மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/கவரி வீசிய காவலன்

விக்கிமூலம் இலிருந்து


15. கவரி வீசிய காவலன்


இரும்பொறையின் அரண்மனை. மணங்கமழும் மென்மலர் பரப்பிய முரசு கட்டில் இருக்கும் இடம்.

பலவர் மோசிகீரனார், இரும்பொறையைக் காண நெடுந் தொலைவிலிருந்து வந்தார்.

நடந்த களைப்பு. முரசு கட்டிலைக் கண்டார். அது, மனிதர் உறங்கும் கட்டிலாகவே அவருக்குத் தோன்றியது.

புலவர் கட்டிலில் அமர்ந்தார், அயர்வு நீங்கப் படுத்தார். உறங்கி விட்டார். முரசை நீராட்ட எடுத்துச் சென்ற வீரர் திரும்பி வந்தனர். முரசு கட்டிலில் யாரோ உறங்குவதைக் கண்டனர்.

என்ன ஆணவம்?

பதறியவாறு, அரசனிடம் ஒடினர். செய்தியைக் கூறினர்.

அவன் உடல் கூறுபடும் என்பதை அறியானோ? என்று ஓடி வந்தான் அரசன். ஆனால் கட்டிலருகே வந்ததும், அவன் கை வாளை நழுவ விட்டது.விரைந்து, அருகிலிருந்த மயிற்பீலியை எடுத்துக் கட்டிலில் உறங்கிய புலவர்க்கு விசிறினான்.

வீரர்கள் செய்வதறியாது திரு திரு, வென்று விழித்தனர் புலவர்க்கும் உறக்கங் கலைந்தது! அரசன் இரும்பொறை தனக்கு மயிற்பீலி கொண்டு விசிறுவதைக் கண்டார். நீராட்டப் பெற்ற முரசும், தரையில் கிடந்தது. புலவர் துள்ளி எழுந்து, அரசன் கைகளைப் பற்றிக் கொண்டு, பதறினார்; அவர் கண்களில் நீர் நிறைந்தது.

‘அரசே! முரசு கட்டிலிற் படுத்ததற்காகவே என் உடலைக் கூறுபடுத்தலாம். அது செய்யாது விடுத்தது நின் முத்தமிழ் அறிவை உணர்த்துவது. மயிற்பீலி கொண்டு விசிறுகின்றாயே அச் செயல் எதை உணர்த்துவது?

வெற்றி வீர இந்த உலகில் புகழ் இல்லாதவர்க்கு உயர் நிலை உலகில் இடம் என்று அறிந்ததால் இப்படிச் செய்தாயோ?