மார்க்சீய அழகியல்/மரபும் மாற்றமும்

விக்கிமூலம் இலிருந்து
மரபும் மாற்றமும்

பண்டைக் காலத்திலிருந்து இன்றுவரை இலக்கியத்தில், விவாதத்திற்குரிய பிரச்சினையாக மரபும் மாற்றமும் இருந்து வருகிறது.

மரபு என்பது கலைகள் தோன்றிய காலத்தில் இருந்து ஆற்றோட்டமாகப் பாய்ந்து வருகிற சிற்சில அம்சங்களின் தொடர்ச்சி. மாற்றம் என்பது வரலாற்று ரீதியான வாழ்க்கை மாற்றங்களுக்கு ஏற்ப அத்தொடர்ச்சியினின்று முரண்பட்டுத் தோன்றுகிற புதுமை.

இவையிரண்டும் இயக்கவியல் ஒருமையாக உள்ளன. உதாரணமாகப் பண்டைய செம்மை மரபில் இருந்து கற்பனாவாதமும் அதிலிருந்து யதார்த்தவாதமும் தோன்றியிருக்கிறது. ஒன்றில் இருந்து மற்றொன்று தோன்றுவது முட்டையினுள் குஞ்சு வளர்வது போலாகும். கரு வளரும்போது, முட்டையினுள் இருக்கும் உணவை உட்கொண்டு, தன் மயமாக்கி வளருகிறது. பழமையைத் தன்மயமாக்கிக் கொண்டு புதுமை வளர்கிறது. புதுமை தனித்தன்மையடைந்து குஞ்சாக மாறுகிறது. ஆனால் குஞ்சினுள் உணவு புதிய ரசாயன மாற்றங்கள் பெற்று இரத்தமாகவும் உறுப்புகளாகவும் மாறியிருக்கிறது. மரபுக்கும் மாற்றத்திற்கும் உள்ள உறவு இத்தகைய இயக்கவியல் மாற்றமேயாகும்.

இது போன்றே பண்டைக் குழுவினரின் கலை மரபு, பின் வரலாற்றுக் காலச் சமுதாயத் தேவைகளுக்கேற்ப மாற்றங்களுக்குள்ளாயிற்று. புதுமை, பழமையினின்றும் தனது வளர்ச்சிக்கேற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொள்ளுகிறது.

ஒரு கலைஞன், தனது காலத்திற்கு முன்பே படைக்கப்பட்ட கலைப் பொருள்களின் நடுவே வாழ்கிறான். அவன் தன் காலத்து மக்களின் வாழ்க்கையை நேரடியாக அறிகிறான். தனது முன்னோர்களின் வாழ்க்கையை, வரலாற்று மூலங்களான தொல் பொருள் இயல், வரலாற்றுச் சமூகவியல், வரலாற்று ஆவணவியல் ஆகிய அறிவியல்களில் இருந்து அறிந்து கொள்ளுகிறான். அதுமட்டுமன்று. தன்னைச் சூழ்ந்துள்ள பண்டைக் காலம் முதல் தற்காலம்வரை மனிதன் படைத்துள்ள கலைப் படைப்புகளையும் அறிந்து கொள்ளுகிறான். அதாவது கலையின் வரலாற்றைக் கற்றுக் கொள்ளுகிறான்.

வாழ்க்கையென்பது மிகவும் சிக்கலான மனித உறவுகள். முரண்பட்ட மனித உறவுகளைக் கலைஞன் சமூக வளர்ச்சியாகக் காண்கிறான்.

கலை வரலாறு என்பது, மனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய இவையிரண்டும் ஒருமையாக மனிதன் மனத்தில் தோற்றுவித்த அகவயப் படிமங்களின் தொகுப்பேயாகும்.

ஒரு தற்காலக் கலைஞன், வாழ்க்கையோடு கொண்டுள்ள தொடர்பானது, வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு அவன் கொண்டுள்ள தொடர்பு மட்டுமல்ல. அவற்றின் படிமப் பிரதிபலிப்புகளான கலைப் பொருள்களோடும், அவற்றின் உட்பொருளான அகவயப் பண்பாட்டோடும் கொண்டுள்ள தொடர்புமாகும்.

எனவே ஒரு கலைஞன் வாழ்க்கையை எப்படிக் கலைவடிவத்தில் பிரதிபலிப்பது என்று சிந்திக்கும்பொழுது, தனக்கு முன் வாழ்ந்த கலைஞர்கள் அதனை எப்படிப் பிரதிபலித்துள்ளார்கள் என்று எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.

ஜெர்மானியக் கவிஞர் கீதே சொல்லுகிறார்:

நாம் நம்மை யாரென்று எண்ணிக்கொண்டாலும், நாம் கூட்டுயிர்கள் என்பதை மறுக்க முடியாது. தமது முன்னோர்களிடம் நாம் கற்றுக் கொள்கிறோம். நம் காலத்தில் வாழ்பவர்களிடமும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

கீழ்வரும் படத்தின் மூலம் இக்கருத்தை விளக்கலாம்.

X கலைஞன்

படம் 1

மேலும் கீதே சொல்லுகிறார்:

எந்த ஒரு கலை மேதையும் தன் அகத்தினுள்ளிருந்தே, கலையைப் படைக்க விரும்பினால் வெற்றி பெறமாட்டான். தானே முதலாவதாக ஒரு கலைப் பொருளைப்
படைக்கவேண்டும் என்று வாழ்நாளெல்லாவற்றையும் வீணாக்குகிற கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனத்தைக் குடைந்து குடைந்து பார்க்கிறார்கள். பின்னரே தாங்களே ஒரிஜனலாக ஒரு படைப்பைப் படைத்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளுகிறார்கள். இது வெற்றுப் பேச்சு. இது நடவாததொன்று. புற உலகு ஒவ்வொரு வினாடியும் தன் நிகழ்ச்சிப்போக்கின் தடங்களைக் கலைஞன் உள்ளத்தில் பதிக்கிறது. அதை அவர்கள் உணர்வதில்லை.

கீதே கவிஞர் மட்டுமல்ல. கலை இலக்கிய வரலாற்றையும் அறிந்தவர். பல கலைத்துறைகளிலும் அனுபவம் பெற்றவர்.

சோவியத் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர் லியோனிட் லியோனோவ். அவர் ’எழுத்து’ என்னும் பொருள் பற்றி எழுத்தாளர்களிடையே உரையாடினார். அவர் கூறினார்.

படைப்பு மேதை என்னும் காற்று எல்லா எழுத்தாளர்கள் மீதும் வீசுகிறது. சரியாக அமைக்கப்பட்ட பாய்கள் உள்ள படகுகள் அக்காற்றில் கரை சேருகின்றன. எல்லா இலக்கியமுமே தனியான கலைஞன், உலக இலக்கியத்தின் முழுமையான மரபு ஆகிய இரண்டின் பரஸ்பரத் தாக்கத் தின் விளைவாகத் தோன்றியதாகும்.

இதனை ஓர் இணைகரத்தின் மூலை விட்டத்திற்கு லியோனிட் லியோனோவ் ஒப்பிடுகிறார்.

1, 2, 3, 4 உலக கலை மரபு; 5 தனிக் கலைஞன்

படம் 2

லியோனோவ், இங்கு கீதேயின் கருத்தை விளக்கிக் கூறுவதாகத் தோன்றுகிறது. தனியான எழுத்தாளன் ஒரு கூட்டமைப்பின் உறுப்பினன். எல்லாக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் தோன்றியுள்ள எழுத்தாளர் பரம்பரையைச் சார்ந்தவன். தற்கால இலக்கியம் முற்காட்டப்பட்ட வரைபடத்தில் காணப்படும் மூலைக்கோடு போல உலக இலக்கிய மரபான இணைகரத்தினுள் இருக்கிறது. தற்கால இலக்கியம் உலக இலக்கியப் பொன்னாரத்தில் ஒரு சிறு கண்ணியாகும். பண்டைய இலக்கியவாதிகளுக்கும் இது பொதுவான கருத்து.

மரபிற்கும் மாற்றத்திற்கும் இடையேயுள்ள தொடர்பை அறிவதற்குத் தடையாக இரண்டு நேர் முரணான கருத்துக்கள் உள்ளன.

ஒன்று கொச்சையான சமூகவியல் கருத்து. இது இலக்கியத்தின் இதயத்தை இரண்டாகப் பிளக்கிறது. ஒரு கலைப் படைப்பின் தத்துவக் கருத்தை, அதன் வெளியீட்டு முறை, உருவ அமைப்பிலிருந்து திரித்து விடுவது (சொல்லாக்கம், தடை, பொருளடக்கம் ஆகிய வெளியீட்டு முறைகளை, அதன் தத்துவார்த்த உள்ளடக்கத்திலிருந்து பிரித்துக் காண்பது).
மற்றொன்று இதற்கு நேர் எதிரிடையான கருத்து. மேற்கூறிய உருவவாதத்திற்கு எதிரிகள், 'உள்ளடக்கத்தை அதன் உருவ வெளிப்பாட்டிலிருந்து பிரிக்க முடியாது' என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.

இதனைப் பெச்சர் என்னும் எழுத்தாளர், 'உருவவாதம் தலைகீழாக நிற்கிறது' என்று வருணித்தார்.

