙனமே
சோர்குழலில் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி எனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று 117


தாங்கு நிலவின் தழல்போய்த் தலைக்கொள்ளத்
தேங்குழல்சேர் வண்டு சிறைவெதும்ப - ஓங்குயிர்ப்பின்
தாமங் கரியாத் தனியே தளர்கின்றாள்
யாமங் கரியாக இன்று 118


மையிட்ட கண்ணருவி வார வளைசோரக்
கையிற் கபோலத் தலம்வைத்து - மெய்வருந்தித்
தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்
தானிருந்து செய்வாள் தவம் 119


அள்ளிக் கொளலாய் அடையத் திரண்டொன்றாய்க்
கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் - உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்ற திரா 120


ஊக்கிய சொல்லர் ஒலிக்கும் துடிக்குரலர்
வீக்கிய கச்சையர் வேல்வாளர் - காக்க
இடையாமம் காவலர்கள் போந்தார் இருளில்
புடைவாய் இருள்புடைத்தாற் போன்று 121


சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்
தாமுள் ளிழைபுகுந்த தார்வண்டு - காமன்தன்
பூவாளி ஐந்தும் புகத்துயில் புக்கதே
ஒவாது முந்நீர் உலகு 122


ஊன்தின் றுவகையால் உள்ள வுயிர்புறம்பே
தோன்றும் கழுதும் துயின்றதே - தான்றன்
உரைசோரச் சோர உடல்சோர வாயின்
இரைசோரக் கைசோர நின்று 123


அன்றில் ஒருகண் துயின் றொருகண் ஆர்வத்தால்
இன்றுணைமேல் வைத்துறங்கும் என்னும்சொல் - இன்று
தவிர்ந்தே போலரற்றிச் சாம்புகின்ற போதே
அவிழ்ந்ததே கண்ணிர் அவட்கு 124


ஏழுலகும் சூழிருளாய் என்பொருட்டால் வேகின்ற
ஆழ்துயரம் ஏதென் றறிகிலேன் - பாழி
வரையோ எனுநெடுந்தோள் மன்னாவோ தின்னும்
இரையோ இரவுக்கு யான்? 125


கருவிக்கு நீங்காத காரிருள்வாய்க் கங்குல்
உருவிப் புகுந்ததால் ஊதை - பருகிக்கார்
வண்டுபோ கட்ட மலர்போல் மருள்மாலை
உண்டுபோ கட்ட உயிர்க்கு 126


எழுந்திருக்கும் ஏமாந்து பூமாந்த தவிசின்
விழுந்திருக்கும் தன்னுடம்பை மீளச் - செழுந்தரளத்
தூணோடு சேர்க்கும் துணையேதும் இல்லாதே
நானோடு நின்றழியும் நைந்து 127


விரிகின்ற மெல்லமளி வெண்ணிலவின் மீதே
சொரிகின்ற காரிருள்போல் சோரும் - புரிகுழலைத்
தாங்கும் தளரும் தழலே நெடிதுயிர்க்கும்
ஏங்கும் துயரோ டிருந்து 128


உடைய மிடுக்கெல்லாம் என்மேல் ஒச்சி
விடிய மிடுக்கின்மை யாலோ - கொடியன்மேல்
மாகாதல் வைத்ததோ மன்னவர்தம் இன்னருளோ
ஏகாத தென்னோ இரா? 129


மயங்கும் தெளியும் மனநடுங்கும் வெய்துற்று
உயங்கும் வறிதே உலாவும் - வயங்கிழைபோய்ச்
சோரும் துயிலும் துயிலாக் கருநெடுங்கண்
நீரும் கடைசோர நின்று 130


விழுது படத்திணிந்த வீங்கிருள்வாய்ப் பட்டுக்
கழுதும் வழிதேடும் கங்குல் - பொழுதிடையே
நீருயிர்க்கும் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்
ஆருயிர்க்கு உண்டோ அரண் 131

பொழுது புலர்ந்தது

பூசுரர்தம் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக்
காசினியும் தாமரையும் கண்விழிப்ப - வாசம்
அலர்ந்ததேங் கோதையின் ஆழ்துயரத் தோடு
புலர்ந்ததே அற்றைப் பொழுது 132


