மனத்தின் தோற்றம்/முதுமொழி நூறு

விக்கிமூலம் இலிருந்து
11. முதுமொழி நூறு


கழக (சங்ககால) இலக்கியங்களுள், பெரிய அளவுள்ள பாடல்களைக் கொண்ட பதினெட்டு நூல்கள் பதினெண் மேற்கணக்கு எனவும், சிறிய அளவுள்ள பாடல்களைக் கொண்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனவும் வழங்கப் பெறும். கணக்கு என்றால் நூல். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் முதுமொழிக் காஞ்சி என்னும் நூலும் ஒன்றாகும். இதனை இயற்றியவர், மதுரைக் கூடலூர்க் கிழார் என்னும் கழகப் புலவர் பெருமானாவார்.

முதுமொழிக் காஞ்சியாவது: எல்லோரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம் பொருள் இன்பத்தை அறியச் சொல்வது முதுமொழிக் காஞ்சியாகும்.

இந்நூலுள் நூறு முதுமொழிகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. அவற்றை வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகின் வீடும் திருந்தும் நாடும் திருந்தும் - மக்களினம் உயர்வடையும். அவை வருமாறு:

1. சிறந்த பத்துக் கருத்துகள்

1. கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம், கல்வியைக் காட்டிலும் நல்லொழுக்கம் உடைமை சிறந்ததாகும்.

2. ஒருவரிடம், அன்பைக் காட்டிலும், தமது உயரிய பண்பைக் கண்டு மதிக்கும் முறையில் அவர் அஞ்சி ஒழுகும் படி நடந்து கொள்ளுதல் சிறந்தது.

3. கல்வியில் பெரிய மேதையாய் வல்லமை பெற்று இருப்பதைக் காட்டிலும், கற்றவரைக்கும் மறவாமல் அதன்படி ஒழுகுதல் சிறந்தது.

4. வளமான செல்வம் உடைமையைவிட, உண்மை யான (முறை தவறாத) வாழ்வு உடைமை சிறந்தது.

5. நோயோடு கூடிய இளமையைவிட, நோயின்றி ஒரளவு முதுமை இருப்பினும் அது நல்லது.

6. எல்லாச் செல்வ நலன்களைக் காட்டிலும், நாணமும் மானமும் உடைய வாழ்க்கை சிறந்தது.

7. உயர் குலத்தோர் என்னும் பெருமையினும், கற்புகல்வி உடையவர் என்னும் பெருமை சிறந்தது.

8. ஒருவர் தாம் கற்பது போதாது; கற்றவர்களைப் போற்றி வழிபடுதல் சிறந்தது.

9. பகைவரை ஒறுத்தலைவிட (தண்டித்தலைவிட), அவரினும் தம்மை உயர்ந்தவராக்கிக் காட்டுதல் சிறந்தது.

10. முன்னால் ஆரவாரமாக வாழ்ந்து வளம் குன்றிப் போவதினும், பின்னால் நிலைமை குறையாமல் நிறையுடன் வாழ்தல் சிறந்தது.

2. அறியத் தக்க பத்துக் கருத்துகள்

1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள் யாவரா யினும், அவருடைய குளிர்ந்த அருளுடைமையைக் கொண்டு தான் அவர் உயர் குலத்தார் என அறியப்படுவார்.

2. ஒருவர் பிறர்க்கு அளிக்கும் கொடையைக் கொண்டு அவர் குளிர்ந்த அருளுடையவர் என்பதை அறியலாம். 3. ஒருவர் செய்யும் உதவியை அளவுகோலாகக் கொண்டு, அவர் தளராத நட்பு உடையவர் என்பதை அறியலாம்.

4. ஒருவரது உண்மை காணும் திறத்தைக் கொண்டு, அவரது கல்வி வல்லமையை அறியலாம்.

5. ஒருவர் உயர்ந்த ஆராய்ச்சி உடையவர் என்பதை, அவர் எதிர்காலத்தில் வரக் கூடியதை முன் கூட்டி நுனித் துணர்ந்து செயல்படுவதைக் கொண்டு அறியலாம்.

