உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/வாக்குறுதி

விக்கிமூலம் இலிருந்து

22. வாக்குறுதி

முனியம்மாளின் அழுகையையும், ஆர்ப்பாட்டத்தையும் கண்டு பயந்த பக்கிரி தன்னைச் சுதாரித்துக் கொண்டு, வெளிக்கு ஒன்றையுமே லட்சியம் செய்யாதவன் போல் காணப்பட்டான். பிறகு சற்றுக் கோபமாக, “எனக்கும் இந்தத் திருட்டுக்கும் என்ன அக்கா சம்பந்தம்? ஊரிலே எவனோ திருடினானாம்; எவனோ என்னைப் பத்திச் சொன்னானாம்; போலீசு வந்துடுமாமே! போலீசைப் பத்தி எனக்குத் தெரியாதா அக்கா? கலெக்டர் இவனுக்கு வேண்டியவரா இருந்தா இவனோட, உள்ளார வரட்டுமே; ஒரு கை பார்க்கிறேன்!” என்று ஹரியைப் பார்த்துக் கூறினான்.

உடனே ஹரி, “சரி. நான் வருகிறேன் சித்தி. அகப்பட்டுக் கொள்கிற வரையில், எல்லாருமே இப்படித்தான் வீறாப்பாகப் பேசுவார்கள். இப்போது மாமன் பேசுகிற பேச்சைப் பார்த்தால், ஏதோ நானே கலெக்டரிடம் சொல்லிப் போலீஸை அனுப்பப் போவது போல் இருக்கிறது. எனக்கென்ன சின்னம்மா வந்து விட்டது? நகையைப் பற்றி அவர்கள் ஒன்றும் கவலைப்பட்டுச் சாகவில்லை. அதைக் கண்டு பிடித்து ஒப்படைக்க வேண்டியது போலீசின் பொறுப்பாகி விட்டது. நான் அங்கே இருக்கிறவன். காதில் கேள்விப்பட்ட விஷயங்கள் உண்மையாகி விட்டால், நம் குடும்பத்துக்குத்தானே அவமானம்; ‘முடிந்தால் அதற்கு முன் தடுத்துப் பார்க்கலாம்’ என்றுதான் அவர்களிடங்கூடச் சொல்லாமல் ஓடி வந்தேன். இனி மேல் என் பொறுப்பு முடிந்து விட்டது. நான் வருகிறேன் சித்தி” என்று எழுந்த ஹரியை, “இரு கண்ணப்பா” என்று முனியம்மாள் கையமர்த்தினாள்.

அருகில் இருந்த பக்கிரியின் இரு கைகளையும் சட்டென்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் வடித்த படியே அவள், “தம்பி, என் தலை மேலே அடித்துச் சத்தியம் பண்ணு. நெசம்மா ஒனக்கு இந்த நெக்லெஸைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா? கண்ணப்பன் சொல்லறதெல்லாம் பொய்யா? ஏன் தயங்கறே? இப்போ நீ உண்மையை மறச்சு; இதெல்லாம் நெசமாயிருந்தா, நான் இந்தக் குழந்தைங்களை கிணத்திலே தள்ளிப் போட்டு; நானும் விழுந்து செத்துப் போயிடுவேன். போலீசு வர்றத்துக்குள்ளே உள்ளதைச் சொல்லி, நகையைக் கொடுத்துட்டு ஓடிப் போயிடு. கண்ணப்பனுக்குத் தெரிஞ்ச அந்தக் கலெக்டர் காலிலே விழுந்தாச்சும், உன்னனக் காப்பாத்தச் சொல்லறேன். நெசத்தை மட்டும் மறைச்சுப் புடாதே” என்று இரு கண்ணிலும் நீர் வழியக் கேட்டாள்.

பக்கிரி மலைத்துப் போய், அக்காவின் முகத்தையே, உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அணு அணுவாக உயிரை விட்டுக் கொண்டிருந்த அவளுக்கு, அவனைக் காப்பாற்றுவதில் இருந்த ஆர்வமும், அவனிடம் இருந்த பாசமும் அவனது நெஞ்சைத் தொட்டன. இறுகப் பற்றியிருந்த அவளுடைய கரங்களிலிருந்து, தன் கரத்தை மெல்ல இழுத்துக் கொண்டான். சொற்கள் அவனது உதடுகளிலிருந்து தயங்கித் தயங்கி வெளி வந்தன.