வில்லி கணையிழப்ப வெண்மதியம் சீரிழப்பத்
தொல்லை இருள்கிழியத் தோன்றினான் - வல்லி
மணமாலை வேட்டிடுந்தோள் வாளரசர் முன்னே
குணவாயில் செங்கதிரோன் குன்று 133


முரைசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்ற
வரைசெறிந்த தோள்மன்னர் வந்தார் - விரைசெறிந்த
மாலை துவள முடிதயங்க வால்வளையும்
காலை முரசும் கலந்து 134


மன்றலந்தார் மன்னன் நடுவணைய வந்திருந்தான்
கன்று குதட்டிய கார்நீலம் - முன்றில்


குறுவிழிக்கு நேர்நாடன் கோதைபெருங் கண்ணின்
சிறுவிழிக்கு நோற்றிருந்த சேய் 135


நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக
மைத்தடங்கண் செல்ல வயவேந்தர் - சித்தம்
மருங்கே வரவண்டின் பந்தற்கீழ் வந்தாள்
அருங்கேழ் மணிப்பூண் அணங்கு 136


பேதை மடமயிலைச் சூழும் பிணைமான் போல்
கோதை மடமானைக் கொண்டணைந்த - மாதர்
மருங்கின் வெளிவழியே மன்னவர்கண் புக்கு
நெங்கினவே மேன்மேல் நிறைந்து 137

தாமரை பூத்த மண்டபம்

மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்
பொய்கைவாய் போவதே போன்று 138


வடங்கொள் வனமுலையாள் வார்குழைமேல் ஓடும்
நெடுங்கண் கடைபார்த்து நின்றான் - இடங்கண்டு
பூவாளி வேந்தன்றன் பொன்னாவம் பின்னேயிட்டு
ஏவாளி நாணின்பால் இட்டு 139


மன்னர் குலமும் பெயரும் வளநாடும்
இன்ன பரிசென் றியலணங்கு - முன்னின்று
நார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்குக் காட்டினாள்
தேர்வேந்தர் தம்மைத் தெரிந்து 140

தேர்வேந்தர் அறிமுகம்

பொன்னியமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவும் திருநாடன் - பொன்னிற்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண் 141


போர்வாய் வடிவேலாற் போழப் படாதோரும்
சூர்வாய் மதரரிக்கண் தோகாய்கேள் - பார்வாய்ப்
பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகாற் செண்டால்
திரித்தகோ விங்கிருந்த சேய் 142


வென்றி நிலமடந்தை மென்முலைமேல் வெண்டுகில்போல்
குன்றருவி பாயும் குடநாடன் - நின்றபுகழ்
மாதே யிவன்கண்டாய் மானத் தனிக்கொடியின்
மீதே சிலையுயர்த்த வேந்து 143


ஆழிவடி யம்பலம்ப நின்றானும் அன்றொருகால்
ஏழிசைநூற் சங்கத் திருந்தானும் - நீள்விசும்பின்
நற்றேவர் தூது நடந்தானும் பாரதப்போர்
செற்றானும் கண்டாயிச்சேய் 144


தெரியில் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை
அரவின் பசுந்தலையென் றஞ்சி - இரவெல்லாம்
பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்
வள்ளைக் குருநாடர் மன் 145


தேமருதார்க் காளை யிவன்கண்டாய் செம்மலர்மேல்
காமருசங் கீன்ற கதிர்முத்தைத் - தாமரைதன்
பத்திரத்தால் ஏற்கும் படுகர்ப் பழனஞ்சூழ்
மத்திரத்தார் கோமான் மகன் 146


அஞ்சாயல் மானே யிவன்கண்டாய் ஆலைவாய்
வெஞ்சாறு பாய விளைந்தெழுந்த - செஞ்சாலிப்
பச்சைத்தாள் மேதிக் கடைவாயிற் பாலொழுகும்
மச்சத்தார் கோமான் மகன் 147


வண்ணக் குவளை மலர்வெளவி வண்டெடுத்த
பண்ணிற் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணா
தருங்கடா நிற்கும் அவந்திநாடாளும்
இருங்கடா யானை இவன் 148


