லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஜார் மன்னன் படுகொலையும்

விக்கிமூலம் இலிருந்து
ஜார் மன்னன் படுகொலையும் டால்ஸ்டாய் வேண்டுகோளும்!

லக்கிய வளம் செறிந்த நூல்களான ‘போரும்-அமைதியும்’, ‘ஆன்னாகரீனா’, ‘க்ரூசர் சோனடா’ மற்றும் எண்ணற்ற சிறுகதைகளின் லட்சக்கணக்கான பிரதிகளின் விற்பனையாலும், டால்ஸ்டாய் விவசாயப் பண்ணையின் வருவாயாலும் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, சமாரா என்ற நகர் அருகே சொத்துக் கொஞ்சம் வாங்கினார்.

1873- ஆம் ஆண்டுவரை அவர் சமாரா நகரிலேயே தங்கி அதன் பிற பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். வெகு சீக்கிரத்தில் அப்பகுதியில் பஞ்சம் வருமென்றும், உடனடியாக ஜார் மன்னனின் அரசு பஞ்சம் போக்க அல்லது பஞ்சம் வராமல் தடுக்க ஏதேனும் பெரிய முயற்சியை மேற்கொள்ளாவிட்டால், அங்கு வாழும் மக்கள் பலமான சேதமடைவார்கள். அவர்களது உயிருக்கும் - உடைமைக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அறிந்தார்! அதனால், தான்கண்ட உண்மை நிலைகளை விளக்கி அரசாங்கத்துக்கு அறிக்கை மூலம் அறிவித்தார்.

ஆனால், ஜார் மன்னனான அலெக்சாண்டர், டால்ஸ்டாய் அறிக்கைக்கு உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தான். இதுபற்றி ஒன்றும் அறிந்து கொள்ளவாவது முயற்சிக்கவில்லை.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நிலைக்கேற்றவாறு, டால்ஸ்டாய் தனது இடைவிடாப் பணிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இலக்கிய சேவைகளை எல்லாம் அகற்றி வைத்துவிட்டு, அவரே நேரடியாகக் கிராமம் கிராமமாகச் சென்று ஆங்காங்கே உள்ள உண்மைகளை உணர்ந்தார்.

எந்தெந்த இடத்தில் என்னென்ன பார்த்தாரோ அவற்றை எல்லாம் கொஞ்சமும் கூட்டாமல் குறைக்காமல் உள்ளதை உள்ளவாறே ‘மாஸ்கோ கெஜட்’ என்ற பத்திரிகைக்கு அறிக்கை விடுத்தார். அதன் விளைவைச் சுட்டிக்காட்டி மக்களது ஆதரவைக் கேட்டு பத்திரிகையில் டால்ஸ்டாய் வேண்டுகோள் வெளிவந்தது. அதனைக் கண்ட ருஷ்ய மக்களும் டால்ஸ்டாய் ஆதரவாளர்களும் மிகக் குறுகிய காலத்தில்குள் அளவுக்கும் அதிகமான தானியங்களையும், இரண்டு லட்சம் ரூபிள்களையும் வசூல் செய்து அனுப்பி வைத்தார்கள்.

மக்களும் அவரது எழுத்துலக வாசகர்களும் செய்த உதவியால், பஞ்சத்தால் தாக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய பஞ்ச நிவாரண உதவியை அவரே செய்தார். தனியொரு மனிதனின் இந்தக் கருணையான செயலைக் கண்ட ருஷ்ய மக்கள் ஞானி டால்ஸ்டாயை மிகவும் நேசித்து, ஏழைப் பங்கானர் என்று பேசிப் பாராட்டினார்கள்.

குடியானவர்களின் அடிமைப் பழக்க வழக்கத்தை அகற்றியதால் ருஷியாவில் அமைதி உருவாகவில்லை. ஆனால், அதற்குப்பிறகுதான் புதிய புதிய வரிச் சுமைகளை அரசு அவர்கள் மீது திணித்தது. அவர்களுடைய குறைகளை அரசனோ, அதிகாரிகளோ கவனிக்க மறுத்த நிலை ஏற்பட்டது. இதனால் மக்களிடையேயும், குடியானவர்கள் மத்தியிலும் பெரும் குழப்பம் நிலவியது. நாளுக்கு நாள் கொடுமைகள் அதிகமானதால் அதிருப்தியும், ஆத்திரமும் மக்களது உள்ளத்தில் பொங்கி வழிந்தன.

