மகுடபதி/எதிர்பாராத சந்திப்பு

விக்கிமூலம் இலிருந்து

இருபத்துமூன்றாம் அத்தியாயம் - எதிர்பாராத சந்திப்பு

சுவாமியார் கடிதத்தைப் படித்துவிட்டு மகுடபதியிடம் கொடுத்தார். மகுடபதி படித்தான். கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது:

நான் ஒரு அனாதைப் பெண். இங்கே என்னைப் பலவந்தமாகக் கொண்டுவந்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். எனக்குப் பைத்தியம் இல்லை. இந்தப் பாதகர்களுடைய கொடுமைக்குப் பயந்து பைத்தியம் மாதிரி வேஷம் போட்டு நடிக்கிறேன். என்னை எப்படியாவது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

இப்படிக்கு, திக்கற்ற செந்திரு.

இதைப் படித்தடும் மகுடபதியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. பெரியண்ணன் "என்ன? என்ன?" என்று வற்புறுத்திக் கேட்கவே, அவனுக்கும் வாசித்துக் காட்டினான். பெரியண்ணன் 'ஓ'வென்று அழுது விட்டான்.

சுவாமியார் இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தார். "மகுடபதி! இதென்ன? உங்களுக்கு இந்தப் பெண்ணைத் தெரியுமா?" என்று கேட்டார்.

"ஆமாம், சுவாமி! அவளைத் தேடிக்கொண்டு தான் நாங்கள் வந்தோம்!" என்றான் மகுடபதி.

பெரியண்ணன் விம்மிக் கொண்டே, "குழந்தை இந்தக் கடிதத்தைக் கல்லில் கட்டிக்கீழே போட்டிருக்கிறது. கடுதாசி பறந்து போய்விட்டது. கல் மாத்திரம் சுவாமியின் தலையில் விழுந்திருக்கிறது" என்றான்.

"அப்படியானால், கடிதத்தில் கண்ட விஷயம் உண்மையென்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று சுவாமியார் இரண்டு பேரையும் பார்த்துக் கேட்டார்.

கொஞ்சம் கொஞ்சமா எல்லா விஷயங்களையும் மகுடபதியும் பெரியண்ணனும் சுவாமியாருக்குச் சொன்னார்கள். சுவாமியார் அளவு கடந்த ஆச்சரியத்துக்கு உள்ளானார் என்று சொல்லவேண்டியதில்லை. அதோடு அவருக்குக் கொஞ்சம் பயமும் உண்டாயிற்று. கார்க்கோடக் கவுண்டரைப் பற்றி அவர் ஏற்கெனவே பராபரியாய்க் கேள்விப்பட்டதுதான். இப்போது அவருடைய கொடுமைகளுக்கு உள்ளானவர்களிடம் நேரிலேயே விஷயங்களைக் கேட்டதும், "அவ்வளவு பொல்லாத மனுஷனுடைய விரோதத்துக்குப் பாத்திரமாகி இந்த ஊரில் மடம் எப்படி நடத்த முடியும். நம்முடைய தொண்டுக்கெல்லாம் விக்கினம் வந்து விடும்போலிருக்கே?" என்று நினைத்தார். அதோடு, காங்கிரஸ் தொண்டனான மகுடபதி இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதனால் அபாயம் அதிகமாயிற்று. சர்க்கார் அதிகாரிகள் கார்க்கோடக் கவுண்டரின் பக்கந்தான் இருப்பார்கள். நம்முடைய பேச்சை நம்பமாட்டார்கள். இவ்வளவுடன் கூட, சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு பெண்; நாமோ சந்நியாசி, பழி சுமத்த எங்கே இடுக்குக் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கும் தூர்த்தர்கள் தங்கள் காரியத்தை ஒருவேளை ஆரம்பிக்கலாம்.

இப்படியெல்லாமிருந்த போதிலும், ஒரு அனாதைப் பெண்ணைப் பாவிகளின் கொடுமையிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியந்தான் என்று சுவாமியார் முடிவு செய்தார். ஆனால் காரியம் கெட்டுப் போகாமலிருக்க வேண்டுமானால், ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியதும் அவசியம். அவசரப்பட்டு ஒன்று கிடக்க ஒன்றைச் செய்து மோசம் போகக் கூடாது.