விடக்கதிர்வேற் காளை இவன்கண்டாய் மீனின்
தொடக்கொழியப் போய்நிமிர்ந்த தூண்டில் - மடற்கமுகின்
செந்தோடு பீறித்தேன் செந்நெற் பசுந்தோட்டில்
வந்தோடும் பாஞ்சாலர் மன் 149


அன்னம் துயிலெழுப்ப அந்தா மரைவயலில்
செந்நெல் அரிவார் சினையாமை - வன்முதுகில்
கூனிரும்பு தீட்டும் குலக்கோ சலநாடான்
தேனிருந்த சொல்லாயிச் சேய் 150


புண்டரிகம் தீயெரிவ போல்விரியப் பூம்புகைபோல் 
வண்டிரியும் தெண்ணீர் மகதர்கோன் - எண்டிசையில்
போர்வேந்தர் கண்டறியாப் பொன்னாவம் பின்னுடைய
தேர்வேந்தன் கண்டாயிச் சேய் 151

 


கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவளக் கோடிடறித்
தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால் - வான்கடல்வந்
தந்தோ எனவெடுக்கும் அங்கநா டாளுடையான்
செந்தேன் மொழியாயிச் சேய் 152


வெள்வாளைக் காளைமீன் மேதிக் குலமெழுப்பக்
கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் - புள்ளோடு
வண்டிரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்
தண்டெரியல் தேர்வேந்தன் தான் 153


அங்கை வரிவளையாய் ஆழித் திரைகொணர்ந்த
செங்கண் மகரத்தைத் தீண்டிப்போய்க் - கங்கயிடைச்
சேல்குளிக்கும் கேகயர்கோன் தெவ்வாடற் கைவரைமேல்
வேல்குளிக்க நின்றானிவ் வேந்து 154


மாநீர் நெடுங்கயத்து வள்ளைக் கொடிமீது
தானேகும் அன்னம் தனிக்கயிற்றில் - போம்நீள்
கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்
மழைக்கோதை மானேயிம் மன் 155


அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய் வாவியின்வாய்ச்
சங்கம் புடைபெயரத் தான்கலங்கிச் - செங்கமலப்
பூச்சிந்தும் நாட்டேறல் பொன்விளைக்கும் தண்பணைசூழ்
மாச்சிந்து நாட்டானிம் மன் 156


காவலரைத் தன்சேடி காட்டக்கண் டீரிருவர்
தேவர் நளனுருவாச் சென்றிருந்தார் - பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாள் மற்றவரை காணாநின்று
ஊசலா டுற்றாள் உளம் 157


பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால்
நானுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர் - நீணிலத்து
மற்றேவர் வராதார் வானவரும் வந்திருந்தார்
பொற்றேர் நளனுருவாப் போந்து 158


மின்னுந்தார் வீமன்றன் மெய்மரபிற் செம்மைசேர்
கன்னியான் ஆகிற் கடிமாலை - அன்னந்தான்
சொன்னவனைச் சூட்ட அருள்ளென்றாள் சூழ்விதியின்
மன்னவனைத் தன்மனத்தே கொண்டு 159


நளனை அறிதல்

கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு 160


பொன்மாலை சூட்டினாள்

விண்ணரசர் எல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்
கண்ணகன் ஞாலம் களிகூர - மண்ணரசர்
வன்மாலை தம்மனத்தே சூட வயவேந்தைப்
பொன்மாலை சூட்டினாள் பொன் 161


திண்டோள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்
வெண்டா மரையாய் வெளுத்தவே - ஒண்டரளக்


கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்
பூமாலை பெற்றிருந்த போது 162


மல்லல் மறுகின் மடநா குடனாகச்
செல்லும் மழவிடைபோல் செம்மாந்து - மெல்லியலாள்
பொன்மாலை பெற்ற தோளோடும் புறப்பட்டான்
நன்மாலை வேலான் நளன் 163


வேலை பெறாவமுதம் வீமன் திருமடந்தை
மாலை பெறாதகலும் வானாடர் - வேலை
பொருங்கலிநீர் ஞாலத்தைப் புன்னெறில் ஆக்கும்
இருங்கலியைக் கண்டார் எதிர் 164