6. ஒருவர் தம்மைப் பெருமைப்படுத்திக் கொண்டு செருக்குற்று இருப்பதைக் கொண்டு, அவர் அற்பக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறியலாம்.

7. ஒருவர் செய்யும் வஞ்சகச் சூழ்ச்சிச் செயலைக் கொண்டு, அவர் கள்ளத்தனம் உடையவர் என்பதை அறியலாம்.

8. ஒருவரின் சொல் சோர்வைக் கொண்டு - அதாவது சொன்ன சொல்லைக் காப்பாற்றாததைக் கொண்டு, அவர் எல்லாவற்றிலும் சோர்ந்து தவறுவார் என்பதை அறியலாம்.

9. ஒருவர் அறிவுடைமையில் குறைபாடு உடையவரா யிருப்பின், அவர் எல்லாவற்றிலும் குறைபாடு உடையவரா யிருப்பார் என்பதை அறியலாம்.

10. ஒருவரது சிறப்பான ஆளுமைத் தன்மையை, அவர் செய்யும் செயல் திறமையைக் கொண்டு அறியலாம்.

3. பழியாமை கூறும் பத்துக் கருத்துகள்

1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள், எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவரது இயற்கையான தாழ்.குணத்தைப் பழிப்பதில் பயனில்லை.

2. பெருந்தன்மையில்லாத அற்பர்கள் தம்மைத் தாமே பெருமைப் படுத்திக் கொள்வதைப் பழிப்பதில் பயனில்லை. 3. மிக்க பெருமைக்கு உரிய செயல், செய்வதற்கு அரியதாய் (கஷ்டமாய்) இருப்பின், அதற்காக நொந்து (பழித்து) விட்டுவிடலாகாது.

4. ஒரு செயல் முடிப்பதற்கு அரியதாய் (கஷ்டமாய்) இருப்பின், அதற்காக அதன் உயர்வினைப் புறக்கணிக்கக்கட்டாது.

5. ஒருவர் ஒரு செயலை நிறைவுபெற முடிக்காமல் குறையாய் விட்டிருப்பின், அதற்காக அவரைப் பழிக்க லாகாது; பின்னர்த் தொடர்ந்து முடிக்கலாம்.

6. செங்கோல் முறை தவறிய அரசனது நாட்டில் இருந்துகொண்டு அறிஞர்கள் அவனைப் பழித்துக்கொண் டிருப்பதில் பயனில்லை.

7. உதவி செய்யவேண்டிய உரிய சுற்றத்தார் உதவி செய்யாராயின், அதற்காக உயர்ந்தவர்கள் அவர்களைப் பழிக்காமல் பொறுத்துக் கொள்வர்.

8. முன்பின் அறியாத புதிய நாட்டிற்குச் சென்றால், அங்கே உள்ள பழக்க வழக்கங்களின் மாறுதலைக் கண்டு உயர்ந்தவர்கள் பழித்துரையார்.

9. வறியவன் வள்ளல்போல் வழங்கவில்லையே என அவனை எவரும் பழித்துரையார்.

10. கீழ்மக்களின் இழி செயல்களைக் கண்டு, சிறந்த பெரியவர்கள் பழிக்காமல் - கண்டும் காணாமல் விலகி விடுவர்.

4. துவ்வாமை கூறும் பத்து உரைகள்

1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுள் பழியுடைய வரிடம் உள்ள செல்வம், வறுமையைப் போலவே துய்க்கப் படாது (நுகரப்படாது).

2. அளவுக்கு மீறிய மறம் (வீரம்) காட்டுதல் பேடித் தன்மையைப் போலவே நல்ல பயன் தராது.

3. மானத்தோடு பசித்திருக்கலாம், நாணம்-மானம் இன்றி மற்றொருவரிடம் வாங்கி உண்பது உண்மையான உணவாகாது.

4. உண்மையான விருப்பமின்றிக் கடமைக்கு ஈவது, ஈயாத கஞ்சத்தனத்தைப் போலவே பெறத் தகுதியற்றது. 5. செய்யக் கூடாத செயல்களை மேற்கொண்டு செய்வது, மடத்தனமாய்க் கருதப்பட்டு நல்ல பயனை நல்காது.

