மகுடபதி/மகுடபதி எங்கே?

விக்கிமூலம் இலிருந்து

பதின்மூன்றாம் அத்தியாயம் - மகுடபதி எங்கே?

காணாமற்போன கடிதம் வீடெங்கும் தேடிப்பார்த்தும் அது அகப்படவில்லை. மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வந்ததாகச் சொன்ன மருதக் கவுண்டனைக் கடிதத்தைப் பற்றிக் கேட்டதற்கு அவன், "நான் கண்டதே இல்லை" என்று சத்தியம் செய்துவிட்டான்.

அய்யாசாமி முதலியார் அத்துடன் அந்தச் சனியனை மறந்து விட்டு, சைவ சித்தாந்தப் பத்திரிகைக்குத் தாம் எழுதி வந்த பதினோராந் திருமுறை ஆராய்ச்சியில் இறங்கியிருப்பார். அதற்குப் பங்கஜம் இடங்கொடுக்க வில்லை. அவள் நாவல் எழுதுவதைக் கூட விட்டுவிட்டாள். ஏற்கெனவே செந்திருவின் பேரில் அவளுக்கிருந்த வாஞ்சையோடு, இப்போது அவளைப் பற்றிய மர்மத்தை அறியும் ஆவலும் சேர்ந்து கொண்டது. அப்பாவை நச்சுப்பண்ணத் தொடங்கினாள்.

"கேளுங்கள், அப்பா! நாங்கள் ஸெகண்ட் பாரத்திலே வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் என்னைக் காட்டிலும் செந்திரு அதிகமாக ஐந்து மார்க் வாங்கி விட்டாள். அதற்காக அவள் அழுஅழு என்று அழுதாள். மறுநாள் வேண்டுமென்று கணக்கைத் தப்பாகப் போட்டுக் குறைச்சலா மார்க் வாங்கினாள். அவள் வீட்டில் ஏதாவது பணியாரம் பண்ணினால் நான் வந்து சாப்பிட்டாலொழிய அவள் சாப்பிடமாட்டாள். நான் புதுத்துணி உடுத்தாமற் போனால் அவளும் உடுத்த மாட்டாள். கோயிலுக்குப் போய் சுவாமி கும்பிடும்போது, எனக்காகத்தான் முதலில் பிரார்த்தனை செய்வாள். இப்படியெல்லாம் பிராண சிநேகிதியாய் இருந்தவளுக்கு இப்போது ஒரு கஷ்டம் வந்திருக்கும்போது, அதைத் தெரிந்து கொண்டு ஏதாவது பரிகாரம் செய்யாமல் நான் எதற்காக உயிரோடிருப்பது?" என்று இப்படியெல்லாம் தொண தொண வென்று பேசி முதலியாரின் பிராணனை வாங்கினாள். செல்லப் பெண்ணாகிய பங்கஜத்தின் மனம் உண்மையாகவே கவலையில் ஆழ்ந்திருக்கிறது என்பதை முதலியார் கண்டபோது, ஏதாவது செய்துதானாக வேண்டுமென்று தீர்மானித்தார். இன்னது செய்வது என்பதுதான் தெரியவில்லை. எனவே, அவருடைய நண்பரான போலீஸ் டிபுடி சூபரிண்டெண்டெண்ட் ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளையிடம் யோசனை கேட்பதென்று தீர்மானித்தார்.

ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளை போலீஸ் இலாகாவிலும் பொதுஜனங்களிடமும் ரொம்பப் பெயர் வாங்கினவர். இலாகவில் அவரைத் திரிசங்குப்பிள்ளை என்று சொல்வதுண்டு. ஜனங்கள் சாதாரணமாக லஞ்சநாதம் என்று அவரை அழைப்பார்கள்.

