மகுடபதி/"பூம் பூம்"

விக்கிமூலம் இலிருந்து

ஆறாம் அத்தியாயம் - "பூம் பூம்"

பெரியண்ணனும் செந்திருவும் மாற்றி மாற்றிச் சொன்னதிலிருந்து, மகுடபதி பின்வரும் விவரங்களைத் தெரிந்து கொண்டான்.

சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டரின் தமையனார் மருதாசலக் கவுண்டர் என்பவர், மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற வக்கீலாயிருந்தார். பிதிரார்ஜித சொத்து ஏராளமாயிருந்ததுடன், வக்கீல் தொழிலிலும் அவருக்கு வருமானம் நிறைய வந்து கொண்டிருந்தது. சென்னையில் உயர்ந்த அந்தஸ்தும், நாகரிகமும் வாய்ந்த மனிதர்களுடன் அவர் பழகிக் கொண்டிருந்தார். அவருடைய ஏகபுத்திரி செந்திரு. செந்திரு தன்னுடைய ஆறாம் வயதிலேயே தாயாரை இழந்துவிட்டாள். தாயை இழந்த குறை அவளுக்குத் தெரியாதபடி தகப்பனார் வளர்த்து வந்தார்.

முதலில் அவள் கான்வெண்ட் ஸ்கூலிலும், பிறகு அடையாறு பள்ளிக்கூடத்திலும் படித்தாள். அவளுடைய முகக்களையினாலும், புத்திசாலித்தனத்தினாலும், பள்ளிக்கூடத்தின் செல்லக் குழந்தையாயிருந்தாள். மயிலாப்பூரில் அவளுடைய தந்தையின் சிநேகிதர் வீடுகளில், அவளை அன்புடன் வரவேற்காத வீடு கிடையாது.

நாலு வருஷத்துக்கு முன்னால் செந்திருவின் தலையில் பெரிய இடி விழுந்தது. அவளுடைய தகப்பனார் மருதாசலக் கவுண்டர் டைபாயிடு சுரம் வந்து இறந்து போனார். அப்போது அவளுக்கு வயது பதின்மூன்று.

செந்திரு அனாதையான அதே சமயத்தில் பெரும் பணக்காரியாகவும் ஆனாள். அவளுடைய தாயாருடைய சொத்துக்கள் தகப்பனாருடைய சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் உரியவள் ஆனாள்.

அவளுடைய சித்தப்பா தங்கசாமிக் கவுண்டர், அவளைச் சிங்கமேட்டில் தங்களுடைய வீட்டுக்கு அழைத்துப் போனார். வேறெங்கும் அவளுக்குப் புகலிடம் கிடையாது.

தங்கசாமிக் கவுண்டருக்கும் அவருடைய தமையனாருக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள். மருதாசலக் கவுண்டர் முப்பத்தைந்து வயதிலேயே முதல் மனைவியை இழந்து பின் மறு விவாகம் செய்து கொள்ளவில்லை. தங்கசாமிக் கவுண்டருக்கோ வீட்டில் இரண்டு மனைவிமார் இருந்தார்கள்.

மயிலாப்பூரில் பதின்முன்று வருஷம் வளர்ந்த செந்திருவுக்குச் சிங்கமேடு வாழ்க்கை, கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஊரிலே மற்றப் பெண்களெல்லாம் வயல் காடுகளுக்காவது இஷ்டப்படி சென்று கொண்டிருந்தார்கள். பெரிய கவுண்டர் வீட்டுப் பெண்ணானபடியால், செந்திரு வீட்டை விட்டு வெளிக்கிளம்ப முடியவில்லை. அவளுடைய நடை உடை பாவனைகள் வீட்டில் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. மற்றவர்களுடைய பழக்க வழக்கங்கள் இவளுக்குப் பிடிக்கவில்லை. இவளுடைய படிப்புக் கர்வத்தை அவர்களால் சகிக்க முடியவில்லை. அவர்களுடைய படிப்பில்லாமையை இவளால் பொறுக்க முடியவில்லை. இதனால் வரவர வீட்டில் ரகளை அதிகமாகிக் கொண்டு வந்தது.