6. பொய்யான உள்ளத்துடன் நடித்துச் செய்யும் உதவி, கீழ்மையினும் கீழ்மையானது.

7. ஒருவருடன் நட்பு கொண்டு, அவருக்குத் துன்பம் வந்தபோது நழுவி விடுதல் கொடுமையினும் கொடுமை யாகும்.

8. அறிவில்லாத முடனுடைய துணை, தனிமையிலும் தாழ்ந்தது-பயனில்லாதது.

9. மிகவும் தளர்ந்து தாழ்ந்து இழிந்த நிலையில் உள்ள முதுமை, சினம் எந்த நற்பயனையும் அடையச் செய்யாதது போல் தக்க பயனை எய்தச் செய்யாது.

10. ஒருவர் தம் செல்வத்தைத் தாம் மட்டும் துய்த்து மகிழ்தல், ஒன்று மற்ற ஏழைமையைப்போல் துய்க்காத தாகவே கருதப்படும்.

5. அல்லாதது - (ஆகாதது) கூறும் பத்து மொழிகள்

1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள், நல்ல கணவனது இயல்பு அறிந்து ஒழுகாதவள் நல்ல மனைவி யாகாள்.

2. மனைவியிடம் நல்ல மாட்சிமை - மாண்பு இல்லையெனில், அவளிருக்கும் குடும்பத்தின் வாழ்க்கை சிறப்புடையதாகாது.

3. ஒருவர்க்கு ஒருவர் குளிர்ந்த அன்பின்றிக் கொள்ளும் தொடர்பு, உறவும் ஆகாது - நட்பும் ஆகாது.

4. பிறர்க்கு ஒன்றும் உதவாத கையையுடைய கருமி புகழாகிய மலைக்கு - மலையத்தனைப் புகழுக்கு உரியவன் ஆகான்.

5. ஒன்று கலந்து பொருந்தாத உள்ளம் உடையவன் உயர்ந்த நண்பனாகக் கருதப்படான்.

6. ஆசிரியர்க்கு ஒருதவியும் செய்யாமல் வஞ்சித்துக் கற்கும் கல்வி உண்மையான கல்வியாகாது.

7. தான் வளத்துடன் வாழாவிடினும், பிறர் அவ்வாறு வாழமுடியாமையைக் கண்டு வருந்தும் வருத்தம் உண்மை யான வருத்தமாகாது.

8. அறவழியில் ஈட்டிய பொருளை நன்முறையில் - நல்லதற்குக் கொடாத கொடை உண்மைக் கொடையாகாது.

9. உரிய முறையில் நோற்காத நோன்பு (தவம்) உண்மை நோன்பு ஆகாது.

10. மறுபிறப்பு என்பதை முன்கூட்டி அறிந்து அதற்கு ஏற்றபடி ஒழுகாமல், ஆண்டில் மட்டும் மூத்த மூப்பு, உண்மையான பயனுள்ள மூப்பாகாது.

6. இல்லை - இல்லை எனக் கூறும் பத்து மொழிகள்

1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்கு எல்லாம், பிள்ளைப்பேற்றை விட வேறு பெரிய பேறு இல்லை.

2. உலக நடைமுறை அறிந்து ஒருவர்க்கு ஒருவர் உதவி வாழ்வதைக் காட்டிலும் தக்க செயல்-தக்க வரவு இல்லை.

3. நல்ல வாய்ப்பு - வசதி தரும் பழக்க வழக்கத்தைக் காட்டிலும் சிறந்த பழக்கவழக்கம் இருக்க முடியாது.

4. நல்ல வாய்ப்பு - வசதி தராத பழக்கவழக்கத்தைக் காட்டிலும் வீண் செயல் வேறு இன்று.

5. தன்னால் செய்ய முடிந்த நல்ல செயலையோ - கொடையையோ மறைத்தலினும் கொடுமை வேறொன்றும் இல்லை. -

6. நல்லறிவும் நல்லுணர்ச்சியும் இல்லாத மரக்கட்டை யாய் வாழ்தலைவிட வேறு சாவு இல்லை. இந்த வாழ்வே சாவுக்குச் சமம்.

7. பேராசையைக் காட்டிலும் பெரிய வறுமைத்தனம் வேறு இருக்க முடியாது.

