மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/56. கடமைகளை நிறைவேற்றிய நபிகள் நாயகம் அவர்கள்!

விக்கிமூலம் இலிருந்து

56. கடமைகளை நிறைவேற்றிய நபிகள் நாயகம் அவர்கள்!

மனிதத் தந்தையான ஹல்ரத் ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து, இவ்வுலகை நேர்வழிப்படுத்துவதற்காகக் காலந்தோறும் ஆண்டவன் தீர்க்கதரிசிகள் பலரை அனுப்பி வந்திருக்கின்றான். அவர்களில் கடைசியாகத் தோன்றியவர்கள் பெருமானார் அவர்கள். தங்களுக்குப் பிறகு, உலகுக்குத் தீர்க்கதிரிசிகள் தோன்றுவதற்கு அவசியம் இல்லாதபடி, தங்கள் திருப்பணிகளைச் செவ்வனவே பூர்த்தி செய்துவிட்டார்கள்.

பெருமானார் அவர்கள், உலகத்தில் மனிதர்களின் தோழமையோடிருந்து, அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றி, அவர்களை உன்னதமான இடத்தில் உயர்த்தி வைத்து, பிறகு தாங்களும் "மேலான தோழனான ஆண்டவனிடம்" போய்ச் சேர்ந்தார்கள்.

பெருமானார் அவர்கள், ரபீயுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் தேதி, திங்கட்கிழமை இவ்வுலகில் தோன்றினார்கள். அதே மாதம், அதே தேதி, அறுபத்து மூன்றாவது வயதில் இம்மண்ணுலகை விட்டு, விண்ணுலகுக்குச் சென்றார்கள்.

பரிசுத்த கஃபாவையும், மனித வர்கக்ததை நல்வழிப்படுத்துவதற்காக, இவ்வுலகில் தோன்றிய பெருமானார் அவர்களின் அடக்கத்தலத்தையும் காணும் பாக்கியத்தை ஆண்டவன் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அருள்வானாக!

ஒவ்வொரு முஸ்லிமும் பெருமானார் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்க ஆண்டவன் அருள்புரிவானாக!

இந்நூல்...

நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு என்பது மிகப்பெரிய பொக்கிஷமாகும். மாணவர்களுக்கு நபிகள் நாயகம் அவர்களின் பெருவாழ்வு தனித்தனியாக ஒவ்வொரு சம்பவமாக இனிய எளிய தமிழ் நடையில் 56 நிகழ்ச்சிகளில் தொகுக்கப் பெற்றுள்ளது.