“அக்கா, நான் இது வரைக்கும் செஞ்சதெல்லாம் தப்புத்தான். ஆனால், நான் இங்கே வந்தப்புறம்-அதுவும் உன்னைப் பார்த்த பிறகு, என் மனசு ரொம்பக் கஷ்டப் பட்டுப் போச்சு. நிறைய சம்பாதிச்சு உன்னைச் சுகமா வைக்கணும்னு எனக்கு ஆசை. சக்தியை மீறித்-தகுதியை மீறி நிறைய சம்பாதிக்க உலகத்திலே ரெண்டு, மூணு வழிங்கதான் இருக்கு. கொலை பண்ணணும்; கறுப்புச் சந்தை; கள்ளக் கடத்தல் செய்யணும்; திருடணும்; எனக்குத் திருட்டுத் தொழில் சுட்டுப் போட்டாலும், வராது. பாக்கிக்கெல்லாம் இந்தப் பட்டிக்காட்டிலே என்ன வேலை இருக்கு? கையிலே நான் சிங்கப்பூரிலேயிருந்து கொண்டு வந்த பணம் எல்லாம்; வந்த ஒரு மாசத்திலே தீர்ந்து போச்சு” என்று பக்கிரி பேசிக் கொண்டு வந்த போதே, “அப்போ போன மாசம் என் கையிலே அம்பது ரூவா; அதுக்கு முன்னே எளுவத்தஞ்சு ரூவா கொண்டு வந்து கொடுத்தியே, அந்தப் பணம் எல்லாம்…?” என்று முனியம்மாள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“எல்லாம் பிக்பாக்கெட், திருட்டு இதிலேயெல்லாம் எனக்குக் கிடைச்ச கமிஷன்தான். ஆனால், நான் கையை நீட்டி ஒரு திருட்டுப் பண்ணல்லே.”

“தூ! போரும்டா உன் பெருமையும், லட்சணமும்! விஷயத்தைச் சீக்கிரம் முடி” என்று ஏதோ வரப் போகிற பெரிய ஆபத்தை எதிர் பார்த்து முனியம்மாள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கேட்டாள்.

“அதுதான் சொல்லிக் கிட்டே வறேனே அக்கா. நான் எனக்காக மட்டுமா, இந்தக் காரியத்தையெல்லாம் செய்தேன்? ஏதோ பெரிய மனுஷன் மாதிரி உங்கிட்டே குந்திகிட்டு நியாயம் விசாரிக்கிறானே இந்தத் துரை, இது வரை இந்தக் குடும்பத்தைப் பத்தி நெனச்சுப் பார்த்திருக்கிறானா? நீயும், உன் குழந்தைகளும், வயசான அப்பனும் உசிரோட இருக்காங்களா — செத்துப் போயிட்டாங்களான்னு வந்து பார்த்திருக்கானா? இந்தான்னு ஒரு காலணாக் காசு, நம்ம குடும்பத்துக்குக் கொடுத்து ஒத்தாசை பண்ணியிருப்பானா? இப்பக்கூடச் சொல்லறேன்; இந்த நகையை இவன் கிட்டேச் சேர்த்துடறேன். நம்ப குடும்பத்தையும், தன் குடும்பமா நெனச்சு இவன் காப்பாத்தறதாச் சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொல்லு. பொண்ணைக் கட்டிக் கொடுத்தாவணும்; புள்ளங்களையும் ஆளாக்கியாகணும். உன் சீக்குக்கு, நீ இனிமே மேலே போற இடத்திலேதான் வைத்தியம் பார்க்கணும்; சோறே, மருந்து மாதிரி எப்பனாச்சும் கிடச்சா; நெதமும் மருந்துக்கு வேறே நீ எங்கே அக்கா போறது?” என்று கேட்டு, அவன் ஹரியைப் பார்த்தான்.

“அதற்கு நான் என்ன செய்ய? ‘இவ்வளவு நாளாய் ஏண்டா நீயும் என்னை மாதிரி திருடிக் கொண்டு வந்து கொடுக்கவில்லை?’ என்று கேட்கிறாயா!” என்று ஹரி கோபத்தோடு கேட்டான்.