ஆத்திரமடைந்த மக்கள் புரட்சிக் கொடியை ஏந்த ஆரம்பித்து விட்டார்கள். இந்த நெருக்கடிகள் நாளுக்கு நாள் நெருப்புபோல சுடர்விட்டு எரிந்தனவே தவிர, அவர்கள் கோபம் தணியவில்லை. இவற்றின் எதிரொலியாக ஜார் மன்னன் அலெக்சாண்டரை மக்கள் படுகொலை செய்து விட்டார்கள். இந்தப் புரட்சி 1881 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் நாள் நடந்தது. ருஷ்ய நாடெங்கிலும் கலகமும், கலவரங்களும் பெரிய குழப்பங்களும் நடந்து கொண்டே இருந்தன!

மன்னன் படுகொலைக்கு அல்லது படுகொலைக் குழப்பங்களுக்கு யார் யார் காரணமோ இல்லையோ, அவர்களை எல்லாம் கைது செய்தார்கள்! காராக்கிரகத்தில் அடைத்தார்கள் ஒரு பாவமும் இல்லாத பலரைத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்! துடிதுடிக்கக் கில்லெட்டின் கொலைக் கருவியிடையே தலைகளை வைத்து வெட்டித் தலைவேறு முண்டம் வேறாகத்துள்ள வைத்த்தார்கள், பாவம்!

இவற்றையெல்லாம் டால்ஸ்டாய் கண்டார்! ஒரு முறையா அல்லது பல முறையா அவர் இவ்வாறு ரத்தாபிஷேகப் படுகளங்களைக் காண்பது? என்றாலும், ஏன் இந்த அவல நிலை? எதற்காக இந்த ஆட்சி இப்படி மக்கள் உயிர்களை வேட்டையாடுகின்றது? இது என்ன நாடா? இல்லை காடா? என்ற கேள்விகளுக்கு இடையே அவர் தவித்தார்.

புதிதாக அரச பீடம் ஏறிய ஜார் மன்னன் மூன்றாம் அலெக்சாண்டரிடம், சதிகாரர்களை மன்னிக்குமாறு வேண்டினார் டால்ஸ்டாய். இயேசு பெருமான் அருள் மொழிக்கு ஏற்றவாறு அவர்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு அரசன் செய்தால், மக்களுக்கு மன்னன் மீது மதிப்பும் மரியாதை போன்ற நல்லெண்ணமும் ஏற்பட ஒரு புதிய வழி உருவாகும் என்ற எண்ணத்திலே டால்ஸ்டாய் மேற்கண்டவாறு வேண்டினார்.

கொடுங்கோலன் தானே ஜாரும் அவனது அரச பரம்பரையும்? எனவே பெருந்தன்மையே இல்லாமல் ஓர் ஞானியின் வேண்டுகோளை அலட்சியம் செய்துவிட்டான்! அதன் பலன் என்ன?

ஜார், பலரை மேலும் சிறையில் அடைத்துப் பழிதீர்த்தான். வஞ்சனைப் படலத்தைத் தொடர்ந்து நடத்திக் கொன்று குவித்தான். கொலையிலே சம்பந்தப்படாத வாலிபர்களை! ஏனென்று எவரும் இந்த அக்ரமத்தைக் கேட்காது ஊமையாக இருந்தபோது பேசியவர்தான் டால்ஸ்டாய் என்ற ஞானி!

ஒரு மனிதாபிமானியின் வார்த்தைகள் மதிக்கப்படவில்லையே என்ற மன வருத்தத்தை மறந்து அவர் சென்றார் மாஸ்கோ நகருக்கு! போன இடத்திலாவது அந்த ஞானிக்கு ஏற்பட்டதா மன அமைதி? இல்லை. அங்கேயும் உள்ள நிலைமை அவரது மனதில் எரியீட்டி சொருகியது போல ஆனது.