ஈங்குவர வென்னென் றிமையவர்தம் கோன்வினவத்
தீங்கு தருகலியும் செப்பினான் - நீங்கள்
விருப்பான வீமன் திருமடந்தை யோடும்
இருப்பான் வருகின்றேன் யான் 165


மன்னவரில் வைவேல் நளனே மதிவதனக்
கன்னி மணமாலை கைக்கொண்டான் - உன்னுடைய
உள்ளக் கருத்தை ஒழித்தே குதியென்றான்
வெள்ளைத் தனியானை வேந்தது 166


விண்ணரசர் நிற்க வெறித்தேன் மனமாலை
மண்ணரசர்க் கீந்த மடமாதின் - எண்ணம்
கெடுக்கின்றேன் மற்றவள்தன் கேள்வற்கும் கீழ்மை
கொடுக்கின்றேன் என்றான் கொதித்து 167


வாய்மையும் செங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள்வலியும் - பூமான்
நெடுங்கற்பும் மற்றவர்க்கு நின்றுரைத்துப் போனான்
அருங்கொற்ற வச்சிரத்தான் ஆங்கு 168


செருக்கதிர்வேல் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட
இருக்கத் தரியேன் இவரைப் - பிரிக்க
உடனாக என்றான் உடனே பிறந்த
விடநாகம் அன்னான் வெகுண்டு 169

மண வாழ்க்கை

வெங்கதிரோன் தானும் விதர்ப்பன் திருமடந்தை
மங்கலநாள் காண வருவான்போல் - செங்குமுதம்
வாயடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நன்னெஞ்சில்
தீயடங்க ஏறினான் தேர் 170


இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்ற
பொன்னழகைத் தாமே புதைப்பார்போல் - மென்மலரும்
சூட்டினார் சூட்டித் துடிசேர் இடையாளைப்
பூட்டினார் மின்னிமைக்கும் பூண் 171


கணிமொழிந்த நாளிற் கடிமணமும் செய்தார்
அணிமொழிக்கும் அண்ண லவற்கும் - பணிமொழியார்
குற்றேவல் செய்யக் கொழும்பொன் அறைபுக்கார்
மற்றெவரும் ஒவ்வார் மகிழ்ந்து 172


செந்திருவின் கொங்கையினும் தேர்வேந்த னாகத்தும்
வந்துருவ வார்சிலையைக் கால்வளைத்து - வெந்தீயும்
நஞ்சும் தொடுத்தனைய நாம மலர்வாளி
அஞ்சும் தொடுத்தான் அவன் 173


ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவரெனும் தோற்ற மின்றிப் - பொருவெங்
கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று 174


குழைமேலும் கோமா னுயிர்மேலும் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள - விழைமேலே


அல்லோடும் வேலான் அகலத்தோ டும்பொருதாள்
வல்லோடும் கொங்கை மடுத்து 175


வீரனக லச்செறுவின் மீதோடிக் குங்குமத்தின்
ஈரவிள வண்ட லிட்டதே - நேர்பொருத
காராரும் மெல்லோதிக் கன்னியவள் காதலெனும்
ஓராறு பாய வுடைந்து 176


கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கயற்க ணோடிச் செவிதடவ - அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து 177


தையல் தளிர்கரங்கள் தன்தடக்கை யாற்பற்றி
வையம் முழுதும் மகிழ்தூங்கத் - துய்ய
மணந்தான் முடிந்ததற்பின் வாணுதல் தானும்
புணர்ந்தார் நெடுங்காலம் புக்கு 178


2. கலிதொடர் காண்டம்

முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி 179


செக்கர் நெடுவானில் திங்கள் நிலாத்துளும்பி
உக்க தெனச்சடைமேல் உம்பர்நீர் - மிக்கொழுகும்
வெள்ளத்தான் வெள்ளி நெடுங்கிரியான் மெய்யன்பர்
உள்ளத்தான் எங்கட் குளன் 180

வழிநடைக் காட்சிகள்

தவளத் தனிக்குடையின் வெண்ணிழலும் தையல்
குவளைக் கருநிழலும் கொள்ளப் - பவளக்