அவருக்கு ராவ்பகதூர் பட்டம் எப்படி வந்ததென்றால், கொல்லிமலைப் பக்கத்தில் ஒரு பிரசித்திபெற்ற கொள்ளைக்காரனைப் பிடிக்கப்போய் உயிருடன் திரும்பி வந்த வீரத்துக்காகத்தான். அதாவது, அவருடன் போன போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் ஒருவன், கொள்ளைக்காரனுடன் நேருக்கு நேர் நின்று துப்பாக்கியால் சுட்டபோது, கொள்ளைக்காரன் காயம்பட்டுவிழ, ஹெட்காஸ்டபிள் சுடப்பட்டு இறந்தான். அவன் மனைவிக்கு மாதம் ஒன்பது ரூபாய் பென்ஷன் கிடைத்தது. சங்கநாதம்பிளை சற்று தூரத்தில் மரத்தின் மறைவில் நின்று தப்பித்துக் கொண்டு திரும்பியபடியால், கொள்ளைக்காரனைப் பிடித்ததற்காக பிரமோஷனும் ராவ் பகதூர் பட்டமும் கிடைத்தன!

அவருக்குத் திரிசங்குப்பிள்ளை என்று ஏன் பெயர் வந்ததென்றால், இவர் ஏககாலத்தில் இகத்தையும் பரத்தையும் தேடிக்கொள்ள முயன்றதனால்தான்.

சங்கநாதம்பிள்ளை, சைவத்தொண்டர் மகாநாடுகளில் சொற்பொழிவு நிகழ்ந்த ஆரம்பித்தாரானால், சபையில் சிறிது நேரத்துக்கெல்லாம் சாதாரணமாக சபைத்தலைவரையும் மகாநாட்டுக் காரியதரிசியையுந் தவிர யாரும் இருக்கமாட்டார்கள். வேடிக்கையாகச் சொல்வதுண்டு: "காங்கிரஸ் கூட்டங்களைக் கலைப்பதற்குச் சங்கநாதம் பிள்ளையை அனுப்பினால் போதும்; குண்டாந்தடிக்குப் பயப்படாத ஜனங்கள் கூட அவருடைய சொற்பொழிவுக்குப் பயந்து ஓடிப்போவார்கள் என்று."

அப்படிப்பட்ட சங்கநாதம்பிள்ளையின் பிரசங்கத்தைக் கடைசி வரையில் இருந்து ஆர்வத்துடன் கேட்டுப் பாராட்டுகிறவர் நமது அய்யாசாமி முதலியார். அவர் போகிறவரையில் பங்கஜமும் சபையிலிருந்து எழுந்து போக முடியாதாகையால், ஸ்திரீகள் பகுதியில் அவளும் சிவனே யென்று தன்னுடைய நாவலின் அடுத்த அத்தியாயத்தைப் பற்றிச் சிந்தனை செய்துகொண்டு உட்கார்ந்திருப்பாள்.

 இப்படியாக, அப்பா, பெண் இருவருக்கும் நன்றிக் கடன் பட்டவரான ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளை, அவர்களுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். முதலில், அவர்கள் செந்திருவைப் பற்றியும், மர்மமாக மறைந்த கடிதத்தைப் பற்றியும் சொன்னதையெல்லாம் அவர் காதில் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. பேரூரில் தாம் நிகழ்த்திய சொற்பொழிவைக் குறித்து அவர்களுடைய அபிப்பிராயத்தை அறிவதிலேயே ஆவலாயிருந்தார். "பாருங்கள், மாமா, நான் எழுதுகிற நாவலிலே போலீஸ் இலாகாவே கொஞ்சமும் உபயோகமில்லை என்று எழுதி வெளுத்து வாங்கி விடுகிறேன்" என்று பங்கஜம் சொன்னதனால்கூடப் பலன் ஏற்படவில்லை. "நான் வாங்குகிற பெயரெல்லாம் வாங்கியாச்சு, அம்மா! இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது பென்ஷன் வாங்க, இனிமேல் எனக்கு என்ன?" என்றார்.

கடைசியில் பங்கஜம், "மாமா! நீங்கள் மட்டும் செந்திருவை எனக்குக் கண்டுபிடித்துக் கொடுக்காமல் போனீர்களோ, இனிமேல் உங்களுடைய பிரசங்கத்தைக் கேட்கவே வரவேட்டேன்" என்று சொன்னதுந்தான், ராவ்பகதூருக்கு 'ஓகோ? விஷயம் 'ஸீரியஸ்' போலிருக்கிறது என்ற உணர்ச்சி வந்தது. பிறகு, பங்கஜத்தை எல்லா விவரமும் சொல்லச் செய்து கவனமாகக் கேட்ட பிறகு, "சிங்கமேட்டுக் கவுண்டர் காரியங்கள் அவ்வளவு சரியாயில்லை யென்று எனக்குக் கூடக் கேள்வி; விசாரிக்க வேண்டிய விஷயந்தான்" என்று ஒப்புக்கொண்டார்.