புகழ்பெற்ற 'போரும் அமைதியும்' என்னும் நாவலில், டால்ஸ்டாய் தமது கதை வீரர்களை உருவாக்கும்பொழுது இரு வகையான யதார்த்தங்களைக் கண்டார். ஒன்று நெப்போலியன் காலத்து வரலாற்று யதார்த்தம். மற்றொன்று ஹோமர் காலத்து இலக்கிய யதார்த்தம். முதலாவது சமூகவியல் விதிகளுக்குட்பட்டது. இரண்டாவது அழகியல் விதிகளுக்குட்பட்டது. இவற்றை முறையே முதலாவது உண்மை, இரண்டாவது உண்மை என அழைக்கலாம்.

சில எழுத்தாளர்கள் வாழ்க்கையும் கலையும் எவ்விதத் தொடர்புமில்லாதவை என்றும், கலைப் படிமங்கள்தான் உண்மையானவை என்றும் வாதாடுகிறார்கள்,

தனிக் கலைஞனது உள்ளத்தில் பிரதிபலிக்கப்படுவது வாழ்க்கை உண்மை மட்டுமன்று. கலை வளர்ச்சிப் போக்கில், வரலாற்றுக் காலங்களில் பிற கலைஞர்களின் உள்ளங்களில் பிரதிபலிக்கப்பட்ட படிமங்களின் கலை உண்மைகளும் அவன் உள்ளத்தில் நிழலாடுகின்றன. டால்ஸ்டாய், ஹோமரை அறிந்தபின் போலிக்கலை (imitation) படைக்கவில்லை. தமது படைப்பில் ஹோமரது கலை உண்மையைப் பயன்படுத்திக் கொண்டார். கம்பன், வால்மீகியின் கலைப் படிமங்களைப் பயன்படுத்திக் கொண்டான். ஷேக்ஸ்பியர் அவருக்கு முன் வாழ்ந்த கவிஞர்கள், வரலாற்று ஆசிரியர்களது படிமங்கள், கருத்துக்களைப் பயன்படுத்திக் கொண்டார்.

டால்ஸ்டாய் தமது போரும் அமைதியும் குறித்துக் கூறிய சொற்கள் இப்பிரச்சினையில் தெளிவு காணப்பயன்படுகின்றன:

இக்கதையின் வடிவம் எதுவென்று வரையறுப்பது சிரமமாயிருக்கிறது. ஏனெனில் ரஷ்ய இலக்கியம், மரபிலிருந்து விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. இது நாவல், சிறு கதை, கவிதை ஆகிய வடிவங்களுக்குப் பொதுவானது. ரஷ்யப் படைப்பாளிகள் இலக்கிய உலகில் புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்கள். ஆனால் இவை, இலக்கிய மாலையின் ஒருமையைச் சிதைத்துவிடாமல், அதனை அழகுபடுத்துகிற புதிய மலர்களாகவே திகழ்கின்றன.

மரபும் மாற்றமும் என்ற இலக்கியப் பிரச்சினை, கலை வளர்ச்சியோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இத்தகைய கருத்து இருக்க முடியுமா?’ என்று சில 'நவீனத்துவ வாதிகள்' கேட்கிறார்கள். அவர்கள் அழகியல் பிரச்சினையை சமூகவியல், தத்துவப் பிரச்சினையாகத் தடம்புரட்ட முயலுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இருப்புவாதத் தத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கார்ல் ஜாஸ்பெர்ஸ் என்னும் அறிஞர் வரலாறு பற்றி இவ்வாறு கூறினார்:

உலக வரலாறு சுழற்காற்றில் அகப்பட்ட தூசு, தும்பு போன்றது. குழப்பமான, ஒன்றோடொன்று தொடர்பில்லாத நிகழ்ச்சிகள் கொண்டது. ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொரு நெருக்கடிக்கு அது இயங்கிச் செல்லுகிறது. இடையிடையே சுகமான அனுபவங்கள். புயற் காற்று வேகம் தனியும்போது சில சமயங்களில் சிறு சிறு தீவுகளாகச் சிறிது நேரம் இருக்கிறது. மீண்டும் புயலில் சிக்கிப் பறக்கிறது.

உலக வரலாற்றை, ஒரு பேய் அறைந்து சிதைத்துவிட்ட ஒரு தெருவிற்கு ஒப்பிடலாம்.

உலக வரலாறு குழப்பமான தொடர்பற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு என்றால், ஒழுங்கான இலக்கிய வளர்ச்சின்ன்பதே இருக்க முடியாது.

இது இன்று பல மேற்கத்திய எழுத்தாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து. சிக்கலான உலக நிகழ்ச்சிகளிலும் கலைப் படைப்புகளிலும் சரியான பாதை தெரியாமல் வழி தவறியவர்களின் கருத்து. இவர்கள் தங்களுடைய குருட்டுத் தனத்தையே, தங்களுடைய வல்லமையாகக் காட்டிக்கொள்கிறார்கள். தாங்களே சுய சிந்தனையுடையவர்கள். என்று நினைத்துக் கொண்டு, ஆகாயத்தில் பறந்துகொண்டு, தங்களுக்குக் கீழே நடைபெறும் சமுதாயப் போராட்டங்களைப் (கண்ணில்லாததால்) பார்க்க முடியாதவர்களாயிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இப்போராட்டங்களிலிருந்து ஒதுங்கியிருப்பதில்லை. தங்களுடைய நம்பிக்கைகளை வலுவாகச் சொல்லுவதன் மூலம், முற்போக்குச் சக்திகளின் போராட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்.

மற்றொரு இலக்கியக் கொள்கையினர் நவீனத்துவவாதிகள். மேலை நாடுகளில் இவர்கள் ஏகபோக முதலாளித்துவத்தால் ஊக்க ஊதியங்கள் அளிக்கப்படுகிறார்கள். இத்தாலிய எழுத்தாளர் கைடோ பியோவீன் என்பவர்,

புரூஸ்ட், ஜாய்ஸ், காப்ஃகா ஆகிய திரிமூர்த்திகளின் இலக்கிய யுகத்தில் வருங்கால இலக்கிய வரலாற்றின் அடிப்படைகள் அமைக்கப்பட்டுவிட்டன. அதன் அடித்தளத்தில் வருங்கால இலக்கியம் அமையும்

எனறும் எழுதினார்.

இம்மூவரையும் குறித்து அவர்களது இலக்கியப் படிைப்பு முறையை வானளாவப் புகழ்கிற விகோல்லி என்ற மற்றோர் இத்தாலிய எழுத்தாளர் முரண்பட்டு எழுதினார்:

நாங்கள் இம்மூன்று எழுத்தாளர்கள் மீது அபார மரியாதை கொண்டிருக்கிறோம். அவர்களுடைய படைப்புகள் நவீன காலப் பண்பாட்டிற்கு அடிப்படை அமைத்தன. அவர்களுடைய கண்டுபிடிப்புகள் இன்னும் எங்கள் மீது செல்வாக்குக் கொண்டுள்ளன. ஆயினும் அம்மூன்று எழுத்தாளர்களது ஞானபுத்திரர்களான நாங்கள். தற்கால ஆன்ம மதிப்பீட்டில் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறோம். தாங்கள், தனி மனிதன், சமூகம், நாவல் ஆகிய மூன்றிலும், செயலற்ற சாவுக்கு நெருங்கிய நிலைக்கு வந்துள்ளோம்.
இதுவே தற்கால வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கலையுணர்வில் அறியவும் கலைப் படிமமாக உருவாக்கவும் முடியாத நிலைமையை நவீனத்துவவாதிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது கருத்து போலந்து கம்யூனிஸ்டு எழுத்தாளர்களுடையது. உலக இலக்கியத்தில் இரண்டு கலைப்போக்குகளை அவர்கள் காண்கிறார்கள். ஒன்று ரியலிசப் போக்கு பால்ஸாக், டால்ஸ்டாய், ஷோலகாவ், லியோனோவ் போன்றவர்கள் இப் போக்கின் சார்பாளர்கள். இரண்டு, நவீனத்துவப் போக்கு இதன் சார்பாளர்கள் புரூஸ்ட், ஜாய்ஸ், காப்ஃகா ஆகியோர். இவ்விரு போக்குகளையும் முரண்பட்டு மோதவிடக்கூடாது என்பது இவர்களுடைய எண்ணம்.

போலந்து எழுத்தாளர் மாதுயெவ்ஸ்கி எழுதுகிறார்:

இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் ஷோலக்காவி லிருந்து தாமஸ்மான் வரை, ஜாய்ஸிலிருந்து காப்ஃகாவரை அனைவரும் ஈட்டியிருக்கும் இலக்கியப் படைப்புகள் உலக மனைத்திற்கும் பொதுச் சொத்தாகும்.

இது புதிய கருத்து அன்று. மாதுயெவ்ஸ்கிக்கு முன், நவீனத்துவம் என்ற இலக்கியப் போக்கை ஆராய்ந்த மரியோ அரிகாடா என்ற இத்தாவிய மார்க்சிய அறிஞர், சோஷலிச ரியலிசவாதிகளான பெர்த்தோல்ட் பிரெஷ்ட் (ஜெர்மன் நாடக ஆசிரியர், எழுத்தாளர், மார்க்சிஸ்டு), மாயகாவ்ஸ்கி (சோவியத் புரட்சிக் கவிஞர்) முதலியவர்களையும் நவீனத்துவப் போக்கில் சேர்த்துள்ளார். இதற்கு அவர் காட்டுகின்ற சான்றுகள், அவர்கள் ஒருகாலத்தில் நவீனத்துவப் போக்குகளை மேற்கொண்டிருந்தார்கள் என்பதே.

