ரங்கதுர்க்கம் ராஜா/இரண்டாம் பாகம்

விக்கிமூலம் இலிருந்து

1

ரங்கராஜன் இரண்டாவது முறை கண் விழித்த போது, அவன் படுத்திருந்த அறையில் ஒருவருமில்லை. ஆனால், சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் காலடிச் சத்தம் கேட்டது. இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள். அவர்களில் ஒருவர் முன் தடவை கண் விழித்த போது பார்த்த இந்திய டாக்டர், இன்னொருவர் வெள்ளைக்கார டாக்டர்.

ரங்கராஜன் விழித்திருந்ததைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் ஏக காலத்தில், "ஹலோ!" என்று கூவினார்கள். பிறகு வெள்ளைக்கார டாக்டர், "ராஜா சாகிப்! உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.

'ராஜா சாகிப்பாவது, நாசமாய்ப் போனதாவது' என்று ரங்கராஜன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ஆனால், வெளியில், "எனக்கென்ன தெரியும்? நானா டாக்டர்! நீங்கள் அல்லவா சொல்ல வேண்டும்?" என்றான்.

டாக்டர்கள் சிரித்தார்கள். வெள்ளைக்கார டாக்டர் "பேஷ்! ராஜாசாகிப் தண்ணீரில் ஓர் அமுங்கு அமுங்கியது அவருடைய மூளையை கூர்மைப்படுத்தியிருக்கிறது போல் காண்கிறது," என்றார்.

"உங்களுக்கும் அந்தச் சிகிச்சை கொஞ்சம் தேவை போல் காண்கிறதே!" என்றான் ரங்கராஜன்.

டாக்டர்கள் மறுபடியும் சிரித்தார்கள். பிறகு, "ராஜா சாகிப்! போனது போகட்டும். இனிமேலாவது மிதமாய்க் குடியும். மது மயக்கம் பொல்லாதது" என்றார் வெள்ளைக்கார டாக்டர்.

"மது மயக்கமோ, காதல் மயக்கமோ?" என்றார் இந்திய டாக்டர்.

இப்போது ரங்கராஜனுக்கு உண்மையிலேயே தலை மயங்க ஆரம்பித்தது.

"கனவான்களே! தயவு செய்து ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறீர்களா?" என்று கேட்டான்.

"ஒன்றல்ல, நூறு சந்தேகங்களை வேண்டுமானாலும் நிவர்த்தி செய்கிறோம், ராஜா சாகிப்! ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜாவுக்கு நாங்கள் அவ்வளவுகூடச் செய்ய வேண்டாமா!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.

"எனக்குள்ளது ஒரே சந்தேகந்தான். நான் பைத்தியமா, நீங்கள் பைத்தியமா என்பதை மட்டும் சொல்லி விட்டால் போதும்."

ஒரு பெரிய அவுட்டுச் சிரிப்புக் கிளம்பிற்று. வெள்ளைக்கார டாக்டர் அருகில் வந்து ரங்கராஜன் முதுகில் தட்டிக் கொடுத்து, "பேஷ்! பேஷ்! நல்ல கேள்வி! ஏ! ஹஹ்ஹஹ்ஹா!" என்று மறுபடியும் சிரித்தார். அவருடைய திருவாயிலிருந்து சாராய நாற்றம் குபுகுபுவென்று வந்தது.

"டாக்டரே! தயவு செய்து தூரநின்று பேசும். நான் வைதிகப் பற்றுள்ள ஹிந்து. உம்மைத் தொட்டால் தலை முழுக வேண்டும்," என்றான் ரங்கராஜன். பிறகு, "நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. உங்களுக்கும் அது சந்தேகம் போலிருக்கிறது. போகட்டும், நீங்கள் யார் என்றாவது தயவு செய்து சொல்வீர்களா?" என்று கேட்டான்.