அளவுக்கு அதிகமாகப் பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு, அளவுக்கு அதிகமான சுகபோக களியாட்ட வெறிகளிலே மூழ்கிக் கிடக்கும் சிலரைக் கண்டார். இரவு பகல் எந்த நேரமும் அவர்கள் இன்பக் கேளிக்கைகளிலே ஈடுபட்டு வெறி மயக்கத்தில் வீழ்ந்துகிடப்பதையும் பார்த்தார். மனம் குமுறினார் டால்ஸ்டாய்!

ஒரு புறம் சோற்றுக்குத் திண்டாடும் மக்கள் கூட்டம்; மறுபுறம் நாய்க்கும் கூட பிஸ்கட்டும் சாராயமும் ஊற்றி அதை வெறியூட்டி முத்தமிடும் கூட்டம்; அடுத்த வேளை உணவுக்கு எலும்பொடியக் கஷ்டப்படும் மக்கள் மீது அந்த நாய்களை ஏவி விட்டுத் துரத்தியடிக்கும் ஆணவ போதையர்களது படாடோப வாழ்க்கையின் ஆர்ப்பாட்டம்!

மேற்கண்டவாறு மாஸ்கோ மக்கள் சுகபோக போதையிலே புரள்வதைக் கண்ட டால்ஸ்டாய் துயரத்தோடும் வேதனையோடும் மனம் வெதும்பித் தனது உள்ளக் கிளர்ச்சியை ஓர் அஞ்சல் மூலம் நண்பர் ஒருவருக்கு கண்ணீர்க் கடிதம் என்ற பெயரிலே எழுதியனுப்பினார். அதன் விவரம் இதோ:

“நண்பரே! எனது வீட்டுக்கு நான் திரும்பிய போது ஏதோ ஒரு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு வந்தவன் போலத் தோன்றியது.

‘மிதி விரிப்புகளால் மூடுண்டுகிடக்கும் படிக்கட்டு களைக் கடந்து விலையுயர்ந்த ரத்தினக் கம்பளங்கள் விரித்த அறைக்குள் துழைந்தேன். நான் அணிந்திருந்த விலை உயர்ந்த கோட்டைக் கழற்றினேன். உணவுண்ண உட்கார்ந்தேன்.

என் முன்னே வித விதமான இன்சுவைப் பண்டங்கள் பரிமாறப் பட்டிருந்தன. என்னெதிரே - அழகான சீருடை அணிந்த பணியாளர் இருவர் நின்று கொண்டு எனக்குப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும், நான் பாரிஸ் மாநகரத்திலே பார்த்த ஒரு மரண தண்டனைக் காட்சிதான் என் கண்கள் முன்பு பளிச்சென தெரிந்தது.

ஆயிரக் கணக்கான மக்கள் கூடியுள்ள ஓரிடத்தில் ஒரு மனிதனின் தலை கில்லட்டின் கொடுவாளால் வெட்டப்பட்டுத்துண்டாக எகிறி வந்து ரத்தம் பீறிடப் பீறிட ஒரு குப்பைக் கூடையிலே விழுந்ததை முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலே பார்த்தேன்.

தலை வெட்டப் பட்டவன் பெரிய குற்றவாளி என்று எனக்குத் தெரியும். இந்தக் கொடுமையான தண்டனையை விதிப்பதற்காகக் கூறப்படும் காரணங்களையும் நான் அறிவேன். ஒரு கூர்மையான கொடுவாட் கருவியால் அவன் தலை நறுக்கென்று துண்டிக்கப்பட்டதைப் பார்த்தபோது எனக்குத் தவிப்பாக இருந்தது. அந்தத் தண்டனைக்காகக் கூறப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பயனற்றவை என்று எனக்குத் தோன்றின. நான் வாயை மூடிக் கொண்டு ஊமையாக இருப்பதால் அந்தப் பாவத்தில் நானும் பங்காளி ஆகிவிடுவேன் என்று தோன்றியது.

“அப்போது நான் பார்த்த நேரத்தில் எப்படி இருந்தேனோ அதைப் போலவே இப்போதும் என் மனத்தில் பல எண்ணங்கள் வட்டமிட்டன. வறுமையால் மக்கள் படும் துன்பத்தைப் பார்த்தேன். பசியால் அவர்கள் துடிப்பதையும் கண்டேன்.