பிளாக், மாயகாவ்ஸ்கி, பிரெஷ்ட் முதலிய சோஷலிச ரியலிச எழுத்தாளர்கள், தங்கள் இளமைக் காலத்தில் சிற்சில நவீனத்துவக் கருத்துக்களால் கவரப்பட்டிருந்தார்கள் என்று சோவியத் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் குறியீட்டு முறை, வருங்காலத்துவம், ஸ்ர்ரியலிசம், எஃஸ் பிரஷனிசம் என்ற நவீனத்துவக் கொள்கைகளால் அவர்களு டைய இலக்கியப் படைப்புகள் வழிகாட்டப்படவில்லை. நவீனத்துவம் அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடைப்படுத்தியதே அன்றி, அவர்களுடைய படைப்பிற்கு ஊக்கம் அளிக்க வில்லை.

சோஷலிஸ்ட் ரியலிஸ்டுக் கொள்கைதான் அவர்களுடைய இலக்கியப் படைப்புகளுக்குத் தத்துவ ஒளி வீசிற்று. வருங்காலத்துவக் கொள்கை மாயகாவ்ஸ்கி மீது முதன்மையான செல்வாக்குச் செலுத்தியது என்பது உண்மையன்று. உண்மையில் தொழிலாளிகளுக்கேற்ற புது உத்திகளைக் கையாண்டு, கவிதைகளைப் பல்கலைக்கழக மண்டபங்களில் இருந்து தெருச் சந்திகளுக்குக் கொணர்ந்தவர் மாயகாவ்ஸ்கி. பெர்த்தோல்டு பிரெஷ்டு பண்டைக் கதைகளைத் தலைகீழாக மாற்றி, கலை மதிப்பு மாற்றங்களை ஏற்படுத்தியவர். இவருக்கும் சோஷலிச ரியலிஸ்டுப் படைப்பு முறையே தத்துவக் கொள்கையாக இருந்தது. சிறிதுகாலம் நவீனத்துவப் போக்குகளோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதற்காக அவர்களை அவ்வகை எழுத்தாளர்கள் என்று கூறிவிடமுடியாது.

எனவே, நவீனத்துவத்தின் அடிப்படை வரலாற்றுக் கண்ணோட்டமும் உலகக் கண்ணோட்டமும், சோஷலிச ரியலிசத்திற்கு நேர் முரணானவை. அதன் தத்துவப் போக்கு உலகை அறிய உதவுவதற்குப் பதிலாகக் குழப்பத்தையே பரப்புகிறது. உலக வளர்ச்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் (ஒழுங்கான மேன்மேல் வளர்ச்சியான) முரண்பாடுகளின் மோதுதலால் படிப்படியாக ஏற்படுகிறது என்ற கண்ணோட்டம் நவீனத்துவத்திற்குக் கிடையாது. நவீனத்துவம் முதலாளித்துவத்தின் கழிசடைப் போக்குகளில் இருந்து விலகியோட முயன்று வெற்றி பெறாத தத்துவம். வரலாற்றுப் பொருள் முதல்வாதத் தத்துவமே, சமூக இயக்கத்தின் வளர்ச்சியையும் அதன் காரணமாகத் தோன்றுகிற கலை இலக்கியப் போக்குகளின் வளர்ச்சியையும் இணைத்துக்காட்டுகிற ஒரே தத்துவம் ஆகும்.

சோஷலிச ரியலிசக் கொள்கை லெனினுடைய 'பிரதிபலிப்புக் கொள்கை'யிலிருந்து தோன்றியது. இதனை மூன்றாம் பகுதியில் விளக்கியுள்ளோம். ஒவ்வொரு கலைஞனும் புதுமையைப் படைக்கிறான். அதில் தனித்திறமை மிளிர்கிறது. புதிய வாழ்வியல் கூறுகளை (கலை) அவன் படைக்கிறான். இதனை அழகியல் யதார்த்தம் என்று ஹெர்ஸன் அழைக்கிறார். இதற்குக் கலை உலகம் என்று பெலின்ஸ்கி பெயரிட்டுள்ளார். இது தான் கலை உலகின் பிரதிபலிப்புப் படிமம். இது உலக யதார்த்தத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டிருப்பதால் வலிமை யுடையதாயிருக்கிறது. அதன் காரணமாகவே சோஷலிச ரியலிசம், உலக இயக்கத்தின் பொது நியதிகளை உள்ளத்தில் பிரதிபலிக்கத் துணை செய்கிறது.

இது ரியலிச சார்பாளர்களது கொள்கை.

நவீனத்துவவாதிகள் வேறுவிதமான கொள்கையுடையவர்கள். பல்வேறு சிந்தனைப் போக்குடைய இவர்கள் ஷோப்பனேரின் தத்துவ அடிப்படையில் சிந்திக்கிறார்கள்.

மனிதன், தான் பார்க்கிற சூரியனை அறிவதில்லை. அவன் சூரியனைப் பார்க்கிற கண்ணையும் பூமியைத் தொடுகிற கையையுமே அறிய முடியும்.

இதன் பொருள் என்ன?

கலைஞனது மனத்தில் பிரதிபலிக்கப்படுகிற உலகத்தைப் பற்றி அவன் அறிய விரும்புவதில்லை. ஆனால் கலைஞனது உள்ளத்தில் இருக்கிற பிரதிபலிப்பைத்தான் அவன் அறிய முயலுகிறான். அதாவது பொருளை அறிய விரும்பாமல், அதன் பிரதிபிம்பத்தை மட்டுமே அறிய விரும்புகிறான்.
அவர்களுக்குக் கலைப்படைப்பு என்பது புற உலகன அகவயப் படிமம் அன்று. இவ்வகவயப் படிமம்தான் கலைஞன் உள்ளத்தில் உள்ளது; இதனால் அவர்கள் கலைப் படைப்பை, உண்மையான உலகத்தோடு தொடர்புபடுத்துவதில்லை. உண்மையான உலகைப் பற்றிக் கலைஞனது உள்ளத்தில் எழுந்துள்ள அகவயப் படிமத்தோடுதான் அவர்கள் கலைப்படைப்பைத் தொடர்புபடுத்துகிறார்கள்.

'அமெரிக்கா' என்னும் பத்திரிகையில் பென்ஹெல்லர் என்னும் நவீனத்துவவாதி எழுதினார்:

கிறுஸ்தவத் திருச்சபைக்கோ அல்லது சமூகத்திற்கோ ஏவலாளனாகப் பணிபுரிய மறுக்கும் கலைஞன், ஒரு புதிய கலை மரபைத் தோற்றுவிக்கிறான். அக்கலை மரபு உயர்ந்து புதிய சிகரங்களை எட்டியுள்ளது. தன் பார்வையைத் தன்னுள்ளேயே திருப்பித் தன்னைத்தானே பகுத்தாய்வு செய்து தனக்கு ஆர்வமுள்ள பிரச்சினைகளைக் கலைஞன் ஆராய்கிறான். அவற்றின் பயனிட்டு மதிப்பையோ, சமூகத்தின் தேவையையோ கருத்தில் கொள்ளாமல் சுதந்திரமாக மனத்திற்குள் விடைகளைத் தேடுகிறான். இத்தேடலையே நவீன ஓவியத்தின் மகத்தான சாதனைகள் காட்டுகின்றன. மேலும் தனி மனித சுதந்திரம் கலைத் தேடலுக்கு மாபெரும் வாய்ப்பை அளிக்கிறது. அதோடு கலைச் செயல் புரியக் கலைஞனுக்குச் சுதந்திரம் அளிக்கிறது. பொருளடக்கம், நடை, நிறம், கோடு, பரிமாணங்கள் ஆகிய கலை உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு அவனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. யதார்த்தத்தைத் திரிபாகக் காட்ட வேண்டுமானாலும் கலைஞன் அவ்வாறே காட்டலாம். அவன் அவ்வாறே செய்யவேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

நவீனத்துவவாதிகளின் அழகியல் கொள்கையை இம் மேற்கோள் அப்பட்டமாகவே வெளியிடுகிறது.

கலை சமூகப் பணி புரியவேண்டாம்.

கலைஞனுக்கு எல்லையற்ற அகவயச் சுதந்திரம் உண்டு.

அழகியல் சுதந்திரம் ஒர் அராஜக நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

யதார்த்தத்தைத் திரிபுபடுத்தும் உரிமையை அவன் பயன் படுத்தவேண்டும்.

இந்த அழகியல் சாசனம் கலைத்துறையில் முழுக் குழப்பத்தை விளைவிக்கிறது. மரபு என்பதையே துடைத்தெறிகிறது. வாழ்க்கையென்னும் அடிப்படையோடு தொடர்பில்லாத பல மாடிக் கட்டிடமாக இருக்கிறது. என்றைக்காவது பொலபொலவென்று உதிர்ந்துவிடும்.

நவீனத்துவம், அதன் இலக்கியத் தந்தையர்களான திரி மூர்த்திகளிடமிருந்து மட்டும் பிறந்ததன்று. எந்தத் தத்துவத்திலிருந்தும் நாங்கள் சுதந்திரமானவர்கள் என்று கூறிக் கொள்ளும் நவீனத்துவவாதிகள், சில தத்துவக் குருமார்களைப் பின்பற்றுகிறார்கள். மிகப் பிற்போக்கான தத்துவக் கண்ணோட்டமுடைய ஷோப்பனேர், நீட்ஷே, கெர்க்கே காட் ஆகியோரது தத்துவங்களின் செல்வாக்குக்குட்பட்டு இவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள். இலக்கியப் படைப்பு சர்வ சுதந்திரமானது என்று வெளிப்படையாகக் கூறும் இவர்கள், மனித நேசமற்ற முதலாளித்துவத் தத்துவங்களைப் பின்பற்றுகிறார்கள்.