“இந்தாப் பாரு. இந்த வீறாப்பெல்லாம் எங்கிட்டே வேண்டாம். வெட்டிப் பயல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டிருக்க நான் ஆளில்லை. இந்தக் குடும்பத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? என்னை கேக்கறதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? அப்படி இருந்தாப் பேசு—‘என் ஆயுசு பூரா இந்தக் குடும்பத்தை மறக்காமெ என் சொந்தக் குடும்பம் என்கிற நெனப்போடேயே இந்தக் குடும்பத்தையும் காப்பாத்தறேன்’னு சித்தி கையிலே அடிச்சுச் சத்தியம் பண்ணிக் கொடு. இந்த நிமிஷமே உன் நெக்லெஸை வீசி எறியறேன். இத்தோட இந்தப் பக்கிரி பழைய தொழிலை விட்டுட்டு; எந்தக் கடையிலேனாச்சும் பீடி சுருட்டிப் பிழைச்சுப்பான். ஊம், ஏன் முழிக்கிறே? கையிலே அடின்னதும், ‘ஐயோ காசு போயிடுமே’ன்னு கவலை வந்துட்டதில்லை?” என்று பக்கிரி கிண்டலாகக் கூறிக் கொண்டிருந்த போதே ஹரி ஆவேசமாகப் பேசினான்

“மாமா, நீ எதையும் சொல்லிக் கொடுத்து நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. இப்போது நானே, பிறருக்குப் பாரமாக இருக்கிறேன். சமயம் வந்தால்; என் பொறுப்பு என்ன என்று எனக்குத் தெரியும். இப்போது அந்தப் பேச்செல்லாம் வேண்டாம். ஐயா வீட்டு நகையைப் பற்றி ஏதாவது இருந்தால் பேசு. இல்லாவிட்டால், நான் வருகிறேன்.”

“அ! இப்படி ரொம்பப் பேரு பின்னாலே கொடுக்கிறவங்க. பணத்தைப் பத்திப் பேசினவுடனே, நைசா நழுவப் பாக்கிறியே; நீயா கொடுக்கப் போறவன்? உன் மனசிலே நல்ல எண்ணம் இருந்தா, ‘சம்பாதிக்கிற காலத்திலேயாவது கொடுக்கிறேன்’னு கையிலே அடிச்சிருக்க மாட்டியா?” என்றான் பக்கிரி.

உடனே ஹரி, “இந்தா மாமா, என் மனத்திலே இருக்கிற எண்ணம் நல்லதா, கெட்டதா என்பதைப் பற்றி நான் விண்டு காட்ட முடியாது. ஆனால் உனக்காக—நான் அறியாத என் தாயின் மீது ஆணை இடுகிறேன்; இந்தக் குடும்பத்தை மறக்க மாட்டேன். போதுமா? சித்தியையும், அவளுடைய குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு. இனி மேலாவது, சீக்கிரமா நெக்லெஸைக் கொடு மாமா. நான் எனக்காக அவசரப் படவில்லை; எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதை, நீ இன்னும் அறியாமல் இருக்கிறாயே என்றுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று ஹரி கூறிக் கொண்டு வந்த போதே, பக்கிரி அவன் இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

“தம்பி, அந்தப் பொண்ணு உங்க ஐயா வீட்டுப் பொண்ணுன்னு முதல்லேயே தெரிஞ்சிருந்தா, கூட்டத்திலே நோட்டம் பார்த்துக் கிட்டிருந்தப்பவே திருட்டுக் களுதையைக் கன்னத்திலே அறைஞ்சு துரத்தியிருப்பேன். பாவிப் பசங்க! எங்கேயோ இருந்த என் கிட்ட வந்து, ‘அண்ணே, ஏதோ ஜமின்தார் வீட்டுப் பொண்ணு மாதிரி அழகா இருக்கு. கழுத்திலே வைர நெக்லெஸ் டால் அடிக்குது. கச்சேரி முடிஞ்சு கூட்டம் எழுந்திருச்சதும், கழுத்திலே விரலாலே லேசா ஒரு சுண்டுச் சுண்டினாப் போதும் அண்ணே; ஐயாயிரமோ, பத்தாயிரமோ! அப்புறம், ஆறு மாசத்துக்கு இந்தப் பொளப்பை எல்லாம் மறந்திறலாம்’னு சொல்லி, வந்து உசிரை வாங்கினாங்க. நானும் நெசந்தான்னு நம்பிட்டேன். அறுத்துகிட்டு வந்ததுக்கப்புறம் வாங்கிப் பார்த்தா, இமிடேஷன் கல்லு. அதுக்குள்ளாற, எட்டத்திலே எங்கியோ வந்த போலீசைப் பாத்துட்டு, அரண்டு போய் ஓடி, அநாவசியமா மாட்டிக்கிட்டான்.”