ஆடம்பரமான, படாடோபமான சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டதன் வாயிலாக இந்தத் தீமையை வளர்ப்பவர்களில் நானும் ஒருவன் ஆகிவிட்டதையும் உணர்ந்தேன்.” என்று நண்பருக்கு எழுதிய கடிததத்தில் ஞானி லியோ டால்ஸ்டாய் மனமுருக, நெஞ்சுருக, எழுதியுள்ளார்.

ஏழை மக்களது வறுமைப் பிரச்னைகளைப் பற்றி ஞானி டால்ஸ்டாய் நன்கு சிந்தனை செய்தார். அது பற்றி அறிவாளிகளுடனும் நண்பர்களுடனும் வாதம் செய்தார். இது குறித்து அவர் பேசும்போது, சில சமயம் பொறுமை இழந்து ஓ வென்று கத்தி விடுவார். ஒரு நாள், அவர் கூச்சலிடுவதைக் கேட்டு உள்ளே இருந்த டால்ஸ்டாய் மனைவி பஹேர் ஓடிவந்து என்ன நடந்தது என்று கவனித்தாள்.

“நான் இப்படி வாழக்கூடாது, நான் இப்படி வாழக்கூடாது, இந்த மாதிரி வாழ்வதை நிறுத்த வேண்டும்.” என்று டால்ஸ்டாய் பெருங்கூச்சலிடுவதை அவரது மனைவி கேட்டாள். உடனே அவரை அடக்கிவிட்டு மனைவி உள்ளே சென்றாள்.

டால்ஸ்டாய் தனது கூப்பாட்டை நிறுத்திய, பின் அவருடைய சிந்தனையிலே ஒரு தெளிவு பிறந்தது. இந்த சமூகத்தைத் தலை கீழாகப் புரட்டினால் ஒழிய எந்த வித நன்மையும் நாட்டுக்கு ஏற்படாது என்கிற முடிவுக்குத்தான் அந்த சமுதாய ஞானியால் வரமுடிந்தது.

ஏழைகளின் அன்றாடப் பிரச்னைகள், அவர்களுக்கு உணவும் உடையும் தருவதால் மட்டும் தீர்ந்து விடாது. அவர்களுடைய தேவைகள் பல என்பதை அவர் நெஞ்சார உணர்ந்தார்.

ருஷ்ய சமுதாயத்தில் மக்கள் எந்தெந்த வகையில் வாழ்க்கையோடு போராடுகிறார்கள் என்பதை அன்றைய பொருளாதார ரீதியாகச் சிந்தித்தார் டால்ஸ்டாய். அதனால் வாழ்க்கையில் துன்பப் படுவோரை மூன்று பிரிவாகப் பிரித்தார். அந்த மூவர் யார் தெரியுமா?

1. வேலை கிடைக்காததால் வேலை செய்யாதவர்கள். 2. வறுமையால் வாழ முடியாமல் பரத்தைத் தொழிலில் புகுந்துவிட்ட விலைமகளிர் 3. குழந்தைகள்.

மேற்கண்ட மூன்று வகையினரின் வாழ்க்கையிலே ஒளி வீசிட மூன்று வழிகளையும் டால்ஸ்டாய் கூறினார். என்ன அவை:

முதல் வகையினருக்கு எந்த வித தான தருதமும் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள், வேலை இல்லாமையால் வேலை செய்யாதவர்கள். அப்படியானால், வேலை கொடுத்தால் வேலை செய்வார்கள்! செய்தால் அவர்களது வறுமை அழியும் இல்லையா? எனவே, அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் அது அரசின் கடமையாகின்றது.

இரண்டாம் வகையினருக்கு, அதாவது வறுமையால் விலை மகளாகி உடலை விற்பவர்கள். அத்தகைய பெண்களை ஒழுக்கத்தோடு வாழக் கல்விகற்பிக்க வேண்டும். கற்றக் கல்வியைக் கொண்டு அவர்கள் வேலை தேடிக் கொள்ள முடியும். சமுதாயத்தில் அந்தப் பெண்களும் மற்ற மங்கையர்களைப் பார்த்து, நாமும் ஒருவன் ஒருத்தி என்ற பண்பாட்டுக்கேற்றவாறு மானத்தோடு வாழ்வோம் என்ற எண்ணம் அவர்களுக்கும் வரத்தானே செய்யும்? எனவே, உடனடியாக இரண்டாவது பிரிவினருக்குரிய கல்வியையும் அரசுதான் கொடுக்க வேண்டும்! இல்லையா?