சோஷலிஸ்டு ரியலிசம் வரலாற்றில் தோன்றியுள்ள சிறந்த கலை மரபுகளைத் தன்வயப்படுத்தி அதன் போஷணையில் வளர்ந்து மாறுகிறது என்று பொதுவாகச் சொல்லுகிறோம். இதைச் சிறிது குறிப்பிட்டு, எவ்வகையான மரபுகளைச் சோஷலிஸ்டு ரியலிசம் கிரகித்துக் கொண்டு வளர்ச்சியடைகிறது என்று காண்போம். கலை உலகில் மூன்று வகையான கலை மரபுகள் உள்ளன.

1 உலக இலக்கிய மரபு
2 தேசிய மரபு

3 சோஷலிஸ்டு ரியலிச மரபு.

உலக இலக்கிய மரபு

மார்க்சீயம் எல்லாத் துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப் பாதையில், மார்க்சீயம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது. எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து மறைந்த அறிவுக் கூர்மையுடைய மூளைகள் எழுப்பியுள்ள வினாக்களுக் கெல்லாம் விடை கூறுவது மார்க்சீயம்

என்று லெனின் எழுதினார்.

தமிழ்நாட்டின் மாபெரும் சோஷலிஸ்டு ரியலிசவாதியான ப. ஜீவானந்தம் லெனினுடைய இவ்வாசகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். சங்க இலக்கியங்களில் தொடங்கி திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, ஆழ்வார் நாயன்மார் பக்திப் பாடல்கள், கம்பராமாயணம், சிறு பிரபந்தங்கள், பள்ளுப்பாடல் போன்ற நாட்டுப் பாடல் சார்பான இலக்கியங்கள், பாரதி, பாரதிதாசன் வரை தமிழனுடைய இலக்கியப் பரம்பரையை அவர் நன்றாக அறிந்திருந்தார். அவர் மார்க்சின் உண்மையான மாணவர்.

மார்க்சும் எங்கல்சும் தங்களுக்குள் எழுதிக் கொண்ட கடிதங்களிலும் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களிலும் பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதங்களிலும் எத்தனையோ இலக்கியப் படைப்பாளிகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட அவை தொகுக்கப்பட்டு, பண்டைக் காலம், இடைக் காலம், மறுமலர்ச்சிக் காலம், நவீன காலம் என்று பிரிக்கப்பட்டு, மார்க்சீய நூல்களை வெளியிடும் சோவியத் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்கள் காலம்வரை வெளிவந்த எந்தத் தரமான இலக்கியப் படைப்பும் அவர்கள் கண்களில் இருந்து தப்பியதில்லை. கிரேக்க ராப்சடிஸ்டுகள், (தமிழ் இலக்கியத்தில் 'பாணர்' போன்ற) நாடோடிப் பாடகர்களின் விறுவிறுப்பான காதல் பாடல்கள், கிரேக்கத்தின் சோக நாடகப் படைப்பாளிகள் முதல் இடைக்காலத்து தாந்தே, ஷில்லர், ஷேக்ஸ்பியர், தற்காலத்து பைரன், ஷெல்லி, கீட்ஸ்வரை எல்லாக் கவிஞர்களையும் அவர்கள் விமர்சனத்தோடு ரசித்திருக்கிறார்கள். ஒரு நாடகம் நன்றாக இருந்தால் அதனைப் புகழ்ந்து, அரங்கில் நடிக்க ஏற்பாடு செய்யுமாறு நாடக ஆசிரியருக்கே எங்கல்ஸ் எழுதினார்.

இந்திய இலக்கியம் மார்க்சின் காலத்தில் ஐரோப்பிய மொழிகளில் அறிமுகமாகவில்லை. மாக்ஸ் முல்லர் மொழி பெயர்த்ததன் பின்னரே சம்ஸ்கிருத நூல்களின் பொருளடக்கம் ஐரோப்பாவில் பரவிற்று. தமிழ் இலக்கியம் பற்றி மார்க்சும் எங்கல்சும் அறிந்திருக்க முடியாது. ஐரோப்பிய மொழிகள் எதிலும், சிலப்பதிகாரமோ, திருக்குறளோ, கம்பராமாயணமோ மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் நிச்சயம் மார்க்ஸ் அல்லது எங்கல்ஸ் அது பற்றி ஒரு மார்க்சீய விமர்சனம் எழுதியிருப்பர்.

ஹோமர். தாந்தே, வில்லர் போன்ற காப்பியத் கவிஞர்கள் தம் காலத்தில் வாழ்ந்த மக்களது புறவாழ்க்கையையும் அக வாழ்க்கையையும் கலைப் படிமங்களாகப் படைத்தார்கள், வாழ்க்கையியக்கத்தை, தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களாக வருணித்தார்கள். தெய்வங்கள் என்ற மனித சக்திக்கு மீறிய இயற்கைக் கூறுகளை எதிர்த்துப் போராடுகிற மனிதனைக் குறியீட்டு முறையில் கலைப் படிமம் ஆக்கினார்கள்.

நமது தத்துவ முதல்வர்களான மார்க்சும் எங்கல்சும் அடிமைச் சமுதாயம் முதல், முதலாளித்துவச் சமுதாயம் வரை மனித குலத்திற்கு அழகுச் செல்வங்களைத் தந்த இலக்கியப் படைப்பாளிகளைப் போற்றிப் பேசியுள்ளார்கள். கவிஞர்களுடைய தத்துவ வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிற அதே சமயம் அவர்கள் காலத்தில் முற்போக்கான தத்துவம் தோன்றுவதற்கு முன்தேவையான புதிய வர்க்கம் சமுதாய அரங்கில் தோன்றவில்லை என்பதையும் மனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர்கள் நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பைரனையும் ஷெல்லியையும் ஒப்பிட்டு எழுதும்போது மார்க்ஸ் எழுதினார்:

பைரன் தம் காலத்து நிலப் பிரபுத்துவப் பண்பாட்டுக் கூறுகளை வன்மையாக எதிர்த்தார். ஆனால் அவர் கற்பனாவாதியாக இருந்ததால் அவர் கவிதைகளில் பிற்போக்குத் தன்மை வளர்ச்சியடையுமுன் இறந்து போய்விட்டார். ஷெல்லி முற்றும் புரட்சிவாதியாகவும் புரட்சிக் கற்பனாவாதியாகவும் இருந்ததால் முதல் சோஷலிஸ்டுக் கவிஞனாக உருவாகியிருக்கக்கூடும். அவருடைய முழுமையான முற்போக்கு உருவம் வெளிப்படும் முன்னால் அவர் இறந்து போய்விட்டார்.

ஷெல்லியின் விடுதலை ஆர்வம், அடிமைப்பட்ட மக்களோடு கொண்டிருந்த சார்பு உறவு, விவசாயிகளது போராட்டங்களுக்கு அளித்த ஆதரவு ஆகிய இவையனைத்தையும் கற்பனைக் குறியீட்டு முறையிலும் நேரடியான அறைகூவல்கள் மூலமும் வெளியிட்ட காரணத்தினால்தான் தமிழ்நாட்டின் புரட்சிக் கவிஞர் பாரதி அவரைப் போற்றினார்,

இவை அனைத்தையும் ஜீவா அறிந்து உலக இலக்கிய மரபின் முற்போக்கான கூறுகளைக் கிரகித்துக் கொண்டார். ஒவ்வொரு காப்பியத்திலும், வரலாற்றுக் காலம், சமூக அமைப்பின் வர்க்க அமைப்புகள், அவற்றுள் செயல்படும் வர்க்கங்கள், அவ்வர்க்கங்களின் பிரதிநிதிகளையும் அவர்களின் தன்மைகளையும் பிரதிபலிக்கிற கலைப் படிமங்கள் ஆகியவற்றையெல்லாம் அவர் நுணுகி ஆராய்ந்திருந்தார். தாம் சோஷலிச ரியலிசத்தின் சார்பாளராயிருந்தும், எல்லா வகையான இலக்கியப் போக்குகளின் தன்மைகளையும் உணர்ந்திருந்தார்.

1919இல் 'உலக இலக்கியம்' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட வேண்டிய நூல்களுக்கு ஒரு பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை லெனின், மார்க்சிம் கார்க்கிக்கு அளித்தார். சோவியத் நாட்டுக்குச் சோதனை மிக்க காலம் அது. புதிய அரசு பதவியேற்று 2 ஆண்டுகள்கூட முடியவில்லை. பிற்போக்குச் சக்திகளின் வலிமை முற்றிலும் அழிக்கப்படவில்லை. முதலாளித்துவ இலக்கியப் படைப்பாளிகளும் நடுத்தர வர்க்க எழுத்தாளர்களும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.