“இந்த ராமாயணத்தையெல்லாம் உன்னிடம் யாரு கேட்டது மாமா? இப்போ நகை எங்கே? அதை எடு” என்றான் ஹரி.

“என் கையிலே இருந்தா, நான் இதுக்கு முன்னே கொடுத்திருக்க மாட்டேனா? அது இப்போ வேறொரு பார்ட்டி கிட்டே இருக்கு. நீ எதுக்கும் எனக்காக ஒரு காரியம் செய்யணும். செய்யரியா?” என்று கேட்டான்.

“கேட்காமலிருக்கவா நான் இத்தனை தூரம் வந்து; உன்னோடு இத்தனை அவஸ்தைப்படுகிறேன். விஷயத்தை முடித்துச் சீக்கிரம் என்னை விடு” என்றான் ஹரி.

“தம்பி, நான் இப்பவே போய், அந்த ஆளைப் பார்த்து நகையை வாங்கிக் கொண்டு, சாயங்காலமா உங்க வீட்டுக் கொல்லைப் புறம் வந்து நிக்கிறேன். நீ என்னைச் சந்தித்து, நெக்லெஸை வாங்கிக் கொண்டு விடு. ஆனால், அதுக்கு முன்னே நீ எனக்கு ஓர் உதவி செய்யணும். போலிசிலே நேற்றுக் களவு போனது பற்றிப் புகார் எழுதிக் கொடுத்திருக்கீங்க இல்லையா? அந்த நகை கிடைத்து விட்டதாகவும்; புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டதாகவும் ஒன்று எழுதி, ஸ்டேஷனில் சேர்த்து விட வேண்டும். முடியுமா?” என்று பக்கிரி கேட்டதும், ஹரி சிரித்தான்.

“என்ன மாமா, இதுதான் சிங்கப்பூர் வேலையா? நகை கைக்கு வருவதற்கு முன்னால் இப்படி எழுதிக் கொடுக்கும் அளவுக்கு, எந்த முட்டாள் இருப்பான்? திருடியதும் போதாதென்று; அதிலிருந்து மீளுவதற்கு இப்படி ஒரு தந்திரம் என்னிடமே செய்கிறாயா?” என்றான்.

உடனே பக்கிரி, “சரி, என்னை மன்னித்து விடப்பா, என்னிடம் உனக்கு நம்பிக்கை இருக்கும் என்ற நினைப்பில் பேசி விட்டேன். நகை கிடைத்ததுமாவது, உடனே எழுதிக் கொடுக்க ஏற்பாடு செய். அது ரொம்ப முக்கியம். நீ சொன்ன அடையாளப்படி இன்று இருட்டுகிற நேரத்தில், உன்னை உங்கள் வீட்டு வேலியோரமாகச் சத்திக்கிறேன். ‘நீ கொல்லையில் கிடந்தது’ என்று சொல்லி, வீட்டில் சேர்த்து விடு. கடிதமும் மறக்காதே. அது வரை நான் தலை மறைவாகத்தான் இருக்க வேண்டி வரும்” என்று பக்கிரி பேசிக் கொண்டிருந்த போதே, வீட்டு வாசலைத் தாண்டி, ஜீப் ஒன்று வந்து நின்றது—அதில் பின்புறம் இருந்த இரண்டு போலீஸ்காரர்களைக் கண்டதும், பக்கிரி ஹரியை அப்படியே பரபரவென்று இழுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக எவர் கண்ணிலும் படாமல், கொல்லையை நோக்கி ஓடினான். இருவரும் சுவரைத் தாண்டினர்.