மூன்றாவது வகையினரான குழந்தைகளுக்கு அவரவர் என்ன படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அதற்கேற்றவாறு கல்வி கற்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசும் அதற்கேற்ற வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவேண்டும். பிறகு, அக் குழந்தைகள் உரிய பருவமடைந்ததும் இந்த நாட்டையே ஆளும் அரசனாக, அமைச்சனாக, உலகம் போற்றும் மேதையாக, அறிவியல் வித்தகனாக வர வாய்ப்பு இருக்கும் - இல்லையா?

சமுதாயத்தில் நிறைந்துள்ள, பரவியுள்ள தீமைகளுக்கு எல்லாம் என்ன காரணம்? பணம் தானே அடிப்படை? என்ற முடிவுக்கு டால்ஸ்டாய் வந்தார். அந்தப் பணம்தானே பொய்யை மெய்யாக்குகிறது; மெய்யைப் பொய்யாக்குகின்றது; எவ்வளவு பெரிய இமாலய உயர மோசடிகளைச் செய்தாலும் பணம் அதன் சிகரத்தைக் கூடத் தகர்த்தெறிந்து விடுகிறது; எப்படிப்பட்ட அதிகாரப் போதைகளைக் கூட பணம் தெளியவைத்து விடுகின்றது; மிகப் பெரிய பலசாலிகளாக இருந்தாலும்; பணம் அவர்களை ஒடுக்கிவிடப் பயன்படுகிறது என்பதை அனுபவித்துணர்ந்த ஞானி டால்ஸ்டாய், ‘இனி நாம் செய்ய வேண்டியது யாது?’ என்ற தனது புத்தகத்தில் பணத்தின் கேடுபாடுகளை விபரமாக விளக்கியுள்ளார்.

எனவே, ‘இதுவரை செய்த தீச்செயல்களுக்காக வருந்துங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்; ஏழைகளின் துன்பங்களை அகற்றவும், அவர்களோடு சேர்ந்து வேலை செய்யவும் முன்வாருங்கள்’ என்று அவர் இன்ப வாழ்க்கையில் ஆழ்ந்த தோய்ந்து கலந்து, மிதந்து தத்தளித்துத் தவிப்போரைப் பார்த்துத் தியான வாழ்க்கைக்கு வாருங்கள் என்று டால்ஸ்டாய் வேண்டி அழைக்கின்றார் அல்லது தூண்டி விடுகின்றார் என்று கூறலாம்.

ஞான வித்தகர் டால்ஸ்டாய் தான் எழுதிய கட்டுரைகள், கதைகள், சிறுகதைகள், குறு நாவல்கள், பெரும் நாவல்கள், நாடகங்கள் ஆகியவற்றின் மூலம் உபதேசம் செய்வேதோடு மட்டும் நின்று விடவில்லை. என்ன செய்தால் நாட்டுக்கும். சமுதாயத்துக்கும். மக்களுக்கும் நல்லது என்று கூறுகிறாரோ, அப்படியே அவர் எவ்வளவு துன்பங்கள், அரசு தொல்லைகள் வந்தாலும் அவற்றை ஏற்று முன்மாதிரி வாழ்க்கை வாழ்ந்து காட்டிய ஞானி அவர்.

‘ஊருக்குத்தான் உபதேசம், உனக்கு இல்லையடி கண்ணே’ என்ற அரசியல்வாதியின் தன்மை அவரிடம் இருந்ததில்லை. காரணம்; அவர் இலக்கியவாதி; சிந்தனாவாதி; திருத்தவாதி; லட்சியவாதி எனவே, அவரால் சொல்வதற்கு ஏற்றபடி வாழ்ந்து காட்ட முடிந்தது என்பது மட்டுமல்ல; அவர் ஒரு அறம் சார்ந்த ஞானியும் ஆவார்.