அச்சமயம் வெளியிட வேண்டிய நூல்களின் பட்டியலைக் கார்க்கி தயாரித்தார். அப்போது, மார்க்ஸ் - எங்கல்சின் உலக இலக்கிய மரபு பற்றிய கொள்கையைப் பின்பற்றி, கார்க்கி, பண்டைக் காலம், இடைக் காலம், மறுமலர்ச்சிக் காலம், அறிவு வளர்ச்சிக் காலம், 19-20 ஆம் நூற்றாண்டு இலக்கியம் ஆகிய வரலாற்றுக் காலங்களில் வெளியான சிறந்த படைப்புகளைச் சோவியத் மக்களுக்கு அறிமுகப்படுத்த, வெளியிட வேண்டிய நூல்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தார். இத்திட்டம் குறித்து கார்க்கி எழுதினார்:

இந்நூல்கள் அனைத்தும் சேர்ந்து வரலாற்றுக் கால முழுவதிலும் படைக்கப்பட்ட இலக்கியச் செல்வங்களின் முழுமையான தொகுப்பு ஆகும். இந்நூல்கள், ஒவ்வொரு வகையான இலக்கியப் போக்கின் தோற்றுவாய், வளர்ச்சி, தேய்வு, அழிவு ஆகிய கட்டங்களையும் அவற்றிற்குரிய காரணங்களையும் அறிந்து கொள்ள வாசகனுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும். கவிதை, உரைநடை ஆகிய இரு உருவங்களின் படிப்படியான வளர்ச்சிக்குப் பல நாடுகளில் படைக்கப்பட்ட அவ்வந்நாட்டு இலக்கியங்கள் எவ்வாறு பங்காற்றின, உலக இலக்கியங்களின் மொத்தமான மரபுகள் என்ன, வால்டேரிலிருந்து அனடோல் பிரான்ஸ்வரை, ரிக்கர்ட் ஸ்னிலிருந்து ஹெச். ஜி. வெல்ஸ்வரை, கீதேரிலிருந்து ஹாப்ட்மன் வரை இலக்கிய ஆறு எவ்வாறு வளைந்து வளைந்து சென்று மக்கள் மனம் என்னும் பண்பாட்டு நிலத்தை வளம்பெறச் செய்திருக்கிறதென்று இத்திட்டத்தில் வெளியிடப்படும் நூல்கள் தெளிவாக்கும்.

சோஷலிச ரியலிசச் சார்புவாதிகள் உலக இலக்கிய மரபின் மீது கொண்டுள்ள கண்ணோட்டம் இதுதான்.

மார்க்ஸ்-எங்கல்சின் உலக இலக்கிய ஆய்வுகளையும் கார்க்கியின் மார்க்சீயக் கொள்கைகளை அடியொற்றிய வெளியீட்டுத் திட்டத்தையும் கற்றுக்கொண்டுதான் ஜீவாவின்.உலக இலக்கியக் கண்ணோட்டம் உருவாயிற்று.

தேசிய மரபு

இனி சோஷலிஸ்டு ரியலிசத்தின் இரண்டாவது கருத்தமைப்புக்கு வருவோம். தேசிய மரபு என்றால் என்ன? எர்மலியேவ் என்ற அமெரிக்க எழுத்தாளர், சோஷலிஸ்டு ரியலிசம் ஒரு கலைப்படைப்பு முறை அல்ல என்றும் ஸ்டாலினால் கட்டளையிடப்பட்டுப் பரப்பப்படும் பிரச்சாரம்தான் என்றும் எழுதினார். பிற நாட்டுக் கலைகளின்மீது சோவியத் நாட்டினர் ஆதிக்கம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கோட்பாடுகள்தாம் சோஷலிச ரியலிசம் என்று அவரும் அவரைப் போன்ற எழுத்தாளர்களும் கூறுகிறார்கள்.

உலக எழுத்தாளர்கள் அனைவர் மீதும் கட்டளை போட்டு நிறைவேற்றக் கூடிய திட்டம் சோஷலிஸ்டு ரியலிசமாம்! உலகம் முழுவதும், அடிமைப்பட்டு உழலும் உழைக்கும் மக்களுக்காகச் சமூகத்தை ஆய்வு செய்து, அதில் தனி மனிதனது ஸ்தானத்தை அறிந்து, அவனை விடுவிக்க இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள், ஸ்டாலின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்களாம். தியோடோர் டிரீஸர், அப்டன் சிங்க்ளேர், பெர் தோல்டு பிரெஷ்ட், லூயி ஆரகான், பாப்லா நெருடா, பிரேம் சந்த், ரகுநாதன், செல்வராஜ், பொன்னீலன் முதலிய நூற்றுக் கணக்கான சோஷலிச ரியலிச எழுத்தாளர்கள் அனைவரும் சோவியத் கட்டளையை எதிர்நோக்கி எழுதுகிறார்களாம்.

பிரேம்சந்த் இந்தியக் கதைப் பொருள்களைத்தான் தமது சிறு கதைகளில் கையாளுகிறார். ஏழை எளிய ஆசிரியரின் வாழ்க்கை, அவருக்கு இந்தியச் சமூகத்தில் இருக்கும் மதிப்பு, முதலாளித்துவச் சமூகத்தில் கல்விக்கு இருக்கும் மதிப்பு, சமூக வாழ்க்கையில் கல்விப் பிரச்சினை ஆகியன குறித்து எழுதுகிறார். இந்திய ஆசிரியர், இந்திய விவசாயி, இந்தியத் தொழிலாளி, இந்தியக் கடைக் குமாஸ்தா இவர்களுடைய வாழ்க்கையைச் சமூக உயர் தட்டில் வாழ்வோர், சமூக ஆதிக்கத்தைக் கையாண்டு அடிமைப்படுத்துவதையும், அதை அவர்கள் உணர்வதற்கான புதிய தன்னுணர்வும் சமூக உணர்வும் எழுவதையும் அவர் சித்திரிக்கிறார். இதில் அவர் சோஷலிச ரியலிசக் கொள்கையால் தத்துவத் தாக்கம் பெறுகிறார். நவீனத்துவ வாதிகள் ஷோப்பனேர், நீட்ஷே, காப்ஃகா, பால்சார்த்ரே ஆகிய முதலாளித்துவ ஆதரவுத் தத்துவ ஞானிகளின் செல்வாக்குக்குட்பட்டு இலக்கியம் படைத்தால் அது. சுதந்திரமான இலக்கியமாம்.

மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோர்களது உலகக் கண்ணோட்டத்தின் செல்வாக்கிலும் மார்க்சிம் கார்க்கியின் சோஷலிஸ்டு ரியலிசப் படைப்பு முறையின் தாக்கத்திலும் இலக்கியம் படைத்தால் அது ஸ்டாலின் கட்டளையின்படி படைப்பதாம்.

இந்திய நாட்டில் முற்போக்கு இலக்கியவாதிகளின் அமைப்பு உள்ளது. இதில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். பல தத்துவங்களின் சார்பாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் சமூகத்தையும் சமூகத்தில் மனித உறவுகளையும் ஆய்ந்து, சமூக நியதிகளின்படியே சமூகத்தைச் சோஷலிஸ்டு உலகமாக மாற்றவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர்கள்.

குறிக்கோளற்ற, சுதந்திரமான இலக்கியம் படைப்பதும், ஆனால் முதலாளித்துவ அமைப்பை மறைமுகமாகப் பாதுகாப்பதற்கு உதவியாக அதன் நிலையான தன்மை பற்றிய மாயைகளை எழுதுவதும், சமூக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி என்ற கருத்துக்களைத் தாக்குவதும், இவர்கள் யாருக்குப் பணி புரிகிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. நவீனத்துவவாதிகள், சமூகப் போராட்டத்தில் சுதந்திரமாக நிற்பதாக முரசு கொட்டிக் கொண்டு மக்களை நசுக்குகிற, அடிமைப்படுத்துகிற சக்திகள் முதலாளித்துவமும் புதிய கலோனியலிசமும் என்று அறியாமல், அதை எதிர்த்துப் போராடுகிற சக்திகளோடு சேர்ந்து நின்று தங்கள் இலக்கியங்களை அவர்கள் விடுதலைக்கு அர்ப்பணிக்காமல் இருப்பதே அவர்கள் சார்புத் தன்மையைக் காட்டிவிடுகிறது.

பாரதப் போரில் பீஷ்மர், துரியோதனனது செயல்களைச் சொல்லால் எதிர்த்துக் கொண்டே நடைமுறையில் அவனுடைய கட்சியில் போராடுகிறார். கும்பகருணனும் இந்திரசித்தும், சீதையை இராவணன் சிறையெடுத்தது தவறென்றும், இராமனிடம் அவளை ஒப்படைத்துவிடுவதே இலங்கையை அழியாமல் காப்பாற்றுகிற வழியென்றும் வெளிப்படையாக இராவணனிடமே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் 'வீரம்', 'செஞ்சோற்றுக் கடன்' என்ற வீரயுகக் கருத்துக்களின் செல்வாக்கால் இராவணனுக்காகப் போராடி மாய்கிறார்கள்.

விபீஷணன் தான், இராவணனது செய்கை அதருமம் என்று கருதி அவனிடமே அதனைக் கூறி, அவனுடைய பிடிவாதத்தைக் கண்டு, தனது 'தருமக் கருத்தை'ப் பின்பற்றவும் இலங்கையைக் காப்பாற்றவும், தருமத்தோடு போய்ச் சேர்ந்து விடுகிறான். வீரயுகச் சமுதாயக் கருத்துக்களின்படி இவன் துரோகி. ஆனால் வீரயுகக் கருத்துக்களில் இருந்து, 'வலிமையே உரிமையளிக்கிறது' என்ற கோட்பாட்டை எதிர்த்த, சமூக ஆதிக்க எதிர்ப்பு வீரன் விபீஷணன்.

கிருஷ்ணனது நடுநிலைமையை ஒத்தது, நவீனத்துவவாதிகளின் நடுநிலைமை. கிருஷ்ணன் ஆயுதம் தாங்கவில்லை. ஆனால் நெருக்கடி நிலைமைகளில் பாண்டவர்கள் பக்கமே சார்பு கொண்டுள்ளான்.

ஒவ்வொரு நாட்டிலும் வரலாற்று நிலைமைகள், சமூக வர்க்கங்களின் வளர்ச்சியில் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் வளர்ச்சி எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. எந்த வளர்ச்சிக் கட்டத்தில், எந்த வர்க்க உறவு நிலைகளில் ஒரு நாடு இருக்கிறதோ அதற்குத் தக்க இலக்கியம் தோன்றும். தேசிய இலக்கியம் சோசலிச ரியலிசக் கொள்கைக்கு முரண்பட்டதன்று.