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, மருதக் கவுண்டர் உள்ளே வந்து "டாக்டர் புஜங்கராவ்" என்று அச்சடித்த சீட்டைக் கொடுத்தான்.

"இது யார் டாக்டர் புஜங்கராவ்? எனக்குத் தெரியாதே?" என்றார் அய்யாசாமி முதலியார்.

"டாக்டர் புஜங்கராவ், ரொம்ப நல்ல மனுஷர். காரியமில்லாமல் வந்திருக்கமாட்டார்" என்றார் ராவ்பகதூர்.

டாக்டர் புஜங்கராவ் உள்ளே வந்ததும், சங்கநாதம் பிள்ளையைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

அப்போது பிள்ளை "என்ன, டாக்டர்? ஏது இவ்வளவு சாவகாசம்? சத்தியாக்கிரகமெல்லாம் ஒரு மாதிரி தீர்ந்து போய் விட்டதாக்கும்?" என்றார்.

"சத்தியாக்கிரகம் ஒரு மாதிரி தீர்ந்துபோனது போலத்தான். ஆனால் எனக்கு இன்னும் பல நாளைக்கு ஜோலி வைத்திருக்கிறீர்கள். மண்டை உடைந்தவனும், முழங்கால் சில்லுப் பேர்ந்தவனும், எலும்பு ஒடிந்தவனுமாகப் பதினைந்து பேருக்குச் சிகிச்சை செய்து வருகிறேன்" என்றார் டாக்டர்.

டாக்டர் புஜங்கராவ் பின்னர் அய்யாசாமி முதலியாரிடம் தனியாகக் கொஞ்சம் பேசவேண்டுமென்று தெரிவிக்க, இருவரும் எழுந்து அடுத்த அறைக்குப் போனார்கள். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் அவர்கள் திரும்பி வந்தார்கள். "பிள்ளைவாள்! என்ன ஆச்சரியத்தைச் சொல்ல? நாம் பேசிக் கொண்டிருந்த விஷயமாகத்தான் டாக்டரும் வந்திருக்கிறார்" என்றார் முதலியார்.

பிறகு, டாக்டர் புஜங்கராவ், அன்றிரவு மகுடபதி தன்னிடம் வந்தது முதல் நடந்தது எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, நடுவில் சங்கநாதம் பிள்ளை விரலால் சமிக்ஞை செய்துவிட்டு எழுந்து வெளியில் போய், எச்சில் துப்பிவிட்டுத் திரும்பி வந்தார். கதவுக்குப் பக்கத்தில் மருதக் கவுண்டன் நின்று உற்றுக் கேட்டுக் கொண்டிருந்ததைக் கடைக்கண்ணால் கவனித்துவிட்டுத்தான் திரும்பினார். உள்ளே வந்ததும் ஒரு சீட்டில், இங்கிலீஷில் "இந்தக் கடிதம் கொண்டு வருகிறவனைப் பிடித்து நான் வரும் வரையில் லாக்-அப்பில் வைத்திருக்கவும்" என்று எழுதி கவரில் போட்டு மூடினார். "முதலியார்வாள்! உங்கள் வேலைக்காரனை இதைக் கொண்டு போய்ப் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துவிட்டு வரச் சொல்லுங்கள்" என்றார்.

  அவ்விதமே முதலியார் மருதக் கவுண்டனை அழைத்துக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்.

பின்னர், டாக்டர் புஜங்கராவ் பாக்கிக் கதையையும் சொன்னார். அன்றிரவு சம்பவங்களைத் தாம் மறந்து விட்டுத் தம் காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் ஸப்-ஜெயிலிலிருந்து தன்னை வந்து பார்க்க வேணுமென்று அடிக்கடி மகுடபதி சொல்லி அனுப்பியதாகவும், அதன்மேல் போய்ப் பார்த்ததாகவும், அப்போது மகுடபதி, "டாக்டர்! அன்று இரவு நான் சொன்னதில் உங்களுக்கு நம்பிக்கை பிறக்காவிட்டால், தயவுசெய்து மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீட்டுக்குப் போய்ச் செந்திருவின் கடிதம் வந்ததா என்று விசாரியுங்கள்" என்று வற்புறுத்திச் சொன்னதாகவும், அதன்மேல் முதலியாரைத் தேடி வந்ததாகவும் கூறினார்.

