மாபாரதம்/கன்னனின் முடிவு

விக்கிமூலம் இலிருந்து

9. கன்னனின் முடிவு

வீமன், நகுலன், தருமன், சகாதேவன் இவர்களைக் கன்னன் தனித்தனியே சந்தித்துப் போர்செய்த நிகழ்ச்சிகள் சாதாரணமானவை. தன் அன்னை குந்தியிடம் தான் நால் வரையும் கொல்வதில்லை என்று வாக்குறுதி தந்து விட்டதால் அப்போர்கள் பெரும்பாலும் தற்காப்புக்காகவே நிகழ்த்தப் பெற்றன.

கன்னன் அருச்சுனனைக் கொல்வதாக வீர மொழி பேசி இருக்கிறான். அவ்வாறே அருச்சுனனும் சுடுமொழி கூறி இருக்கிறான். எனவே கன்னன் இறுதி நாள் அருச்சுனனோடு செய்த பதினேழாம் நாட்போரே சிறப்பு வாய்ந்தது என்று கூறலாம்.

போர் தொடங்கியது. தருமன் கண்ணனைப் பார்த்து “இன்றைய வெஞ்சமரில் கன்னன் வான்உலகு எய்து வானோ இயம்புதி” என்று கேட்டான்.

“இத்தினம் கன்னன் விசயனின் அம்பினால் இறப் பான்; அடுத்தநாள் துரியன் வீமனால் உயிர் துறப்பான்; அத்தினாபுரியும் பாரத பூமியும் உன் ஆட்சிக்கு வரும்” என்று கண்ணன் உரைத்தான்.

செங்கண்மால் ஆன கண்ணன் உரைத்த இன் சொல் கேட்டுத் தெளிவு அடைந்த தருமன் இதுவரை கண்ணன் தங்களுக்குச் செய்தருளிய உதவிகளைப் பாராட்டிப் பேசினான்.

“கங்கை நதியில் கழு முனையில் வண்டாக அமர்ந்து வீமனைக் காத்தாய்”

“அரசர் அவையில் நாங்கள் செயலற்று மனம் குழம்பிக் கிடந்த நிலையில் பாஞ்சாலிக்குத் துகில் அளித்து மானம் காத்தாய்”

“கானக வாழ்க்கையில் துர்வாச முனிவர் வந்த போது அவர் சினத்தினின்று எங்களைக் காப்பாற்றினாய்”

“பாண்டவர்களுக்காகத் துரியன் பால் தூது நடந்து கால்கள் சிவந்தாய்”

“விதுரன் வெஞ்சிலை முறிக்கச் செய்தாய்”

“அசுவத்தாமனைத் துரியனிடமிருந்து பிரித்து வைத்தாய்”

“கன்னனின் கவசத்தையும் குண்டலங்களையும் கேட்டு வர இந்திரனை அனுப்பிப் பெற்றாய்”

“விசயனின் மகன் இராவானைக் களப்பலிக்குச் சம்மதிக்கச் செய்தாய்”

“அமாவாசையை எங்களுக்காக ஒரு நாள் முன் வரச்செய்து எங்களுக்குச் சாதமாக்கித் தந்தாய்”

“விசயனுக்குத் தேர் ஊர இசைந்தாய்"

“களத்தில் மனம் பேதலித்த விசயனுக்குக் கீதையை உபதேசித்தாய்”

“களத்தில் படை எடேன் என்று சொல்லிய நீ மூன்றாவது நாள் சக்கரத்தை எடுத்தாய்”

“வீடுமன் இறக்கும்படி சிகண்டியைத் தக்கபடி பயன் படுத்தினாய்”

“பகதத்தன் என்பவன் வீசிய வேலை விசயன் மார்பில் படாமல் நீ உன் திரு மார்பில் ஏற்று அவனைக் காத்தாய்”

“அபிமன் இறந்த போது இந்திரனைச் கொண்டு நாடகம் நடத்தி அருச்சுனனைத் தீயில் விழாமல் காத்தாய். அன்று இரவே அவனுடன் கயிலை சென்று சிவனிடம் அம்பு கேட்டு வாங்கித் தந்தாய்”

வருணனின் மகன் சதாயு வீசிய கணையை உன் மார்பில் ஏற்று அவனை மரணமடையச் செய்தாய்”

“சங்க நாதம் செய்து பகைவர்களை மருளச் செய்தாய்”

“கண்ணா, நீ உன் சக்கரத்தால் சூரியனை மறைத்து விசயனின் சபதத்தை நிறைவேற்றச் செய்தாய்”

“அசுவத்தாமன் ஏவிய நாரண அத்திரத்தால் நிகழ இருந்த அழிவு அறிந்து பாண்டவரைப் படைக் கருவி களைக் கீழே போடும்படி செய்தாய்.” இவற்றையெல்லாம் கூறினான்.