நீக்ரோவ எழுத்தாளர்கள் ஆப்பிரிக்க நீக்ரோக்கள் சமூக நிலையையும் ஒதுக்கல் கொள்கையையும் எதிர்க்கிறார்கள், சமூக வளர்ச்சியில் பல படிகளைத் தாண்டி, நீக்ரோவ சமூகம் முன்னேற வழிகாட்டுகிறார்கள். டிபாய் என்ற அமெரிக்க நீக்ரோவ எழுத்தாளர், நீக்ரோவ நாகரிக வளர்ச்சியை ஆராய்ந்து, அதன் வரலாற்றை எழுதி, நீக்ரோவர்கள் முன்னேறுவதற்கான வழி, உலகப் பாட்டாளி மக்களின் விடுதலை இயக்கத்தில் நீக்ரோவ அடிமை எதிர்ப்புப் போராட்டத்தை இணைப்பதும் சோஷலிசக் குறிக்கோள்களுக்காகப் போராடுவதுமே என்று எழுதினார். ஹோவார்ட் ஃபாஸ்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர், அமெரிக்காவில் அமெரிக்க நீக்ரோவர்கள் விடுதலைப் போராட்டம் பற்றி இலக்கியம் படைத்தார். அமெரிக்கா, சிவப்பு இந்தியர்களை ஒதுக்குப் புறங்களுக்கு விரட்டிய கொடுஞ் செயல்களை வருணித்துக் 'கடைசி எல்லை' என்ற நாவலையும் அவர் படைத்தார். தாழ்ந்த நாகரிகங்களை அழித்து நாசம் செய்கிற அமெரிக்க முதலாளித்துவத்தை அவர் தயக்கமின்றிக் கண்டித்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தோடு தொடர்பு கொண்ட நாவல்கள் பலவற்றைச் சமூக உணர்வோடு எழுதிய இந்திய எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். தெய்வ பக்தியைத் தேசபக்தியாக உயர்த்திய பெருமை பாரதி, தாகூர் ஆகிய கவிஞர்களுக்கு உண்டு. விடுதலையின் பொருளை மக்களுக்குத் தெளிவாக்கியவர் பாரதி. தேச பக்தியோடு, சமூக உணர்வையும் இணைத்தவர் பாரதி. தமிழிலக்கியத்தில், இந்திய முதலாளித்துவம் அரசியல் விடுதலை பெற்று ஆளும் வர்க்கமாக மாறுவதற்கு முன்னரே, அவர்களது சார்பில் நின்று இலக்கியம் படைத்த எழுத்தானர்கள் இன்று நவீனத்துவவாதிகளாகவும் பாலுணர்வு எழுத்தாளர்களாகவும் குழப்பவாதிகளாகவும் காட்சி தருகிறார்கள்.

ஆனால் மனச்சாட்சியுடைய, சமூக உணர்வுடைய எழுத்தாளர்கள் ஆளும் வர்க்கத்தால் சுரண்டப்படுகிற, ஏமாற்றப்படுகிற உழைக்கும் வர்க்கத்தின் சார்பு எழுத்தாளர்களாகத் திகழ்கிறார்கள்.

இந்தப் போரணிகள் தெளிவாகத் தெரியாவிட்டாலும், கருத்துக் குழப்பங்கள் கலைஞர்களிடம் இருந்துவந்தபோதிலும் அரசியல் சமூக நிகழ்ச்சிகள், முதலாளித்துவச் சுரண்டல் கொள்கையைத் தெளிவாக்குகிறபோது, எழுத்தாளர்கள் தங்கள் போரணிகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள், பிரசுர பலத்தாலும் பத்திரிகை வலிமையாலும் முதலாளித்துவக் கருத்துக் குழப்பத்தில் சிக்கிக்கொண்ட பல கலைஞர்கள், இன்று வளர்ச்சி பெற்றுவரும் சோஷலிச ரியலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் தளிர்நடை போட்டுக் குறிக்கோளை அடைய முயலும்போது, சோஷலிச ரியலிசவாதிகள் என்று தமக்குப் பெயர் சூட்டிக்கொண்ட அவசரவாதிகள், அவர்களைச் சாட்டையால் அடித்துக் கீழே தள்ளிவிட்டு, மீண்டும் முதலாளித்துவச் சார்பு எழுத்தாளர்களாக்கிவிடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். முற்போக்கு அணிக்கு இவர்கள் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள்.

சோஷலிஸ்டு ரியலிச மரபு

மூன்றாவது கருத்தமைப்பு சோஷலிஸ்டு ரியலிச மரபாகும். சோவியத் இலக்கியத்தின் சோஷலிஸ்டு ரியலிச மரபும் முதலாளித்துவ நாடுகளில் வளருகின்ற சோஷலிஸ்டு ரியலிச மரபும் மாறுபடுகின்றன. ஆனால், இவை இரண்டும் இணைந்தே வளருகின்றன.

சோவியத் இலக்கிய வளர்ச்சிக்கு முன், ரியலிச இலக்கியம் (டால்ஸ்டாய், டாஸ்டாவெஸ்கி, புஷ்கின் போன்றவர்களால்) உலகிலேயே மிகப்பெரும் வளர்ச்சி பெற்றிருந்ததாக இருந்தது. ரஷ்ய எழுத்தாளர்கள் நாவல், சிறுகதை ஆகிய துறைகளில் உலகப் புகழ் பெற்றிருந்தார்கள். இவ்விலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் சோஷலிஸ்டு ரியலிச இலக்கியம் தோன்றியது. இப்புதிய இலக்கியமரபின் தந்தையாக மார்க்சிம் கார்க்கி விளங்கினார். அவர் புரட்சிக்குப் பின்னர் இலக்கியம் படைப்பதை நிறுத்திவிட்டு எழுத்தாளர் சங்கம் மூலம் புதிய சோஷலிசப் படைப்பாளர்களைப் பயிற்றுவிப்பதில் ஈடுபட்டார்,

புரட்சிக் காலத்தில் ரஷ்யாவில் பல தேசிய இன மொழிகளுக்கு எழுத்துருவம் இல்லாதிருந்தது. சோவியத் மொழி இயலார் அவற்றுக்கு எழுத்துருவம் அமைத்துக் கொடுத்தனர். வாய்மொழி இலக்கியம், எழுத்துருவம் பெற்றது. கல்வி பரவியதால், இலக்கியப் படைப்புக்களைப் படிப்பவர்கள் அதிகரித்தனர். பல மொழிகளில் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டது. ஏற்கெனவே வளர்ச்சி பெற்றிருந்த ரஷ்ய இலக்கியம் பிற தேசிய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்குக் கை கொடுத்து உதவியது.

சோவியத் ரஷ்யாவின் இலக்கியத்திற்கு வழிகாட்டிய அரசியல் கொள்கைகளின் தொடக்கநிலை டால்ஸ்டாய், செர்னிஷெவ்ஸ்கி, பெலின்ஸ்கி ஆகிய சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது.

டால்ஸ்டாயின் 'கலையைப்பற்றி' என்ற நூல், ரியலிசப் படைப்பின் அழகியல் தத்துவ அடிப்படைகளை அமைத்தது. அதன் கொள்கைகளில் மிகப்பல இன்று சோஷலிஸ்டு ரியலிச எழுத்தாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவருடைய தத்துவக் கருத்துக்கள் பலவற்றில் சோவியத் எழுத்தாளர்கள் மாறுபட்டிருக்கிறார்கள். ஆனால், கலைப் படைப்பு முறை, அழகியல் நோக்கு ஆகியவற்றில் டால்ஸ்டாயின் கொள்கைகள் சோவியத் இலக்கியத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன.

அழகியல் சிந்தனையிலும் கலைப் படைப்பாளி என்ற தன்மையிலும், டால்ஸ்டாய் கலை இலக்கியங்களின் இதயத் துடிப்பையே அறிந்திருந்தார். அவருடைய கண்டுபிடிப்புகள் ரியலிச இலக்கியத்திற்கும் சோஷலிஸ்டு ரியலிச இலக்கியத்திற்கும் பொதுச் சொத்தாகியுள்ளன.

கலைஞன் என்ன சொல்லுகிறான், எப்படிச் சொல்லுகிறான், எவ்வளவு உணர்வுபூர்வமாகச் சொல்லுகிறான். என்பதைப் பொறுத்து ஒரு கலைப் படைப்பு நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கிறது

என்று டால்ஸ்டாய் 'கலையைப்பற்றி' என்ற நூலில் எழுதினார். மேலும் அவர் அந்நூலிலேயே கூறுகிறார்:

தனக்கு முன் யாரும் கண்டிராத, அறிந்திராத, உணர்ந்திராத ஒன்றைக் கண்டும், அறிந்தும், உணர்ந்தும் ஒரு கலைஞன் சொல்லுவானானால், அதுவே உண்மையான கலையாகும்.