வெள்ளைக்கார டாக்டர் ஒரு நிமிஷம் யோசனையிலாழ்ந்தவர் போலிருந்தார். இந்திய டாக்டர், "ஆஹா! ராஜா சாகிப் எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள அநுமதி கொடுங்கள். நான் தான் டாக்டர் சிங்காரம், குமாரபுரம் ஜமீன்தாரின் குடும்ப வைத்தியன். இவர் டாக்டர் மக்டானல். இந்தக் கப்பலின் வைத்தியர். -போதுமா? இன்னும் ஏதாவது தெரிய வேண்டுமா?"

"இந்தக் கப்பலின் பெயர் என்ன?"

"எச்.எம்.எஸ்.ரோஸலிண்ட்."

"நிஜமாகவா? இதன் பெயர் 'பிரிட்டானியா' அல்லவென்று நிச்சயமாகத் தெரியுமா?"

டாக்டர் சிங்காரம் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். ஆனால், டாக்டர் மக்டனால் சிரிக்கவில்லை. அவர் ஒரு சீட்டில், "கொஞ்சம் மூளை பிசகியிருப்பதுபோல் காண்கிறது" என்று எழுதி டாக்டர் சிங்காரத்திடம் காட்டினார்.

"ஓ டாக்டர் கனவான்களே! இன்னும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிடுங்கள். நான் யார்?" என்று கேட்டான் ரங்கராஜன்.

இப்போது டாக்டர்கள் சிரிக்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு டாக்டர் மக்டனால், "நாங்கள் யாரென்று தெரியப்படுத்திக் கொண்டோ ம். நீர் யாரென்று நீரல்லவா தெரியப்படுத்த வேண்டும்? உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டார்.

"என் பெயர் ரங்கராஜன் என்று இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது சரியோ தப்போ என்று இப்போது சந்தேகமாய் விட்டது."

"இந்தச் சந்தேகம் ஏன் வந்தது?"

"என்னை நீங்கள் 'ராஜாசாகிப்' என்று அழைப்பதனால்தான்."

"அப்படியா? அது போகட்டும். இன்னும் தூக்கக் கலக்கம் உமக்குப் போகவில்லை. சற்று நேரம் தூங்கும். அப்புறம் நாங்கள் வந்து உம்முடைய சந்தேகங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்கிறோம்" என்று டாக்டர் மக்டானல் சொல்லிவிட்டு, டாக்டர் சிங்காரத்தையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியேறினார். அறைக்கு வெளியில் சென்றதும் அவர் டாக்டர் சிங்காரத்திடம், "இது ஒரு விசித்திரமான கேஸ். தண்ணீரில் அலை வேகமாய்த் தாக்கியதால் மூளை சிறிது குழம்பியிருக்கிறது. தம்மை வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பழைய ஞாபகம் கொஞ்சம் இருக்கிறது. அதனால்தான் ரங்கராஜ் என்று பெயர் சொல்கிறார். ரங்கதுர்க்கம் ராஜா என்பதில் 'துர்க்கம்' தழுவி விட்டது. இங்கிலாந்துக்குப் போகும் போது இவர் 'பிரிட்டானியா' கப்பலில் போயிருக்க வேண்டும், விசாரித்தால் தெரியும்," என்று கூறினார்.

2

டாக்டர்கள் வெளிச் சென்றதும் ரங்கராஜன் படுக்கையிலிருந்து எழுந்தான். முதலில் தான் அணிந்திருந்த உடைகளைக் கவனித்தான். அவை தன்னுடையவை அல்ல என்பது நிச்சயம். பிறகு அறையைச் சோதித்தான். அந்த அறையை அதற்கு முன் அவன் பார்த்ததில்லை. அதிலிருந்த சாமான்களும் அப்படியே. பெட்டிகளைத் திறந்து சோதிக்கலானான். அவற்றில் சாதாரண உடுப்புகளுடன் சரிகைப் பூவேலைகள் செய்த வெல்வெட் சட்டைகள், குல்லாக்கள் முதலியவை காணப்பட்டன. சாராயப் புட்டிகள், சிகரெட் பெட்டிகள் முதலியவை இருந்தன. இந்த அறையில் யாரோ ஓர் இளம் ஜமீன்தார் பிரயாணம் செய்திருக்க வேண்டும். டாக்டர்கள் அவனை அந்த ஜமீன்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பரிசோதனை செய்தபோது, "ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜா" என்று தலைப்பில் அச்சிட்ட சில காகிதங்கள் அகப்பட்டன. மறுபடியும் புரட்டியபோது, சில புகைப்படங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்றைப் பார்த்ததும் ரங்கராஜன் திடுக்கிட்டான். ஏனெனில், அப்படத்திலிருந்த உருவம் அவனைப் போலவே இருந்தது. மூக்கு, முழி, உதடு, நெற்றி, தலைக்கிராப்பு எல்லாம் தத்ரூபம். உடையில் மட்டுந்தான் வித்தியாசம் காணப்பட்டது.

