மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/42. ஆண்டவன் அருளிய வெற்றி

விக்கிமூலம் இலிருந்து

42. ஆண்டவன் அருளிய வெற்றி

உடன்படிக்கையையும், அபூஜந்தலின் பரிதாப நிலைமையையும் கண்ட ஹல்ரத் உமர் அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், பெருமானார் அவர்களிடம் சென்று "ஆண்டவனுடைய தூதரே! தாங்கள் உண்மையான நபி அல்லவா!" என்று கேட்டார்கள்.

"நிச்சயமாக நான் உண்மையான நபியாயிருக்கின்றேன்" என்றார்கள் பெருமானார்.

"நாம் கடைப்பிடிப்பது நேர்மையான வழி அல்லவா?" என்று கேட்டார்கள்.

"ஆம்!"

"குறைஷிகள் கடைப்பிடிப்பது தவறான வழி அல்லவா?"

"ஆம்!"

"இந்த நிலையில், மத சம்பந்தமான விஷயத்தில், நாம் எதற்காக நம்மைத் தாழ்வுபடுத்திக் கொள்ள வேண்டும்?" என்று உமர் அவர்கள் கேட்டார்கள்.

அதற்குப் பெருமானார் அவர்கள், "நான் அல்லாஹ்வினுடைய தூதன். அவனுடைய கட்டளைக்கு மாறாக எதுவும் செய்ய முடியாது" என்று பதில் கூறினார்கள்.

அதைக் கேட்டதும் உமர் அவர்கள் மிகுந்த வருத்தத்தோடு அபூபக்கர் அவர்களிடம் சென்று நிகழ்ந்தவற்றை விவரித்துக் கூறினார்கள்!

அப்பொழுது அபூபக்கர் அவர்கள், "பெருமானார் அவர்கள் ஆண்டவனுடைய நபி; அவர்கள் எதைச் செய்தாலும் ஆண்டவனுடைய கட்டளைப்படியே செய்வார்கள்" என்று சொன்னார்கள்.

அதன் பின்னர், பெருமானார் அவர்களிடம் மறுத்துப் பேசிய குற்றத்தை உமர் அவர்கள் நினைத்து, நினைத்து தங்கள் ஆயுள் வரை வருந்திக்கொண்டே இருந்தார்கள். அக்குற்றத்துக்குப் பரிகாரமாக, தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும், சிறப்பான தர்மங்களைச் செய்வதிலும் அடிமைகளை விடுதலை செய்வதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர்.

இதர முஸ்லிம்களுக்கும் அபூஜந்தலின் நிலைமையைக் கண்டு மிகுந்த கவலை உண்டாயிற்று. ஆனால், பெருமானார் அவர்களின் கட்டளையானதால் ஒன்றும் பேச இயலவில்லை.

பெருமானார் அவர்கள் அதன்பின் குர்பானியும் அதைச் சேர்ந்த சடங்குகளையும் அங்கே, நிறைவேற்றினார்கள்.

உடன்படிக்கை நிறைவேறியதும் மூன்று நாட்கள் ஹுதைபிய்யாவிலேயே பெருமானார் அவர்கள் இருந்தார்கள். அதன்பின் அவர்கள் மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

வழியிலேயே, இறைவாக்கு அருளப்பெற்றது.

"(நபியே) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெள்ளி அளித்துள்ளோம்....."

பெருமானார் அவர்கள், உமர் அவர்களை அழைத்து, அச்செய்தியைத் தெரிவித்தார்கள்.

அதைக் கேட்டதும் உமர் அவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.


43. பெருமானார் அவர்களின் பெருமை

பெருமானார் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், மக்காவுக்குப் போகும்போது பதினாயிரம் முஸ்லிம்களும் சென்றார்கள். முன்னர், போகும்போது ஆயிரத்தி நானூறு பேர்களே சென்றார்கள். குறுகிய காலத்தில் இவ்வளவு தொகையினர் இஸ்லாத்தில் எவ்வாறு சேர்ந்தனர்?

முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியில் ஓயாமல் சண்டை-சச்சரவு நிகழ்ந்து வந்ததால், ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக வாய்ப்பு இல்லாமல் இருந்தது.