தங்கசாமிக் கவுண்டர் மருதாசலக்கவுண்டர் போலவே சமபாகம் பெற்றவர். ஆனால், அவர் தாலுகா போர்டு ஜில்லா போர்டு எலெக்ஷனில் ஈடுபட ஆரம்பித்ததிலிருந்து வரவுக்கு மேல் செலவாகிக் கடன் முற்றிக் கொண்டு வந்தது. இப்போது அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன்; சொத்து முழுவதையும் விற்றாலும் அடைக்க முடியுமா என்பது சந்தேகம்.

எலெக்ஷன் விவகாரங்களில் தங்கசாமிக் கவுண்டரின் கூட்டாளி, பெயர் பெற்ற கள்ளுக்கடை கண்டிராக்டரான கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர். தங்கசாமிக் கவுண்டர் அதிகமாகக் கடன் பட்டிருந்ததும் மேற்படி கார்க்கோடக் கவுண்டரிடம்தான்.

தங்கசாமிக் கவுண்டர் கடனடைந்து மீந்து வருவதற்குக் கார்கோடக் கவுண்டர் ஒரு யோசனை சொன்னார். ஏற்கனவே கார்க்கோடக் கவுண்டருக்கு மூன்று தாரம் கல்யாணம். முதல் தாரம் இறந்தது போக இன்னும் இரண்டு மனைவிகள் வீட்டில் இருந்தார்கள். இப்போது செந்திருவை தனக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விடுவதாயிருந்தால், கடன் பூராவையும் தானே எடுத்துக் கொண்டு தீர்த்து விடுவதாகக் கார்கோடக் கவுண்டர் சொன்னார். அதற்குத் தங்கசாமிக் கவுண்டர் சம்மதித்துவிட்டார். செந்திரு மைனர் வயது நீங்கி மேஜர் ஆவதற்கு இன்னும் ஆறு மாதந்தான் இருந்தபடியாலும், மேஜர் ஆகிவிட்டால் ஏதாவது 'ரவுஸ்' பண்ணுவாள் என்று அவர்களுக்குப் பயமிருந்தபடியாலும், கல்யாணத்தை இந்த மாதமே முடித்துவிடுவதென்று தீர்மானித்திருந்தார்கள்.

கார்க்கோடக் கவுண்டர் அடிக்கடி சிங்கமேட்டிற்கு வருவதுண்டாதலால், செந்திரு அவரைப் பார்த்திருக்கிறாள். அவரைக் கண்டாலே அவளுக்குக் கதி கலங்கும். அவர் எதிரிலேயே வரமாட்டாள். கல்யாணப் பேச்சு அவளுடைய காதில் விழுந்ததும், அவள் விஷம் குடித்து உயிரை விட்டு விடத் தீர்மானித்தாள். பெரியண்ணக் கவுண்டனிடம் விஷம் சம்பாதித்துத் தரும்படி கேட்டாள். பெரியண்ணன் அவளைத் தடுத்து, கல்யாணத்தை நிறுத்தவும், செந்திரு அந்த வீட்டிலிருந்து தப்பிக்கவும் வேறு வழி யோசிக்கலாம் என்றான்.

அச்சமயத்தில் செந்திருவுக்கு அவளுடைய பள்ளிக்கூடத் தோழி பங்கஜத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. செந்திரு மயிலாப்பூரில் இருந்த போது, அடுத்த வீட்டில் ஸப்ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரின் குடும்பத்தார் வசித்தார்கள். முதலியாரின் பெண் பங்கஜம், செந்திரு சிங்கமேட்டுக்கு வந்த பிறகு சில காலம் அவளும் பங்கஜமும் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் திடீரென்று பங்கஜத்தின் கடிதங்கள் நின்று போயின. தான் எழுதும் கடிதங்கள் ஒரு வேளை தபால் பெட்டியில் சேர்க்கப்படுவதில்லையோ என்று செந்திரு சந்தேகித்தாள். அந்தச் சந்தேகத்தைத் தீர்த்து கொள்ள அவளுக்கு வழியில்லாமலிருந்தது. கடைசியாகப் பங்கஜத்திடமிருந்து கடிதம் வந்து இரண்டு வருஷத்துக்கு மேலாகிவிட்டது.