அவர் உலகப் புகழ்பெற்ற போதும் கூட, அவருடைய தினசரிக் கடமைகளை ஒழுங்கு படுத்திப் பட்டியலிட்டுக் கொண்டு செய்து வந்தார். தன்னுடைய சிறு வயதுப் பழக்கமான நாட்குறிப்பு எழுதுவதையும் மறக்காமல் கடைப்பிடித்து வநதார்.

அதிகாலையில் எழுவார்; எழுதுவார் படிப்பார்; எதைப் பற்றியும் பொறுமையாக, பொறுப்பாகச் சிந்திப்பார். பிறகு, தனது உடலுக்கு ஆரோக்கியம் தருவதற்கான உடலுழைப்புகள் எதுவோ, அது கடினமாக இருந்தாலும் சரி வியர்வை சொட்டச் சொட்ட வேலை செய்து கொண்டே இருப்பார். உழைப்புக்கு மட்டும் அவர் வேளை நேரம் பார்க்கமாட்டார்.

மனைவிக்கு ஒத்தாசையாகவும் வேலை செய்வார்; அவருக்கு அன்றாடம் வரும் அஞ்சல்களைப் பார்த்து, பதில் எழுத வேண்டியவைகளுக்கு அப்போதே எழுதிவிடுவார். எதையும் நாளை பார்ப்போமே என்று நாள் நகர்த்தும் எண்ணம் அவருக்கு மறந்தும் வருவதில்லை. காரணம் பழக்கவழக்கமே!

இறுதியாக என்ன செய்வார் தெரியுமா? இதுதான் மிக முக்கியமான ஒன்றாகும். அதாவது ஞானி டால்ஸ்டாய் தன்னைத் தேடி வரும் மக்களைப் பார்ப்பார், காரணமறிவார்; அதற்கான உதவிகளை எல்லாம் தவறாமல் செய்து இனிமையாகப் பேசி அவர்களுடைய குறை நிறைகளை அறிந்து கொள்வார். அல்லது அவர்களுடன் சென்று நேரில் கண்டுணர்வார்.

டால்ஸ்டாய் தனது குணத்தையும் செயல்களுள் சிலவற்றையும் மாற்றிக் கொள்ள முடிவெடுப்பார்; முயல்வார் கோபத்தை அடக்குவார்; ‘உன்னையே நீ எண்ணிப் பாரு’ என்று தமிழ் நாட்டுச் சித்தர்கள் கூறியதுபோல, டால்ஸ்டாய் தன்னைத்தானே உணர்ந்து நீக்க வேண்டிய பண்புகளை நீக்கும் பணிகளிலே ஈடுபட்டார்.

மாஸ்கோவிலே இருந்த மாபெரும் ஞானி டால்ஸ்டாய் மனைவி மக்களோடு மீண்டும் தனது சொந்தக் கிராமத்துக்குத் திரும்பினார். வழக்கம் போல பண்ணையையும் கவனித்துக் கொண்டு ஓய்வு நேரங்களில் நீதி போதனை செய்யும் கருத்துக்களைக் கொண்ட கதைகளையும் எழுதினார்.

ஞான மேதை டால்ஸ்டாயின் கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டவர்கள், ஒரு புத்தகம் பதிப்பிக்கும் நிறுவனத்தை நிறுவி, டால்ஸ்டாய் கட்டுரைகளை, சிறுகதைகளை, குறுநாவல்களை, நாவல்களை, அரசியல் விமரிசனங்ககளை நாடகங்களை அனைத்தையுமே திரட்டித் தொகுத்து நூல்களாக வெளியிட்டார்கள்.

ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து அவரது சொல்லோவியங்கள் வெளிவந்து கொண்டே இருந்ததால், டால்ஸ்டாய் புத்தகங்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் இடையே நல்ல மதிப்பும், வரவேற்பும் விற்பனையும் வளர்த்து வந்தது.