இன்னொரு புகைப்படம் ரங்கராஜனுடைய உள்ளத்தில் விசித்திரமான உணர்ச்சியை உண்டாக்கிற்று. அவ்வுணர்ச்சியின் இயல்பு எத்தகையதென்பது அவனுக்கே சரியாக விளங்கவில்லை. அது ஓர் இளம் கன்னிகையின் படம். முதல் தடவை தான் கண்விழித்துப் பார்த்தபோது எதிரில் நின்ற பெண் இவளாய்த் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான். இவள் யார்? தன்னிடம் சிரத்தைக் கொண்டு தன்னைப் பார்க்க வந்த காரணம் என்ன? சீ! அவள் தன்னைப் பார்க்கவா வந்தாள்? வேறு யாரையோ அல்லவா பார்க்க வந்தாள்? அவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்? அச்சமயம் ரங்கராஜனுக்குத் தான் முன்பின் பார்த்திராத ரங்கதுர்க்கம் ராஜாவின் மீது கொஞ்சம் கோபம் வந்தது.

ஆனால், உடனே சாமாளித்துக் கொண்டான். 'என்ன நமக்குக் கூட அசடு தட்டுகிறதே!' என்று நினைத்தான். ஆனால் உடனே, 'நமக்கு அசடு தட்டினால் அதுவும் கொஞ்சம் உயர் தரமாய்த்தான் இருக்கும்' என்று எண்ணிக் கொண்டான். பெட்டிகளை மூடிவிட்டு எழுந்தான்.

குழப்பம் நீங்குவதற்கு அவன் இன்னும் இரண்டே இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

உண்மையாகவே இந்தக் கப்பல், தான் பம்பாயில் ஏறி வந்த கப்பல் இல்லையா? இல்லையென்றால், இது எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது? இரண்டாவது, தன்னை யார் என்று இவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த பேர்வழியின் சங்கதியென்ன? தன்னை அவனென்று இவர்கள் தவறாக எண்ணங் கொண்டிருப்பதை எவ்வாறு நிவர்த்திப்பது?

ரங்கராஜன் அறையிலிருந்து வெளிவந்து நடக்க முயற்சித்தான். கொஞ்சம் பலஹீனத்தைத் தவிர, மற்றபடி தேகம் சரியான நிலைமையிலிருப்பதாக உணர்ந்தான். தளத்தின் விளிம்பு வரை சென்று கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றான். அன்று தான் இவ்வாறு நின்றதும், அப்போது தன் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களும், கடைசியில் தலைக்குப்புறக் கடலில் விழுந்ததும் எல்லாம் தெளிவாக ஞாபகம் வந்தன. ஏதோ தவறு நடந்திருக்கிறதென்றும், அதை நிவர்த்திப்பது தன் கடமையென்றும் உறுதி கொண்டான். சுற்றுமுற்றும் பார்த்தபோது, கப்பலின் ஒரு பக்கத்தில் 'எச்.எம்.எஸ். ரோஸலிண்ட்' என்று பெரிதாக எழுதியிருந்தது தெரிய வந்தது. எனவே, தான் வந்த கப்பல் இது இல்லையென்பது நிச்சயம்.

