மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/36. யூதர்களின் சூழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

36. யூதர்களின் சூழ்ச்சி

பெருமானார் அவர்களை விரோதிக்குமாறு மக்காவிலுள்ள குறைஷிகள் மதீனாவிலுள்ள யூதர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள்.

பனூநலீர் கூட்டத்தினர் ஏற்கனவே முஸ்லிம்களுக்குப் பகைவர்களாயிருந்து வந்தார்கள். குறைஷிகளின் கடிதம் கிடைத்ததிலிருந்து மேலும் பகிரங்கமாக விரோதத்தைக் காட்டத் தொடங்கினார்கள்.

பெருமானார் அவர்களுக்கு யூதர்கள் ஒரு தூது அனுப்பினார்கள்.

அதாவது, "முஸ்லிம்களில் முப்பது பேரை, யூதர்கள் குறிப்பிடக்கூடிய இடத்துக்குக் கூட்டிக்கொண்டு வருமாறும், தாங்களும் தங்களுடைய மதகுருமார்களைக் கூட்டிக் கொண்டு அங்கு வருவதாகவும், அவர்களுக்குப் பெருமானார் அவர்கள் சமய போதனை செய்ய வேண்டும் என்றும், அந்தப் போதனையினால், மதகுருமார்கள் மனம் மாறி, முஸ்லிம்கள் ஆவதானால் தங்கள் கூட்டத்தார் அனைவருமே அதைப் பின்பற்றுவதில் ஆட்சேபணை இல்லை" என்றும் சொல்லி அனுப்பினார்கள்.

ஆனால், பெருமானார் யூதர்களின் வார்த்தைகளை நம்ப முடியாது என்றும், புதிய உடன்படிக்கை ஒன்று செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார்கள்.

பனூநலீர் கூட்டத்தார் அதற்குச் சம்மதிக்கவில்லை.

அவர்களில் பனூகுறைலா கூட்டத்தார் மட்டும் முஸ்லிம்களுடன் செய்துகொண்ட பழைய உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொண்டார்கள்.

பனூநலீர் கூட்டத்தார் இரண்டாவது தடவையும் பெருமானார் அவர்களுக்கு ஒரு தூது அனுப்பினார்கள்.

அதாவது: தங்களுக்கு இஸ்லாத்தைப் போதிப்பதற்காக முஸ்லிம்களில் மூன்று பேரையாவது கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்றும் தாங்களும் தங்களுடைய மதகுருக்கள் மூவரைக் கூட்டிக்கொண்டு வருவதாகவும், அந்த மதகுருக்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாயிருந்தால், தாங்களும் அவ்வாறே செய்வதாயும் சொல்லி அனுப்பினார்கள்.

பெருமானார் அவர்களும் அதற்குச் சம்மதித்துச் சென்றபோது அவர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்க யூதர்கள் சூழ்ச்சி செய்திருக்கிறார்கள் என உறுதியான செய்தி கிடைத்ததால் உடனே திரும்பி விட்டார்கள்.