பெரியண்ணனும் செந்திருவும் தப்பும் வழியைப் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தபோது, பங்கஜத்தினிடமிருந்து கடிதம் வந்தது. அச்சமயம் தங்கசாமிக் கவுண்டர் ஊரில் இல்லை. ஏதோ கேஸ் சம்பந்தமாய்ச் சென்னைப் பட்டணம் போயிருந்தார். ஆகையால் கடிதம் செந்திருவின் கையில் நேரில் கிடைத்துவிட்டது. அதில் பங்கஜம், தான் எழுதிய பல கடிதங்களுக்குச் செந்திருவிடமிருந்து கடிதம் வரவில்லையென்றும், அதனால் கடிதம் எழுதுவதையே நிறுத்திவிட்டதாகவும், இப்போது அவளுடைய தகப்பனார் உத்தியோகத்திலிருந்து ரிடயர் ஆகிவிட்டபடியால், குடும்பத்துடன் கோயமுத்தூரில் வந்து குடியேறியிருப்பதாகவும், செந்திருவின் ஊருக்கு ஒரு நாள் வந்து அவளைப் பார்க்க விரும்புவதாகவும் எழுதியிருந்தாள்.

இதைப் பார்த்ததும், செந்திருவும் பெரியண்ணனும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கல்யாணத்தை நிறுத்துவதற்குப் பங்கஜத்தின் மூலமாக அவளுடைய தகப்பனாரின் ஒத்தாசையைத் தேடுவது என்று தீர்மானித்தார்கள். பெரியண்ணன், முதலில் தான் மட்டும் கோயமுத்தூர் போய் வருவதாகச் சொன்னான். செந்திரு அதை மறுத்து, ஒரு நிமிஷங்கூடத் தன்னால் அந்த வீட்டில் இருக்க முடியாதென்றும், இரண்டு பேரும் கோயமுத்தூருக்குக் கிளம்பிவிடலாமென்றும் பிடிவாதம் பிடித்தாள். கோயமுத்தூரில் தங்கசாமிக் கவுண்டருக்குச் சொந்தமான இந்த வீடு இருப்பது அவர்களுக்குத் தெரியும். அது பூட்டிக் கிடக்கிறதென்றும், தங்கசாமிக் கவுண்டர் எப்போதாவது குடும்பத்துடன் கோயமுத்தூருக்கு வந்தால் அதில் தங்குவது வழக்கமென்றும், அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த வீட்டுப் பூட்டின் சாவியும் சிங்கமேட்டில் தான் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, அன்றைய தினம் அதிகாலையில் ஒருவருக்கும் தெரியாமல் இரண்டு பேரும் கிளம்பிச் சிங்கமேட்டுக்கு இரண்டு மைல் தூரத்திலிருந்த ஸ்டேஷனில் ரயில் ஏறிக் கோயமுத்தூர் வந்து சேர்ந்தார்கள்.

ஸப் ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரின் பங்களா எங்கே இருக்கிறதென்று கண்டு பிடிப்பதற்காக முதலில் பெரியண்ணன் செந்திருவின் கடிதத்துடன் போனான். போகும்போது வீட்டில் செந்திரு தனியாயிருப்பது யாருக்குந் தெரியாமலிருப்பதற்காக, வெளியில் கதவைப் பூட்டிக் கொண்டு போனான். அவன் திரும்பி வந்து வெளிக் கதவைத் திறந்தபோதுதான் மகுடபதியும் அந்த வீட்டுக்குள் நுழைந்தான்.

இவ்வளவு விவரங்களையும் அவர்கள் சொல்லி முடிப்பதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது. எல்லாம் கேட்ட பிறகு மகுடபதி "பாட்டா! இவ்வளவு சொன்ன நீ ஒரு விஷயம் மட்டும் சொல்லவில்லையே! சிங்கமேட்டுக் கவுண்டர் வீட்டுக்கு நீ எப்படி வந்து சேர்ந்தாய்?" என்றான். அதன் மேல் பெரியண்ணன் அந்தக் கதையையும் சுருக்கமாகச் சொன்னான்.

பல வருஷங்களுக்கு முன் பெரியண்ணன் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவர் ஒரு நாள் அதிகமாகக் கோபித்துக் கொள்ளவே, அங்கிருந்து கிளம்பி விட்டான். இலங்கைக்குப் போய் சில காலம் அங்கே வசித்துவிட்டுத் திரும்பினான். இலங்கையில் தான் அவன் பெரிய குடிகாரன் ஆனான். இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு, ஒரு கலகக் கேஸில் அவன் மாட்டிக் கொண்டான். கீழ்க் கோர்ட்டில் ஏழு வருஷம் தண்டனை கொடுத்தார்கள். ஹைக்கோர்ட்டில் கேஸ் உடைந்து விடுதலை ஆயிற்று. அந்தக் கேஸில் அவனுக்குச் செந்திருவின் தகப்பனார் தான் வக்கீலாயிருந்து அவனை விடுதலை செய்வித்தார். அப்போதே பட்டணத்தில் செந்திருவைப் பெரியண்ணன் பார்த்திருக்கிறான். குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சியிருக்கிறான்.

