மகுடபதி/"உள்ளே தள்ளு!"

விக்கிமூலம் இலிருந்து

பத்தாம் அத்தியாயம் - "உள்ளே தள்ளு!"

ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கட ஹரிராவ் நாயுடுவின் முகத்தில், அவர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய போதிருந்தே, ஒருவிதக் கேலிப் புன்னகை குடிகொண்டிருந்தது. அதன் காரணத்தை நாம் அறிய வேண்டுமானால், மகுடபதி டாக்டர் புஜங்கராவ் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் மேற்படி ஸப்-இன்ஸ்பெட்கரின் வீட்டுக்கு நாம் போக வேண்டும்.

அன்று மாலை நடந்த போலீஸ் தடியடி வைபவத்தில் சங்கட ஹரிராவ் நாயுடுவும் கலந்து கொண்டு தம்முடைய பங்கை நிறைவேற்றி வைத்துவிட்டு, இரவு பத்து மணிக்குத் தான் வீட்டுக்கு வந்தார். அவர் வந்த அரை மணி நேரத்துக்கெல்லாம் வாசலில் கார் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் கார்க்கோடக் கவுண்டர் தான். இரண்டு பேருக்கும் ரொம்பவும் சிநேகிதம்.

"என்ன, பிரதர்! என்ன விசேஷம் இந்த நேரத்தில்?" என்று நாயுடுகாரு கேட்டார். உடனே, எதையோ நினைத்துக் கொண்டு, "ஓகோ?" மறந்தே போய்விட்டேனே? - இந்தக் கலாட்டாவில் உங்கள் காரியம் ஒன்று பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தீர்களே? காரியம் ஆச்சா?" என்று கேட்டார்.

"ஆச்சு - ஆகவில்லை!" என்றார் கார்க்கோடாக் கவுண்டர்.

"அப்படியென்றால் என்ன?"

"பாதி ஆகிவிட்டது. நீ கொஞ்சம் மனது வைத்தால் பாக்கிப் பாதியும் ஆகிவிடும்."

"என்ன பிரதர், புதிர் போடுகிறீர்கள்?" என்று நாயுடு கேட்டார்.

பிறகு, கார்க்கோடக் கவுண்டர் சாங்கோபாங்கமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, "பையனைக் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். அவனைத் தூக்குமேடைக்கு அனுப்புவது உன் பொறுப்பு" என்றார்.

சங்கட ஹரிராவ் நாயுடு சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தார். "கவுண்டரண்ணே! விஷயம் நீங்கள் சொல்லுவது போல் அவ்வளவு சுலபமில்லை. கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. பையன் நடந்த விஷயத்தை 'ஸ்டேட்மெண்ட்' கொடுத்தால், சாட்சிக்குப் பெண்ணைக் கூப்பிட வேண்டியதாகும். பெண் எங்கே என்று தேடும் போது வம்பு வந்து சேரும். மேலும் அவள் யாருக்கோ கடிதம் கொடுத்து அனுப்பியதாகச் சொல்லுகிறீர்கள். அதனால் ஏதாவது தொல்லை வந்தாலும் வரும்" என்றார்.

"என்னப்பா, திடீரென்று உனக்குத் தொடை நடுக்கம் வந்துவிட்டது? இதைவிட எத்தனையோ கஷ்டமான கேஸையெல்லாம் சமாளித்திருக்கிறாயே."

"உங்களுக்குத் தெரியாது, பிரதர்! இப்போது டிபார்ட்மெண்ட் முன்னைப்போல இல்லை. துரை ரொம்பப் பொல்லாதவனா யிருக்கான். ஏதோ இந்தக் காங்கிரஸ்காரர்கள் கலாட்டாவினாலே, நமக்கெல்லாம் டிபார்ட்மெண்டிலே கொஞ்சம் மதிப்பு இருந்து வருகிறது. இல்லாமல் போனால்..."

"உன் அழுகையை ஆரம்பித்து விட்டாயாக்கும், இப்போது என்னதான் செய்யலாம் என்கிறாய்? - நேரம் ஆகிறது."

"வாஸ்தவம். இங்கே, உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் பிடிபடாது. 'ஸ்பாட்டு'க்குப் போய்ப் பார்ப்போம். தடையங்கள் எல்லாம் எப்படியிருக்கிறதென்று பார்த்துக் கொண்டு தீர்மானிக்கலாம். அந்த லெட்டர் டெலிவரி ஆச்சா, இல்லையா என்று மட்டும் நிச்சயமாய்த் தெரிந்து போய்விட்டால் தேவலை" என்று சொல்லிக் கொண்டே சங்கடஹரிராவ் நாயுடு எழுந்திருந்தார்.

இருவரும் காரில் ஏறி, 'ஸ்பாட்டு'க்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே, இவர்களுக்குப் பெரிய அதிசயம் காத்துக் கொண்டிருந்தது. கட்டிப் போட்டிருந்த மகுடபதியைக் காணோம். அதோடு, கிழவனிடமிருந்து முனகல் சப்தம் வந்தது.