வெகு நேரம் மகுடபதியுடனும், பெரியண்ணனுடனும் கலந்து யோசித்த பிறகு, சுவாமியார் சொன்னதாவது:

"இந்த விஷயத்தில் நீங்கள் ஒன்றும் பிரவேசிக்க வேண்டாம். நீங்கள் தலையிட்டால் கட்டாயம் காரியம் கெட்டுப் போகும். இன்று ராத்திரி இங்கே தங்கிவிட்டு நாளைக்குக் கோயமுத்தூருக்கோ அல்லது கிராமத்துக்கோ புறப்பட்டுப் போங்கள். உதகமண்டலத்தில் ஒரு பெரிய உத்தியோகஸ்தரை எனக்கு நல்ல பழக்கமுண்டு. நாளையதினம் எனக்கும் கொஞ்சம் உடம்பு சௌகரியமாகிவிடும். நானே நேரில் போய் அவருடன் பேசி எப்படியாவது அந்தப் பெண்ணை விடுதலை செய்யப் பார்க்கிறேன். அதற்கு இந்தக் கடிதமே எனக்குப் போதும். அவசரப்பட்டு ஏதாவது செய்தோமானால் எல்லாம் குட்டிச்சுவராகிவிடும். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அதன் பொறுப்பு நம்முடைய தலையில் தான் விடியும். கார்க்கோடக் கவுண்டரிடத்திலிருந்து அவளை விடுதலை செய்துவிட்டால், அப்புறம் அவளாச்சு, நீயாச்சு!" 

சுவாமியார் கூறியதை மறுத்துக் கூற மகுடபதிக்குத் தைரியம் உண்டாகவில்லை. அவர் கூறுவது தான் நியாயம், புத்திசாலித்தனம் என்றும் அவனுக்குப் பட்டது.

"சரி, சுவாமி! அப்படியே ஆகட்டும்" என்றான்.

"இனிமேலாவது நீங்கள் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக் கொண்டு சிரமபரிகாரம் செய்து கொள்ளுங்கள். ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்" என்றார் சுவாமியார்.

அவ்விதமே மகுடபதியும் பெரியண்ணனும் சுவாமியாரின் அறையிலிருந்து வெளிவந்து பிரசாதம் சாப்பிட்டார்கள். பிறகு மகுடபதி, கிருஷ்ணன் என்கிற பையனிடம் தேவகிரி எஸ்டேட் பங்களா எங்கே இருக்கிறதென்பதைப் பற்றியும், போகும் வழியைப் பற்றியும் விவரமாக விசாரித்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம், பெரியண்ணனைப் பார்த்து, "பாட்டா! என்னால் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. நான் போய்க் கொஞ்சம் ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன், நீ படுத்துக் கொண்டிரு" என்று சொல்லிவிட்டுப் போனான்.

அவன் போன சிறிது நேரத்துக்கெல்லாம் பெரியண்ணன் கிருஷ்ணனிடம் "தம்பி! எனக்கு இங்கே ஒருவரைப் பார்க்க வேண்டும். போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். சுவாமியார் கேட்டால் இரண்டு பேரும் ஊர் சுற்றிப் பார்க்கப் போயிருக்கிறோம் என்று சொல்லிவிடு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

சுவாமியார் சொன்ன யோசனை சரியானது என்று மகுடபதி ஒப்புக் கொண்ட போதிலும், செந்திருவைப் பார்க்காமல் திரும்ப அவன் மனம் ஒப்பவில்லை. உலகத்தைத் துறந்த சுவாமியாருக்கு மகுடபதியின் உள்ளம் செந்திருவைப் பார்க்க எப்படித் துடித்தது என்பது தெரிவதற்கும் நியாயமில்லை. ஆகவே, அவரிடம் சொல்லாமல் எப்படியும் தேவகிரி எஸ்டேட் பங்களாவுக்குப் போய் அவளை ஒரு தடவை கண்ணால் பார்த்துவிட்டாவது திரும்ப வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். கவுண்டர்கள் நேற்றுத்தான் வந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். ஆகையால் இன்று இங்கே இருக்கமாட்டார்கள். பங்களாவுக்கு வெளித்தோட்டத்தில் அவள் வந்து உலாவுகிறாள் என்றும் தெரிகிறது. ஆகவே, அவளைப் பார்ப்பது சாத்தியந்தான். "பயப்படாதே! நான் இருக்கிறேன்" என்று இரண்டு வார்த்தை சொல்லுவதுகூடச் சாத்தியமாகலாம். ஏன் முடியாது? இந்த நோக்கத்துடன் தான் மகுடபதி இப்போது உதகமண்டலம் போகும் மலைச்சாலையில் போய்க் கொண்டிருந்தான்.

