மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/29. பெருமானார் கண்ட கனவு

விக்கிமூலம் இலிருந்து

29. பெருமானார் கண்ட கனவு

பெருமானார் அவர்கள் காலையில் தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள்.

சண்டைபற்றி தாங்கள் கண்ட கனவுகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

‘தங்களுடைய வாளின் நுனி சிறிது முறிந்து விட்டதாகக்’ கண்டார்கள். அதன் பயனாய்த் தங்களுக்குச் சிறிது நஷ்டம் உண்டாகும் என்று விளக்கம் கூறினார்கள்.

'தங்களுடைய திருக்கரங்களை ஒரு கவசத்தில் போட்டிருப்பதாகக் கண்டார்கள் கவசமானது மதீனா என்றும், மதீனா பத்திரமான இடமாக இருப்பதால், அதற்குள் இருந்து கொண்டே சண்டை செய்யவேண்டும் என்பது கருத்து’ என்றும் கூறினார்கள்.

'சில பசுக்கள் அறுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கண்டார்கள் - அதற்கு தங்களைச் சேர்ந்தவர்களில் சிலர் கொல்லப்படுவார்கள் என்று பொருள் உரைத்தார்கள்.

பெருமானார் அவர்களின் கருத்து மதீனாவுக்குள் இருந்தே தற்காப்புச் சண்டை செய்ய வேண்டும் என்பதே யாகும்.

பெண்களை அருகிலுள்ள கோட்டைகளுக்கு அனுப்பிவிட்டு, ஆண்கள் எல்லோரும் நகரில் இருந்துகொண்டே சண்டை செய்யவேண்டும் என்று தோழர்களில் முக்கியமானவர்கள் பலரும் கூறினார்கள்.

பத்ரு போருக்குப் பிறகு வெளியே முஸ்லிமானவரும், அந்தரங்கத்தில் முஸ்லிம்களுக்குப் பகைவராகவும் இருந்த அப்துல்லாஹ் இப்னு உபையும், எந்த அபிப்பிராயத்தையும் வெளிப்படையாகச் சொல்லாதவர். ஆனாலும் அவரும் எதிரிகளின் பலம் அதிகமாயிருப்பதால், திறந்த வெளியில் பகைவர்களை எதிர்த்துப்போரிடக் கூடாது என்று கூறினார்.

பத்ருச் சண்டையில் கலந்துகொள்ளாத வாலிபர்கள் சிலர் நகரைவிட்டு வெளியே போய் எதிரிகளைத் தாக்கவேண்டும் என ஒரு மனதாகச் சொன்னார்கள்.