கார்க்கோடக் கவுண்டர், டார்ச் லைட்டைப் பெரியண்ணனுடைய முகத்துக்கு நேராகக் காட்டினார். அவனுடைய கண்கள் சிறிது திறந்தன. கவுண்டரின் முகத்தைப் பார்த்து அக்கண்கள் திறுதிறுவென்று விழித்தன. கொஞ்சம் ஞாபகத்தின் அறிகுறி தோன்றியது. கிழவனுடைய வாய் பேசுவதற்கு முயன்றது. மிக மெலிந்த குரலில் "இரகசியம்... சொல்லாமற் போனால்... மன்னிக்க வேணும்..." என்ற வார்த்தைகள் குழறிக் கொண்டு வந்தன. கிழவன் மறுபடியும் ஞாபகத்தை இழந்துவிட்டான்.

"கிழவனுக்கு உயிர் ரொம்பக் கெட்டி; கத்தி அதிக ஆழம் போகவில்லை. உடனே சிகிச்சை செய்தால் பிழைத்துக் கொள்வான்" என்றார் ஸப்-இன்ஸ்பெக்டர்.


கார்க்கோடக் கவுண்டர் நாயுடுவின் முகத்தைப் பார்த்தபடி திகைத்து நின்றார்.

"அண்ணே! வெறுமே திகைத்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. பையன் அனேகமாய் ஸ்டேஷனுக்குத்தான் போயிருப்பான். நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன். உடனே கிழவனை அப்புறப்படுத்திவிட வேண்டும்..."

கவுண்டரின் முகத்தில் தோன்றிய கேள்விக் குறியைப் பார்த்துவிட்டு, "ஆமாம்; யோசிப்பதில் பிரயோசனம் இல்லை. கிழவனைப் பிழைக்க வைத்து விடுவதுதான் நல்லது. எது எப்படியிருக்குமோ, என்னமோ? பையனை வேறு விதத்தில் சரிப்படுத்திக் கொள்ளலாம்" என்றார் நாயுடு.

கவுண்டர், "நீ எப்படி ஸ்டேஷனுக்குப் போவாய்? கொண்டுவிட்டுத் திரும்பட்டுமா" என்று கேட்டார்.

"வேண்டாம்; ஸ்டேஷன் இங்கிருந்து கிட்டத்தில் தான் இருக்கிறது. நான் போய்விடுகிறேன். உங்கள் வண்டியில் நான் வந்ததாகவே தெரியவேண்டாம். பையன் அங்கே காத்துக் கொண்டிருந்தால் வம்பு. நீங்களும் அவசரமாய்க் காரியத்தைப் பார்க்க வேண்டும். இங்கே இருக்கிற சமுக்காளம், லாந்தர், பெட்டி, சாமான் ஒன்றும் இருக்கக்கூடாது. போய்விட வேண்டும்."

"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கே ஒரு பிசகும் இருக்காது. நீ மட்டும் உன் காரியத்தைச் சரியாய்ப் பார்க்கவேண்டும்.

இந்தப் பேச்சு நடந்து பதினைந்து நிமிஷத்துக்குப் பிறகு ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் நாயுடு போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார்; அங்கே இருந்த ஸ்டேஷன் ஆபீசர், கான்ஸ்டேபிள்கள் முதலியவர்களிடம், இன்று கலாட்டா நடந்திருக்கிறபடியால், ஏதாவது ஒரு வேளை 'அர்ஜெண்ட் கால்' வரலாம் என்று ஸ்டேஷனுக்கு வந்ததாகச் சொன்னார். பிறகு, அவர்களுடன் அன்றைய சம்பவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு, மகுடபதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவன் தனியாய் வந்தால் என்ன செய்வது, யாருடனாவது வந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி அவர் மனம் யோசனை செய்து கொண்டிருந்தது.

நாயுடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியிருக்கும். பையன் பயந்து எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு விட்டான். இனிமேல் வரமாட்டான் என்று அவர் எண்ணத் தொடங்கிய சமயத்தில், டாக்டர் புஜங்கராவும் மகுடபதியும் வந்து சேர்ந்தார்கள். ஆகவே, ஸப்-இன்ஸ்பெக்டர், தாம் ஆலோசித்து வைத்திருந்த இரண்டாவது முறையைக் கையாண்டு, அவர்களுடன் அனுமந்தராயன் தெருவுக்குச் சென்றார். மகுடபதி அடைந்த ஏமாற்றத்தைத்தான் சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.

"என்ன தம்பி! 'ஜோக்' பண்ணுகிறாயா?" என்று ஸ்ப-இன்ஸ்பெக்டர் ஏளனமாய்க் கேட்டதும், மகுடபதி அவமானத்தினால் மனம் குன்றினான்.

