மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/“மயக்கும் மக்கள்”

விக்கிமூலம் இலிருந்து

79. “மயக்கும் மக்கள்”

பாண்டியன் அறிவுடைய நம்பி தன் ஆருயிர் நண்பர் வீட்டிற்குச் சென்றார். அன்று அங்கு அரசனுக்கு விருந்து. அழகான வீடு. ஏழடுக்கு மாளிகை. பொன் மணிகள் எல்லாம் நிறைந்திருக்கின்றன.

அரசனோடு விருந்துண்ணப் பலர் வந்திருக்கிறார்கள். உணவு பரிமாறப்படுகிறது. அரசன் உண்ட பின்னரே பிறர் உண்ண வேண்டும். எல்லாரும் அரசனையே பார்க்கிறார்கள். அரசனோ ஆழ்ந்த சிநதனையிலிருக்கிறான்.

“மன்னர் பிரானே” என்றார் நண்பர்.

“ஆருயிர் நண்ப உனது வீட்டில் மகிழ்ச்சி இல்லை.”

“ஆ ஆ”

“ஆம், உண்மையாகவே மகிழ்ச்சி இல்லை. தளர் நடை நடந்து, சிறு கை நீட்டி, வட்டிலில் கையிட்டு சோற்றைத் தொட்டு, அளைந்து, அள்ளி மேனியெங்கும் வீசும் மக்கள் இல்லை. மயக்கும் மக்கள் இல்லை.

“நண்பர் மனைவியை நோக்க, அனைவரும் அவனையே நோக்கினர். அவளோ நாணத்தால் தலை கவிழ்ந்தாள்.

“மன்னர் பிரானே, அவள் வயிற்றுனுள் ஒருவன் உருவாகிறான். அவனுக்காகத்தான் இவ் விருந்து”

வெள்ளம் மகிழ்ச்சி வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.