8. நமக்குப் பின் விட்டுப் போகக்கூடிய எச்சப்பொருள் புகழினும் வேறேதும் இன்று.

9. ஒருவரிடம் சென்று கெஞ்சிக் கேட்டு இரத்தலைக் காட்டிலும் இழிவு வேறு யாதும் இலது.

10. தம்மிடம் வந்து ஒன்று கேட்டு இரப்பவர்க்குக் கொடுப்பதைவிட உயர்ந்த சிறப்பு வேறு இருத்தற்கு இல்லை.

7. பொய்யான பத்து உரைகள்

1. கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் மக்களுக்குள், உயர்ந்த பெரிய அறிவாளர் இனிமையாய் வாழ்வதில்லை என்பது பொய்; அவர் உள்ளம் இனியதாகவே இருக்கும்.

2. மிகப் பெரிய செல்வமும் செல்வாக்கும் பெற்றவன் பிறரிடம் சினம் (கோபம்) காட்டமாட்டான் என்பது பொய். செருக்கினால் அவன் சுடுமுகம் காட்டலாம்.

3. கள் உண்பவன் எதிலும் சோர்வடையான் - தாழ்வடையான் என்பது பொய். 4. செய்ய வேண்டிய செயலை உரிய காலம் அறிந்து செய்யாதவனுக்குச் செயல் கைகூடி வரும் என்பது பொய்.

5. எதிர் காலத்தில் நேரக் கூடியதை துணித்துணர்ந்து (உத்தேசமாகவாவது அறிந்து) அதற்கு ஏற்ப முன்கூட்டி நடந்து கொள்ளாதவன் தன்னைக் காத்துக் கொள்வான் என்பது பொய்.

6. உற்ற செயலைக் காய்ந்து வெறுத்துச் செய்யா தவன் உயர்வு பெறுதல் இயலாது.

7. எதையும் பொறுத்து அடக்கமாய் இல்லாதவன், பெருமையை வேண்டிப் பெறுதல் இயலாது.

8. தனக்குப் பெருமை வேண்டாதவன், - அதாவது - தற்பெருமையை விரும்பாதவன் சிறுமை அடைதல் இல்லை.

9. பொருளின் மேல் பேரவாக் கொள்பவன், முறை யாகப் பொருள் ஈட்டுவான் என்பது பொய்.

10. தூய்மையான உள்ளத்தான் அல்லாதவன், உயர்ந்த தவம் செய்வான் என்பது பொய்.

8. உறுதல் எளிதான பத்து மொழிகள்

1. கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களுள், புகழான செயல்களை விரும்பிச் செய்பவர்க்குத் தேவர் வாழும் இன்ப உலகம் எளிதில் கிடைக்கும்.

2. போரை ஏற்று உண்மையாய்ப் போரிடுபவர்க்குப் பெரிய போரில் வெற்றி கிடைத்தல் எளிது.

3. குளிர்ந்த உள்ளன்பு உடையவர்கட்கு, பிறர் விரும்பும் பொருளைக் கொடுத்தல் எளிது.

4, பிறர்மேல் கோள் சொல்லுதலை விரும்புபவர், எந்த மறை பொருளையும் (இரகசியத்தையும்) எளிதில் வெளியிட்டுவிடுவர்.

5. உழைப்பினால் உண்டாகும் துன்பத்தைப் (சிரமத் தைப்) பொருட்படுத்தாது உழைப்பவர்க்கு இன்பம் கிடைப்பது எளிது.

6. உழைக்காமல் இன்பத்தை மட்டுமே விரும்புபவர்கள் எளிதில் துன்பம் எய்துவர்.

7. பெருந்தீனியை விரும்பி உட்கொள்பவர்க்கு, மிகுந்த பெரிய நோய்கள் எளிதில் உண்டாகும்.

8. தன் மனைவியல்லாத மற்ற பெண்களை விரும்பு பவர்க்குப் பெரும் பழி நேர்தல் எளிது.

9. பிறர் பாரத்தைத் (பிறர் சுமையைத்) தாங்கிக் காக்க வேண்டும் என்னும் அருள் உடையவர்கள், மற்ற வர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுதல் எளிய செயலே; முடியாத தன்று.

