மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/51. தொழுகையை நடத்தச் சொல்லுதல்

விக்கிமூலம் இலிருந்து

51. தொழுகையை நடத்தச் சொல்லுதல்

பெருமானார் அவர்களால் நடப்பதற்குச் சக்தியிருக்கும் வரை நோயுடனேயே பள்ளி வாசலுக்குச் சென்று தொழுகையை நடத்தி வந்தார்கள்.

ஒருநாள், பெருமானார் அவர்கள் குளித்து விட்டு, தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குப் புறப்படும்போது, அவர்களுக்கு மயக்கம் உண்டாயிற்று. சிறிது நேரத்தில் மயக்கம் நீங்கியதும், தங்களுக்குப் பதிலாக அபூபக்கர் அவர்கள் பள்ளிவாசலில் தொழுகையை நடத்த வேண்டும் என்று பெருமானார் அவர்கள், ஆயிஷா நாயகியார் அவர்களிடம் சொன்னார்கள்.

அதைக் கேட்டதும், "யாரஸூலல்லாஹ்! அபூபக்கர் இளகிய உள்ளமும் மெல்லிய குரலும் உடையவர்கள். தங்களுடைய இடத்தில் அவர்கள் நிற்க இயலாது. குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் கண்கலங்கி, உள்ளம் நெகிழுமே" என்று சொன்னார்கள்.

பெருமானார் அவர்கள், “அபூபக்கரே தொழுகையை நடத்த வேண்டும்" என்று மறுமுறையும் சொன்னார்கள்.

அது முதல் சில நாட்கள் வரை அபூபக்கர் அவர்களே தொழுகையில் தலைமையாயிருந்து நடத்தி வந்தார்கள்.