“நீ உள்ளே இருந்தால், இருவருக்குமே ஆபத்து. நம் திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விடும். அதனால்தான், உன்னையும் கையோடு இழுத்துக் கொண்டு வந்து விட்டேன். அக்காவைப் பற்றிக் கவலையில்லை. அது சமாளிச்சுக்கும். நீ மறந்துடாமே இருட்டினதும், வேலி கிட்டே வந்துடு” என்று கூறிய பக்கிரி வடக்கு நோக்கி மின்னலைப் போல் மறைந்தான். ஹரி வேகமாகத் தெற்கு நோக்கி நடந்து, அந்தப் பயங்கர எல்லையைக் கடந்தான்.

ரி தவித்துக் கொண்டிருந்தான். திருடனைப் போல், ‘எப்போது இருட்டும், எப்போது இருட்டும்’ என்று அவன் மனம் இருட்டுக்காக ஏங்கியது. இருட்டியதும், சொன்னபடி தவறாமல் பக்கிரி வர வேண்டுமே என்று கவலைப் பட்டான். அப்படியே வந்தாலும், வழியில் எங்காவது மாட்டிக் கொள்ளாமல், நகையோடு வந்து சேர வேண்டுமே என்று, வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டான். வந்ததும், பக்கிரியை எங்கே சந்திக்க வேண்டும் என்று, இருட்ட ஆரம்பிக்கு முன்பே, ஒரு முறை கொல்லையில் ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

‘நம் வீட்டிலுள்ளவர்களே, குருவின் வீட்டுச் சொத்தைத் திருடுவதா? இது மிகப் பெரிய துரோகம் அல்லவா? அந்தக் குற்றத்தை யார் செய்தால் என்ன? அதில் நமக்கும் பங்கு உண்டல்லவா? பக்கிரி மாமாவிடமே நேரில் சென்று வாதாடிப் பார்ப்போம். மசிந்தால் நம் மானம் பிழைக்கட்டும். மசியா விட்டால், போலீஸ் இருக்கவே இருக்கிறது’ என்ற எண்ணத்துடனேயே அவன் அரசூருக்குப் போனான்.

ஆனால் அங்கே சென்ற போது, அவன் எண்ணத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடந்தேறி விட்டன. வலுவில் எப்படியோ ஒரு நிர்ப்பந்தத்தில் சிக்கிக் கொண்டு, சம்பாதிக்கத் துவங்கு முன்பே, செலவுக்கு ஒப்பந்தம் தேடிக் கொண்டதோடு மட்டுமின்றிச் சத்தியமும் செய்து கொடுத்தாகி விட்டது.

ஹரி உள்ளே நுழைந்ததும், “யாரோ உங்களைக் கலெக்டர் வீட்டில் பார்த்ததாகச் சொன்னார்களே! அதற்குள் எப்படி இங்கே வந்தீர்கள், டீச்சர் ஸார்?” என்று சுசீலா கேலியாகக் கேட்டாள்.

ஆனால், ஹரி எதையும் லட்சியம் செய்யாமல், ‘பக்கிரி’ ஜபமே செய்து கொண்டிருந்தான்.

பாகவதர் அவனிடம், பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் வந்ததைக் கூறினார். அவர்களையே வேலூரிலும், கரூரிலும் சபாக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், ஹரியின் அட்வான்ஸிலிருந்து அவர்களுக்கு முன் பணம் தர வேண்டும் என்றும் சொன்னார்.

‘உன் பணம், அட்வான்ஸ்’ என்று குருநாதர் குறிப்பிடும் போது, முன்பாக இருந்தால், ‘என்னை அவர்களிடமிருந்து பிரித்துப் பேசுகிறார்களே. எனக்கென்று எதற்காகத் தனிப் பணம், தனிச் சுகம்?’ என்றுதான் எண்ணியிருப்பான். ஆனால், இப்போது அவன், தன் வரையில் அந்தக் குடும்பத்துடனேயே ஒன்றி விட்டவனாக இருந்தாலும், அதையும் மீறித் தனக்கென்று அதாவது தன்னைப் பெற்று வளர்த்த குடும்பத்துக்காகவாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவனை வாட்டியது. பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டிய, மணமான பெண்ணின் நிலையில் அவன் இருந்தான். வாக்களித்தபடி வருமானத்தில் ஒரு பகுதியையாவது, அவர்களுக்கு அவன் கொடுத்தாக வேண்டும். இதைத் தன் பொறுப்பில் நிறைவேற்ற முடியாது என்பதை அவன் உணர்ந்தான். குருநாதரிடம் அனைத்தையும் கூறி, அவர் கருத்துப்படி நடப்பதைத் தவிர, அவனுக்கு வேறு வழியே இல்லை. அதுவே அவன் மனத்துக்கு நிரந்தரமான நிம்மதியைத் தருகிற வழியாகவும் தோன்றியது. ஆனால், அதை அவரிடம் கூறத் தக்க தருணத்தை எதிர் பார்த்திருந்தான்.