அப்போது அந்தப் பக்கம் மாலுமி ஒருவன் வந்ததைக் கண்டதும் அவனை, நிறுத்தி "இந்தக் கப்பல் எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது? இப்போது எங்கேயிருக்கிறோம்?" என்று கேட்டான். அந்த மாலுமி ரங்கராஜனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் குப்பென்று சிரித்தான். "ஓ! கடலில் விழுந்த ராஜா இல்லையா நீர், இன்னொரு தடவை விழப் போகிறீரா?" என்று கேட்டான். ரங்கராஜனுக்குக் கோபம் வந்தது. "ஓய் உம்முடைய பரிகாசமெல்லாம் அப்புறம் இருக்கட்டும். இந்தக் கப்பலின் காப்டனை நான் உடனே பார்க்க வேண்டும். அவரிடம் தயவு செய்து என்னை அழைத்துப் போகிறீரா?" என்று கேட்டான்.

"ராஜாசாகிப் ரொம்பக் கோபமாயிருப்பது போல் காண்கிறது. வாரும், போகலாம்" என்றான் மாலுமி. ரங்கராஜன் அவனைப் பின் தொடர்ந்து சென்றான். போகும் வழியில் அந்தக் கப்பல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் போகிறதென்றும், ஏடனைத் தாண்டியாகிவிட்டதென்றும், இரண்டு நாளில் பம்பாய்த் துறைமுகத்தை அடையுமென்றும் அந்த மாலுமியிடமிருந்து தெரிந்து கொண்டான். ஒருவாறு அவனுக்கு நிலைமை தெரியவந்தது. 'பிரிட்டானியா' கப்பலிலிருந்து, தான் கடலில் குதிக்க எத்தனித்த அதே சமயத்தில் எதிரே ஒரு கப்பல் வரவில்லையா? அந்தக் கப்பல் தான் இது. தான் கடலில் குதித்த அதே சமயத்தில் இந்த முட்டாள் ராஜாவும் எக்காரணத்தினாலோ கடலில் விழுந்திருக்க வேண்டும். அவனை எடுப்பதற்குப் பதிலாகத் தன்னை எடுத்திருக்கிறார்கள், இந்தக் கப்பல்காரர்கள். தன்னுடைய தோற்றமும், அவனுடைய தோற்றமும் விபரீதமாக ஒத்திருந்தபடியால் அவர்கள் இந்த ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். ராஜாவின் கதி என்னவாயிற்றோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்; தன்னுடைய கடமை தெளிவானது; தான் ரங்கதுர்க்கம் ராஜா அல்லவென்பதை உடனே கப்பல் தலைவனிடம் தெரியப்படுத்தி விடவேண்டும்.

3

"ஓகோ! ராஜாசாகிபா? என்ன அதற்குள் அலையக் கிளம்பிவிட்டீரே! டாக்டர் உத்தரவு கொடுத்தாரா?" என்றான் காப்டன்.

"டாக்டர் உத்தரவு கொடுக்கவில்லை. ஆனால், உம்மிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கிறது. அதற்காக வந்தேன்."

"அந்த முக்கியமான விஷயம் இன்னும் மூன்று நாளைக்கு பம்பாய் போய்ச் சேரும் வரையில் காத்துக் கொண்டிருக்காதா? இதோ பாரும், ராஜா சாகிப்; வானம் ஒரு மாதிரியாய் இருக்கிறது. புயல் அடிக்கும் போல் இருக்கிறது."

"நான் சொல்ல வேண்டிய விஷயம் மூன்று நாள் காத்திராது. மிகவும் அவசரமானது. முக்கியமானது."

"அப்படியானால் சொல்லும் சீக்கிரம்."

"நீர் என்னை 'ராஜாசாகிப்' என்று அழைக்கிறீர். என்னை ரங்கதுர்க்கம் ராஜா என்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். இது தவறு. நான் ரங்கதுர்க்கம் ராஜா அல்ல. சாதாரண மனிதன். என் பெயர் ரங்கராஜன். தற்செயலாகப் பெயர் இப்படி ஏற்பட்டிருக்கிறது."...

இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில் டாக்டர்கள் இருவரும் அங்கு வந்தார்கள். பெரிய டாக்டர் கப்பல் தலைவனுடைய காதில் ஏதோ சொன்னார். உடனே காப்டன் 'ஹஹ்..ஹஹ்ஹா' என்று சிரிக்கத் தொடங்கினார்.

கொஞ்சம் சிரிப்பு அடங்கியதும் ரங்கராஜன் கூறினான்: "நீரும் இந்த டாக்டர்களைப் போன்ற மழுங்கல் மூளை உள்ளவர் என்று நான் நினைக்கவில்லை. போகட்டும், என்னுடைய கடமையை நான் செய்து விடுகிறேன். இங்கிலாந்திலிருந்து இந்தக் கப்பலில் கிளம்பிய ரங்கதுர்க்கம் ராஜா நான் அல்ல. ஐந்து நாளைக்கு முன்பு பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பிய 'பிரிட்டானியா' கப்பலில் நான் இங்கிலாந்துக்குப் பிரயாணமானேன்."

"அப்படியானால் இங்கே எப்படி வந்து குதித்தீர்?" என்று கேட்டார் காப்டன்.

"அது எனக்குத் தெரியாது. ஏடனுக்கு இப்பால் 'பிரிட்டானியா' கப்பலிலிருந்து கடலில் குதித்ததுதான் தெரியும்"

"ஏன் குதித்தீர்?"

"உங்களைப் போன்ற மூடர்கள் வாழும் உலகத்தில் உயிர் வாழப் பிடிக்காமல் போனபடியால் தான்."

"போதும், போதும், டாக்டர் ராஜாசாகிபை அழைத்துக் கொண்டு போங்கள். சரியானபடி சிகிட்சை செய்யுங்கள்," என்றார் காப்டன்.

டாக்டர்கள் ரங்கராஜனை அழைத்துக் கொண்டு சென்றதும், காப்டன் அங்கிருந்த மாலுமியிடம், "இந்தப் பையன் கதை சொல்லத் தொடங்கியதும் நான் கூட மிரண்டு விட்டேன். டாக்டர் சொன்னதுந்தான் ஒரு மாதிரி நிச்சயமாயிற்று. இந்தப் பையனுடைய கதை நிஜமென்றால், இவனைப் போன்ற இன்னொரு முட்டாள் இருக்க வேண்டுமல்லவா? உலகம் ஏககாலத்தில் இத்தகைய இரண்டு அசடுகளைத் தாங்குமா?" என்று கூறவே இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

டாக்டர்கள், ரங்கராஜனை நேரே அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் உட்கார வைத்தனர். அதே சமயத்தில் தலைப்பாகை சகிதமாக ஓர் இந்தியக் கனவான் அங்கே வந்தான். மெஸ்மெரிஸம் என்னும் வித்தையில் தாம் கை தேர்ந்தவர் என்றும், ரங்கதுர்க்கம் ராஜா தம்மை வேறு யாரோ என்று எண்ணி மயங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததென்றும், அவருடைய பிரமையைத் தாம் போக்கிவிட முடியுமென்றும் கூறினார்.

"எங்கே, உமது சாமர்த்தியத்தைக் காட்டும்," என்றார் வெள்ளைக்கார டாக்டர்.

மெஸ்மெரிஸ்ட் ரங்கராஜன் அருகில் சென்றார். "தம்பி! நீ நான் சொல்வதைக் கேட்பாயாம். நல்ல தம்பியல்லவா? நீ சாதாரண மனிதனாய் இருப்பதற்குப் பதில், பெரிய ஜமீனுக்குச் சொந்தக்காரனாக வேண்டுமானால், நான் சொல்வதைக் கொஞ்ச நேரம் தடை சொல்லாமல் கேட்க வேண்டும். தெரிகிறதா? ஹும், ஹும்" என்றார். ரங்கராஜன் மௌனமாய் இருப்பது கண்டு, "அது தான் சரி, நல்ல பிள்ளை எங்கே சாய்ந்து கொள். கைகால்களைத் தளரவிடு. என் கணகளையே உற்றுப் பார். தூங்கு தூங்கு..." என்று பல தடவை உச்சரித்தார்.