மகுடபதியைக் குத்திய வழக்கில் விடுதலையான பிறகு, பெரியண்ணன் கொஞ்ச நாள் ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரசாரம் செய்து வந்தான். இது கார்க்கோடக் கவுண்டருக்குத் தெரிந்தது. அவர் அவனைச் சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டர் வீட்டில் வேலைக்கு அமர்த்தினார். அங்கே, இந்தப் பட்டணத்துக் குழந்தையைக் கண்டு யார் என்று தெரிந்து கொண்டதும், பெரியண்ணன் அங்கேயே சந்தோஷத்துடன் இருந்துவிட்டான். அவர்களுக்குள் நாளுக்கு நாள் பாசம் வளர்ந்து, கடைசியில், இம்மாதிரி சொல்லாமல் ஓடி வருவதில் முடிந்தது.

"கள்ளுக்கடைக் கண்டிராக்டில் நஷ்டம் வந்ததற்காக, ஏற்கெனவே என்னை வெட்டிப் போடலாமென்று எண்ணியிருக்கிறார் கள்ளிப்பட்டிக் கவுண்டர். இப்போது இந்த இடத்தில் என்னைப் பார்த்தால் என்ன செய்வாரோ தெரியாது. அவரே கத்தி எடுத்து என்னைக் குத்தி கொன்று விடுவார்" என்றான் மகுடபதி.

அப்போது பெரியண்ணன் முகத்தில் உண்டான விகாரத்தையும், அவனுடைய கண்களில் தோன்றிய பயங்கரத்தையும் மகுடபதியினால் அறிந்துகொள்ள முடியவில்லை.

"என்ன பாட்டா! இப்படி மிரளுகிறாயே! கத்திக்குத்து எல்லாம் உனக்குப் புதிது அல்லவே?" என்றான்.

"தம்பி, தம்பி! அப்படியெல்லாம் நீ ஒன்றும் பேசாதே. நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். கள்ளிப்பட்டிக் கவுண்டர்கிட்ட மாத்திரம் நீ போகவே கூடாது. ஒரு போதும் போகக் கூடாது" என்றான் பெரியண்ணன். அப்போது அவன் பேச்சே ஒரு மாதிரி இருந்தது.

அச்சமயத்தில் வாசலில் "பூம் பூம்" என்று மோட்டார்க் குழலின் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷம் வாசற் கதவை யாரோ தடதடவென்று தட்டினார்கள்.

மூன்று பேரில் யாருக்குக் கதிகலக்கம் அதிகமாயிருந்ததென்று சொல்வதற்கில்லை.

"சித்தப்பாவாயிருக்குமோ?" என்று நடுங்கிய குரலில் கேட்டாள் செந்திரு.

"பட்டணத்துக்கல்லவா போகிறதாகச் சொன்னார்?"

"வந்து விட்டாரோ, என்னமோ?"

"ஒருவேளை அய்யாசாமி முதலியார் வீட்டில் திரும்பி வந்திருந்து, உன் கடிதத்தைப் பார்த்துவிட்டுக் கார் அனுப்பியிருக்கலாமல்லவா?" என்றான் மகுடபதி.

செந்திருவுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது. "இருந்தாலும் இருக்கலாம்" என்றாள்.

கிழவன், "நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். எதற்கும், தம்பி, நீ அந்த அறைக்குள் இரு. கதவை உட்புறம் தாளிட்டுக் கொள்" என்றான்.

பெரியண்ணன் கையும் காலும் நடுங்க மச்சுப் படிகளில் இறங்கிக் கீழே வந்து, கையில் அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு, வாசற் கதவைத் திறந்தான்.

கதவை இடித்த டிரைவர் ஒதுங்கி நின்றான். மோட்டார் வண்டியில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் கிழவன் பிசாசைப் பிரத்தியட்சமாகக் கண்டவன் போல் பயங்கரமடைந்து பேச்சு மூச்சின்றி நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மகுடபதி/%22பூம்_பூம்%22&oldid=5794" இலிருந்து மீள்விக்கப்பட்டது