சிந்தனையைத் தொடர்ந்து பொழுதும், ஓடிக் கொண்டுதான் இருந்தது. விதை தூவி விட்டு, வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயியைப் போல், பக்கிரியை வரச் சொல்லி விட்டு, ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி. மாலை ஆகியது; இருள் பரவிக் கொண்டே வந்தது. கொல்லைக்கும், வாசலுக்கும் அலைந்தான். ஹரியின் இந்தச் செய்கை, காயத்திரிக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

“என்ன டீச்சர் ஸார், கொல்லையிலேயே இன்று சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று சுசீலா கூட ஒரு தடவை கேலியாகக் கேட்டு விட்டாள். யாரும் சந்தேகிக்க இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், ‘நகை கொல்லையில் கிடந்தது’ என்று சொல்லி எடுத்துக் கொடுத்தால், எல்லாரும் நம்புவார்கள் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால் இம்மாதிரியான காரியங்களில் அநுபவம் இல்லாததனாலும், ஒரு வேளை பக்கிரி சற்று முன்பே வந்து, தன்னைக் காணாமல் ஏமாந்து போய் விடக் கூடாதே என்ற பரபரப்பினாலும், அவன் அடிக்கடிப் போய்ப் பார்த்து வந்தான்.

ஆனால், பக்கிரி உண்மையிலேயே ஏமாற்றி விட்டான். கையெழுத்து மறையும் வேளையில், சரியாக அங்கே வந்து விடுகிறேன் என்று கூறியவன், இரவு மணி எட்டு ஆன பிறகும் வரவில்லை. சரியாக எட்டரை மணிக்குத்தான் வந்தான். அதுவும் வெறும் கையுடன் வந்து நின்றான். அந்தப் பார்ட்டி வெளியே போயிருப்பதாகவும், எப்படியும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் கண்டிப்பாக வந்து விடுவதாகவும் அவன் கூறவுமே, ஹரிக்குத் தன்னையும் மீறி அழுகையும், கோபமும் மாறி மாறி வந்தன.

“இந்தத் தகவலைச் சொல்லுவதற்குத்தானா இத்தனை நேரம்? பார்ட்டி எங்கே? புதுச்சேரிக்குப் போயிருக்கிறானா, பம்பாய்க்குப் போயிருக்கிறானா, சரக்குப் பிடிக்க?”

“என்ன கண்ணப்பா, கோபித்துக் கொள்கிறாயே! டவுனுக்குப் போயிருக்கிறான் என்று சொன்னால், புதுச்சேரியா, பம்பாயா என்று கிண்டல் செய்கிறாயே!”

“டவுனுக்கு எதற்காகப் போயிருக்கிறான்? விலை விசாரிக்கவா, இல்லை, விற்றுக் காசாக்கவா?”

“கண்ணப்பா, உனக்கு இன்னும் சிறு பிள்ளைத்தனம் போகவில்லை. நகை எங்கேயும் போய் விடவில்லை. கவலைப் படாதே. வீட்டிலிலேயேதான் இருக்கிறது. அவன் மனைவியிடம் விஷயத்தைக் கேட்டுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். நடுச் சாமமானாலும், அவன் வந்ததும், நகையைக் கொண்டு வந்து கொல்லையில் போட்டு விடுகிறேன். நீ உன் சௌகரியப்படி இரவிலோ, காலையிலோ கண்டெடுத்துக் கொள். ஆனால், பொழுது விடிந்ததும் போலீஸில் புகாரை வாபஸ் வாங்க மட்டும் மறந்து விடாதே. அப்பொழுது நான் வரட்டுமா? போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது.”