10. எந்தப் பொறுப்பும் கவலையும் இல்லாதவர்க்கு, பிறரைப் படுகொலை செய்தல் எளிது.

9. நல்கூர்தலாகக் (வறியதாகக்) கூறும் பத்துக் கருத்துகள்

1. கடல் சூழந்த உலகில் மக்களை ஆளும் அரசன் செங்கோல் முறை தவறின், அவன் ஆளும் நாடு நல்கூர்ந்த தாகும் - வறுமை யுடையதாகும்.

2. மிகவும் அகவை (வயது) முதிர்ந்தவன் காமத்தை விரும்புதல் - அதாவது மேலும் புதிதாகத் திருமணம் செய்து கொள்ள விரும்புதல் பயனற்றதாகும்.

3. உடன் இருந்துகொண்டே உள்ளத்தில் பகை கொண்டு செயலாற்றுபவனுடன் சேர்ந்திருத்தல் வறி தானதே - iணானதே.

4. பெரிய பிணியாளி பெறுகின்ற இன்பம் என்பது உண்மையான பயன் உடையதாகாது. 5. தன்னைப் பொருட்படுத்தாது புறக்கணிப்பவரிடத்தில் சினம் கொள்வது செல்லாது - பயனற்றது.

6. மிகவும் அகவை முதிர்த்த மூத்தோன் தன்னை ஆடையணிகலன்களால் ஒப்பனை (அலங்காரம்) செய்து கொள்வது அவ்வளவாக எடுபடாது.

7. தனது பேச்சு எடுபடாத இடத்தில் பேசுதல் என்பது பயனற்ற வீண்செயலாகும்.

8. உள்ளத்தில் குளிர்ச்சியின்றி வறட்சியுற்றிருப்புவனோடு - அதாவது - உள்ளன்பு இல்லாதவனோடு சேர்ந்திருத்தல் பயன் தராததாகும்.

9. தமது பெருமையைக் கண்டு அஞ்சி மதிப்பு கொடாத இடத்தில் சினம் காட்டுதலால் பயனில்லை.

10. உண்மையான நட்பு இல்லாதவரிடத்தில் இன் சொல்லையோ - ஓர் உதவியையோ பெற உள்ளத்தில் விரும்பிச் செல்லுதலால் ஒரு பயனும் இராது.

10. தவறாமை பற்றிய பத்து உரைகள்

1. கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களுக்குள், தான் ஓங்கி உயர்வு பெற விரும்புபவன், உயர்ந்த மொழிகளை - பிறரைப் பற்றி உயவான புகழுரைகளைக் கூறத் தவிர மாட்டான் (தண்டான்).

2. தான் பெருமையில் பெருக விரும்புபவன், பல புகழ்ச் செயல்களைச் செய்யத் தவிரான்,

3. கல்வி கற்க விரும்புபவன் ஆசிரியரை வணங்குவதில் பின் வாங்கமாட்டான். -

4. உலகில் புகழுடன் நிலைத்து நிற்க விரும்புபவன் உயர்ந்த தவம் இயற்றுதலைத் தவிர்க்கமாட்டான்.

5. தான் நன்முறையில் வாழ வேண்டுபவன், பெரியோருடன் சூழ்ந்து (ஆலோசித்து) வாழும் வழி அறிதலைத் தவிரான்.

6. தான் மேன்மேலும் வளர விரும்புபவன், முயற்சி யுடன் உழைப்பதை விடமாட்டான்.

7. இன்பம் பெற விழைபவன், அதைப் பெறும் முயற்சியினிடையே ஏற்படும் இன்னல்களைக் கண்டு சோர மாட்டான்.

8. பின்னால் துன்பப்பட இருப்பவன், முன்னால் தேவையில்லாத சிற்றின்பங்களை விடாது நுகர்வான்.

9. குடிமக்களின் நன்மையை விரும்பும் அரசன், செங்கோல் முறை தவறாமல் ஆளுதலைக் கைவிட மாட்டான்.

10. இன்பம் விரும்புவன், பெரியோரின் குறிப்பறிந்து செயலாற்றுதலினின்றும் நீங்கான்.