போகும் போது அவன் உள்ளத்தில் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் தோன்றின. செந்திரு உண்மையிலேயே அங்கே இருப்பாளா? நாம் பார்ப்போமா? அவளை விடுதலை செய்வதற்கு சுவாமியாரின் முயற்சியையே நம்பியிருக்க வேண்டியதுதானா? ஆகா! என்ன சமர்த்து அவள்! எப்பொழுதோ தோழியிடம் பேசின ஞாபகத்தை வைத்துக் கொண்டு பைத்தியம் போல் நடிக்கிறாளே? "எல்லாம் உன் பேரில் உள்ள அன்பினால்தானே?" என்று எண்ணிய போது மகுடபதிக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. அத்தகைய அன்புக்குப் பாத்திரமாக நாம் என்ன செய்திருக்கிறோம்? எத்தனையோ நாவல்கள் படித்திருக்கிறோமே? இம்மாதிரிச் சந்தர்ப்பத்தில் உபயோகப்படக்கூடிய யுக்தி ஒன்றும் இப்போது ஞாபகத்திற்கு வரவில்லையே? - தோட்டக்காரனிடம் ஏதாவது சொல்லிச் சிநேகம் செய்து கொண்டு பங்களாவுக்குள் போய் அவனைத் திடீரென்று ஓர் அறையில் தள்ளிப் பூட்டிவிட்டாலென்ன? செந்திருவை அழைத்துக் கொண்டு நேரே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிச் சென்னைக்குப் போய் விடலாமா - ஆகா! செந்திருவைப் போல் ஒரு வாழ்க்கைத் துணைவி மட்டுமிருந்தால், எப்படி எப்படியெல்லாம் தேசத் தொண்டும், சமூகத் தொண்டும் செய்யலாம் என்று மகுடபதி மனோ ராஜ்யம் செய்து கொண்டே நடந்தான். இதனால் வழி நடக்கும் களைப்பே அவனுக்குத் தெரியவில்லை. கிருஷ்ணன் சொன்ன அடையாளப்படி, சற்று தூரத்தில் ஒரு மேடான இடத்தில் பங்களா தெரிந்ததுந்தான் அவனுக்கு இப்போதைய நிலைமை ஞாபகம் வந்தது.

பங்களா அருகில் தயங்கித் தயங்கிப் போய் முன்புறத் தோட்டத்தில் செந்திருவைப் பார்க்கும் ஆவலுடன் கண் கொட்டாமல் பார்த்தான். ஆனால், பங்களாவிலோ, தோட்டத்திலோ மனித சஞ்சாரம் இருப்பதாகவே தெரியவில்லை. சற்று நேரம் கழித்து இன்னும் சமீபத்தில் சென்றான். இந்த பங்களாதானா, அல்லது தவறான இடத்துக்கு வந்துவிட்டோ மா என்று அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. தோட்டத்தின் முன் கேட்டுக்கு அருகில் தைரியமாய்ப் போனான். கேட்டின் கதவு திறந்து கிடந்தது. "சரி, இந்த வீடு இல்லை" என்று அவனுக்கு நிச்சயமாயிற்று ஆயினும் உள்ளே போய் யாராவது இருந்தால் அவர்களை விசாரிக்கலாம் என்று போனான். பங்களா முகப்புக்கு அவன் வந்த போது, கதவைத் திறந்து கொண்டு ஒரு மனிதன் வெளியே வந்தான். அவனைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. முரட்டு மனிதனாகக் காணப்பட்டான். ஒரு வேளை இந்தப் பங்களா தானோ, இவன் தான் அந்த முரட்டுத் தோட்டக்காரனோ என்று தோன்றியது. படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது.

"யார் ஐயா நீ?" என்று அந்த மனிதன் கேட்டதற்கு மகுடபதி சரியான பதில் சொல்லாமல், "இது யார் பங்களா அப்பா? வீட்டில் ஒருவரும் இல்லையோ?" என்றான்.

"ஒருவரும் இல்லாமல் என்ன? உனக்கு யார் வேணும்?" என்று எரிந்து விழுந்தான் அம்மனிதன்.

"வீட்டு எஜமானைப் பார்க்கணும்" என்றான் மகுடபதி, தடுமாற்றத்துடன்.

"உள்ளே இருக்கார், போ!"

இந்த பங்களா இல்லையென்று மகுடபதிக்கு உறுதியாயிற்று இருந்தாலும் இவ்வளவு தூரம் விசாரித்துவிட்டு உள்ளே போகாமல் திரும்பக் கூடாது என்று நினைத்துக் கொண்டே வாசற்படியில் நுழைந்து நடையில் போனான். நடையில் வலது புறத்தில் ஒரு வாசற்படி இருந்தது. அதன் அருகில் அவன் போனதும் வெளி வாசற் கதவு திடீரென்று சாத்திய சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் அறைக்குள்ளேயிருந்து "வாடா, அப்பா, வா!" என்று ஒரு தெரிந்த குரல் - பயங்கரமான குரல் கேட்டது. மகுடபதி திகிலுடன் அறைக்குள் நோக்கினான். அங்கே, கையில் சுழல் துப்பாக்கியுடன் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர் நின்று கொண்டிருந்தார்.