நாளுக்கு நாள் லியோ டால்ஸ்டாயின் வாசகர்கள் நாடு நகரங்கள் எங்கும் பெருக ஆரம்பத்தார்கள். ஒவ்வொரு நாடுகளிலும் டால்ஸ்டாயினுடைய நூல்களை விரும்பி வாங்கி, மக்கள் இடையே விற்பனை செய்ய முகவர்கள் இருந்தார்கள். இவ்வாறு, நாடுகள் தோறும், நகரங்கள் தோறும் டால்ஸ்டாய் நூல்கள் விற்பனை பெருகி வந்ததால், நான்கே ஆண்டுகளில் அவரது நூல்களது விற்பனை பன்னிரண்டு லட்சங்களாகப் பெருகியது.

புகழேணியின் படிக்கட்டுகளிலே பொறுமையாகவும், பெருமையாகவும் ஏறிக்கொண்டு வந்த டால்ஸ்டாய் என்ற அறிவுலக வித்தகர், நகரத்திலே வாழ்ந்தாலும் சரி, கிராமத்திலே வாழ்ந்தாலும் சரி மனைவி மக்களோடு தனது வாழ்க்கையை மிகவும் எளிமையோடு நடத்தி வந்தார்.

எந்த ஊரிலே அந்த ஞானி வாழ்ந்தாலும், அவர் மக்களோடு மக்களாகவே ஒன்றி வாழ்ந்து வந்தார். எடுத்துக் காட்டாக அவர் மாஸ்கோ மாநகரிலே இருந்தபோது, ஏழைகளோடு ஏழையாக சேர்ந்து விறகு வெட்டுவார், தண்ணீர் சுமந்து வருவார், செருப்புத் தைப்பார்; தனது கைகளால் தயாரித்த செருப்புக்களையே அவர் அணிந்திருப்பார். கிராம மக்களைப் போலவே டால்ஸ்டாய் தனது முதுகிலே மூட்டைகளைச் சுமந்து கால்நடையாகவே செல்லுவார்.

கிராமங்களில் டால்ஸ்டாய் மரங்களை வெட்டி, அந்த விறகுகளை அநாதைகளுக்கும் விதவைகளுக்கும் இலவசமாகக் கொடுத்துவிடுவார். ஏழைகளுக்கு அவர் எப்போதெல்லாம் உதவிட நினைக்கின்றாரோ, அப்போதெல்லாம் அவர் எவ்வளவு பெரிய துன்பங்களை, ஆபத்துக்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதற்காக அஞ்சாது, துணிந்து செய்வார். செய்தபிறகு எப்படிப்பட்ட ஆபத்துக்கள் வந்தாலும் மகிழ்ச்சியோடு அதைக் கடமையாக ஏற்றுக் கொள்ளும் பண்பாளர் டால்ஸ்டாய்.

வண்டியில் ஒரு முறை வைக்கோலை ஏற்றும் போது, அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது. பிறகு வலி குறைந்தது. டால்ஸ்டாய் காயம் ஆறியதால் தான் வலி நீங்கியது. என்று எண்ணி அலட்சியமாக இருந்துவிட்டார். நாளாகநாளாக, காயம் பட்ட அதே இடத்தில் மீண்டும் வலியும் வீக்கமும் உண்டானது. படுத்த படுக்கையானார்; பிறகு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் நிலையேற்பட்டது அவருக்கு!

அறுவைச்சிகிச்சை முடிந்த பின்பு, காயமும் வலியும் சிறுகச் சிறுகக் குறைந்து சுகமானது. படுக்கையாக இருந்தபடியே டால்ஸ்டாய் ஒரு நாடகத்தை எழுதி முடித்தார். அந்த நாடகம் தான் ருஷ்ய மக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட “இருளில் ஒளி” என்ற நாடகமாகும்.

சிகிச்சை முடிந்து எழுந்த லியோ டால்ஸ்டாய் மீண்டும் அயராது எழுத ஆரம்பித்தார். அன்று வரை அவர் எழுதிய எழுத்துத் தொகுப்புகளை எல்லாம் மாஸ்கோ பதிப்பக நிறுவனத்துக்குக் கொடுத்தார். போரும் அமைதியும் நாவலை சிறப்புப் பதிப்பாக வெளியிட்டு, அமெரிக்கா முகவர்களுக்கு அனுப்பியதும், டால்ஸ்டாய் பிரதிகள் முன்பைவிட அதிகமாக இப்போது விற்பனையாயிற்று.

-