“உன்னுடைய திருவிளையாடல் இந்த உலக அரசர் அறியமாட்டார்” என்று கூறி அவன் திருவடி மலர்களில் விழுந்து வணங்கினான்.

கண்ணனும் அறச் செல்வனாகிய தருமனை அன்புடன் தழுவிக் கொண்டு “இந்த அமரில் நீங்கள் ஐந்து பேரும் உயிர் இழக்கமாட்டீர்கள்; அஞ்சவேண்டாம்; நான் இருந்து காப்பேன்; தவறேன்” என்று அபயம் அளித்தான். திட்டத் துய்மனைப் பார்த்து “அணி வகுக்க” என்றான். அவ்வாறே திட்டத் துய்மன் படைகளை அணிவருத்தான். அவ்வாறே கன்னனும் அன்று நடக்கப் போகும்போர் குறித்துத் துரியனிடம் கூறினான்

“விசயனுக்குத் தேர்ப்பாகனாகக் கண்ணன் உள்ளான்; அதனால் அவன் உயிர் தப்பி வருகிறான்; கண்ணனுக்கு நிகராகத் தேவர் உலகிலும் யாரையும் கூற முடியாது; சல்லியனே அவனுக்கு ஒப்பு ஆவான்” என்றான் கன்னன். அவனைத் தனக்குத் தேர்ப்பாகன் ஆக்கினால் வெற்றி உறுதி என்றான்.

“ஊர் பேர் தெரியாத என்னைப் பேரரசன் ஆக்கினாய், தேரோட்டி மகனாகிய என்னைப் பார் ஆளும் மகிபன் ஆக்கினாய்; யான் என் உயிரை யாருக்குத் தரப் போகிறேன். செஞ்சோற்றுக் கடன் கழித்து உன் செங் கோலை உனக்கே நிறுத்துவேன்” என்றான்.

துரியனின் வேண்டுகோளை ஏற்றுச் சல்லியன் தேர் ஒட்டச் சம்மதித்தான். எனினும் “நீ விசயனை வெல்வாய் என்பதில் உறுதி இல்லை” என்று தன் மனத்தில் பட்டதை உரைத்தான், கன்னனுக்குக் கோபம் வந்துவிட்டது. நீ வீரர் முன் என்னை இகழ்ந்து பேசாதே; உன்னைத் தேர் ஓட்ட அழைத்தேனே தவிரப் போர் ஓட்டத்தைப் பற்றிப் பேச நான் அழைக்கவில்லை” என்றான்.

உடனே அவன் தேரை விட்டுக் கீழே இறங்கிவிட்டான்.

“எலியின் இரைச்சல் எல்லாம் பூனையைக் கண்டு அடங்கிவிடும்” என்று கூறினான் சல்லியன். ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போருக்கு நின்றனர். துரியன் இடை மறித்துச்சமாதானம் செய்தான். சல்லியன் தேர் ஏறினான்.

வீமனும், நகுலனும், தருமனும் கன்னனை எதிர்த்து அவன் வில்லுக்கு ஆற்றாமல் பின் வாங்கினர். இறுதியில் விசயனும் கன்னனும் நேருக்கு நேர் நின்று எதிர்த்தனர்.

கன்னனும் விசயனும் மாறி மாறிச் சரகூடங்கள் அமைத்தனர். சரகூடத்தில் அகப்பட்ட கன்னன் வலையில் அகப்பட்ட மான் ஆனான். அவனுக்கு எதிரே நின்ற தனஞ்சயனும் தளர்ந்து செயவிழந்து நின்றான்.