“அது இருக்கட்டும்; நீ இருட்டிலே நகையைக் கொண்டு வந்து சாணத் தொட்டியில் வீசி எறிந்து விட்டுப் போனால், அதை யார் தேடிக் கண்டு பிடிக்கிறது?” ஹரி கவலையோடு கேட்டான்.

“சரி தம்பி, நான் ஒன்று சொல்லுகிறேன். கேட்கிறாயா?” என்று பக்கிரி, ஹரியைத் தன் அருகே இழுத்துக் காதோடு ஏதோ கிசுகிசுத்தான். உடனே ஹரி, “அதுதான் சரி. அப்படியே செய். ஆனால், உன்னை நம்பலாமா? சொன்னபடி செய்யாமல் ஏமாற்றி விட மாட்டாயே?” என்று கேட்டு முடிக்கு முன், “உங்கப்பன் ஆணை. சத்தியமாக நம்பு. விட்டேன், விட்டேன் போதுமா?” என்றான்.

‘உங்களுக்கெல்லாம் சத்தியம் ஒரு கேடு. என் அப்பன் செத்தால் என்ன, இருந்தால் உனக்கென்ன?’ என்று மனத்துக்குள் எண்ணியபடியே, “சரி சரி, சீக்கிரமாகப் போய் பார்ட்டியைச் சந்திக்கிற வழியைப் பார்” என்று பக்கிரியைத் துரத்தி விட்டு, உள்ளே போனான் ஹரி. ஆனால், அத்தனை நேரம் அங்கு நடந்த சம்பாஷணைகளை ஓர் உருவம் கேட்டுக் கொண்டிருந்ததை பாவம், ஹரி எப்படி அறிவான்!

நெக்லெஸ் விஷயமாக நடந்த அனைத்தையும், காயத்திரியிடம் மட்டுமாவது கூறி விட வேண்டும் என்றுதான் ஹரி துடித்தான். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை.

ஹரிக்குத் தூக்கம் வரவில்லை. சுவரில் இருந்த கடிகாரம் மணி அடிப்பதை எண்ணிக் கொண்டேயிருந்தான். ஆனால், வீட்டிலுள்ள எல்லாரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். முதல் நாள் கச்சேரிக்காக விழித்தது, பிறகு குறைப் பொழுதுக்கும், காணாமற் போன நகையைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டு தூங்காமல் இருந்தது எல்லாம் சேர்ந்து, அனைவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நடுச் சாமம் இருக்கும். தொழுவத்தில் கட்டியிருந்த பசு, ‘ம்மே ம்மே’ என்று பெரிதாகக் கத்தியது. அருகில் இருந்த கன்றுக் குட்டியும் தாயின் குரலுக்கு பதில் குரல் கொடுத்தது. பசு கத்துவதைக் கேட்டு விழித்துக் கொண்ட லட்சுமியம்மாள், “காயத்திரி, கொல்லையிலே பசு கத்துகிறதே. வைக்கோல் இல்லையா?” என்று கேட்டாள்.

விழித்துக் கொண்ட காயத்திரி, “இல்லையே அம்மா. நிறைய போட்டு விட்டுத்தானே வந்து படுத்துக் கொண்டேன்?” என்றாள்.

“பின் ஏன் இப்படி விடாமல் கத்துகிறது? கன்றுக் குட்டியும் கத்துகிறதே! ஒரு வேளை எல்லாவற்றையும் தின்று விட்டதா? எதற்கும் பார்த்து விட்டு வருவோம்” என்றாள்.

“சரி அம்மா” என்று காயத்திரியும் எழுந்தாள். இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த ஹரிக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. பசுவின் அலறலுக்குக் காரணம், பக்கிரி கொல்லையில் வந்திருப்பதுதான் என்பது ஹரிக்கு நன்றாக விளங்கியது. ‘நாய் செய்கிற வேலையை இந்தப் பசு செய்து மானத்தை வாங்கி விடும் போல் இருக்கிறதே!’ என்று அவன் கவலைப் பட்டுக் கொண்டிருந்த போதே, காயத்திரி, லட்சுமியம்மாளுடன் தூக்கக் கலக்கத்தோடு புழக்கடைப் பக்கம் ஹரிக்கேன் லைட்டுடன் போனாள்.

ஹரியின் இருதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.