ரங்கராஜன் கண்களை மூடினான். மெஸ்மெரிஸ்ட் கையால் அவனுடைய நெற்றியைத் தடவிக் கொண்டே சொல்கிறார். "நீ இப்போது உன்னை யாரோவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உண்மையில், நீ ரங்கதுர்க்கம் ராஜா. உனக்குச் சொத்து சுதந்திரங்கள் ஏராளமாய் இருக்கின்றன. நீ குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி ஸ்ரீமதி பிரேமலதா தேவியை காதலிக்கிறாய். (இப்போது ரங்கராஜனுக்குச் சிரிப்பை அடக்குவது பிரம்மப் பிரயத்தனமாயிருந்தது). நீ ரங்கதுர்க்கம் ராஜா... ரங்கதுர்க்கம் ராஜா..." இவ்வாறு பல தடவை கூறிவிட்டு, "இப்போது எழுந்திரு" என்று ஆக்ஞாபித்தார் மெஸ்மெரிஸ்ட்.

ரங்கராஜன் எழுந்து உட்கார்ந்தான். "இப்போது இவரை யார் என்று கேளுங்கள்," என்று டாக்டர்களைப் பார்த்து கூறினார். டாக்டர் மக்டானல், "நீர் யார்?" என்று கேட்கவே, "நான் ரங்கராஜன்" என்று கண்டிப்பாகப் பதில் வந்தது. மெஸ்மெரிஸ்டின் முகம் விழுந்து போயிற்று. அவர், "இன்னும் மூன்று நாள் சேர்ந்தாற் போல் மெஸ்மெரிஸம் செய்தால், ராஜாவுக்குத் தமது சுய உணர்வு நிச்சயம் வந்து விடும்," என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டு சென்றார்.

டாக்டர் சிங்காரம் தமது சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தார். "நான் செய்கிறேன். இப்போது மெஸ்மெரிஸம்" என்று சொல்லிக் கொண்டே அந்தக் கடிதத்தை ரங்கராஜன் பக்கம் நீட்டினார். "இந்தக் கடிதம் யார் எழுதினது, என்ன எழுதியிருக்கிறது என்று தயவு செய்து பாரும்" என்று சொல்லி ரங்கராஜன் கையில் கொடுத்தார்.

ரங்கராஜன் கடிதத்தை பிரித்து பார்த்தான். அதன் ஆரம்பம் அவன் மனத்தைக் கவர்ந்தது. அது ஒரு காதல் கடிதம் என்று உடனே தெரிந்து போயிற்று. அதைப் போன்ற ஆச்சரியமான காதல் கடிதத்தை யாரேனும் எழுதக் கூடுமென்பதாக அவன் கனவில் கூடக் கருதியிருக்க மாட்டான். எனவே, முகத்தில் புன்னகை ததும்ப அதை வாசித்துக் கொண்டு போனான்.

இதைப் பார்த்த டாக்டர் சிங்காரம், "வாருங்கள் மெஸ்மெரிஸம் வேலை செய்யட்டும்; நாம் போய்ப் பிறகு வரலாம்" என்று கூறி டாக்டர் மக்டானலை அழைத்துச் சென்றார்.

இரண்டு மணி நேரங்கழித்து அவர் குமாரபுரம் ஜமீன்தாரிணியையும் அழைத்துக் கொண்டு ரங்கராஜனுடைய அறையை நோக்கி வந்தபோது, கப்பல் விளிம்புக்கருகில் இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு ரங்கராஜனும் குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி பிரேமலதா தேவியும் ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது அவரும் குமாரபுரம் ஜமீன் தாரணியும் அடைந்த மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. டாக்டர் சிங்காரத்துக்கு ஏற்பட்ட ஆச்சரியமிகுதியினால் அவர் வாயிலிருந்த சுருட்டு லபக்கென்று விழுந்து போய் விட்டது.