இச்சொற்றொடரை நவீனத்துவவாதிகள் சொல்லுக்குச் சொல் தலையாட்டி வரவேற்பார்கள். 'டால்ஸ்டாய் நாங்கள் சொல்லுவதைத்தானே சொல்லுகிறார் என்று குதூகலமாகக் கூறுவார்கள். 'புதுமை, அகவய உண்மை, அகவய உண்மையின் வெளிப்பாடு; இவைதானே தாங்கள் சொல்லுவதும்' என்று வாதிப்பார்கள்,

ஆனால் டால்ஸ்டாய், நவீனத்துவவாதிகளின் கொள்கைகளுக்கு நேர் முரணாகப் பின்னரும் கூறுகிறார்:

உலகம் முழுவதற்கும் தேவையான, பொருத்தமான, மகிழ்ச்சியூட்டக்கூடிய படைப்பே கலை. இத்தன்மையான படைப்பைச் செய்யக் கலைஞன் உலக மக்கள் முழுமைக்கும் பொறுப்புடையவனாகத் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னுள், தான் சுருங்கிக் கொள்ளாமல் மனித இனத்தின் வாழ்க்கையில் தனது வாழ்க்கையை இணைத்துக் கொள்ளவேண்டும்.

இங்கு டால்ஸ்டாய், கலைஞன் கண்டுபிடித்துச் சொல்லுகிற அகவய உண்மைக்கும் சமூக வளர்ச்சிக்கும் தொடர்பைக் காண்கிறார், டால்ஸ்டாய் கலையை முற்றிலும் அகவயமான படைப்பு எனக் கருதவில்லை. ஆனால் படைப்பாக்கமான அசு வயச் செயல்பாட்டை அவர் மறுக்கவில்லை. கலைப்படைப்பில் புதுமையில்லையெனில் அது கலையே இல்லை. ஆனால் இப் புதுமையை மனித வாழ்க்கையில் பங்குகொண்டால்தான் உணரவும் அறியவும் இயலும் என்றுதான் டால்ஸ்டாய் கூறுகிறார்.

டால்ஸ்டாய் புதிய சோதனைகளையும் கலைப் படைப்பு முறைகளாக அவை வளர்க்கப்படுவதையும் ஆதரித்தார். படைப்புப் போலிகளை அவர் வெறுத்தார்.

இலக்கியத்தின் உள்ளடக்கப் பொருள் மனித வாழ்க்கை சிலர் இதனை இலக்கியத்தின் இலக்கியமாக மாற்றுவதற்கு முயன்று வருகிறார்கள். இது போலவே கவிதையின் கவிதை, இசையின் இசை, ஓவியத்தின் ஓவியம் என்று பிறர் மனத்தில் தோன்றிய வாழ்க்கையின் நிழல்களைக் கலைப் பொருள்களாக்கிப் படைக்கிற போலிக் கலைஞர்கள் பெருகிவிட்டார்கள்

என்று டால்ஸ்டாய் தெளிவாகக் கூறுகிறார்.

 இவர்களுக்கெல்லாம் கலைப்பொருளின் அடிப்படை மனித வாழ்க்கையல்ல; பிறர் படைத்த கலைகள், கவிதைகள், இலக்கியங்கள்தான்.

போலிக் கலையைக் கண்டனம் செய்யும் டால்ஸ்டாய், கலையில் புதுமையைப் (originality) பெரிதும் வலியுறுத்தியுள்ளார்.

கலையின் பிரதிபலிப்புக்கு அடிப்படை வாழ்க்கையே என்பது டால்ஸ்டாயின் மூலமந்திரமாகும்.

இன்றைய சோவியத் நிலைமைகளில், சோவியத் இலக்கிய வாதிகள் இலக்கியம் படைக்கிறார்கள். புதிய புறவய உண்மைகளையும், அவ்வுண்மைகள் தோற்றுவிக்கிற புதிய பிரச்சினைகளையும் அவர்கள் அறிந்தும் உணர்ந்தும் இலக்கியம் படைக்க வேண்டியுள்ளது.

டால்ஸ்டாய், சோலா, டிரீஸர், பிரேம்சந்த் போன்றோர் காலத்திலும், நாட்டிலும் காணப்படாத புதுமையைச் சோவியத் எழுத்தாளர்கள் காண்கிறார்கள். இவர்கள், அவற்றைச் சில இலக்கியச் சூத்திரங்கள் மூலம் அறிந்துகொள்ளவில்லை.

வாழ்க்கையைக் கலைப் படைப்பு ஆக்குவதற்குத் துணை செய்கின்ற அழகியல் விதிகளின் அறிவைப் பயன்படுத்திக் கலைப் படிமங்களைப் படைக்கிறார்கள்.

அழகியல் மரபை அவர்கள் தமது முன்னோர்களான கலைப் படைப்பாளிகளிடமிருந்தும் தம் காலத்துக் கலைஞர்களிடமிருந்தும் கற்றுக் கொள்கிறார்கள். இதனை அழகியல் பற்றி விவாதிக்கின்ற தத்துவங்களாகக் கற்பதன் மூலம் விரிவு படுத்திக்கொள்கிறார்கள்.

அழகியல் வரலாறு என்பது மரபும் மாற்றமும் என்ற முரண்பட்ட சக்திகளின் ஒருமையாகும். ரியலச எழுத்தாளர்களது கலைப் பரம்பரை மிகப் பரந்த உலக இலக்கியத்தின் செம்மையான மரபாகும். அதனோடு சோசலிசச் சமுதாயத்தின் அறுபது ஆண்டு மகத்தான கலை வளர்ச்சியின் மரபும் இணைகிறது.

சோஷலிஸ்டு ரியலிசத்தின் மரபை வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள் கார்க்கியும் மாயகாவ்ஸ்கியும் ஆவர்.

மார்ட் புரூப் என்னும் சோவியத் எழுத்தாளர் 1957இல் ரோம் நகரில் நடைபெற்ற உலக எழுத்தாளர் கூட்டத்தில் சோசலிஸ்டு ரியலிச மாற்றம் (innovation) பற்றிப் பேசினார்:

'ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்வது, கற்றுக்கொள்வதன் தாய்' ஆகும் (Repetition is the mother of learning) என்றோர் பழமொழி உள்ளது. இதனை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் இப்பழமொழி கலைப் படைப்புக்குப் பொருந்தாது. இக்கருத்து கலைப் படைப்பின் புதுமைக்கு எதிரி. திரும்பத் திரும்பச் சொல்லுவதோ, திரும்பத் திரும்பப் படைப்பதோ கலை ஆகாது. தொடர்ச்சியாளர்களுக்கும் (Continuators) திரும்பச் சொல்லுபவர்களுக்கும் (Repeators) இடையே கலைஞன், கலைஞனல்லாதவன்