கன்னன் விசயனின் கண்களுக்குத் தருமனைப் போலத் தோன்றியதால் தளர்ச்சி அடைந்தான். இதைத் தெரிந்து கொள்ளாமல் தருமன் “பகல் முடிந்தும் பகையை முடிக்க வில்லை. உன் கைவில் இனிமேல் என்ன செய்யப் போகிறது?” என்று அவன் வில்லைக் கடிந்து உரைத்தான்.

“என் அம்பினைக் குறை கூறுபவர் உயிர் முடிக்காமல் விடேன்” என்று வில்லை வளைத்து நாண் பூட்டி விட்டான் விசயன். உடனே கண்ணன் ஒடோடி வந்து தடுத்து “அமைக என்று கூறி அவனைத் தழுவிக்கொண்டு பெரியோர்களை நீ என்று சொன்னாலும் அது கொல்லு தலைக் காட்டிலும் கடுமையான தண்டனை யாகும். நீயும் தரக்குறைவான சொற்களைக் கொண்டு அவனைத் தாக்கலாம்” என்றான்.

அவ்வாறே நாவால் சொல்லத்தகாத சொற்களைக் கொண்டு தரக்குறைவாகச் சில சொற்கள் பேசினான். தருமனும் வாழ்க்கையை வெறுத்துத் துறவுக்கோலம் பூண்டான். கண்ணனும் விசயனும் மன்னிப்புக் கேட்டு அவனைச் சமாதானப்படுத்தினர்.

அதற்குப் பிறகு கன்னனுக்கும் அருச்சுனனுக்கும் கடும் போர் நடந்தது. நாகக் கணையை அருச்சுனனின் நெஞ்சுக்கு நேரே குறி வைத்துக் கன்னன் ஏவினான். கண்ணன் தன் கால் விரலால் தேரினைக் கீழே அழுத்தி அவன் விட்ட அம்பு தலை முடியை இடறுமாறு செய்தான். அந்த நாகம் மறுபடியும் தன்னை ஏவும்படி கன்னனை மன்றாடியது. மறுமுறை விடமுடியாது என்றும், வீரனுக்கு அது அழகல்ல என்றும் கூறி மறுத்து விட்டான். அந்த நாகம் வாழ்க்கையை வெறுத்துச் சுருண்டு உயிர் நீத்தது.

சல்லியனும் இதே கருத்தைக் கூறினான். மார்பைக் குறிவைத்து அம்பு ஏவியிருக்க வேண்டும் என்றும், மறு முறை அரவக் கணையை ஏவுவது தான் அவன் செய்யக் கூடியது என்றும் அறிவுறுத்தினான். கருத்து வேறுபாடு அவர்களைப் பிரித்தது. சல்லியன் தேரை விட்டு இறங்கி விட்டான்.

கன்னன் அந்தத் தேரைத் துக்கி நிறுத்த அரும்பாடு பட்டான். அத்தேரின் இடப் பக்கச் சக்கரம் ஒரு பக்கம் சரிந்துவிட்டது; அந்த நிலையில் அவன் தனியனாக விடப் பட்டான்.

அவன் உயிரைக் காத்து வந்தது அவன் இதுவரை செய்துவந்த புண்ணியம் ஆகும், அதனை விலக்கினால் தான் அவன் உயிரை நீக்கமுடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.

கண்ணன் அருச்சுனனைச் சற்றுப் போரை நிறுத்தச் சொல்லிவிட்டுக் கீழே இறங்கி முதிய அந்தணனாகக் கன்னன் முன் சென்றான்.

“மேருமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறேன்; இல்லாதவர்க்கு நீ வழங்குகின்றாய் என்று கேள்விப்பட் டேன்” என்றான்.

“நன்று” என நகைத்து “தரத்தகு பொருள் நீ நவில்க” என்றான்.

“உன் புண்ணியம் அனைத்தும் தருக” என்று கேட்டான்.

“குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கின்ற என்னிடம் இந்தப் புண்ணியம் தான் எஞ்சி இருக்கிறது; அதையாவது கொடுத்துதவும் நிலையில் இருக்கிறேன் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றான்.

“நீர் வார்த்துத் தருக” என்றான். கண்ணிரைத் தவிர வேறு நீர் காண முடியாத அந்தச் சூழ்நிலையில் அவன் தன் புண்ணிரைத்தான் காணமுடிந்தது; இதயத்தில் அம்பு தைத்து இருந்தது. அதைப் பிடித்து இழுக்கக் குருதி கொப் புளித்ததும் அதனைக் கொண்டு தான் ஈட்டிவைத்த புண் னியம் அனைத்தும் தாரை வார்த்துத் தானமாக ஈந்தான்;

“வேண்டிய வரம் கேள் தருகிறேன்” என்றான் கண்ணன்.