டாக்டர் புஜங்கராவ் ஸப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து "நாயுடுகாரு! என் பேரில் பிசகு. இந்தப் பையன் சொன்னதைக் கேட்டு உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துவிட்டேன். மன்னிக்கவேண்டும்" என்றார்.

"பரவாயில்லை, டாக்டர்! உங்கள் பேரில் மிஸ்டேக் இல்லை. இந்தப் பையன் ஏதோ 'ட்ரிக்' பண்ணுகிறான் என்று அப்போதே எனக்கு 'டவுட்' இருந்தது. நீங்கள் கூட வந்ததனால் தான் கிளம்பி வந்தேன். கதர் கட்டியிருப்பதைப் பார்த்து நீங்கள் 'டிஸீவ்' ஆகிவிட்டீர்கள்" என்றார்.

மகுடபதி டாக்டரை நோக்கி, "இல்லை டாக்டர்! நான் உங்களை ஏமாற்றவில்லை. சத்தியமாய்ச் சொல்கிறேன். கடவுள்மேல் ஆணையாய்ச் சொல்கிறேன். நான் உங்களிடம் சொன்னதெல்லாம் உண்மை. இந்த அறையில், நீங்கள் இப்போது நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில் இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் பெரியண்ணன் கிடந்தான். அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அவன் குத்தப்பட்டு வீழ்ந்ததை இந்தக் கண்களாலே பார்த்தேன்..." என்று ஆத்திரத்துடன் கூறிவந்த போது நாயுடுகாரு குறிக்கிட்டார்.

"சரிதான், நாயனா, சரிதான்! எல்லாரும் காதாலே பார்ப்பார்கள். நீ மட்டுந்தான் கண்ணாலே பார்த்தே! ஒரு வேளை 'ட்ரீம்'லே பார்த்தாயோ, என்னமோ? இல்லாவிட்டால், டிலிரியம் ட்ரீமன்ஸோ? எப்படியிருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து ஸ்டேட்மெண்ட் எழுதி வைத்து விட்டுப் போ!" என்று சொல்லிவிட்டு புஜங்கராவைப் பார்த்து, "வாருங்கள் டாக்டர், போகலாம். மணி ஒன்று அடிக்கப் போகிறது. நல்ல 'வொயிட் கூஸ் கேஸ்' இன்று ராத்திரி" என்றார். சங்கடஹரிராவ் நாயுடுவுக்கு உற்சாகம் வந்தால், ஒரே மணிப்பிரவாள நடையில் இங்கிலீஷும் தமிழும் கலந்து பேசுவார் என்பது பிரசித்தமான விஷயம்.

டாக்டர் முன்னால் போகவும், மற்றவர்கள் எல்லாம் அவரைத் தொடர்ந்து போய்க் காரில் ஏறிக்கொண்டார்கள். மோட்டார் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் டாக்டரைத் தவிர பாக்கி எல்லாரும் இறங்கினார்கள்.

"குட் நைட், டாக்டர்!" என்றார் நாயுடு.

"குட் நைட் நாயுடுகாரு!" என்று சொல்லிவிட்டு டாக்டர் வண்டியை விட்டார்.

"டாக்டர்! நான் சொன்னது அவ்வளவும் சத்தியம். ஏதோ பெரிய மர்மம் நடந்திருக்கிறது. அப்புறம் வந்து சாவகாசமாய்ச் சொல்கிறேன்..." என்று மகுடபதி இரைந்து கத்திக் கொண்டே இருக்கையில் வண்டி போய்விட்டது.

ஸப்-இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும், "அடே! முந்நூற்றறுபத்தைந்து! பையனை உள்ளே தள்ளு! கையிலே காப்பை மாட்டு!" என்றார்.

இந்த மாதிரி ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்த மகுடபதி, "என்னத்திற்காக, ஸார்! என் பேரில் என்ன கேஸ்?" என்று கேட்டான்.

"என்ன கேஸா? எத்தனையோ இருக்கிறது! போலீஸாரிடம் பொய் ஸ்டேட்மெண்ட் கொடுத்த கேஸ்; பூட்டியிருந்த வீட்டுக்குள் பின்புறமாக நுழைந்த கேஸ்; கள்ளுக்கடைக்குத் தீ வைத்த கேஸ்; சட்டத்தை மீறி மறியல் செய்வதற்கு வந்த கேஸ்; இவ்வளவுந்தான்" என்றார் ஸப்-இன்ஸ்பெக்டர்.

அடுத்த நிமிஷம் இரண்டு போலீஸ் சேவகர்கள் மகுடபதியின் கையில் விலங்கை மாட்டி, அவனை லாக் அப்பிற்குள் தள்ளி அடைந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மகுடபதி/%22உள்ளே_தள்ளு!%22&oldid=5799" இலிருந்து மீள்விக்கப்பட்டது