மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/கணவன் ஊர்ந்த குதிரை

விக்கிமூலம் இலிருந்து

103. “கணவன் ஊர்ந்த குதிரை”

மறக்குல மங்கை. ஒரே புதல்வன். அவனும் கைக்குழந்தை போர் முரசு முழங்கியது. கணவன் விடை பெற்றுப் போய்விட்டான்.

போர் முடிந்தது. சிலர் திரும்பினர். யானை, பரி, தேர் மீது வந்தனர். கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு வரும் குதிரைகளை யெல்லாம் பார்க்கிறாள்.

தன் கணவன் ஏறிச் சென்ற பரியைக் காணவில்லை. கணவனையும் காணவில்லை. கவலை பற்றியது.

“குதிரை வரவில்லை. எல்லோருடைய குதிரைகளும் வந்து விட்டனவே. என் கணவர் ஊர்ந்து சென்ற குதிரை வரக்காணோமே. இரு பேராறு கூடும் இடத்தில் அகப்பட்ட பெரு மரம்போல், இரு பெரும் படைக்கு இடையே அகப்பட்டு அலைப்புண்டு அழிந்ததோ?” என்று புலம்பினாள்.