கடிதம் வந்தது உண்மை என்றும், அது காணாமல் போன விந்தையைப் பற்றியும் முதலியார் டாக்டருக்குச் சொன்னார். எல்லோரும் சேர்ந்து ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் என்று ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். மகுடபதியைத் தாமே நேரில் பார்த்துவிட்டு அவனை விடுதலை செய்ய முயற்சிப்பதாகச் சங்கநாதம் பிள்ளை வாக்களித்துவிட்டுப் போனார்.

அன்று அஸ்தமித்த பிறகு ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் நாயுடு எதிர்பாராத விதமாக டாக்டர் புஜங்கராவிடம் வந்தார்.

"என்ன பிரதர்! பெரிய எழவாப் போச்சு! இந்த மாதிரி டிபார்ட்மெண்டிலே வேலை பார்க்கிறதை விட நானும் உங்களைப்போல ஏன் மெடிகல் காலேஜிலே சேரவில்லை என்று 'ரிபெண்ட்' பண்ணவேண்டியதாயிருக்கு" என்றார்.

"என்ன, நாயுடுகாரு? என்ன வந்துவிட்டது இப்போது?" என்று டாக்டர் கேட்டார்.

"அதை ஏன் கேட்கிறீர்கள்? அன்றைக்கு ராத்திரி வந்து கில்லாடித்தனம் பண்ணினானல்லவா? மகுடபதி என்ற பையன்? அவனாலே மெத்தத் தொந்தரவு, பிரதர்! ஒரு வேளை உங்களைப் பார்க்க வந்திருப்பானோ என்று பார்க்க வந்தேன்."

"இது என்ன கூத்து? அவன் தான் ஸப்-ஜெயிலில் இருந்தானே? நான் கூட முந்தாநாள் பார்த்தேனே?"

"ஆமாம், டாக்டர்! நேற்றுக் காலை வரையில் இருந்தான். நேற்று மத்தியானந்தான் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் கூப்பிட்டு, 'ஜாமீன் கேஸ் ஒன்றும் போடவேண்டாம். இந்தத் தடவை ஜெயிலுக்கே யாரையும் அனுப்பக்கூடாது. ஆகவே எல்லாரையும் துரத்தி விடுங்கள்' என்றார். இந்தப் பையனையும் வெளியில் அனுப்பி விட்டேன். இப்போது என்னடாவென்றால்..."

டாக்டர் புஜங்கராவ் மிக்க அதிசயத்துடன், "ஆமாம், இப்போது ஏன் அவனைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"திடீரென்று நம்ம டிபுடி துரைவாளுக்கு ஏதோ தோன்றிவிட்டது. 'அந்த மகுடபதியை எங்கிருந்தாலும் கொண்டு வா!' என்கிறார். நான் எங்கே போய்த் தேடுறது. பிரதர்! இன்னொன்று கேளுங்கள். யாரோ ஒரு மருதக் கவுண்டன் என்பவனிடம் 'இவனைப் பிடித்து லாக்-அப்பில் போடு' என்று கடிதம் கொடுத்து அனுப்பினாராம். அவன் எப்படியோ விஷயம் தெரிந்து கொண்டு இன்னொருத்தனிடம் கடிதத்தை அனுப்பி விட்டுக் கம்பி நீட்டி விட்டான். லாக்-அப்பில் இருந்த ஆள் வேறே ஆளாயிருக்கவே, துரைக்கு என் பேரில் கோபம். நான் என்ன செய்யட்டும், பிரதர்! இப்படியெல்லாம் அல்லாடுகிறதைவிடப் போலீஸ் உத்தியோகத்தை விட்டுவிடலாமென்று தோன்றுகிறது, பிரதர்! உங்களுடைய ஒபீனியன் என்ன?" என்றார் சங்கடஹரிராவ் நாயுடு.

இந்தக் கேள்வி டாக்டர் புஜங்கராவின் காதில் விழவேயில்லை. மகுடபதி எங்கே போயிருப்பான் என்று அவருடைய மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=மகுடபதி/மகுடபதி_எங்கே%3F&oldid=5830" இலிருந்து மீள்விக்கப்பட்டது