என்ற வேறுபாடு உள்ளது. இவர்களுக்கிடையே நடைபெறும் போராட்டமே, ஒரு நாட்டில் கலைகள் வளருகின்றனவா, போலிப் படைப்புகள் வளருகின்றனவா என்பதைத் தீர்மானிக்கிறது. தொடர்ந்து, முந்திய மரபை, புதிய நிலைமைகளில் வளர்த்துச் செல்பவர்கள் உள்ள நாட்டில் தான் கலை செழிப்பாக வளர்ந்து மணம் பரப்பும் என்று மார்ட் புரூப் கூறினார்.
"எல்லா வகையான நல்ல கவிஞர்களும் தேவை” என்ன மாயகாவ்ஸ்கி அறைகூவல் விடுத்தார்.
நமது கலை உருவங்களில் தனித்துவம் இருக்கவேண்டும். அவற்றின் உள்ளடக்கங்களில் சோஷலிசத் தன்மை, லெனினியக் கண்ணோட்டம் நிறைந்திருக்கவேண்டும் எனக் கார்க்கி கூறினார்.
இந்தக் கொள்கையைத் திரித்துக் கூறி நவீனத்துவவாதிகள் எதிர்க்கிறார்கள். அவர்கள் நம்மை அடித்து நொறுக்கிவிட்ட தாக எண்ணிக் கொண்டு கீழ்க்கண்ட கேள்விகளை நம்மை நோக்கி வீசுகிறார்கள்.
"கலைஞனது படைப்புப் புதுமையையும் அவன் மக்களுக்குப் பொறுப்பாக எழுத வேண்டும் என்ற கொள்கையையும் நீங்கள் எப்படிப் பொருத்தமாகக் கருதுகிறீர்கள்?
சோஷலிஸ்டுக் குறிக்கோளை மனத்தில் பதித்துக்கொண்டு எழுத்தாளன் எப்படிச் சுதந்திரமாக எழுத முடியும்?
சோவியத் இலக்கியத்தில், பல தேசிய இனப் பிரிவுகளின் வளர்ச்சியே இக்கேள்விகளுக்குப் பதிலாக அமையும்.
ஆம்! கலைஞனது படைப்புப் புதுமை, கலைஞன் மக்களுக்குப் பொறுப்பாக எழுதவேண்டும் என்ற இவ்விரண்டு கோட்பாடுகளையும் இணைக்க முடியும். இணைத்ததாலேயே மிகச் சிறந்த இலக்கிய்ப் படைப்புக்களைச் சிறு தேசிய இனங்களின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் படைத்துள்ளார்கள்.
ஓர் எடுத்துக்காட்டுத் தருவோம். 'அலிடெட் மலைக்குப் போகிறான்' என்று இரண்டு பகுதிகளில் பனிக்காட்டுப் பகுதியான ஆர்க்டிக் வட்டத்தில் வாழ்கின்ற'சுக்சி' என்ற மக் களைப் பற்றிய ஒரு நாவல்.
தொடக்க நிலை நாகரிகக் கட்டத்தில் வாழ்ந்த மக்கள், உணவுக்கு 'ஸில்' என்ற விலங்கையும் கடற்பாசியையும் தேடி அலைந்தவர்கள், சிறிது கடற்கரையில் இருந்து விலகிக் காட்டுப்பகுதிகளில் 'ஒய்ன் பீர்' என்ற காட்டு மான்களைப் பிடித்து வளர்த்தார்கள்.
சமூக வாழ்க்கையில் பெண் அடிமைத்தனம் மிகுந்திருந்தது. சமூகத் தலைவர்கள் பல பெண்களை மணம் செய்துகொண்டார்கள். வேட்டையாடவோ, மான்களை விலைக்கு வாங்கவோ, மயிர் அடர்த்தியாக இருக்கும் தோலை வாங்கவோ தங்கள் மனைவியரை ஈடு வைத்தார்கள். நண்பர் அல்லது அந்நியர் விருந்தினராக வந்தால் தங்கள் மனைவியரில் அவர்களுக்கு பிடித்தமானவரை, இரவில் அவர்களோடு தங்குவதற்கு அனுப்பும் வழக்கமும் இருந்தது.
உணவுத் தட்டுப்பாட்டினால் ஏழைகள் தங்கள் வீட்டில் ஐம்பது வயதுக்கு மேலான ஆண்-பெண்களை, ஒரு பெரும் விழா நடத்தி, கழுத்தில் துணியைக் கட்டித் தூக்குப் போட்டுக் கொன்று விடுவார்கள். இது சமூகத் தேவையாக இருந்ததால், கொல்லப்படுகின்றவர்கள், சுவர்க்கம் சேர்ந்து குடும்பத்தை வாழ்த்தி, மிகுந்த அளவில் ஸில் வேட்டை கிடைக்கச் செய் வார்கள் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
எந்த ஒரு செயலுக்கும் ஷாமன் என்ற மந்திரவாதியின் உத்தரவு கேட்டு, அதன்படி நடந்து வந்தார்கள்.
புரட்சி தோன்றியது. நான்கைந்து ஆண்டுகள், இவர்கள் வாழும் பகுதிகளுக்கு ஆசிரியர்கள், மருத்துவர்கள், தொழிலா வார்கள் ஆகியோர் வேட்டைத் தொழிலுக்கான கருவிகளோடு வந்தார்கள். பள்ளிகள் தோன்றின. ஷாமன்கள் அறிவு பரவு வதை எதிர்த்து ஆசிரியர்களைக் கொலை செய்தார்கள். மருத்துவமனைக்குள் மக்களைப் போகவொட்டாமல் ஷாமன் தடுத்தான். மக்கள் உண்மைகளை அறிய முடியாமல் தடுக்கப்பட்டார்கள்.
இந்த மக்களுடைய சமூக வாழ்க்கையை மாற்றவும், அமமக்களின் விலங்குநிலை வாழ்க்கையை மனித வாழ்க்கையாக மாற்றவும் கம்யூனிஸ்டுகள் அனுப்பப்பட்டார்கள். அவர்களில் பலர், மக்களது அறியாமையால் கொல்லப்பட்டார்கள். தங்களுக்கு நன்மை செய்ய வந்தவர்களையே ஷாமனது துரண்டுதலால் துன்புறுத்தினார்கள்.
மிகவும் திறமையாக மக்களை ஏமாற்றி வந்த ஷாமன் களது சூழ்ச்சிகள் வெளிப்படுத்தப்பட்டன. பிறகு மக்களே ஷாமன்களைக் கொன்று விட்டார்கள். குழுத்தலைவர்களை யும் வேலை செய்யும்படி மக்களே கட்டாயப்படுத்தினார்கள்.
தங்கள் உழைப்பின் பயன் தங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் புதிய கம்யூனிஸ்டுப் புரட்சித் தூதர்கள் ஏற்படுத்தினார்கள். இவர்கள் வந்த எட்டு ஆண்டுகளில் ஒரு சுக்சி பெண் மருத்துவம் கற்கவும், ஒரு சுக்சி இளைஞன் அமைப்புப் பொறியியல் படிக்கவும், பல பெண்கள் கூட்டுறவு மேலாளர் பயிற்சி பெறவும், இயந்திரப் பொறிகளில் மயிரடர்ந்த விலங்குகளைப் பிடிக்கும் தொழில் கற்கவும், இயந்திரப் பொறிகளை உருவாக்கும் உற்பத்தி முறைகளைக் கற்கவும் மாஸ்கோவுக்கும் லெனின்கிராடுக்கும் விளாடிவாஸ்டக்குக்கும் ஏனைய பிற பகுதிகளுக்கும் சென்றார்கள்.

சுக்சி நாட்டின் அறிவியல், தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களில் பணிபுரியும் தொழில் நுட்ப நிபுணர்களாக சுக்சிகளே ஆகிவிட்ட பின்னர், ரஷ்யர்கள் அவர்களிடம் நாட்டின் வளர்ச்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள். சுக்சிகளுக்கு அறிவு வளர்ச்சியும் சமூக உணர்வும் தோன்ற ரஷ்யர்கள் உதவி மட்டுமே செய்தார்கள்.

அமெரிக்கக் கடத்தல்காரர்களுக்கு விலையுயர்ந்த தோலை (firs) ஒரு கிலோ தேயிலைக்கும் ஒரு முழம் துணிக்கும் உள்நாட்டுச் கரண்டல்காரர்கள் விற்று வந்தார்கள். பணத்தின் மதிப்புத் தெரியாத கூட்டத்தாரின் மூலம் சுக்சி மக்களது உழைப்பின் பயனை அமெரிக்கர் உறிஞ்சி வந்தார்கள், கடத்தல்காரர்களைக் கரையிறங்க விடாமல் அரசு தடுத்தது. அமெரிக்கர்களுக்கு விலையுயர்ந்த பொருள்களை விற்கக் கூடாது என்று தடை போட்டது. இதனை எதிர்த்து, ஆயுதம் தாங்கிப் போராடிய கொள்ளைக் கூட்டங்கள் அழிக்கப்பட்டன. வழி திரும்பி, உழைப்பினால் வாழ விரும்பியவர்கள் சமூக உறுப்பினர்கள் ஆனார்கள்.

பசிக் கொடுமையால், உணவு கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் மனமில்லாமல், விருப்பம் இல்லாமல் குழுத்தலைவர்களை மணந்துகொண்டிருந்த இளம் பெண்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

இச்செயல்கள் அனைத்துமே அரசின் கட்டளையால் மட்டும் நடைபெறவில்லை. அறிவு விளக்கத்தால், புதிய உணர்வு கொண்ட சுக்சி இளைஞர்களே சங்கங்களாக அமைந்து, ஜனநாயக முறையில் விவாதித்து, முடிவுகள் செய்து நிறைவேற்றினார்கள்.

இது சோஷலிஸ்டு ரியலிச நாவல். இதில் பொருள் புதிது. ஓர் இனத்தின் வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பது விரைவான, படிப்படியான வளர்ச்சியாகக் காட்டப்படுகிறது. சுக்சி இன மக்கள் உணவு தேடும் பண்டைய வாழ்க்கை நிலையில் இருந்து வரலாற்று, சமூக அமைப்புக் கட்டங்களைத் தாண்டி, தற்காலச் சோஷலிச அமைப்பு நிலைக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

 இந்நாவல், ஒர் இனத்தின் தனி மனிதர்களைப் பற்றிய கதை. ஆனால் இது பல இனங்களின் வளர்ச்சிப் போக்குக்கு எடுத்துக்காட்டு. துருக்மேனிய, அஸர்பைஜானிய, டாஜிக் மக்களின் வளர்ச்சியும் இது போன்றதே. இவர்களது சமூக மாற்றங்களைப் பொருளாகக் கொண்டு நூற்றுக்கணக்கான நாவல்களை அந்தந்த தேசிய இன எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். ஒன்றைப்போல மற்றொரு நாவல் இராது. இனம், கலைஞன் ஆகிய இருவரது வேறுபாட்டால் கலைப் படைப்பு முறையும் வேறுபடும்.
'கலைப் படைப்பில் தனித்துவம், உள்ளடக்கத்தில் சோஷலிச, லெனினியக் குறிக்கோள்’ என்பது இவையனைத்திற்கும் பொதுவானது.
கஸாக் வாழ்க்கை வளர்ச்சியைப் பல நாவல்களில் ஷோலகோவ் சித்திரிக்கிறார். கன்னி நிலம், டான் நதி அமைதியாகப் பாய்கிறது ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்கன. டான் நதி அமைதியாகப் பாய்கிறது என்ற பல பகுதிகள் கொண்ட நாவல் உலகப் புகழை அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. இதிலும் சோஷலிஸ்டு ரியலிசக் கோட்பாடான தனித்துவமும் சோஷலிசமும் இணைந்திருப்பதைக் காணலாம்.
இலக்கியப் படைப்புக்கு, மற்றொரு படைப்பு முறையைக் காட்டிலும் சோஷலிஸ்டு ரியலிசம் மிகுதியாகத் துணைபுரிகிறது.
அது ஒரு கலைப்படைப்பு முறைதான்.
ஹெசல், கலைப் படைப்புக் கூறுகள் பற்றிக் குறிப்பிடும்போது 'அஃப்ஹீப்ன்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இதற்கு மூன்று பொருள்கள் உண்டு.
1 பாதுகாத்தல்
2 தொடர்ச்சியாக வளர்த்தல்
3 பயன்படுத்துதல்.
நமக்கு முந்தைய பண்பாட்டைப் பாதுகாத்து, தொடர்ச்சியாக வளர்த்து, பயன்படுத்தி, புதுமையான இலக்கியம் படைப்பவர்களே சோஷலிச ரியலிசக் சார்பாளர்கள் ஆவர்.
பழமைக்கும் புதுமைக்கும், மரபிற்கும் மாற்றத்திற்கும் உற்ற தொடர்புகள் இவை.