“பிறப்பு என்பது ஒன்று உண்டாயின் இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாத இதயம் நீ அளித்தருள்க” என்றான்.

மனம் இருந்தால் மட்டும் போதுமா? கொடுக்கத் தனமும் இருக்க வேண்டாமா?

“எத்தனை பிறவி எடுத்தாலும் ஈகையும், அதற்கு வேண்டிய பொருட் செல்வமும் அடைந்து இறுதியில் முத் தியும் பெறுவாய்” என்று வரம் ஈந்தான் கண்ணன். திருமால் தன் திவ்விய உருவை அவனுக்குக் காட்சி தந்தான். அவன் தான் கண்ட தெய்வக் காட்சியை வியந்து போற்றினான்.

“நீல மலையும், கார் மேகமும், கடல் நீரும், காயா மலரும் நிகர்க்கும் திருமேனியும், கதை, வாள், சங்கு, நேமி, கோதண்டம் இவை தாங்கிய திருக்கரங்களும் துளசி மாலை அணிந்த மார்பும், திரண்ட தோள்களும், நீல மணிபோன்ற கழுத்தும், சிவந்த இதழும், தாமரை போல் மலர்ந்த முகமும், கதிர்முடியும் இம்மையில் காணப் பெற்றேன்” என்று கூறி அதே நினைவில் தன் உயிரை விட்டான்; கண்ணனின் திரு உருவம் அவன் நினைவுகளில் நிறைந்தது.

கன்னன் அம்புகளை எய்ய முற்பட்டான்; தான் கற்ற வித்தைகள் கை கொடுக்காமல் அவனைக் கைவிட்டன. பரசுராமன் தந்த சாபத்தால் இந்த மறதி ஏற்பட்டுக் களத்தில் போர் செய்வதில் உளம் இன்றி அயர்ந்து நின்று விட்டான்.

“சூரியன் அத்தமனம் ஆகும் முன்பு கன்னனைக் கொல்வாய்” எனக் கண்ணன்கூற அருச்சுனன் அஞ்சரீகம்” என்ற கணையைக் கன்னனின் மார் பில் வீச அது கவிஞர்களின் கூரிய சொல் போலப் பாய்ந்து அவன் உயிரைப் போக்கியது.

அந்திபடிவதற்கு முன் அவன் ஆவி நீங்குதல் உறுதி என்று அசரீரி சொல்லக் குந்தி செயலிழந்து கண்ணிர் சோரக் குழல் சரியக் களத்தை அடைந்தாள். கோ என்று கதறி இரு கைகளையும் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அவன் உடம்பின் மேல் விழுந்து அழுதாள்.

பிறந்த போது உன்னைப் பேணி வளர்க்கும் பேற் றினை இழந்தேன்; பேழை ஒன்றில் உன்னை வைத்து ஆற்றில் விட்டு உன்னை அநாதையாக்கினேன்; ஐவரும் நூற்றுவரும் அடிபணிய நீ அரசாளும் பெற்றியை யான் காணவில்லை” என்று சொல்லிச் சொல்லிக் குந்தி அழுதாள்.

“என் உயிர்க்கு உயிராகிய தோழனாகிய உன்னை இழந்தேன். இனி யாரைக் கொண்டு அரசாள இருக்கின்றேன்” என்று துரியன் கூறி அழுதான். உடன் பிறந்த தம்பியரும் அழுது வருந்தினர்.

கன்னனின் பிறப்பை மறைபொருளாகக் காத்து வைத்த அன்னையின் கொடுரச் செயலைப் பாண்டவர் கண்டித்துப் பேசினர்; “பெண்கள் ரகசியத்தை வைத்து இருக்கக் கூடாது; அவர்கள் வெளியே சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிட வேண்டும்” என்று கடுமொழி கூறினான் தருமன்; அது முதல் பெண்கள் ரகசியத்தைக் காப்பாற்றுவதில்லை; அவர்களால் காப்பாற்ற முடியாது என்ற சொல் வழக்கும் ஏற்பட்டுவிட்டது.